Sunday, April 10, 2022

ஜனாதிபதியையும் பிரதமரையும் பாதுகாக்கும் அமைச்சர்கள்

அமைச்சர்கள் அனைவரும் தமது பதவியை இராஜிநாமா செய்து விட்டதாக 4 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை வாய் மூலமாகவே அறிவித்திருந்தனர். பின்பு திங்கட்கிழமை 5 ஆம் திகதி அதில் நால்வருக்கு புதிய அமைச்சுப்பொறுப்புகளை வழங்கினார் ஜனாதிபதி கோட்டாபய. நீதி அமைச்சராக விளங்கிய அலி சப்ரிக்கு நிதி அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட போது மறுநாளே அவர் அதை இராஜிநாமா செய்தார். நிதி அமைச்சோடு தொடர்புடைய மத்திய வங்கியின் ஆளுநர் கப்ரால், திறைசேரி மற்றும் நிதி அமைச்சின் செயலாளராக விளங்கிய எஸ்.ஆர். ஆட்டிகல ஆகியோரும் இராஜிநாமா செய்திருந்தனர்.

நிதி அமைச்சோடு தொடர்புடைய இத்தனை பதவி நிலைகளும் இல்லாத ஒரு நிலைமை இலங்கை வரலாற்றில் இதற்கு முன்னர் எப்போதும் ஏற்பட்டதில்லை. முழு நாடுமே நிதிப் பிரச்சினையால் துன்புற்று வரும் போது நிதியே இல்லாத ஒரு துறைக்கு யார் தான் பொறுப்பான பதவியை வகிக்க முடியும் என்று இவர்கள் நினைத்தனரோ தெரியவில்லை.
ஆனால் இதில் சுவாரஸ்யமான விடயம் என்னவென்றால் நெடுஞ்சாலைகள் அமைச்சராக பதவியேற்ற குருணாகல் மாவட்ட எம்.பி ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ நாட்டின் தற்போதைய சூழல் குறித்து ஊடகங்களுக்கு பதிலளித்த விதம்.
இந்த அரசாங்கம் நீடிக்குமா, ஜனாதிபதி பதவி விலகுவாரா என ஊடகவியலாளர்கள் கேட்டதற்கு ‘ நாம் ஏன் பதவி விலக வேண்டும் எமக்கு இன்னும் மக்கள் ஆணை உள்ளது, ஜனாதிபதி ஏன் விலக வேண்டும்? அவருக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர் என சிரிப்புக் காட்டினார்.
"நீங்கள் கூறும் மக்கள் ஆணையும் ஆதரவும் இப்போதும் உங்கள் அரசாங்கத்துக்கும் ஜனாதிபதிக்கும் உள்ளதா" ? என ஊடகவியலாளர்கள் கேட்ட போது ‘ ஏன் இல்லை ? தேர்தல் ஒன்று நடத்தப்பட்டால் அது நிச்சயமாக அனைவருக்கும் விளங்கும். மக்கள் நெருக்கடிகளில் இருக்கின்றனர் என்பதை ஏற்றுக்கொள்கிறோம் அதே வேளை இந்த நாட்டில் சிறு அளவான மக்களே ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்கின்றனர். அவர்கள் அனைவரும் எதிர்கட்சிகளின் ஆதரவாளர்கள்’ என அலட்சியமாக பதிலளித்திருந்தார்.
ஜோன்ஸ்டன் போன்றோர் ஏன் ஜனாதிபதி மற்றும் பிரதமரை பாதுகாக்கின்றனர் என்பதை நாட்டு மக்கள் நன்கறிவர்.
பொது ஜன பெரமுன அரசாங்கத்தில் அங்கம் வகித்து அமைச்சர்களாக விளங்கும் பலரும் கடந்த காலங்களில் ஊழல் மற்றும் ஏனைய குற்றச்சம்பவங்களில் தொடர்புடையோர் ஆவர். ஆனால் அவர்களுக்கெதிரான பல வழக்குகளை சட்டமா அதிபர் திணைக்களம் மீளப்பெற்று வருவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பல சட்டத்தரணிகள் கடந்த 5 ஆம் திகதி சட்டமா அதிபர் திணைக்களத்துக்கு முன்பாக ஆர்ப்பாட்டமொன்றை முன்னெடுத்திருந்தனர். இதை அரசாங்கமே எதிர்ப்பார்த்திருக்காது. நாட்டின் நீதித்துறையே இவ்வாறு இருக்கும் போது நிர்வாகம் வேறு எப்படி இருக்கும்? நீதி அமைச்சர் தனது மனசாட்சிக்கு பதிலளிக்கும் முகமாகவே தனது புதிய பதவியை இராஜினாமா செய்ததோடு தேசிய பட்டியல் உறுப்புரிமையிலிருந்தும் விலகிக்கொள்வதாக ஜனாதிபதிக்கு கடிதம் எழுதியுள்ளார்.
ஆகவே நாட்டு மக்கள் எப்படி போனால் என்ன, தம்மை சட்டத்தின் பிடியிலிருந்து பாதுகாப்பதற்கு தற்போதைய ஜனாதிபதியும் பிரதமரும் மிகவும் முக்கியம். இதையே ஊழல் மற்றும் ஏனைய குற்றச்சாட்டுகளில் தொடர்புடைய அமைச்சர்கள் விரும்புகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று முக்கியமான தீர்மானங்களில் ஒன்றாக பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலகுவதாக இருந்தது.
அவர் பதவி விலகினால் அமைச்சரவையும் கலைக்கப்படும். அது மீண்டும் நிர்வாக மட்டத்தில் ஒரு நெருக்கடியை உருவாக்கும் என்ற காரணத்தினால் அமைச்சர்கள் அனைவரும் பிரதமர் பதவி விலகக் கூடாது என்றும் தாம் பதவி விலகுவதாக அறிவித்தனர். ஆனால் நாட்டு மக்கள் அனைவராலும் சிறந்த அனுபவமிக்க அரசியல்வாதியாகவும் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவும் பதவி வகித்த பிரதமர் மஹிந்த ராஜபக்ச முதன் முறையாக ஒரு தீர்மானம் எடுப்பதில் தவறிழைத்தார். அவர் பதவி விலகியிருந்தால் இந்த அரசாங்கத்தின் மீதான மக்களின் ஆத்திரம் சற்று குறைந்திருக்கும். ஒரு கனவான் அரசியல்வாதியாக எல்லோரும் அவரை புகழ்ந்திருப்பர். ஆனால் அவர் அப்படி செய்யத்தவறியதால் சராசரி அரசியல்வாதியாக தன்னை வெளிப்படுத்தியது மட்டுமின்றி ஊழல் அமைச்சர்களை பாதுகாக்க முடிவெடுத்தார். அதன் எதிர்வினையானது அவரே எதிர்பாராதது. முதல் தடவையாக அவரது தங்காலை கால்டன் இல்லத்தை நோக்கி படையெடுத்தனர் அவரது தொகுதி மக்கள்.
2009 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஒரு யுத்த வெற்றி கதாநாயகனை பார்க்கச்செல்லும் பெருமிதத்தோடு அவரது தங்காலை இல்லத்தை நோக்கிச்சென்று கொண்டிருந்த மக்கள் முதன் முறையாக அவருக்கு எதிராக கோஷமிட்டனர்.
பிரதமரின் இந்த தவறான முடிவுக்குப்பின்னரே ஜனாதிபதியை மட்டும் வீட்டுக்குப்போகச்சொன்ன நாட்டு மக்கள் அந்த பட்டியலில் மஹிந்த மற்றும் பஸில் ஆகியோரையும் இணைத்து புதிய கோஷத்தை ஆரம்பித்தனர். பிரதமர் மஹிந்தவாலும் ஜனாதிபதி கோட்டாபயவாலும் தமது நிலைப்பாட்டை நாட்டு மக்களுக்கு நேரடியாக கூற முடியவில்லை. அவர்களின் குரலாக வெளிப்பட்டவரே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோ. ஏனென்றால் அவர் ஆளுங் கட்சியின் பிரதம கொறடவாக விளங்குகிறார். இவ்வருடம் ஜனவரி மாதமே அவர் மீதான மூன்று இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தார். ஆகவே அவர் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் விசுவாசமாக இருக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றார். ஆகவே தற்போது அரசாங்கத்தின் ஊதுகுழலாகி விட்ட இவரே புதன்கிழமையன்று பாராளுமன்றில் எத்தகைய சூழலிலும் ஜனாதிபதி பதவி விலக மாட்டார் என்றும் எந்த எதிர்ப்பையும் நாம் சமாளிப்போம் என்று இவர் சூளுரைத்திருந்தார். இவரைப்போன்றே பல அமைச்சர்கள் வழக்குகளிலிருந்து விடுவிக்கப்பட்டு வருகின்றனர். அவர்களும் இனி ஒரு சில நாட்களில் ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் ஆதரவாக கருத்துக்களை கூற ஆரம்பிப்பர் எனலாம்.
பொருளாதார நெருக்கடிகள் மற்றும் அரசாங்கத்தின் மோசமான நிர்வாகம் போன்றவற்றை அடிப்படையாக வைத்து ஆரம்பிக்கப்பட்ட போராட்டம் தற்போது ராஜபக்ச சகோதரர்களின் ஒட்டு மொத்த ஊழல்களை பிரதானப்படுத்தி மாற்றம் பெற்றிருக்கின்றது. தலைநகர் மற்றும் அதற்கு வெளியே ‘ராஜபக்சாக்கள் திருடிய பணத்தை திருப்பிக் கொடுக்க வேண்டும்’ என்ற புதிய தொனியில் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இதை பெரும்பான்மையினத்தவர்களே கூடுதலாக முன்னெடுக்கின்றனர். மஹிந்த ஜனாதிபதியான காலத்திலும் அவரது சகோதரர் கோட்டாபாய பாதுகாப்பு செயலாளராக இருந்த காலத்திலும் இருவர் மீதும் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகள் தற்போது புது வடிவம் பெற்றிருப்பதை காண முடிகின்றது பாராளுமன்றில் நாமே பெரும்பான்மையாக இருக்கின்றோம். எதிரணிகள் முடிந்தால் தமது பெரும்பான்மையை நிரூபிக்கட்டும் பாராளுமன்றை கலைப்பதை பற்றி பேசலாம் என அமைச்சர் தினேஷ் குணவர்தன புதன்கிழமையன்று தைரியமாக பேசியிருந்தார்.
ஆக எதிரணிகள் அனைத்தும் இன்று தனித்தனியே நின்று கத்திக்கொண்டிருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது. இவர்கள் எந்த நிலையிலும் ஒன்று பட மாட்டார்கள் என்பதை ராஜபக்சக்கள் நன்கறிந்து வைத்துள்ளனர். ஜனாதிபதி பதவி விலகினால் அடுத்ததாக யாரால் நாட்டை ஆட்சி நடத்த முடியும் என்ற ஆளும் தரப்பினரின் கேள்விக்கு எதிரணி பக்கமிருந்தும் எந்த பதில்களும் இல்லை.
அனுப அரசியல்வாதியான முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்கஇ 3 ஆம் திகதி டைம்ஸ் ஒப் இந்தியாவுக்கு வழங்கிய நேர்காணலில் இப்படி குறிப்பிட்டிருந்தார்,
‘ இன்றைய நெருக்கடிக்கு -யார் காரணம் என விவாதிப்பதில் அர்த்தமில்லை , ஒவ்வொருவரும் ஏனையவர்களை நோக்கி விரல்களை நீட்டுவார்கள். துரதிர்ஸ்டவசமாக பிரச்சினைகளை தீர்க்கும் பழக்கம் இலங்கையர்களிடம் இல்லை, ஆனால் அதற்கான காரணத்தை கண்டறிய முயல்வார்கள்’.
ரணில் கூறுவதில் தவறுகள் இருப்பதாகத் தெரியவில்லை.

Monday, March 28, 2022

கடல் கடந்து செல்லும் அகதிகளும் சொந்த நாட்டின் அகதிகளும்…!

 

யுத்த காலத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் அகதிகளாக தமிழகத்துக்கு இடம்பெயர்ந்து சென்றதை ஒரு போர்க்கால சம்பவமாகவே அனைவரும் பார்க்க வேண்டியிருந்தது. ஆனால் இப்போது பஞ்சம் காரணமாக முதன் முறையாக குடும்பங்கள் அகதிகளாக தமிழகத்துக்கு படகுகள் மூலமாக செல்லத்தொடங்கியுள்ளனர். இச்சம்பவம் இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடிகளை இந்தியா உட்பட பல நாடுகளுக்கு வெளிச்சம் போட்டு காட்டியுள்ளதுடன் இலங்கைக்கு பல வழிகளில் சங்கடங்களையும் ஏற்படுத்தியுள்ளது எனலாம்

.

தமிழக ஊடகங்களும் ராஜபக்சக்களின் ஆட்சி இவ்வளவு கொடுமையானதா என வெறும் வாய்க்கு அவல் கிடைத்தது போன்று தமிழகம் சென்ற அகதிகளிடம் கேள்வி மேல் கேள்வி கேட்டு செய்திகளை ஒலிஃஒளிபரப்பி வருகின்றன.

யுத்த காலகட்டங்களில் ராஜபக்சகளின் ஆட்சி பகுதிகளிலேயே அதிகமான தமிழ் மக்கள் அகதிகளாகி தமிழகத்துக்கு படகுகள் மூலம் சென்றடைந்தனர். யுத்தம் முடிந்த பிறகும் கூட அவர்களின் ஆட்சியில் இவ்வாறு அகதிகள் தமிழகத்துக்கு செல்வதற்கு ஆரம்பித்துள்ளமை மனித உரிமை விவகாரங்களில் இலங்கைக்கு தாக்கத்தை ஏற்படுத்தும் சம்பவங்களாக இருக்கப்போகின்றன.

மன்னார் மற்றும் யாழ்ப்பாணம் பகுதிகளிலிருந்து கடந்த வாரம் படகுகள் மூலம் தனுஷ்கோடி கடற்பகுதிக்கு 10 பேர் வரை அகதிகளாக சென்றடைந்துள்ளனர். இதில் மூன்று சிறுவர்கள் உட்பட நான்கு மாத கைக்குழந்தையும் அடங்குகின்றது. இவர்களைத் தவிர்த்து ஏனைய அனைவருக்கும் எதிராக உரிய ஆவணங்களின்றி சட்டவிரோதமாக இந்திய கடற்பரப்புக்கள் நுழைந்தமையை காரணங்காட்டி ராமேஸ்வரம் நீதிமன்றில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. தமது பிள்ளைகளின் உயிர்களை சரி காப்பாற்ற வேண்டும் என்ற காரணத்தினாலேயே தாம் உயிரை பணயம் வைத்து படகுகள் மூலம் வந்ததாக அந்த 10 பேரும் தெரிவிக்கின்றனர்.

மேலும் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் ஆயிரக்கணக்கில் மக்கள் அகதிகளாக வருவதற்கு தயாராக இருப்பதாக தகவல் கிடைத்துள்ளதால் தமிழகத்தின் தனுஷ்கோடி பகுதி மற்றும் கேரளாவின் விழிஞ்சம் பகுதி கடலோர பாதுகாப்புப்பிரிவினர் தமது கண்காணிப்பை தீவிரப்படுத்தியுள்ளதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.


அகதிகளை சிறையில் அடைக்க உத்தரவு

இதே வேளை அகதிகள் தொடர்பான தனது கொள்கைகளிலிருந்து இந்தியா இது வரை தளர்வு போக்குகளை மேற்கொள்ளவில்லையென்பது முக்கிய விடயம். யுத்த கால அகதிகளாக தமிழகம் மற்றும் ஏனைய மாநிலங்களில் உள்ள சுமார் நூறு அகதிகள் மறுவாழ்வு முகாம்களில் சுமார் ஒரு இலட்சம் இலங்கை தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். சுமார் 30 வருடங்களுக்கு மேல் ஒரு தலைமுறையை கடந்து வாழ்ந்து வரும் இவர்களுக்கு இந்திய குடியுரிமையை வழங்கக் கோரி பல்வேறு காலகட்டங்களில் சட்ட நகர்வுகள் முன்னெடுக்கப்பட்டாலும் அவை சாத்தியப்படவில்லை.

இந்நிலையில் தற்போது புதிய சூழ்நிலையில் நாட்டின் பொருளாதார நெருக்கடியை காரணங்காட்டி தமிழகத்துக்கு அகதிகளாக செல்வோரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இவ்வாறு வருபவர்களை சிறையில் அடைக்க உத்தரவொன்றை ராமேஸ்வரம் நீதிமன்றம் விடுத்திருப்பதாகத் தெரியவருகின்றது. தமிழகமெங்கும் உள்ள முகாம்களின் உள்ள அகதிகளின் மறுவாழ்வு பரிசீலிக்கப்படும் என்றும் இனி முகாம்கள் இ இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்கள் என்ற பெயருடன் அழைக்கப்படும் என தமிழக முதல்வர் மு.கா.ஸ்டாலின் கடந்த வருடம் நவம்பர் மாதம் பல தீர்மானங்களை கொண்டு வந்ததுடன் இவர்களுக்கான நலத்திட்டங்களுக்கு பல கோடி ரூபாய் நிதியை ஒதுக்கியிருந்தார். இந்நிலையில் தற்போது அகதிகளாக செல்ல ஆரம்பித்திருப்போரை தமிழக அரசு எவ்வாறு அணுகப்போகின்றது என்பது தெரியவில்லை. ஒரு வகையில் இது மு..ஸ்டாலினுக்கும் புதிய நெருக்கடியை கொடுத்துள்ளது. அதே வேளை தமிழகம் மற்றும் அதற்கு வெளியே அகதிகளாக வாழ்ந்து வரும் இலங்கை தமிழர்களைப் பற்றி மீண்டும் பேசுவதற்கு ஒரு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது என்றும் கூறலாம்.

தற்போதுள்ள புதிய சட்ட ஏற்பாடுகளின் பிரகாரமே சட்டவிரோதமாக ஆவணங்களின்றி இந்திய கடற்பரப்பில் நுழைவோரை சிறையிலடைக்கப்பதற்கான உத்தரவை ராமேஸ்வரம் நீதிமன்றம் வழங்கியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ஏனெனில் இந்த புதிய முறையானது 2021 ஆம் ஆண்டின் இறுதிப்பகுதிகளில் அமுலாகியுள்ளது. அதாவது கடவுச்சீட்டின்றி வேறொரு நாட்டின் எல்லைக்குள் பிரவேசித்தல் மற்றும் சட்டவிரோதமாக உள்நுழைதல் ஆகிய இரண்டு பிரிவுகளில் வழக்கு தொடரப்பட்டு இவர்கள் சிறையில் அடைக்கப்படுகின்றனர். கடந்த வருடம் இவ்வாறு வருகை தந்தவர்கள் கைது செய்யப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களின் சிறுவர்கள் இருந்தால் அவர்கள் மறுவாழ்வு முகாம்களுக்கு உரிய பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்படுகின்றனர்.


இந்தியாவின் உதவிக்கரம்

இலங்கையின் நெருக்கடிக்கு உதவும் வகையில் அண்மையில் இந்தியாவானது நிதியுதவி அளித்திருந்தமை முக்கிய விடயம். அது மனிதாபிமான முறையில் அந்த உதவிகள் வழங்கப்பட்டன. அதே வேளை தமிழகத்தில் தங்கி வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு இத்தனை காலமும் அடைக்கலம் தந்து அவர்களின் வாழ்வாதாரத்துக்கு உதவி வருவதையும் இங்கு சுட்டிக்காட்டுதல் வேண்டும். எனினும் யுத்த காலம் வேறு தற்போதைய சூழல் வேறு என்பதை இலங்கை அரசாங்கம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஒரு வகையில் இவ்வாறு இலங்கையிலிருந்து அகதிகள் செல்ல ஆரம்பித்திருப்பது இலங்கையின் ஆட்சியில் விழுந்துள்ள கீறல் எனலாம். அருகாமையில் இந்தியா என்ற நாடும் தொப்புழ்க்கொடி மாநிலமாக உள்ள தமிழகமும் இருப்பதால் இலங்கையில் வாழ்ந்து வரக்கூடிய தமிழர்கள்இ தமக்கு நெருக்கடிகள் வரும் காலகட்டங்களில் வேறு தெரிவின்றி அங்கு செல்வதை வழமையாகக்கொண்டிருக்கின்றனர். ஆனால் இந்நாட்டில் வாழ்ந்து வரும் பெரும்பான்மையின மக்களுக்கு வேறு தெரிவுகள் இல்லையென்பதால் தமது எதிர்ப்பை வீதிகளிலிறங்கி அரசாங்கத்துக்கு எதிராக வெளிப்படுத்தி வருகின்றனர். கடந்த வாரம் இடம்பெற்ற ஜனாதிபதி தலைமையிலான சர்வகட்சி மாநாட்டிலும்இ பஞ்சம் காரணமாக தமிழகம் சென்ற அகதிகள் விவகாரம் பேசப்பட்டது. தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்..சுமந்திரன் இதை சுட்டிக்காட்டி பேசிய போது இந்த நிலைமைகள் நாட்டுக்கு ஆரோக்கியமானதல்ல என்று பேசியுள்ளார்.


உள்ளூர் இடப்பெயர்வுகள்

பொருளாதார நெருக்கடி காரணமாக இந்தியாவுக்கு படகுகள் மூலம் அகதிகளாக சென்றமை மட்டுமே இங்கு ஊடகங்களில் பெரிதாக காட்டப்படுகின்றது. ஆனால் இந்த நெருக்கடிகளால் தலைநகரிலிருந்து பெரும்பாலான இளைஞர் யுவதிகள் தமது சொந்த இடங்களுக்கு வந்து கொண்டிருப்பதை எவரும் கண்டு கொள்வதாக இல்லை. தலைநகரில் கட்டுமானப்பணிகளில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள்இ பணிகள் இடைநிறுத்தப்பட்டதால் தமது சொந்த இடங்களுக்கு திரும்பியுள்ளனர். இவர்களின் பலர் மலையகப் பிரதேசங்களைச் சேர்ந்தவர்களாவர். ஆடைத்தொழிற்சாலைகளில் கணிசமானோர் பணிகளிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பெருந்தோட்டங்களிலுள்ள தமது சொந்த இடங்களுக்கு திரும்பியவர்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது.

இவர்கள் சொந்த நாட்டின் அகதிகளாக மாறியுள்ளனர். நாட்டின் சூழ்நிலையானது பல குடும்பங்களுக்குள்ளே முரண்களையும் ஏற்படுத்தியுள்ளது. சமையல் எரிவாயு தட்டுப்பாடு காரணத்தினால் ஆயிரக்கணக்கான சிறிய அளவிலான ஹோட்டல்கள் இலங்கை முழுதும் மூடப்பட்டுள்ளன. இதில் பணியாற்றியவர்கள் அனைவரும் எங்கே என்று அரசாங்கம் தேடிப்பார்க்கவில்லை. கூறப்போனால் கடந்த 6 மாதங்களில் இவ்வாறு தொழில் இழந்தோரின் தொகை ஒரு இலட்சத்துக்கும் அதிகமாகும். அந்த ஒரு இலட்சம் பேரில் தங்கியிருந்த குடும்ப உறுப்பினர்களின் நிலைமைகள் என்ன என்பதையும் இந்த அரசாங்கம் தேடிப்பார்க்கவில்லை. மக்களுக்கு நிவாரணங்கள் வழங்குவதற்கு ஏற்ப வரவு செலவு திட்டத்தில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படும் என சர்வகட்சி மாநாட்டில் நிதி அமைச்சர் கூறியுள்ளார். முதலில் அவர் சொந்த நாட்டின் அகதிகளுக்குத்தான் இந்த நிவாரணத்தை வழங்க வேண்டியுள்ளது.


Sunday, February 6, 2022

என்று தணியும் இந்த…!

பிறருக்கு சுதந்திரத்தை வழங்க மறுப்பவர்கள் சுதந்திரத்தை அனுபவிப்பதற்கு எவ்வகையிலும் தகுதியுடையவர்கள் அல்லர்.

–ஆபிரகாம் லிங்கன்


 

அபிவிருத்தி என்றால் என்ன என்பதற்கு நாம் அனைவரும் கூறும் வரைவிலக்கணம் என்ன? ஒரு நாடு சகல துறைகளிலும் கொண்டிருக்கக் கூடிய தன்னிறைவே அபிவிருத்தி என்பதாகும். அப்படியானால் சுதந்திரம் என்றால் என்ன? சுதந்திர தினம் பற்றி பாடசாலை மாணவர்களை கட்டுரை எழுதக் கூறினால், அவர்கள் என்ன எழுதுவார்களோ அதைத்தான் இன்று எமது நாட்டில் சில அரசியல்வாதிகள் பேசிக்கொண்டிருக்கின்றனர்.

பல்லின மக்கள் வாழ்ந்து வரும் நாட்டில், அனைத்துத் தரப்பினரும் அனுபவிக்கக்கூடிய சுதந்திரம் என்று மலர்கின்றதோ அன்றைய நாளே சுதந்திரம் தினமாக இருக்கும். ஒரு பிரிவினைரை மட்டும் இனம்,மதம், மொழி என சகல அம்சங்களிலும் ஒதுக்கி வைத்து விட்டு மற்றொரு சாரார் கொண்டாடுவது சுதந்திர தினமாக இருக்குமா என்ற கேள்வி இலங்கையைப் பொறுத்தவரை 1948 பெப்ரவரி 4 ஆம் திகதியிலிருந்து இன்று வரை எதிரொலித்துக்கொண்டு தான் இருக்கின்றது.

சுதந்திரம் கிடைத்த அதே ஆண்டு இலட்சக்கணக்கான இந்திய வம்சாவளி மக்களின் சுதந்திரம் பறிக்கப்பட்டது. அவர்களின் பிரஜா உரிமையைப் பறித்தது சுதந்திர இலங்கையின் முதலாவது அரசாங்கமான ஐக்கிய தேசிய கட்சி. அதன் பின்னர் மலையக பிரதேசத்தைத் தவிர்த்து நாட்டின் வடக்கு கிழக்கு பிரதேசங்கள் வாழ் மக்களின் சுதந்திரங்கள் என்ன அடிப்படையில் பறிக்கப்பட்டன என்பதை இங்கு விலாவாரியாக கூறத்தேவையில்லை. ஆனால் பேரினாவாத சிந்தனை கொண்டவர்கள் எமது நாட்டின் சுதந்திர தினத்தை இரண்டு காலகட்டங்களாகப் பார்க்கின்றனர். முதலாவது 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி. இரண்டாவது 2009 ஆம் ஆண்டு மே மாதம் 18 ஆம் திகதி.

ஆனால் ஜனநாயக சிந்தனை கொண்டவர்களால் கொண்டாடப்பட்டு வந்த இலங்கையின் குடியரசு தினமான மே மாதம் 22 ஆம் திகதி இன்று இலங்கை மக்களால் மறக்கப்பட்டுள்ளது. அது பற்றிய பிரக்ஞையின்மையானது இன்று பாடசாலை மாணவர்களிடமிருந்து கற்றோர் வரை உள்ளது. ஏனென்றால் அந்தளவுக்கு இன்று இலங்கையின் வரலாறு மாற்றியமைக்கப்பட்டுள்ளது. பாடசாலை பாட புத்தகங்களில் கூட இலங்கையின் இரண்டாவது சுதந்திர தினம் 2009 மே மாதம் 18 ஆம் திகதி என்று எதிர்காலத்தில் கொண்டு வரப்படலாம். இலங்கை முழுமையான சுதந்திரம் பெற்ற தினமாக குடியரசு தினமே விளங்குகின்றது. 1948 ஆம் ஆண்டு சுதந்திரம் கிடைத்த பின்னரும் கூட சிலோன் என்றே எமது நாடு அழைக்கப்பட்டு வந்தது.

1972 ஆம் ஆண்டு வரை அரசியலமைப்பு என ஒன்று இல்லாத நிலையில் நாட்டின் தலைவராக பிரித்தானிய மகாராணியே விளங்கினார். நாட்டின் இராணுவத் தளபதியாக பிரித்தானிய தளபதியே இருந்தார். நீதிமன்ற இறுதித் தீர்ப்பின் முடிவுகளை பிரித்தானிய நீதிமன்றமே மேற்கொள்ளும். ஆகவே எமக்கு உண்மையான சுதந்திர தினம் எப்போது கிடைத்தது என்பதை நாட்டு மக்களும் அரச தலைவர்களும் மறந்து விட்டனர். உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியா கூட தனது குடியரசு தினத்தை, சுதந்திர தினம் போன்று கோலாகலமாகக் கொண்டாடுகின்றது. ஆனால் நாமோ 2009 ஆம் ஆண்டுக்குப்பிறகு மே மாதம் 18 ஆம் திகதியை யுத்த வெற்றி தினமாகவும் இரண்டாவது சுதந்திர தினமாகவும் கொண்டாடி விட்டு, அதே மாதத்தின் 22 ஆம் திகதியை கடந்துபோய்க்கொண்டிருக்கிறோம்.

இப்படி தேசிய ரீதியில் கிடைத்த சுதந்திரம் பற்றி பிரஸ்தாபிக்கையில் சமூக மற்றும் கலாசார ரீதியாக இந்த நாட்டின் அனைத்து மக்களும் சுதந்திர காற்றை சுவாசிக்கின்றனரா என்பது மிக முக்கியமான கேள்வி. நாம் இன்னும் அபிவிருத்தியடைந்து வரும் மூன்றாம் உலக நாடாக இருக்கின்றோம். அப்படியானால் எமது நாட்டில் வறுமை கோட்டுக்குக் கீழ் வாழ்ந்து வரும் ஒரு வர்க்கம் உள்ளது. ஆகவே வறுமையிலிருந்து அந்த வர்க்கம் மீளும் வரை அவர்கள் எவ்வாறு சுதந்திர காற்றை சுவாசிப்பர்? நாட்டை அந்நிய சக்திகளிடமிருந்து மீட்டல் அல்லது விடுபடல் உண்மையான சுதந்திரம் என்றால் , தீவிரவாதத்தை முறியடித்து வெற்றிக்கொடிநாட்டுதல் சுதந்திரம் என்றால், குடியரசாதல் சுதந்திரம் என்றால் பொருளாதார மீட்சிக்காக மீண்டும் எம்மை அந்நிய தேசங்களிடம் அடகு வைத்தலை என்னவென்று கூறுவது?

இங்கு இன, மத ரீதியாக ஒடுக்கப்பட்டு வரும் சிறுபான்மையினமொன்று உள்ளது.அவர்களின் உரிமைகளை தட்டிப்பறிக்கும் செயற்பாடுகள் பேரினவாத சிந்தனைகளுடன் நிகழ்ச்சி நிரல்படுத்தப்பட்டுள்ளன. எந்த தேசிய கட்சி ஆட்சியமைத்தாலும் அதையே பின்பற்றும் வகையில் அது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நாட்டில் பெரும்பான்மையின மக்களுக்கு கிடைக்கும் சகல வளங்களும் ஏனைய சிறுபான்மை சமூகங்களுக்கு மறுக்கப்படுமாயின் அவர்கள் எந்த உணர்வுடன் இந்நாட்டின் தேசிய கொடிகளை ஏற்றுவர் அல்லது தமது பிள்ளைகளின் கைகளில் அதை வழங்கி அசைக்கச் சொல்வர்?

யாருடைய ஆட்சியாக இருந்தாலும் சுதந்திர தினமன்று அரச அலுவலகங்களிலும் , வீடுகளிலும் கொடிகளை பறக்கச்செய்தல் வேண்டும் என அரசாங்கம் ஒரு உத்தரவாகவே கூற வேண்டிய நிலையில் நாம் சுதந்திர தினத்தை வரவேற்றுக்கொண்டிருக்கின்றோம். உணர்வு பூர்வமாக எமது நாட்டில் எத்தனைப்பேர் சுதந்திர தினத்தை அனுஷ்டிக்கின்றனர்? அல்லது அப்படி அனுபவிக்கும் சூழல் எப்போது ஏற்படும்?

சுதந்திரம் பெற்ற ஆண்டுகள் ஒவ்வொரு வருடமும் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. இம்முறை நாம் சுதந்திரம் பெற்று 74 வருடங்களைப் பூர்த்தி செய்கிறோம் என கூறிக்கொள்ளலாம். ஆனால் அந்த 74 வருடங்களில் நாம் எதைப்பெற்றோம் எதை இழந்தோம் என்பது குறித்து எவரும் தேடிப்பார்ப்பதில்லை. அந்நிய தேசத்திடமிருந்து சுதந்திரம் பெறுவதற்காக இன்னுயிரை இழத்தல் தியாகம் எனப்படுகின்றது. ஆனால் இங்கு சுதந்திரம் கிடைத்த பின்னர் ஏற்பட்ட வன்முறைகளும் உயிரிழப்புகளும் அந்நிய தேசத்தாரால் ஏற்பட்டதல்ல. இந்நிலை 74 வருடங்களை கடந்தும் தொடர்கின்றது என்றால், இதில் பாதிக்கப்பட்ட தரப்பினர் எங்ஙனம் உணர்வுபூர்வமாக சுதந்திர தினத்தை வரவேற்பர்? உண்மையான சுதந்திரம் என்றால் என்னவென்பதை எடுத்துக்கூறுவதில் நாம் பாடசாலை மாணவர்களையும் ஏமாற்றி வருகின்றோம்.

அவர்களின் பாடத்திட்டத்தில் இலங்கையின் சுதந்திர தின வரலாறு எவ்வாறு கட்டமைக்கப்பட்டுள்ளது என்பதை ஆராய்ந்தால் விளங்கும். சுதந்திரம் என்பது இன,மத ,மொழிகளை கடந்த ஒரு உணர்வு என்பதை இலங்கையில் சகல மக்களுக்கும் உணர்த்தும் செயற்பாடுகளை கடந்த கால தலைவர்கள் முன்னெடுத்திருக்கவில்லை. ஒரே மதம் ஒரே மொழி என்ற அடிப்படையின் நீட்சியே இன்று ஒரே நாடு ஒரே சட்டம் என்ற புதிய அத்தியாயத்தை தோற்றுவித்துள்ளது. இதன் காரணமாகவே இன்று இலங்கையில் நாம் மட்டுமே சுதந்திர தினத்தை கொண்டாட தகுதியானவர்கள் என்ற உணர்வு பெளத்த சிங்கள மக்களிடம் உருவாகியுள்ளது. சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம்பாடப்படல் வேண்டும் என்று பேரினவாதம் நினைக்கும் போது , அதையும் மீறி தமிழில் பாடப்பட்டால் அது தேசியத்துக்கு செய்யப்படும் அகெளரவமாகவே நோக்கப்படுகின்றது. 

ஒரு சாராருக்கு மட்டும் மறுக்கப்படும் சுதந்திரத்தை மற்றுமொரு சாரார் கொண்டாடுவதில்
என்ன தாற்பரியங்கள் உள்ளன?

Tuesday, February 1, 2022

Wednesday, January 19, 2022

அட்டன் நகர் வாழ் மக்களுக்கு சுகாதார சேவைகள் கிடைக்கின்றனவா?

 

 

நுவரெலியா மாவட்டத்தில்   பிரதேச செயலகங்கள் , பிரதேச சபைகள் மட்டுமின்றி இன்னும் சில மக்கள் சேவை வழங்கும்  அரச நிறுவன கட்டமைப்புகளும் அதிகரிக்கப்படல் வேண்டும்  என்பது இந்த மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து அரசியல்வாதிகளுக்கும் நன்கு தெரியும்.  ஆனால் மக்களுக்கு எது அவசியமோ அதை செய்யாமலிருப்பது தான் மலையக அரசியலாக உள்ளது.

பெருந்தோட்டப்பகுதிகளின் சுகாதார சேவைகள் எந்தளவுக்கு மந்தமாக இருக்கின்றன என்பதற்கு  பல தோட்டப்பகுதிகளில் வளங்களின்றி இயங்கி வரும் டிஸ்பென்சரிகளே  சாட்சிகளாக இருக்கின்றன. தோட்ட வைத்தியசாலைகளை அரசாங்கம் பொறுப்பேற்கும் திட்டம் வெற்றியளிக்கவில்லை.

தோட்ட உதவி வைத்திய அதிகாரிகள் என்ற பிரிவினர் இல்லாவிட்டால், பெருந்தோட்டத் தொழிலாளர்களின் நிலைமையை நினைத்துப்பார்க்க முடியாது. அதே போன்று பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பிரதான நகரங்களில்   சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயங்கள் (MOH) கடந்த காலங்களில் ஆரம்பிக்கப்பட்டன. நகரங்கள் மற்றும் அதனை  அண்டிய தோட்டப்பகுதி மக்களில் , குறிப்பாக கர்ப்பிணித்தாய்மார்களுக்கான கிளினிக் மற்றும் தடுப்பூசிகள் பெறல், குழந்தைபேறுக்கு பின்னர் தாய்–சேய் பராமரிப்பு ஆலோசனைகள் , குழந்தைகளுக்கான தடுப்பூசிகள் என இன்னோரன்ன சேவைகளை இதன் மூலம் பெற முடிந்தது. எனினும் நுவரெலியா மாவட்டத்தில் அதிக சனத்தொகை கொண்ட பிரதேச செயலகப்பிரிவுகளாக அம்பகமுவையும் நுவரெலியாவும் உள்ளன.  இங்கு  13  சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளே உள்ளன. சுமார்  7 இலட்சத்து 90 ஆயிரம் மக்கள் தொகை கொண்ட நுவரெலியா மாவட்டத்தில் கடந்த காலங்களில் கொவிட் –19 தடுப்பூசிகளை விரைவாக வழங்க தாமதம் நிலவியமைக்கு இதுவும் ஒரு பிரதான காரணமாகும்.

நுவரெலியா மாவட்டம்

குறித்த ஒரு பிரிவில் அமைந்துள்ள  சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமே அப்பிரதேசத்தின் பொது சுகாதாரம் தொடர்பான சகல விடயங்களுக்கும் பொறுப்பாக விளங்குகின்றது. பொது சுகாதார பரிசோதகர்கள் மற்றும்  குடும்ப நல உத்தியோகத்தர்களின் சேவைகள்  அளப்பரியன. நுவரெலியா மாவட்டத்தின் மொத்த சனத்தொகையில் 53 வீதத்துக்கும் மேற்பட்டோர் பெருந்தோட்டத்தொழிலாளர்களாவர். மேற்குறிப்பிட்ட  13   சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலும் அதிக சனத்தொகையை கொண்ட  சுகாதார பிரிவாக (MOH)   அம்பகமுவ உள்ளது.  இப்பிரிவின் மக்கள் தொகையின் எண்ணிக்கை சுமார்  தற்போது சராசரியாக 1 இலட்சமாகும்.  அதே வேளை மிகக்குறைந்த மக்கள் தொகை கொண்ட சுகாதார வைத்திய பிரிவாக வலப்பனை உள்ளது. இப்பிரிவின் சனத்தொகை  47,978 ஆகும்.  இந்த தரவுகளின் அடிப்படையில் அம்பகமுவ பிரதேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு, பிரதான நகரமாக உள்ள அட்டன் நகரத்தின் மையப்பிரதேசத்தில் ஒரு பிரதான   சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் உருவாக்கப்படல் வேண்டும் என ஆரம்பத்திலிருந்தே கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டு வருகின்றன. ஆனால் அது குறித்து எவரும் அலட்டிக்கொள்ளாத நிலைமைகளே உள்ளன. கொரோனா தடுப்பூசி வழங்கும் திட்டத்தின் கீழ் வயது அடிப்படையில் தடுப்பூசிகள் வழங்கப்பட்ட போது பிரச்சினைகள் வெளிவரவில்லை.

ஆனால் மூன்றாவது தடுப்பூசியான பூஸ்டர் வழங்கும் போது அதிக அம்பகமுவ பிரதேச செயலகப்பிரிவின் பல நகரங்கள் சிக்கல்களை எதிர்நோக்கின. அட்டன்– டிக்கோயா நகரசபை எல்லைக்குட்பட்ட பகுதியில் வாழ்ந்து வரும் 30–60 வயதுக்கிடைப்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசி வழங்கும் நிகழ்வு கடந்த வாரமளவில் இடம்பெற்றது. சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் கினிகத்தேனை நகரில் உள்ளது.  அங்கிருந்து சுகாதார உத்தியோகத்தர்கள்  அட்டன் நகருக்கு வந்து சேர்வதற்கே 10 மணியாகிவிட்டது. அன்று வியாழக்கிழமையாதலால் பலரும் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அனுப்பி விட்டு காலை 7 மணியிலிருந்து தடுப்பூசி வழங்கும் மண்டபத்தின் முன்பாக வரிசையில் நின்று கொண்டிருந்தனர். ஏனென்றால் அதற்கு முதல் நாள் மாலை நகரசபையானது காலை 8 மணியிலிருந்து தடுப்பூசி வழங்கப்படும் என நடமாடும் ஒலிபெருக்கி சேவையை முன்னெடுத்திருந்தது. தடுப்பூசி வழங்க ஆரம்பித்த போது வரிசையில் நிற்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்தை அண்மித்து விட்டது. ஒரு கட்டத்தில் நகர சபை லொறியில் சுகாதார உத்தியோகத்தர்கள் வந்திறங்கினர். அட்டன் நகரில் ஒரு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இருந்திருந்தால் இந்நிலைமை ஏற்பட்டிருக்காது.

அம்பகமுவ பிரதேச செயலாளர் பிரிவில் அம்பகமுவவை தவிர்த்து பொகவந்தலாவை மற்றும் மஸ்கெலியா ஆகிய இரண்டு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளே உள்ளன. நுவரெலியா மாவட்டத்தில் உள்ள இரண்டு நகரசபைகளில் அட்டன்– டிக்கோயா நகர சபையும் ஒன்று. ஆனால் இந்த நகரில்  ஒரு பிரதேச வைத்தியசாலை கூட இல்லை.  பண்டாரநாயக்க டவுண் பகுதியில் ஒரு ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவு (Primary Medical Care Unit)  மட்டுமே உள்ளது.  இந்த பிரிவானது சுகாதார வைத்தியர் காரியாலயத்தின் நிர்வாகத்தின் கீழேயே வர வேண்டும். ஆனால் அட்டன் நகரில் அக்காரியாலயம் இல்லாததால் நுவரெலியா  பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் (RDHS)  இதை நிர்வகிக்கின்றது. இவ்வாறு தான் அட்டன் நகரின் சுகாதார  சேவைகளின் நிலைமைகள் உள்ளன.  அட்டன் நகரில் சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயம் இல்லாததற்கு பிரதான காரணமே இங்கு வைத்தியசாலை ஒன்று இல்லாததாகும். ஏனென்றால் அட்டன் நகரை விட சனத்தொகையில் குறைந்த கொட்டகலை , லிந்துலை , பொகவந்தலாவை, மஸ்கெலியா, ராகலை ஆகிய  நகரங்களில் பிரதேச வைத்தியசாலைகள் இருக்கின்ற  காரணங்களினாலேயே  அங்கு MOH காரியாலயங்கள் உருவாகின என்றால் மிகையாகாது.     150 வருடங்களுக்கு மேல் பழைமை வாய்ந்த ஒரு நகரத்தில்  அதுவும் உள்ளூராட்சி சபைகளில் நகர சபையாக விளங்கும் அட்டன்– டிக்கோயா பிரதேசத்தில் ஒரு பிரதேச வைத்தியசாலையை உருவாக்குவதற்கு எந்த அரசியல் சக்தியும் ஆர்வம் காட்டவில்லை. இருக்கின்ற ஒரே ஆரம்ப மருத்துவ பராமரிப்பு பிரிவையும் தரம் உயர்த்துவதற்கு எவரும் சிந்திப்பதாக இல்லை. ஆனால்  நகர சபையை மாநகர சபையாக்க வேண்டும் என பல தடவைகள் பிரேரணைகள் கொண்டு வரப்பட்டிருக்கின்றன.  

இங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு முதலில் அடிப்படைத் தேவை என்ன என்பது குறித்து பிரதேச அரசியல் பிரமுகர்களும் அவர்களை வைத்து அரசியல் செய்யும் பாராளுமன்ற உறுப்பினர்களும் எப்போதும் சிந்திப்பதில்லை. அதன் காரணமாகவே நகர சபை எல்லைக்குட்பட்ட மக்கள் கிளங்கனில் அமைந்துள்ள ஆதார வைத்தியசாலைக்கு படையெடுக்கின்றனர்.  அந்த வைத்தியசாலையை தரமுயர்த்துவதற்குக் கூட இந்தியா தான் நிதியுதவி வழங்கியது.  மாகாண சுகாதார அமைச்சிடமோ அல்லது திணைக்களத்திடமோ சில விடயங்களைக் கேட்டுப்பெறுவதற்கே இங்கு எவருக்கும் தைரியமில்லாத போது யார்  மத்திய அரசாங்கத்திடம் கதைக்கப்போகின்றனர்? உள்ளூராட்சி சபைகளின் ஆயுட்காலம் அடுத்த மார்ச் மாதம் வரை  நீடிக்கப்பட்டுள்ளது. அட்டன் நகரில் ஒரு MOH காரியாலயம் அமைக்கப்படல் வேண்டும் என நகர சபையில் இதற்கு முன்னர் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. ஆனால் அதை அடுத்த கட்டத்துக்கு எடுத்துச்செல்லும் முயற்சிகள் எதுவும் முன்னெடுக்கப்படவில்லை.

  சிறுவர்கள் விளையாடுவதற்கு பூங்காக்கள் தேவைதான், ஆனால் சிறுவர்களும் அவர்களின் பெற்றோர்களும் உரிய சுகாதார வசதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் கட்டமைப்புகள் அவசியமல்லவா?

MOH பிரிவு

பொது சுகாதார பரிசோதகர் பிரிவு              

பொது சுகாதார   குடும்ப நல  உத்தியோத்தர்  பிரிவு    

மாவட்ட

ஆதார     வைத்தியசாலை 

பிரதேச               வைத்தியசாலை  

ஆரம்ப மருத்துவ

பராமரிப்பு பிரிவு

1

அம்பகமுவை

6

41

3

3

2

பொகவந்தலாவை

2

20

1

3

ஹங்குரான்கெத்த

3

30

1

3

4

கொட்டகலை

3

25

1

5

கொத்மலை

3

25

2

2

6

லிந்துலை

4

31

3

7

மஸ்கெலியா

3

25

1

1

1