Thursday, July 2, 2009

இலங்கைக்கு தேயிலையை அறிமுகப்படுத்தியவர்



ஜேம்ஸ் டெய்லர் என்றதும் எமக்கு ஞாபகம் வருவது இலங்கையில் தேயிலையை அறிமுகப்படுத்தியவர் என்பது தான். இவரைப்பற்றி விரிவாக அறிந்து கொள்ள வேண்டியது இந்த தலைமுறையினருக்கு மிக அவசியமானதொன்று. பிரித்தானியரான ஜேம்ஸ் டெய்லர் 1835 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 29 ஆம் திகதி இங்கிலாந்தில் பிறந்தார். 1852 ஆம் ஆண்டு இவர் இலங்கைக்கு வந்த போது கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர தோட்டத்தில் நிரந்தரமாகத்தங்கி விட்டார். தேயிலை தொழிற்றுறை மற்றும் தேயிலைச்செய்கை பற்றியும் அறிந்து கொள்வதற்காக இவர் 1866 ஆம் ஆண்டு இந்தியாவுக்கு பயணம் செய்து அங்கு பல விடயங்களைக்கற்றார். பின்பு 1867 ஆம் ஆண்டு நாடு திரும்பிய இவர் தான் கற்ற விடயங்களையே மூலதனமாக்கொண்டு தான் வசித்த லூல்கந்துர தோட்டத்தில் 19 ஏக்கரில் தேயிலைப்பயிர்ச்செய்கையை ஆரம்பித்தார். அத்தோடு சிங்கோனாவையும் பயிரிட்டனர். இலங்கையில் முதன் முதலாக தேயிலை பயிரிடப்பட்ட இடமாக லூல்கந்துர தோட்டமே விளங்குகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதன் பின்னர் 1872 ஆம் ஆண்டு இங்கு அவர் ஒரு தேயிலை தொழிற்சாலையையும் ஆரம்பித்தார். தேயிலை தொழிற்றுறையை இலங்கையில் அபிவிருத்தி செய்யும் பொருட்டு அச்சந்தர்ப்பத்தில் இங்கு வந்த ஸ்கொட்லாந்து நாட்டவரான தோமஸ் லிப்டனிடம் இணைந்து தேயிலையை பிரித்தானியாவுக்கு ஏற்றுமதி செய்வது தொடர்பில் கலந்துரையாடினார் டெய்லர். ஐக்கிய இராச்சியத்தின் கோடீஸ்வரராக விளங்கிய தோமஸ் லிப்டன் 1890 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு செல்லவிருந்த பயணத்தை இடை நிறுத்தி இலங்கை வந்தார்.அதற்குக்காரணம் அப்போது இலங்கையின் தேயிலை உற்பத்தி பற்றி எழுந்த கதைகள் தான். டெய்லரை சந்தித்த தோமஸ் லிப்டன் அவரிடம் இலங்கைக்தேயிலையை வாங்கி பிரித்தானியாவில் விற்பனை செய்ய சம்மதம் தெரிவித்தார்.இதன் பிறகு டெய்லர் இலங்கையிலிருந்து தேயிலையை ஏற்றுமதி செய்யும் அளவிற்கு இத்துறையை முன்னேற்றினார். 23 பவுண்ட்களில் ஆரம்பித்த இவரது தேயிலை ஏற்றுமதி 81 தொன்களாக அதிகரித்து 1890 ஆம் ஆண்டின் இறுதியில் 22,900 தொன்களாக உச்சத்தை தொட்டது. அதன் பின்னர் டெய்லர் ஹேவாஹெட்ட பிரதேசத்தின் காட்டுப்பகுதியை சுத்தப்படுத்தி 19 ஏக்கரில் தேயிலை விதைகள் மூலம் தேயிலை பயிரிட்டார். தனது அயராத முயற்சி காரணமாக 1875 ஆம் ஆண்டு இலண்டனில் இடம்பெற்ற தேயிலை ஏல விற்பனையில் இலங்கைத்தேயிலையை இடம்பெறச்செய்தார்.இலங்கையின் தேயிலைத்தொழிற்றுறை அசுர வேகத்தில் வளர்ச்சி கண்டது. பல தேயிலை கம்பனிகள் இதன் இலாபத்தை அனுபவிக்க தயாராகின.சிறிய தேயிலை தோட்டங்கள் பலதை இந்த கம்பனிகள் விலை கொடுத்து வாங்கின. டெய்லர் இருந்த லூல்கந்துர தோட்டமும் இதற்கு இரையானது. இலங்கையில்முதன் முதலாக தேயிலையை பயிரிட்டவர் என்ற பெருமைக்குரிய டெய்லர் மிகுந்த மனவேதவையுடன் லூல்கந்துர தோட்டத்தை விட்டு வெளியேறினார்.தனது வாழ்நாளில் அரைவாசியை இலங்கையிலேயே கழித்தார்.அதாவது 57 வருடங்கள். 1892 ஆம் ஆண்டு உயிர் நீக்கும் வரை அவர் இலங்கை மண்ணை விட்டு நீங்கவில்லை. லூல்கந்துர தோட்டத்தை விட்டு நீங்கிய ஜேம்ஸ் டெய்லர் வயிற்று உபாதை நோயால் பாதிக்கப்பட்டு அவ்வாண்டே காலமானார். அவரது உடல் கண்டி மகியாவ மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.அவரது கல்லறையில் பொறிக்கப்பட்டுள்ள வாசகங்கள் இவை;


"In pious memory of James Taylor of Loolecondera Estate Ceylon, the pioneer of the cinchona and tea enterprise in this island, who died May 2, 1892, aged 57 years"..


ஜேம்ஸ் டெய்லர் இறந்து சரியாக ஒரு வருடம் கழித்து அதாவது 1893 ஆம் ஆண்டு இலங்கையிலிருந்து சுமார் பத்து இலட்சம் தேயிலை பைக்கற்றுகள் இலண்டனுக்கு கப்பல் மூலம் கொண்டு செல்லப்பட்டு அமெரிக்காவின் சிக்காக்கோவில் இடம்பெற்ற உலக சந்தையில் விற்பனை செய்யப்பட்டது. 1867 ஆம் ஆண்டு தொடக்கம் இலங்கையில் உள்ள தேயிலை தோட்டங்களில் 80 வீதமானவை பிரித்தானிய கம்பனிகள் வசம் இருந்தன. 1971 ஆம் ஆண்டே இலங்கை அரசாங்கம் நிலவுரிமை சட்டத்தை அறிமுகப்படுத்தி பல தேயிலை தோட்டங்களை தன்வசமாக்கியது. 1992 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லர் இறந்து நூறாண்டுகள் நினைவு கூறப்பட்டது. அச்சந்தர்ப்பத்தில் அப்போதைய பிரித்தானிய உயர்ஸ்தானிகராக இருந்த ஜோன் பீல்ட் (ஒணிடண ஊடிஞுடூஞீ) கூறிய வார்த்தைகள் உண்மையில் அர்த்தம் வாய்ந்ததாகத்தான் அமைந்தது.இலங்கையின் மத்திய மலை நாட்டை செதுக்கியவர்களுள் பல தனிப்பட்ட நபர்களும் தொழிலாளர்களும் அடங்கலாம், ஆனால் மத்திய மலை நாட்டை அழகு படுத்தியதில் ஜேம்ஸ் டெய்லர் என்ற மனிதரின் பங்கு அளவு கடந்தது. தேயிலையைப் பயிரிட்டதன் மூலம் அவர் இதை செய்தார், இவ்வாறு அவர் கூறினார்.


"It can be said of very few individuals that their labors have helped to shape the landscape of a country. But the beauty of the hill country as it now appears owes much to the inspiration of James Taylor, the man who introduced tea cultivation to Sri Lanka".


ஜேம்ஸ் டெய்லர் வாழ்ந்த இடத்தில் அவ்வாண்டு நூதன சாலை ஒன்றும் அமைக்கப்பட்டது. இன்று தேயிலைத்தொழிற்றுறையில் உலகில் தனித்துவமிக்க நாடாக விளங்குகிறது இலங்கை. மேலும் தேசிய வருமானத்தில் பெரும்பங்கு வகிக்கின்றது. இத்தனைக்கும் காரணமான ஜேம்ஸ் டெய்லர் என்ற மனிதரை நாமும் ஞாபகப்படுத்திக்கொள்வது தான் நாம் அவருக்கு செய்யும் நன்றிக்கடன்.

Wednesday, July 1, 2009

உங்களுக்குத்தெரியாத கிரிக்கெட்



டெஸ்ட் போட்டியொன்றில் சதம் பெறுவது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. போட்டியின் தன்மைக்கேற்ப வேகமாகவும் மிக தாமதமாகவும் டெஸ்ட் சதங்கள் பெறப்பட்டிருக்கின்றன. ஆனால் டெஸ்ட் வரலாற்றில் அதிக நேரம் எடுத்துப்பெறப்பட்ட சதம் எது தெரியுமா? 1978 ஆம் ஆண்டு இது பெறப்பட்டது. இங்கிலாந்துக்கு எதிராக இவ்வாண்டு லாகூரில் இடம்பெற்ற டெஸ்ட் போட்டியில் முதாசர் நஸார் 557 நிமிடங்கள் களத்திலிருந்து சதம் பெற்றார். அதே போல் பவுண்டரிகளே பெறாது டெஸ்ட் போட்டியில் அதிக ஓட்ட எண்ணிக்கைப்பெறப்பட்ட சந்தர்ப்பங்களும் உண்டு. 1979 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு எதிராக பெர்த்தில் இடம்பெற்ற போட்டியில் இங்கிலாந்து வீரர் ஜெப்ரி பொய்கொட் 77 ஓட்டங்களைப்பெற்றார். இவ்வோட்ட எண்ணிக்கையில் ஒரு நான்கு ஓட்டங்கள் பதிவாகியிருக்கின்ற போதிலும் அது ஓடிப்பெறப்பட்டதாகும்.


அபூர்வ நிகழ்வுகள்
கிரிக்கெட்டில் அவ்வப்போது ஒரு சில அபூர்வ நிகழ்வுகள் இடம்பெறுவதுண்டு. இது ஒரு சில சந்தர்ப்பங்களில் பந்து வீச்சாளருக்கு பாதகமாகவும் துடுப்பாட்ட வீரரருக்கு சாதகமாகவும் அமைந்து விடுவதுண்டு. பந்து ஸ்டம்புகளுக்கிடையில் சென்றும் பேல்ஸ்கள் கீழே விழாத சந்தர்ப்பம் ஒன்று கிரிக்கெட்டில் இடம்பெற்றுள்ளது. இது ஒரு அபூர்வமான நிகழ்வாகும். 1998ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு கிரிக்கெட் சுற்றுலாவை மேற்கொண்டிருந்தது தென்னாபிரிக்க கிரிக்கெட் அணி. பைசலாபாத்தில் இடம்பெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னங்ஸில் தென்னாபிரிக்கா துடுப்பெடுத்தாடியது. 98 ஓட்டங்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது தென்னாபிரிக்கா.ஆரம்ப துடுப்பாட்ட வீரர் கேரி கேர்ஸ்டனுடன் 8 ஆவது விக்கெட்டுக்காக இணைந்தார் சுழற்பந்து வீச்சாளர் பெட் சிம்கொக்ஸ். மிக வேகமாக துடுப்பெடுத்தாடினார். 56 ஓட்டங்களைப்பெற்றிருந்த போது பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சாளர் முஷ்டாக் அகமட் வீசிய பந்து ஓப் திசை மற்றும் மத்திய ஸ்டம்பின் இடையே வேளியேறியது,என்ன அதிசயம் பேல்ஸ்கள் அசையவே இல்லை. நடுவர் ஸ்டீவ் டன்னுக்கு தனது கண்களையே நம்ப முடியவில்லை. அதன் பிறகு தனது வழமையான துடுப்பாட்டத்தை தொடர்ந்த சிம்கொக்ஸ் 10 பவுண்டரிகள் 2 சிக்ஸர்கள் அடங்கலாக 81 ஓட்டங்களைப்பெற்றார். இப்போட்டியில் தென்னாபிரிக்கா 53 ஓட்டங்களள்ல வெற்றி பெற இவரின் இந்த இன்னிங்ஸ் பெரிதும் உதவியது. இப்போட்டியின் ஆட்ட நாயகனாகவும் அவரே தெரிவு செய்யப்பட்டார்.



முறியடிக்கப்படாத சாதனைகள்


நியூசிலாந்து அணியின் சகல துறை வீரர் புரூஸ் டெய்லரின் ஒரு சாதனை இது வரை எவராலம் முறியடிக்கப்படவில்லை. 1965 ஆம் ஆண்டு கொல்கத்தாவில் இடம்பெற்ற இந்திய அணிக்கு எதிரான போட்டியே அவரது முதல் டெஸ்ட் போட்டி.இப்போட்டியில் துடுப்பெடுத்தாடிய டெய்லர் தனது முதல் போட்டியிலேயே சதம் பெற்றார் (105).பின்னர் பந்து வீச்சில் 86 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை வீழத்தினார். டெஸ்ட் போட்டி ஒன்றில் சதம் பெற்ற வீரர் ஒருவர் பந்த வீச்சில் 5 விக்கெட்டுகளைப்பெற்ற சந்தர்ப்பங்கள் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 26 தடவைகள் இடம்பிடித்துள்ளன. ஆனால் புரூஸ் டெய்லருக்குப்பிறகு எவரும் தனது கன்னி டெஸ்ட் போட்டியில் இதை நிகழ்த்தவில்லை. ஆக டெய்லரின் சாதனை 44 வருடங்களாக முறியடிக்கப்படாம்ல உள்ளது.

Monday, June 29, 2009

ஐரோப்பியரால் உருவாக்கப்பட்ட அம்மன் ஆலயம்




சுமார் 200 வருடங்கள் பழமையான ஹங்வெல ஸ்ரீ அங்காளப்பரமேஸ்வரி ஆலயம்



இலங்கையில் காலனித்துவ ஆட்சி காலத்தில் பெருந்தோட்டப்பகுதிகளில் அமைந்த ஆலயங்கள் பல இன்று உரு தெரியாமல் போய்விட்டன. அவை குறித்த ஆராய்ச்சிகளும் கிடப்பில் போடப்பட்டு விட்டன. எனினும் ஐரோப்பியர் ஆட்சி காலத்தில் அவர்களாலேயே பெருந்தோட்டப்பகுதிகளில் உருவான ஒரு சில ஆலயங்கள் குறித்து இன்று நாம் அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவதில்லை. அப்படி உருவான ஒரு ஆலயம் தான் ஹங்வெல ஸ்ரீ அங்காளப்பரமேஸ்வரி ஆலயம்.
அவிசாவளையிலிருந்து கொழும்புக்குச்செல்லும் புதிய பாதையில் ஹங்வெல எனும் இடத்தில் அமைதியாக இருந்து அருள் பாலிக்கும் இந்த ஆலயத்தின் வரலாறு தொன்மை வாய்ந்ததாகும்.


சுமார் 200 வருடங்கள் பழமை வாய்ந்ததாக கருதப்படும் இந்த ஆலயம் இறப்பர் மரங்கள் சூழவுள்ள இயற்கை அன்னை ஆட்சி செய்யும் அமைதியான இடத்தில் அமைந்துள்ளது. இவ்வாலயத்தின் விசேடம் என்னவெனில் இங்கு சுமார் 300 வருடங்கள் பழமையான ஆலமரம் ஒன்று வீற்றிருக்கின்றது. இதுவே இவ்வாலயத்தின் சரித்திரம் கூறுவதாக அமைந்துள்ளது. சுமார் 150 வருடங்களுக்கு முன்னர் இப்பகுதியில் தேயிலை தோட்டங்கள் இருந்ததாகவும் மேற்படி விருட்சத்தின் அடியில் இருந்த சக்தி வாய்ந்த கல்லையே அம்மனாக நினைத்து இப்பகுதி மக்கள் வழிபட்டு வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இருநூறு வருடங்களுக்கு முன்னர் இந்தியாவின் கேரளா மாவட்டத்தில் இருந்து இங்கு வந்த மக்களின் வழிபாட்டுத்தலமாக இவ்விடம் இருந்திருக்கலாம் என்றும் எனினும் அதற்கு முன்னதாக இவ்விடத்தில் ஆலயம் இருந்திருக்கக்கூடிய ஆதாரங்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. அக்காலத்தில் இப்பகுதியில் சுமார் மூவாயிரம் குடும்பங்களுக்கு மேல் இருந்ததாகவும் கூடுதலாக பிராமணர்கள் பூஜை செய்ததற்கான ஆதாரங்கள் கிடைத்திருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது. முக்கியமாக பிராமண ஜாதி என்று குறிப்பிடப்பட்ட பிறப்புச்சான்றிதழ்கள் இதை உறுதிப்படுத்துகின்றன.
ஹங்வெல என்ற பெயரில் இருந்து அங்காளப்பரமேஸ்வரி உருவானதா அல்லது அங்காளப்பரமேஸ்வரி எனும் பதத்திலிருந்த ஹங்வெல எனும் இடம் உருவானதா என்பது இன்று வரை கேள்விக்குறியாகவே உள்ளது. ஆரம்பத்தில் தேயிலை தோட்டங்கள் இருந்த இடத்தில் பின்னர் இறப்பர் தோட்டங்கள் உருவாகின. இங்கு வேலை செய்வதற்காக இந்தியாவின் திருச்சி மாவட்டத்தின் கரூர் எனும் இடத்தில் இருந்து மக்கள் வரவழைக்கப்பட்டனர் என்கிறார் இலங்கையின் பாரம்பரிய இந்து கோயில்கள் பற்றி ஆராய்ச்சி செய்து அற்புதமான பல உண்மைகளை வெளிப்படுத்தி வரும் என்.கே.எஸ்.திருச்செல்வம்.
தோட்டத்துரைக்கு காட்சி கொடுத்த அம்மன்
இங்கமைந்த இறப்பர் தோட்டத்தின் உரிமையாளராக இருந்தவர் இங்கிலாந்து நாட்டைச்சேர்ந்த ஹோடன் புரூக் என்பவராவார். ஒருமுறை இவர் இத்தோட்டத்தின் வழியே நடந்து வரும் போது ஒரு பெண்ணை இவர் அவதானித்திருக்கிறார். இப்பகுதிக்கு புதிய முகமாக இருக்கின்றதே என அவர் இப்பெண்ணை பின்தொடர்ந்துள்ளார். ஒருகட்டத்தில் ஆலமரத்தடிக்கு வந்த பெண் மாயமாய் மறைந்துள்ளார். இக்காட்சியை கண்டு அதிசயித்த ஹோடன் புரூக் இதை தோட்டக்கங்காணிமார் மற்றும் வேலையாட்களிடம் இது குறித்து கூறியுள்ளார். இங்கு குடியிருக்கும் அம்மன் தான் பெண்ணுருவில் வந்திருப்பார் என பயபக்தியோடு தோட்ட மக்கள் கூற உடனடியாக அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை எழுப்ப அந்த வெள்ளைக்கார தோட்டத்துரை முடிவெடுத்தார்.
அதன் படி தோட்டத்தின் முக்கியஸ்தர்களை அழைத்து இது குறித்து அவர் கலந்துரையாடி இந்தியாவில் அமைந்துள்ள மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்திற்கு ஒரு குழுவினரை அனுப்பி அவ்வாலய தோற்றம் குறித்து அறிந்து வரும்படியும் மேலும் அங்கிருந்து சிற்ப கலைஞர்களை அழைத்து வரும்படியும் கூறியுள்ளார். இதன்படி ஆலயம் அமைப்பதற்குரிய பொருட்கள் இந்தியாவிலிருந்து கொண்ட வரப்பட்டன.சிற்பாசாரியார்களும் அங்கிருந்து வந்தனர். மிகப்பழமையான ஆலமரத்தின் கீழ் அமைந்த கோயில் 1875 ஆம் ஆண்டு பெரிய கோயிலாக கட்டப்பட்டு கும்பாபிஷேகமும் இடம்பெற்றது.
இதற்குப்பிறகு சில வருடங்களில் ஹோடன் புரூக் இந்த தோட்டத்தை வேறு ஒருவருக்கு விற்றுவிட்டு இங்கிலாந்து சென்று விட்டார். தோட்டத்தொழிலாளர்களும் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து விட்டனர்.சுமார் நூறு வருடங்கள் வரை இவ்வாலயம் கைவிடப்பட்டு கவனிப்பாரறின்றி கிடந்தது.காலப்போக்கில் சிதைவடைந்து விட்டது. பின்னர் இத்தோட்டத்தைச்சேர்ந்த டி.செல்வநாயகம் என்பவர் கடந்த 15 வருடங்களாக இத்தோட்ட மக்களின் ஆதரவில் பரிபாலன சபை ஒன்றை உருவாக்கி இக்கோயிலை புனருத்தாரனம் செய்யும் முயற்சியில் இறங்கினார். தலைநகர் வாழ் வர்த்தகப்பெருமக்கள் மற்றும் அவிசாவளை மலையகத்தின் ஏனைய பகுதிகளைச்சேர்ந்த வர்த்தகர்கள்,தனவந்தர்கள் ஆகியோரின் பண மற்றும் பொருள் உதவியினால் படிப்படியாக இக்கோயில் புது மெருகுப்பெற்றது. அங்காளப்பரமேஸ்வரியின் அருள் கடாட்சத்தினால் கடந்த வருடம் 06-06-2009 அன்று இவ்வாலயத்தின் மகா கும்பாபிஷேகம் இடம்பெற்றது.
சுமார் 130 வருடங்களுக்குப்பிறகு இவ்வாலயத்தில் இரண்டாவது தடவையாக கும்பாபிஷேகம் இடம்பெற்றுள்ளது. இவ்வாலயத்திற்கு இன பேதம் பாராது அனைவரும் வந்து போகின்றமை மற்றுமோர் முக்கிய அம்சம். ஆலயத்தின் உட்பிரகாரத்தில் பக்கவாட்டின் இருபுறமும் அமைந்துள்ள சிலைகள் புதுமையான ஆலய அமைப்பினை எமக்குக்கூறுகின்றன. ஆரம்பத்தில் இங்கு சர்ப்பங்கள் உலாவித்திரிந்ததாகவும் இங்குள்ளோர் கூறுகின்றனர். ஆலயத்தின் பாரம்பரியம் கூறும் பழமை வாய்ந்த ஆல மர விருட்சத்தின் கீழ் தற்போது பிள்ளையார் வீற்றிருக்கிறார்.
நெடுநாட்களாக திருமணம் ஆகாத பெண்கள் ,குழந்தை பேறில்லாதவர்கள் இக்கோயிலை தரிசித்தால் உடன் பலன் கிட்டுவதாக இங்கு வருகை தந்த பக்தர்கள் மூலமாக அறியக்கிடைத்தது. பெருந்தோட்டப்பகுதிகளில் ஆங்கிலேயர்களால் பங்களாக்கள் தான் கட்டப்பட்டன.ஆனால் ஒரு வெள்ளைக்கார துரை ஆலயம் ஒன்றையே அமைத்துள்ளார் என்று நினைக்கும் போது நெகிழ்ச்சியாகத்தான் உள்ளது. ஆலயத்தின் சுற்றுப்புறத்தில் நிலவும் ஒரு வித சாந்தம் மனதை இலகுவாக்குகிறது என்பது மட்டும் உண்மை.
படம்,தகவல்சிவலிங்கம் சிவகுமாரன்