Wednesday, November 12, 2008

தமிழ் சிற்பிகளால் நிர்மாணிக்கப்பட்டு வரும் புத்த பெருமானின் சிலை


முன்னுரை: இலங்கையில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கு மத்தியில் அண்மைக்காலமாக இராணுவத்தளபதி உட்பட அரசாங்கத்தரப்பு அமைச்சர்கள் பலர் இலங்கை ஒரு பௌத்த நாடு என்றும் அது சிங்களவர்களுக்கே சொந்தம் என்றும் கூறி வருகின்றனர். இந்நிலையில் சிங்களவர்கள் பூஜிக்கும் புத்த பெருமானின் சிலை நிர்மாணம் பற்றிய செய்து ஒன்று எனக்குக்கிடைத்தது.மேற்படி சிலை நிர்மாணிக்கப்பட்டு வரும் விகாரையின் பிரதம சாதுவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு இச்சிலை பற்றிய பல தகவல்கள் படங்களை அனுப்பும்படி கூறினேன். அதைக்கொண்டு இக்கட்டுரையை வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வரைந்தேன். இந்த விடயத்தை நான் எழுத எடுத்துக்கொண்டதற்கு பிரதான காரணமாக அமைந்த விடயங்கள் பல ,அதில் முக்கியமாக நான் கூற விழைந்தது என்னவென்றால் எந்த தமிழர்களை வந்தேறு குடிகள் என்றும் இலங்கையில் அவர்களுக்கு இடமில்லை என்றும் இனவாத சக்திகள் குறிப்பிடுகின்றனவோ அந்த இனவாத சக்திகள் பூஜிக்கும் புத்த பெருமான் சிலையை நிர்மாணிப்பது ஒரு தமிழன் தான். இது அவர்களுக்கு விளங்குமா?


*சமாதி நிலையில் அமைந்தவாறு செதுக்கப்பட்டு வரும் இச்சிலை 67.5 அடி உயரத்தில் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.


*இந்தியாவின் பிரபல சிற்பகலாமணி பத்மஸ்ரீ எம்.முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையின் கீழ் அவரது குழுவினர் இச்சிலையை செதுக்கி வருகின்றனர்.



* 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகவே இச்சிலை உருவாக்கும் எண்ணம் இப்பகுதி கிராம மக்களுக்கு எழுந்துள்ளது.






இலங்கையில் பௌத்த மதம் வேரூன்றிய பிறகு பௌத்தத்தை வளர்த்தெடுப்பதற்காக பண்டைய மன்னர்கள் நிர்மாணித்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை நாம் இன்று கண்குளிர கண்டு வருகிறோம். பண்டைய காலத்திலிருந்து அதாவது கி.பி 1235 ஆம் ஆண்டுக்குப்பிறகு அனுராத புரம் ,பொலனறுவை யுகங்கள் என அழைக்கப்பட்ட காலங்களே பௌத்தம் தலை தூக்கிய பொற்காலம் என குறிப்புகள் சொல்கின்றன. 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலும் மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட அவுகன புத்தர் சிலை, வெல்லவாயபுதுருவாகல சிலை, புத்தலமாளிகாவில சிலை, என்பவற்றை உதாரணங்களாகக்கூறலாம்.பண்டைய கால பௌத்த பாரம்பரியங்களை எமக்கு எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ள புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் என்பன இலங்கையின் பௌத்த வரலாற்றையும் பண்டையகால கட்டிடகலை நுணுக்கங்களையும் எமக்கு பாறை சாற்றுகின்றன.
இந்நிலையில் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிக உயர்ந்து கருங்கல் சமாதி புத்தர் சிலை பற்றிய தகவல்களை இங்கு குறிப்பிடுதல் அவசியம். குருணாகல் பகுதியில் அமைந்துள்ள ரம்படகல,ரிதிகமமொனராகலை விகாரையில் அமைந்துள்ள கருங்கற்பாறையில் ஒரு சமாதி நிலை புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகள் தற்போது முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக மேற்படி விகாரையின் பிரதம குருவான வணக்கத்துக்குரிய அமரமௌலி தேரோ எமக்குத்தெரிவித்தார்.




சிலை செதுக்கப்பட முன்னர் கருங்கற் பாறையின் உருவம்





இதில் குறிப்பிடப்படவேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் இச்சிலையை இந்தியாவின் பிரபல சிற்பக்கலைஞரான பத்மஸ்ரீ சிற்ப கலாமணி எம்.முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையின் பேரில் அவரது குழுவினரே நிர்மாணித்து வருகின்றனர். சமாதி நிலையில் அமைந்தவாறு செதுக்கப்பட்டு வரும் இச்சிலை 67.5 அடி உயரத்தில் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இச்சிலையை நிர்மாணிப்பதற்கு இரண்டரை கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும் இவ்விடத்தை சீர்படுத்தி தனியான தியான மண்டபங்கள் அமைப்பதற்கு மேலும் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவரை செலவாகும் என பிரதம குரு அமரமௌலி தேரோ தெரிவிக்கிறார். இது குறித்து அவர் கருத்துத்தெரிவிக்கையில் செலவீனத்தை பார்க்காமல் இந்த புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்குறிய வேலைகளை சிற்பக்குழுவினர் 2002 ஆம் ஆண்டு மனத்திடத்துடன் ஆரம்பித்து விட்டனர்.


வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் இச்சிலை நிர்மாணப்பணிகளுக்காக அப்போதைய இந்தியத்தூதுவர் நிருபமா ராவ் ரூபா 25 இலட்சத்தை மனமுவந்து கொடுத்துதவினார். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ஒரு இலட்சததையும்,மலீக் சமரவிக்ரம ரூபா 5 இலட்சத்தையும், மற்றும் தாராள சிந்தையுடையோர் பலர் இந்நிர்மாணப்பணிகளுக்காக மனமுவந்த நிதியுதவி செய்துள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 25 இலட்சம் ரூபா கொடுத்துதவியதையும் எம்மால் மறக்க முடியாது.


இச்சிலை பற்றி குறிப்பிட்டுக்கூறவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் பண்டை காலத்திலிருந்து அதாவது 12 ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட சமூக ,பொருளாதார மாற்றங்களினால் எமது பண்பாடு கலாசாரத்துடன் இணைந்து கலைகளும் படிப்படியாக வீழ்ச்சியுறத்தொடங்கின. சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்டுக்கூறப்படவேண்டிய கலைப்படைப்பு என்றால் 1950 களில் நிர்மாணிக்கப்பட்ட விகேரஹேன புத்தர் சிலையைக்குறிப்பிடலாம். இச்சிலையானது கருங்கல்லில் நிர்மாணிக்கப்படாதபோதும் சுதந்திரத்தின் பின்னர் உருவாகிய எமது கலைப்பண்பாட்டை எடுத்துக்கூறும் குறிப்பிடத்தக்க ஒரு வராற்று சின்னமாக விளங்குகிறது. இதற்குப்பின்னர் எமது இலங்கை தீவில் பரவலாக இச்சிலையை ஒத்த சிலைகள் ,கருங்கல்லில் செதுக்கப்படாத சிலைகள் என்பன எழுந்தள்ளதை அவதானிக்கமுடிகின்றது.


தற்போது எமது வித்தியா சாகர பிரிவென விகாரையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சமாதி நிலை புத்தர் சிலை அமைக்கப்படுவதற்கு பின்புலமாய் இருந்த காரணங்களை இவ்விடத்தில் கூறுவது சாலச்சிறந்தது என்றே நான் கருதுகிறேன்.2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள பாமியன் புத்தர் சிலைகள் தலிபான்களால் சேதமாக்கப்பட்ட சம்பவம் எமது கிராமத்தில் உள்ள மக்களை வெகுவாக பாதித்தது.இக்கசப்பான நிகழ்வினால் ஏற்பட்ட மனத்தாக்கத்தின் வெளிப்பாடே இம்மக்கள் திடசங்கற்பத்துடன் இக்கருங்கல் புத்தர் சிலை செதுக்கும் பணிக்கு ஆதரவளிக்க ஏதுவாயிற்று. இச்சிலையை நிர்மாணிக்கும் வேலைப்பணிகளுக்கு இக்கிராம மக்கள் அடிக்கடி தமது உடல் உழைப்பை வழங்கி அருஞ்சேவையாற்றி வருகின்றனர்.மேலும் சிலர் பண உதவிக்கு அப்பாற்பட்டு இப்பணிக்குத்தேவையான இயந்திர உபகரணங்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றனர் என்று கூறினார்.
எதிர்கால செயற்பாடுகள்இக்கருங்கல் சமாதி புத்தர் சிலை தொடர்பான எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து அமரமௌலி தேரர் கூறுகையில் ‘இச்சிலை செதுக்குவதற்கு ஒதுக்கப்பட் பகுதியைச்சூழவுள்ள பாறையின் ஏனைய பகுதிகள் அகற்றப்பட்டுவிட்டன.குறிப்பிட்ட பாறையில் சிலையின் மேற்பகுதி அதாவது சிரசு பாகம் முழுமையாக செதுக்கப்பட்டு விட்டது. இச்சிலையை 2009ஆம் ஆண்டளவில் முழுமையாக செதுக்கி முடித்து விட முடியும் என பிரதான சிற்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இச்சிலை நிர்மாணம் தொடர்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களும் கூட மிக உற்சாகத்துடன் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள்.


இங்கு இன்னுமோர் விடயத்தை கூற வேண்டும். எமது பண்டைய மன்னர்கள் கற்பாறைகளில் செதுக்கி வைத்ததும்,இன்று சிதைவடைந்த நிலையில் உள்ளதுமான அனுராதபுரம் பொலன்னறுவை கால சிலைகள் உங்கள் பார்வையில் படும் போது ஏற்படும் மகிழ்சி உணர்வை உங்களால் மதிப்பிட முடியுமா? அதன் பெறுமதியை வெறும் பண அடிப்படையில் எடை போட முடியுமா? மொனராகலை பிரிவெனா விகாரையில் உள்ள இளம்பிக்குமாரும்,கிராமத்தவர்களும் அனுபவம் மிக்க இந்திய சிற்ப கலைஞர்களின் உதவியுடன் மொனராகலை இரம்பொடகலையில் அமைந்துள்ள ஓர் உயிரற்ற பாறைக்கு உயிரூட்டி மிகப்பிரமாண்டமான தனிக்கருங்கற் புத்தர் சிலை ஒன்றை உருவாக்கி வருகின்றனர். ஆகவே உயிரற்ற ஒரு பாறை புத்த பெருமானின் மேன்மையான இயல்புகள் வெளிப்படும் விதமாக படிப்படியாக உயிரூட்டப்படுவதை பார்த்து ஆனந்தமடைய உங்கள் அனைவரையும் குடும்பம் சகிதம் அன்போஐ அழைக்கின்றோம். தேசிய பொக்கிசமாகவும் எம் எதிர்காலச் சந்ததியினரின் சொத்தாகவும் விளங்கப்போகும் இப்பிரமாண்டமான சிலையை வெற்றிகரமாகக்செதுக்கி முடிக்க தங்கள் அனைவரதும் தாராளமான பங்களிப்பையும் பெறுமதி மிக்க ஒத்துழைப்பையும் இக்கருங்கற்சிலை நிர்மாண குழு மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றது’ என்கிறார் தேரர்.இலங்கையின் வரலாற்றில் இடம்பெறப்போகின்ற இக்கருங்கற் சமாதி புத்தர் சிலைநிர்மாணப்பணிகள் சிறப்பாக இடம்பெற நாமும் பிரார்த்திப்போம்.இச்சிலையின் நிர்மாணப்பணிகள் மற்றும் விகாரையின் வரலாறு குறித்து அறிந்து கொள்ள http://www.samadhibuddhastatue.org/ எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து தகவல்கள் படங்களை பெறமுடியும்.