Monday, September 13, 2010

மலையக மக்களை நாம் மறக்க வில்லை…!



இலங்கையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த மத்திய மலை பிரதேசத்தில் செறிந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை நாம் மறக்க வில்லை. மறக்கவும் முடியாது.தென்னிந்தியாவிலிருந்து அவர்கள் உழைக்கும் மக்களாக இங்கு வந்த காலம் முதல் இப்போதுள்ள சூழல் வரை எல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அறியாமலில்லை என்று கூறுகிறார் பாடகர் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம்.வீரகேசரி பத்திரிகையின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் கொழும்பு ,யாழ்ப்பாணம் ,மற்றும் மலையகத்தில் கொட்டகலை ஆகிய இடங்களில் இன்னிசை கச்சேரிகள் நடத்தி இசை ஆர்வலர்களை மட்டுமன்றி தனது அமைதியான அன்பான குணத்தின் மூலம் பலரினதும் மனதில் இடம்பிடித்து விட்டார் டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம். சரீரத்தில் மட்டுமன்றி சாரீரத்திலும் தனது தந்தை சீர்காழி கோவிந்தராஜனை எமது கண் முன் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்திய அவரை சூரியகாந்தி பத்திரிகைக்காக அட்டனில் சந்தித்த போது அவர் தெரிவித்த கருத்துக்கள்.
மலையகம் என்ற சொற்பதம் எமக்கு புதியதல்ல அதன் தரைத்தோற்றம் மக்கள் ,அவர்களின் பண்புகள் எல்லாம் அறிந்து தான் வைத்துள்ளோம். எனது தந்தைக்கு எந்தளவிற்கு இங்கு இரசிகர்கள் உள்ளனரோ அதே போல் எனக்கும் எனது குழுவினருக்கும் இங்கு கிடைத்த வரவேற்பு நெகிழ்ச்சியைத் தருகிறது. 80 வருடம் தொடர்ச்சியாக ஒரு தமிழ் பத்திரிகை இலங்கையில் வந்து கொண்டிருப்பது ஆச்சரியம் அந்த பத்திரிகை நிறுவனத்தின் அழைப்பின் பேரில் என்னையும் எனது குழுவினரையும் அழைத்து இன்னிசை கச்சேரி நடத்தி எமக்கு மாபெரும் கௌரவத்தை அளித்து விட்டனர். என்று தான் கூற வேண்டும்.
மேலும் இவ்வாறான இசை நிகழ்வுகள் எமது உறவை மேலும் வலுப்படுத்துகின்றன. கலைகளுக்கு மொழியோ மதமோ ஒரு தடையாக இருப்பதில்லை. அதை பலமுறை பல சந்தர்ப்பங்களில் நாம் அவதானித்துள்ளோம் அனுபவித்துள்ளோம். இவ்வாறான நிகழ்வுகள் எம்மை மட்டுமல்லாது அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் உள அமைதியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. இன்னிசை கச்சேரிக்காக இலங்கை மண்ணில் கால் பதித்த நாள் முதல் எமக்குக்கிடைத்த வரவேற்பும் அன்பும் மறக்க முடியாதவை. எனது தந்தையின் குரல் எனக்கு இருப்பதாக பலரும் கூறி ஆச்சரியப்படுகின்றனர்.இது எனக்குக்கிடைத்த வரம் என்றே கூற வேண்டும். குரலை வளப்படுத்த நான் விசேடமாக எதுவும் செய்வது கிடையாது. அதை அப்படியே விட்டு விட வேண்டும் என்று தான் கூறுவேன்.குரலை கடினப்படுத்தி பாடல்கள் என்ற பெயரில் சத்தமிடுவதை தவிர்த்தாலே போதும்.
மலையகத்தில் கொட்டகலை நகரில் நான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இன்னிசை கச்சேரி நடந்தது.அனைவரும் அமைதியாக அமர்ந்து மெய்மறந்து இரசித்து பார்த்தது மட்டுமன்றி தமக்கு விருப்பமான பாடல்களை எழுதி தந்தனர். அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினோம். எம்மேல் அவர்கள் வைத்திருந்த அன்பின் வெளிப்பாட்டை மனமகிழந்து ஏற்றோம் என்றார்.
உங்களது தந்தை பக்தி பாடல்களால் புகழ் பெற்றவர் நீங்கள் விரும்பி வணங்கும் தெய்வம் யார் என்று கேட்டதற்கு சட்டென தாய் தான் என்று பதில் வந்தது. அதற்கு காரணமும் கூறினார். தந்தை தாயை விட வேறு தெய்வங்கள் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அதிலும் சிறுவயதில் சோறுட்டி ,பாலூட்டி ,தாலாட்டி ,சீராட்டி வளர்ப்பதில் தாயின் பங்கை எவரும் நிரப்பி விட முடியாது. பிள்ளையின் முதல் சொந்தம் தாய் தானே? நான் இன்றும் எனது தாயுடன் தான் வசித்து வருகிறேன் என்கிறார் சீர்காழி .ஜி.சிவசிதம்பரம். வித்தியாசமான அதே நேரம் மலையக மக்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும் ஒரு இன்முகக் கலைஞரை சந்தித்ததில் மனம் நிரம்பியிருந்தது.
சிவலிங்கம் சிவகுமாரன்