Saturday, October 11, 2008

நீ+ நான்= நினைவுகள்


அலைகள் வந்து கால்கள் நனைத்த போது

கொன்று விடும் கோபம் வந்தது,

உன் பெயரை மணலில் எழுதி அமர்ந்திருக்கும் அந்த தருணத்தில்!
உனக்கு கடற்கரை ஞாபகம் வருமா?

வரும் என்று நினைக்கிறேன்,இதை வாசித்தப்பிறகு சரி!
காதல் கரை சேர காதலர்கள் சேரும் இடம் கடற்கரையாம்

என்ன வேடிக்கை பார்த்தாயா?
நாமும் அப்படித்தான் நினைத்தோம்

இன்று கரையில்லா கடலாய் நம் வாழ்க்கை!
காலைச்சூரியன்,பளிச்சிடும் பனித்துளிகள்

அனைத்திலும் நீ…மனதிற்குள் மகிழ்ச்சி
ஆனால் இரவுகள் நரகம்

நிலவாய் நீ கடலாய் நான்

பார்த்துக்கொண்டு மட்டுமேஇருக்கின்றேன்
நினைப்பாயா என்று கேட்டால் உன் மனசு திறக்கிறாய்

நான் நிறைந்து விடுகிறேன்
ஆனால் உன்னை நான்…

இப்படிச்சொன்னால் கோபிப்பாயா?

மரணித்தால் தானே மறக்க

சுவாசமே நீ தானே பெண்ணே

காதலித்துப்பார்; கல்யாணம் முடித்து



மனிதா காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!முன்னொரு போதும் பார்க்காத முகம் பார்த்து மணநாளன்று பார்த்த முகம் பார்த்து பின் எந்நாளும் அவளுடன் சேர்ந்திருக்கும் சுகம் எண்ணி காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
காதல்கள் எல்லாம் கரை சேர்வதில்லை;சேர்ந்தவைகளெல்லாம் தேர்ந்தவைகளில்லை
காதலின் அர்த்தம் புரிந்துணர்வேபுரிந்து கொள்!உன் புது வாழ்க்கையில் ஆரம்பிக்கும் புரிந்துணர்வு புத்துணர்ச்சியானதுஆகையால் காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
அனுபவமில்லாத ஆரம்பம் அடிசறுக்கும்என்று தயங்காதே தளராதே அடிக்கடி நீ காணும் புளித்துப்போன புன்னகையை விட உன் புதுத்துணையின் புன்னகை புதுமையானதாகவிருக்கும் காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
இங்கு காத்திருத்தல் இல்லை ;தவிப்பில்லை தண்டனையில்லைஇறுதி வரை அவள் எனக்குத்தானா என்ற ஏக்கமுமில்லை!
படகு மறைவிலும் குடையை கவசமாக்கியும்மனதையும் மகிழ்சியையும் பகிர்ந்துகொள்ளத்தேவையில்லை! காதலித்துப்பார் கல்யாணம் முடித்து!
காதலிப்பதை விட காதலிக்கப்படுவதில் தானே சுகம்?
எவரின் தலையீடும் இல்லாமல் நீ காதலிக்கப்படுவதை விரும்புகிறாயா?இன்றே தொடங்கு காதலிப்பதைஆனால் கல்யாணம் முடித்து விட்டு காதலி உன் புதுத்துணையை! இறுதி மூச்சு வரை காதலிக்கப்படுவாய் காதலின் களிப்பை கண்டுணர்வாய்!
2002

Friday, October 10, 2008

எழுத வாசிக்க திறனற்றவர்கள் 781 மில்லியன் மக்கள்

இன்று உலகின் பல நாடுகள் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்விச்செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றன.இதற்குக்காரணம் பூகோளமயமாக்கத்தின் விளைவு தான் என்றால் மிகையில்லை. அதி நவீன தொழில்நுட்ப திறனும் கணிணிப்பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்தருக்கும் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்படும் என்பதே நிதர்சனம்.
ஆனாலும் வறுமை, போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற காரணங்களினால் இன்று உலகில் வயது வந்த சுமார் 781 மில்லியன் மக்கள் அடிப்படை எழுத்தறிவு இன்றி உள்ளனர் என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது. அதாவது சனத்தொகையில் ஐந்தில் ஒருவருக்கு எழுத்தறிவு இல்லை,இதில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள்.மேலும் 103 மில்லியன் சிறார்கள் இன்று பாடசாலை கல்வியைப்பெறமுடியாது வெளியே புறந்தள்ளப்பட்டுள்ளனர் என்பது இன்னொரு சோகமான விடயம்.கல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன? சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன? இவற்றை கொண்டு செல்வது யார் என்ற கேள்விகளுக்கு நாம் பதில் காணவேண்டியவர்களாக உள்ளோம்.
எழுத்தறிவு ஏன் முக்கியம்?
எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்பு பட்ட ஒரு விடயம்.தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோவானது ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. ‘எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியமல் இருத்தலே எழுத்தறிவின்மையாகும்’ என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது.அடிப்படை கல்வியின் இதயம் என எழுத்தறிவை கூறலாம்.இதில் வறுமையை அழித்தல்,சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல்,ஜனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்,பால் சமத்தவத்தை கட்டியெழுப்பல், முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல்,சமாதானம் மற்றும் ஜனநாயகம் என பல விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழுவான உதாரணங்களைக்கூறலாம்.ஒரு சிறந்த அடிப்படை கல்வியானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றது. எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர்,மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.
1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று யுனெஸ்கோவினால் செப்டெம்பர் 8 ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு நாளாக பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும் சமூகத்திற்கும்,அமைப்புக்களுகும் அறிய வைப்பது இதன் நோக்கமாகும்.யுனெஸ்கோவின் ‘அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கையின் படி(2006) தென் மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளிலேயே மிகக்குறைந்த (58.9%)வீதமானோர் (வயது வந்தோரில்)படிப்பறிவில்லாமல் உள்ளனர்.இதற்கடுத்தப்படியாக ஆபிரிக்காவில் 59.7 வீதமும் அரபு நாடுகளில் 62.7 வீதமுமாக உள்ளது.இதில் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் என்னவெனில் இந்த அறிக்கைக்கும் நாடுகளில் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளாகும். ஒரு நாட்டின் கல்வியறிவு வீதத்தை தீர்மானிக்கும் காரணியாக இன்று வறுமை பூதகரமாக எழுந்து நிற்கின்றது. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தலிபான் போன்ற அமைப்புக்களின் கடுமையான சட்டதிட்டங்களால் அங்குள்ள பெண்கள் பாடசõலை கல்வியை பல வருட காலமாக இழந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்திற்கான கருப்பொருள்ஒவ்வொரு வருடமும் சர்வதேச எழுத்தறிவு தினம் ஒரு பிரகடனத்தை தாங்கி வரும்.இம்முறை யுனெஸ்கோவினால் ‘எழுத்தறிவே சிறந்த பரிகாரம்’ ("Literacy is the best remedy")என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை சுகாதாரம் மற்றும் கல்விக்கிடையில் உள்ள தொடர்புகளை விளக்குவதாகவும் இக்கருப்பொருள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.இன்று உலகை அச்சுறுத்தி வரும் எயிட்ஸ்,காசம்,மலேரியா மற்றும் ஏனைய நோய்கள் தொடர்பில் மக்களும் வளர்ந்து வரும் சமுதாயமும் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை இம்முறை கருப்பொருள் உணர்த்தி நிற்கின்றது. கொடிய உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் குறித்தான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் மக்களிடையே சென்று சேராததற்குப்பிரதான காரணங்களில் ஒன்றாக எழுத்தறிவின்மை சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்காக யுனெஸ்கோவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் EDUCAIDS என்று அழைக்கப்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொடர்பான அறிவூட்டல்களை உலகெங்கும் எடுத்துச்செல்வது இதன் பிரதான நோக்கம். இத்திட்டத்தின் இரண்டு பிரதான இலக்குகள் உள்ளன.1) கல்வியறிவின் ஊடாக எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் செயற்பாடு2) மோசமாக பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் கல்வியறிவை கொண்டு செல்வதன் மூலம் கட்டுப்படுத்தல்.
உலக நாடுகளின் எழுத்தறிவு விகிதங்கள்
1998 ஆம் ஆண்டு ஐ.நாவின் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 20வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர்.இந்தத்தொகையினர் எந்த மொழியிலும் அமைந்த மிக இலகுவான வாக்கியங்களை எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்கள்.எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின்(சீ.ஐ.ஏ) 2007 அறிக்கையின் படி தற்போது உலக சனத்தொகையின் எழுத்தறிவு வீதம் 82 ஆகும். நாடுகள் ரீதியாக பார்க்கும் பொழுது 100 சதவீத எழுத்தறிவை பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் முறையே கியூபா ,எஸ்தோனியா,நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.எமது இலங்கை தாய்நாடு இப்பட்டியலில் 87 ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம்90.7ஆகும்.இப்பட்டியலில் இந்தியாவானது 147ஆவது இடத்தைப்பிடித்துள்ளது.எழுத்தறிவு விகிதம் 61 ஆகும். இந்தியாவிலுள்ள மக்கள் தொகை அதிகரிப்பே அது எழுத்தறிவு விகிதத்தில் பின்தள்ளப்பட்டுள்ளதற்குக்காரணம் என கூறப்படுகிறது.

இலங்கையும் எழுத்தறிவு வீதமும்
எழுத்தறிவை பொறுத்தவரை தென்னாசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.இலங்கையானது யுனெஸ்கோவின் கல்வி சார் அபிவிருத்தித்திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949ஆம் ஆண்டு நவம்பர்14ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது. இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகரப்புறங்களிலேயே முன்னேற்றங்கண்டுள்ளது எனலாம்.சுதந்திரம் கிடைத்து 50வருடங்களுக்குப்பிறகும் கூடபெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத்தவறியுள்ளவர்கள் எத்தனையோ பேர்.இவ்வருடத்திவ் முதல் காலாண்டில் குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95 ஆகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது.பால் வேறுபாட்டில் ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.யுனெஸ்கோவின் அவிவிருத்தித்திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது.ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றமை முக்கிய அம்சம்.இதில் முதியோர்களுக்கு கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது.
சர்வதேச எழுத்தறிவு விருதுகள்
யுனெஸ்கோ அமைப்பானது ஒவ்வொரு வருடமும் சர்வதேச எழுத்தறிவு தினமன்று எழுத்தறிவு விருதுகளை (Literacy Prizes) பரிந்துரை செய்கின்றது இவ்வாண்டு இவ்விருதானது பிரேஸில் ,எத்தியோப்பியா,தென்னாபிரிக்கா,ஸாம்பியா ஆகிய நாடுகளில் யுனெஸ்கோவினால் முன்னெடுத்து செல்லப்பட்ட கல்வி செயற்பாடுகளுக்காக கிடைத்துள்ளது.மேலும் மொரோக்கோவிலும் பி.பி.சி நிறுவனத்தினாலும் தயாரிக்கப்பட்ட இரு திட்டங்களுக்கு கௌரவ விருதுகள் கிடைத்துள்ளன.

வேலையில்லா திண்டாட்டமும் இளைய சமுதாயத்தின் மன்றாட்டமும்











*பல நாடுகளில் வசிக்கும் இளையோர் பலர் தன்னிறைவு பெற்ற பொருளாதார சூழலில் வாழ்ந்து இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது நாம் இது வரையிலும் வேலையில்லா பிரச்சினைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.





* இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது?


‘காலநிலை மாற்றமானது இன்று உலகை அச்சுறுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது. இந்த பூமி பந்தை பாதுகாப்பான எவ்வித சூழல் பாதிப்புகளும் இல்லாத ஒன்றாக மாற்றுவதற்குரிய வழிவகைகளை முன்னெடுத்துச்செல்ல இளைஞர்கள் தமது சக்தியை முதலீடு செய்ய முன் வரவேண்டும், காலநிலை மாற்றங்குறித்து விழிப்புணர்வை பெறவேண்டும்.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள இளையோர்,குறிப்பாக இளம்யுவதிகளும் பெண்களும் விவசாயம், உணவு, நீர்,விறகு சேகரித்தல் என்பவற்றில் கூடுதல் பங்காற்றுகின்றனர். ஆனால் எதிர் காலத்தில் இதற்கு பற்றாக்குறை நிலவும் அபாயம் அதிகமாகவே உண்டு.ஆகவே புதிய தொழில்நுட்பம் மற்றும் பழக்கவழக்கங்களை (கல்வியறிவு) கொண்டு இளையோர் எதிர்கால அபாயமான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் இப்போதிருந்தே தமது பங்களிப்பை நல்க வேண்டும்’



பான் கீன் மூன் (செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சபை)



சர்வதேச இளையோர் தினமான ஓகஸ்ட் 12 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்கள் தனது விசேட அறிக்கையில் தெரிவித்திருந்த கருத்துக்களின் சாரமே இது.அவர் ஏன் காலநிலை மாற்றம் குறித்து உலக வாழ் இளையோருக்குக்கூறியுள்ளார்? காரணம் இல்லாமலில்லை. இவ்வாண்டு அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச இளையோர் தினத்தின் பிரதான கருப்பொருள் என்ன தெரியுமா? ‘ இளையோரும் காலநிலை மாற்றமும் ; செயற்படுத்துவதற்கன தருணம் (YOUTH AND CLIMATE CHANGE: TIME FOR ACTION) என்பதாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் வருடாவருடம் குறிப்பிட்ட ஒரு கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அவ்வருடம் செயற்றிட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படும். சரி இதை ஏன் இச்சந்தர்ப்பத்தில் கூற வந்தேன் என்கிறீர்களா? ஐக்கிய நாடுகள் சபையானது தனது மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளுக்கேற்பவே திட்டங்களை முன்னெடுத்துச்செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அங்குள்ள நாடுகளுக்கும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே நோக்கு. ஆனால் அபிவிருத்திடைந்து வரும் நாடுகளில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சினை வேலையின்மையாகும். இது ஒரு பூகோள பிரச்சினை என ஐ.நாவும் ஏற்றுக்கொள்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் முதலாம் உலக நாடுகளிலும் இப்பிரச்சினை இல்லை என்று கூறமுடியாது ஆனால் அங்குள்ளவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினர் போல் பொருளாதார ரீதியிலும் அடக்குமுறையிலும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் ஐ.நா கூட தனது இலக்குகளை முன்னெடுத்துச்செல்ல இளையோரை எவ்வாறு அதில் பங்குகொள்ளச்செய்கிறது என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள சர்வதேச இளையோர் தினத்தின் இவ்வருட கருப்பொருளும் ஐ.நாவின் பிரகடனமும்.ஆனால் எமது இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினருக்கு இது பொருந்துமா என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாதுள்ளது. நமது நாட்டின் பொருளாதார சூழல், யுத்த நிலைமை,அரசியல் ஸ்திரமற்ற தன்மை என்பவற்றால் ஏற்பட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம் அது தொடர்பில் இளைஞர் யுவதிகளின் ஏக்கம், போராட்டம் என்பன குறித்து புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை. இப்படி ஒரு நிலையில் இருக்கும் இளைஞர் கூட்டத்திடம் சென்று காலநிலை மாற்றத்திற்கு உதவுங்கள் என்றால் என்ன நடக்கும் ? இச்சந்தர்ப்பத்தில் நாம் ஐ.நாவை குற்றம் கூறவில்லை. மாறாக பல நாடுகளில் வசிக்கும் இளையோர் பலர் தன்னிறைவு பெற்ற பொருளாதார சூழலில் வாழ்ந்து இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது நாம் இது வரையிலும் வேலையில்லா பிரச்சினைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இலங்கையும் இளையோரும்இலங்கையின் மொத்த சனத்தோகையில் கால் பங்கினர் இளையோராவர்.இளையோரை எந்த வயதுக்குள் அடக்கலாம் என்பது பல நாடுகளுக்கும் உள்ள ஒரு தடுமாற்றம்.எனினும் 1529 வயதுக்குட்பட்டோரே இளையோர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கணக்கு. இளைஞர் யுவதிகள் இலங்கையின் அபிவிருத்தியில் எந்தளவிற்கு பங்களிப்பை வழங்குகின்றனர் என்பது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் கல்வி கற்று பட்டதாரிகளாகியும் வேலையில்லாதவர்களின் நிலையும் கணக்கிலெடுக்கப்படவேண்டியதொன்று. இவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தை நாம் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக அவதானித்துக்கொண்டு தான் வருகிறோம் ஆனால் என்ன பயன்? இறுதியில் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்பு நல்காது இருக்கும் ஒரு கூட்டம் என்ற பெயர் தான் இவர்களுக்கு கிட்டப்போகின்றதா என்று கவலையுடன் நினைக்கத்தோன்றுகின்றது. இதற்கு அரசாங்கங்களின் உரிய கொள்கை வகுப்பின்மையே என காரணங்காட்டப்படுகிறது. தொடர்ச்சியாக இவர்கள் அலட்சியப்படுத்தப்பட்டுக்கொண்டே வந்தால் இவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்க காத்திருக்கும் கூட்டத்திற்கு என்ன பதில் சொல்வது? இவர்கள் கற்க கல்வி ஒரு சதவீதத்திற்கும் பயன்படாமல் போகப்போகின்றதா? 2006ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தின் படி இளைஞர் வேலை வாய்ப்பிற்கான தேசிய செயற்பாட்டு திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதன் பிரதான திட்டங்களில் ஒன்று 2010 ஆம் ஆண்டில் வேலையில்லாத இளையோர் தொகையை 15 வீதமாக குறைத்தல்,இதுவே 2015ஆம் ஆண்டில் 8 வீதமாக்கப்படவேண்டும் என்பதாகும்.இந்த திட்டமானது ஐ.நாவின் YEN எனப்படும் பூகோள இளையோர் வேலைவாய்ப்பு வலைப்பின்னல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அமுல் படுத்தப்பட்டதொன்றாகும். இதற்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் உலக வங்கியும் ஆதரவு வழங்குகின்றன. 2007ஆம் ஆண்டின் படி இலங்கையில் வேலையில்லா இளையோரின் சதவிகிதம் 20 ஆகும். ஆக இன்னுமொரு சர்வதேச இளையோர் தினமும் வந்து போய்விட்டது,நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?இத்திட்டத்தை ஒரேடியாக நாடு முழுவதிலும் செயற்படுத்த முடியாது எனக்கூறப்படுகிறது. சர்வதேச தொழில் ஸ்தாபனம் நாடு முழுவதிலும் முதலில் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார அமைச்சு கூறியுள்ளது.
இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது? 2008 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின் படி இலங்கையில் வேலையற்றிருப்போரில் அரைவாசி பேர் இளையோர் தானாம்.இது சதவிகிதத்தில் 41 ஆகும். இவர்கள் 1524 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்பது இன்னுமொரு சோகம்.
வேலையில்லாதோரின் கல்வித்தராதரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் வேலை வாய்பொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழிற்கல்வி முறை இல்லாதது ஒரு பிரதான குறைபாடாகத்தெரிகிறது. வேலையில்லாதிருப்பவர்களில் க.பொ.த சா/ தரத்திற்கு குறைந்த தகைமை கொண்டோர் 3.2 வீதமாகும். க.பொ.த சா/தரம் கொண்டவர்கள் 6.4 வீதம்ஆனால் வேலையில்லா இளையோரில் உயர் தரம் மற்றும் அதற்கு மேலான தகைமைகளை கொண்டோர் 11 வீதமென் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அப்படி பார்க்கும் போது வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் நியாயமாகவே படுகின்றது.
கல்வி கற்று வீட்டில் இருக்கும் யுவதிகள்இலங்கையில் வேலையில்லாதோர் தொகையில் இளைஞர்களின் தொகையை விட (14.9%) இருமடங்கு இளம் யுவதிகளின் தொகையாகும் (28.4%வயது 1524) இது ஒரு பாரதூரமான விடயம்.இதில் குறிப்பிட்டுக்கூறவேண்டிய மற்றுமோர் விடயம் ஒரே பணியே இருபாலருக்கும் கொடுக்கப்பட்டாலும் பெண்ணிற்கு வழங்கப்படும் ஊதியத்தொகை குறைவாகும்.இதனால் இவர்களில் பலர் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் வேலைக்குச்செல்லாமல் வீட்டில் இருக்கின்றனர். நிர்மாணம் மற்றும் விவசாயத்தோட தொடர்புபட்ட பல தொழில் வாய்ப்புகள் பெண்களுக்கென்று இருந்தாலும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக இன்று இளையோர் அரசாங்க வேலைகளை மட்டும் எதிர்ப்பார்த்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.ஆனால் அதை விட ஊதியம் கிடைக்கும் தனியார் துறை வேலைக்கு ஏற்றவாறு தங்களை உருவாக்கிக்கொள்ள பல தடைகள் உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அரச மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்ததாக முன்னெடுத்துச்செல்லப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் இவர்களின் கனவை நனவாக்கலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசாங்க தொழில் வாய்ப்புகள் மூலம் ஏனைய சலுகைகளையும் பெறலாம் ஆனால் தற்போதுள்ள இளையோர் ஊதியம் மற்றும் தொழில் பாதுகாப்பு போன்ற விடயங்களில் மாத்திரம் அக்கறை காட்டுபவர்கள் அல்ல என்கின்றது ஒரு ஆய்வு. எனினும் அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தைக்கு உள் நுழைய காத்திருக்கும் இளையோரின் எண்ணிக்கையைப்பார்த்து சரி அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இதில் வெளி நாட்டு வேலை வாய்ப்பும் முக்கிய இடத்தைப்பிடிக்கலாம். இல்லாவிடின் அடுத்த தலைமுறை வாரிசுகளும் போராட்டத்தில் தான் காலத்தை கடத்த வேண்டியேற்படும்.

Thursday, October 9, 2008

தெரிந்த கிரிக்கெட்டில் தெரியாத விடயங்கள்(1)

ஒரு நாள் சர்வதேச போட்டி, டெஸ்ட் இரண்டிலும் சந்தர்ப்பம் கிடைத்து விளையாடுவதற்கு வீரர்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். துடுப்பாட்டம் மற்றும் பந்து வீச்சு இரண்டும் டெஸ்ட் மற்றும் ஒரு நாள் போட்டிகளில் வித்தியாசமாக கையாளப்படும் என்பதை பலரும் அறிந்திருப்பர்.சரி விடயத்திற்கு வருவோம். டெஸ்ட் போட்டி ஒன்றில் கூட விளையாடாது தொடர்ச்சியாக அதிக ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடிய வீரர் யார் தெரியுமா? அவுஸ்திரேலிய அணியின் சகல துறை வீரர் இயன் ஹார்வியே(Ian Harvey) அவர். இது வரை 73 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள அவருக்கு ஒரு டெஸ்டில் கூட சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. 36வயதாகும் ஹார்வி 73 போட்டிகளில் 715 ஓட்டங்களைப்பெற்றிருப்பதோடு 85 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவருக்கு முன்பதாக இச்சாதனையை கைவசம் வைத்திருந்தவர்கள் பாகிஸ்தானின் சகீட் அப்றிடி, அவுஸ்திரேலியாவின் அடம் கில்கிறிஸ்ட் மற்றும் அன்ரூ சைமண்ட்ஸ். இதை விட டெஸ்ட் அந்தஸ்த்து பெறாத கென்யா அணியின் தலைவர் ஸ்டீவ் டிக்கலோ இது வரை 105 ஒரு நாள் சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார்.

தொடர்ந்து வரும்

Wednesday, October 8, 2008

கொட்டிக்கிடக்கும் அழகு







புகைப்படம் எடுத்தல் எனக்குப்பிடித்தவற்றில் ஒன்று. பத்திரிகையாளன் என்ற படியால் என்னிடம் ஒரு டிஜிட்டல் புகைப்படக்கருவி உள்ளது. எங்கள் பகுதியில் இயற்கை அழகுக்கு பஞ்சமே இல்லை. இயற்கை அன்னை நிரந்தரமாய் உறைந்து விட்ட இடமோ என எண்ணத்தோன்றும் அளவுக்கு இங்கு அழகு கொட்டிக்கிடக்கின்றது. செய்தி சேகரிக்கச்செல்லும் போது மனதை பறிகொடுத்து நான் எடுத்த சில படங்களை நண்பர்களுக்காக இங்கு தருகிறேன்.
வேதனை குறிப்பு: இங்கு காணப்படும் சென்கிளயர் (St.Clair) நீர் வீழச்சி இன்னமும் சிறிது காலத்தில் முற்றாக மறைந்து விடும் காரணம் இங்கு அமைக்கப்பட்டு வரும் கொத்மலை நீர் மின் திட்டம்.

எங்களூர் மாரியம்மன் ( ஒரு வேதனை குறிப்பு)

இலங்கையின் பெருந்தோட்டப்பகுதிகளில்காணப்படும் அம்சங்களில் பிரதானமாக விளங்குபவை ஆலயங்கள், தோட்டமுகாமையாளரின் (ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் துரை என்று அழைப்பர்) பங்களாக்கள் மற்றும், மலைப்பிரதேசம். மலையகப்பகுதிகளில் ஆலயங்கள் இல்லாத பெருந்தோட்டங்களே இல்லை எனலாம்.ஒவ்வொரு வருடமும் இடம்பெறும் திருவிழா இப்பகுதி மக்களின் வாழ்க்கையில் ஒன்றிவிட்டதொன்று. நான் பிறந்த இடமான வட்டகொடையில் ஓர் அம்மன் ஆலயம் உண்டு.இலங்கையில் வேறெந்த பெருந்தோட்டப்பகுதிகளிலும் இல்லாத ஒரு அமைப்பு எமது ஆலயத்திற்கு உண்டு. அதாவது ஆலயத்தின் ஒரு பாதி நீரிலும் மறுபாதி நிலத்திலும் அமையுமாறு இக்கோயில் கட்டப்பட்டுள்ளது. இவ்வாலயத்திற்கும் எமது குடும்பத்தாருக்கும் நெருங்கிய தொடர்புகள் உள்ளன. 1920 களில் தென்னிந்தியாவிலிருந்து தொழிலாளர்களை அழைத்து வரும் பணியை பிரதானமாக ஏற்று செய்தவர்கள் Head Kanganies என்று அழைக்கப்படும் பெரிய கங்காணிமார். அக்காலத்தில் ஒரு தோட்டத்துரைக்கு அடுத்து சகல அதிகாரங்களும் கொண்டு விளங்கியவர்கள் இந்த பெரிய கங்காணிமார். இப்படி வட்டகொடை பிரதசத்திற்கு இந்தியாவின் திருநெல்வேலி மாவட்டத்திலிருந்து பலரை அழைத்து வந்தவர் எனது பாட்டனார் திருமலை வேலுப்பிள்ளை அவர்கள். பெருந்தோட்டப்பகுதிகளில் ஆங்கிலேயர் ஆட்சிகாலத்திலும் அதற்குப்பிறகும் இந்த பெரியகங்காணிமாரின் அட்டூழியங்களை தனி அத்தியாயமாக எழுதலாம். அதை பிறகு ஒரு சந்தர்ப்பத்தில் சொல்கிறேன். ஆனால் எனது பாட்டனார் தொழிலாளர் இடத்தில் மதிப்பும் மரியாதையும் கொண்டவர். அவர் நிரந்தரமாக இங்கு குடியேறிய பிறகு தான் இக்கோயிலின் நிர்வாகத்தை பொறுப்பேற்றார். மற்ற கோயில்களை விட இங்கு நடக்கும் திருவிழா சற்று வித்தியாசமானது. தேர் போன்ற ஒரு அலங்கார அமைப்பை உருவாக்கி அதில் அம்மன் சிலையை வைத்து இக்கோயில் அமைந்துள்ள குளத்தில் திருவிழா அன்று இரவு வலம் வரச்செய்வர். இதற்கு தெப்பத்தேர் என்பர். இதை தெப்பத்திருவிழா என்று அழைப்பர். அலங்கார மின்விளக்குகள் மின்ன,மேளதாளம் முழங்க அம்மன் தெப்பத்தில் இரவு நேரம் உலா வரும் அழகை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை. சரி விடயத்திற்கு வருவோம் எனது பாட்டனார் அக்காலத்தில் இக்கோயிலின் நிர்வாக பொறுப்பை ஏற்று தெப்பத்திருவிழாவை மிக அமர்க்களமாக செய்திருக்கிறார். இக்கதைகளை நாம் ஆத்தா என்று அழைக்கும் அப்பாவின் அம்மா திகட்ட திகட்ட சொல்வார். அந்நேரம் நீரில் சாகஸங்கள் நிகழத்தும் குழுவினரை இந்தியாவிலிருந்து பாட்டனார் அழைத்து வருவாரம். அவர்கள் நீரில் சைக்கிள் ஓட்டி வியக்கவைப்பார்களாம். மேலும் தெப்பம் குளத்தில் உலா வர ஆயத்தமாகும் போது வானத்தில் ‘வட்டகொடை தெப்பத்திருவிழா’ என்று ஒளிரும் வர்ண வான வெடிகள் வெடிக்குமாம். பாட்டனாருக்குப்பிறகு பரம்பரையாக இப்பணி தொடர வேண்டும் என எனது தந்தைக்கு இந்த நிர்வகப்பொறுப்பு வந்தது. திருவிழா காலங்களில் தெப்பத்தில் அம்மன் சிலையை எடுத்து வைக்கும் பொறுப்பு எமது குடும்பத்தாருக்கு. அந்த இரவு நேர குளிரில் அப்பாவின் கையைபிடித்துக்கொண்டு நான் நின்றது இன்னமும் ஞாபகம் உள்ளது. அம்மா தடுத்தும் என்னை தெப்பத்தில் ஏற்றி விட்டார்கள் அம்மனுடனும் பக்தர்களுடனும் சேர்ந்து நானும் ஒரு முறை தெப்பத்தில் வலம் வந்ததை மறக்க முடியாது. காலங்கள் சென்றன. பெருந்தோட்டப்பகுதிகளில் மாற்றங்கள் ஆரம்பித்தன. பெருந்தோட்டங்களை அரசாங்கம் பொறுப்பேற்றவுடன் பிரித்தானியா சார்ந்த துரைமார்கள் இங்கிலாந்திலேயே தஞ்சமடைந்தனர். ஒரு கட்டத்தில் அப்பா கோயில் நிர்வாகம் முழுதையும் தோட்டத்திற்கே ஒப்படைத்தார். ஆனால் அதற்குப்பின்னும் வழிவழியாக வந்த பாரம்பரியத்தை மாற்ற விரும்பாத தோட்டமக்கள் ஒவ்வொரு திருவிழாவின் போதும் அம்மன் சிலையை எடுத்து வைக்க அப்பாவையே அழைத்துச்செல்வர். எனக்கு தான் அந்த கொடுப்பினை இல்லாது போய்விட்டதோ? இப்போது இக்கோயிலில் திருப்பணிகள் இடம்பெற்று வருகின்றன. எமது பரம்பரை வீடு அங்கேயே இருந்தாலும் இன்று ஒவ்வொருவரும் ஒவ்வொரு திக்கில் இருக்கிறோம். அண்மையில் எமது தோட்டத்தை சேர்ந்த ஒருவர் என்னை சந்தித்து கோயில் திருப்பணிக்கு நிதி வசதி போதாதுள்ளது என்றார். அம்மன் சிலையை எடுத்து வைக்கும் பாக்கியம் கிடைக்காவிட்டாலும் இப்படியாவது இவ்வாலயத்திற்கு உதவ வேண்டும் என நினைத்தேன்.ஒருமுறை அங்கு சென்று கோயிலை படம் எடுத்தேன். அதை இப்போது உங்கள் முன் சமர்ப்பிக்கிறேன்… வேதனையோடு!

Tuesday, October 7, 2008

எதிர் கேள்வி(சிறுகதை)


இன்னமும் இரண்டு நபர்களே பாக்கி அடுத்து தனது பெயர் அழைக்கப்படப்போகிறது.மனதின் திக்திக் சற்றே அதிகமாகியது அதிரனுக்கு. தனக்கு இது 10 ஆவது நேர்முகத்தேர்வு என்பது அவனுக்கு மறந்து போனது. ஒரு குழப்ப சூழலில் தான் தள்ளப்பட்டுள்ளதை போல் உணர்ந்தான் அவன். அதற்கு காரணம் இருந்தது.கடைசி ஆளாகத்தான் தன்னை அழைக்கப்போகின்றார்கள் என்பது ஒன்று மற்றது? தனக்கு முன்னே உள்ளே சென்று வந்தவர்களில் பலரும் சற்று வாய் விட்டு கதைத்துப்போன விடயம் அது.‘என்னடா இது இந்தத்தொழிலுக்கும் இவன்கள் கேட்ட கேள்விக்கும் சம்பந்தமில்லாம இருக்கு’ என்று ஒருவன் முணுமுணுத்தவாறே எரிச்சலோடு வெளியேறினான். ‘மேலிடத்திருந்து போன் வந்திருக்கும் ஏற்கனவே தெரிவு செய்தாச்சு பிரதர் நாம எல்லாம் சும்மா இங்கே வந்து காத்திருக்கோம்ஏதோ எதிர்ப்பார்த்துப்போனால் மொட்டை தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சு போடுற மாதிரி இல்ல கேள்வி கேட்கிறாங்க’ இது மற்றொருவன் அருகில் வந்து தோள் தொட்டு சொல்லிப்போன ஒன்று. உனக்கும் அப்படி த்தான் மச்சான் என்று ஆறுதல் கூறுவது போல் இருந்தது. உள்ளே சென்ற 15 பேரில் 10 பேர் இப்படி முணுமுணுத்து விட்டு போனது தான் மிச்சம்.அட அப்படி என்ன தான் சம்பந்தமில்லாம கேட்கிறார்கள் உள்ளே?
‘லஷ்மன் அதிரன்’ பெயர் கூப்பிடப்பட்டது.சரி வருவது வரட்டும் என்று எழுந்து சென்று கதவை இலேசாக திறந்தான் அதிரன்.‘மே ஐ கம் இன் சேர்?
‘யெஸ்’
ஒற்றை வார்த்தை பதிலை அவன் எதிர்ப்பார்க்கவில்லை.உள்ளே மூவர். மைதான தலையோடு நடுநாயகமாக வீற்றிருப்பவர்தான் பெரியவரோ? மூவருக்கும் வணக்கம் செலுத்தினான்.
‘ப்ளீஸ் சிட்’
பைலை வாங்கி புரட்டினார் நடுநாயகம்.பின்பு சற்று உதட்டை பிதுக்கினார் அதிரனை நோக்கினார்.
ம்ம்ம்…மிஸ்டர் அதிரன் நீங்க தான் இந்த நேர்முகத்தேர்வில் கடைசி நபர் அப்படித்தானே?
முதலாவதாக வந்தவனிடம் இதே கேள்வியை மாற்றிகேட்டிருப்பார்களோ என்று நினைத்த அதிரன் ஆமாம் சார் என்றான்.
‘ஓ.கே இப்போ கேள்வி நேரம்’
படபட வானான் அதிரன்.
முடிந்தது அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறியாயிற்று ஆனால் என்ன பிரயோசனம் தனது முன்னோர்கள் (அது தாங்க அவனுக்கு முன் உள்ளே வந்து போனவங்க) கூறியது போல் தான் இருந்தது. விண்ணப்பித்திருக்கும் வேலை தொடர்பில் ஒரு கேள்வி கூட இல்லையே. அட மைதான தலை உதட்டை வேறு பிதுக்குகின்றதே?
‘என்ன அநியாயம் சார் இது முதலிலேயே சொல்லியிருந்தால் காத்திருக்கவேண்டிய அவசியம் இல்லையே எங்களையெல்லாம் பார்த்தா இளிச்சவாய் மாதிரி தெரியுதா? உங்களுக்கு தேவையான ஒருவரை தெரிவு செய்து விட்டு காலங்கடத்துவதற்காகத்தான் இந்த இண்டர்வியூவா’
வாய் வரை வந்த வார்த்தைகளை அடக்கிக்கொண்டான் அதிரன்.
‘நாங்கள் அறிவிக்கிறோம்’ ரெண்டில் ஒன்று பார்த்து விட வேண்டியது தான்
‘எக்ஸ்கியூஸ்மி சார் மே ஐ ஆஸ்க் எ கொய்சன்?’
சற்று புருவம் உயர்த்திய நடுநாயகம் ‘யெஸ்’ என்றது.
‘சார் தப்பா நினைக்காதிங்க எனக்கு ஒரு சந்தேகம் இந்த வேலைக்கும் நீங்க கேட்ட கேள்விக்கும் சம்பந்தமே இல்லையே சார்? இருந்தும் நான் அவ்வளவு கேள்விக்கும் பதில் கூறினேன் ஆனால் அது முக்கியம் இல்லை, நீங்கள் ஏன் இப்படி சம்பந்தமில்லாம கேள்வி கேட்டீங்க அது தான் எனக்கு தேவை?
‘மிஸ்டர் அதிரன் இங்கு வந்த 15 பேரில் 9 பேர் நாங்க கேட்ட சம்பந்தமில்லாத எல்லா கேள்விக்கும் பதில் சொன்னாங்க அதில் நீங்களும் ஒருவர். ஆனால் உங்களைப்போல யாரும் இப்படி எங்களை கேள்வி கேட்கவில்லை’
புன்முறுவலோடு கூறிய அவர் அருகிலிருந்த இரண்டு பேரையும் பார்த்து கண் சிமிட்டினார்.
என்ன நடக்கின்றது இங்கே?
‘மிஸ்டர் அதிரன் வெளிநாடுகளில் இருந்து வரும் நிவாரணங்கள் உரிய விதத்தில் பொது மக்களிடம் போய் சேருகின்றதா என்பதை கண்காணிக்கும் வேலை இது .பல ஊழல்கள் நடக்க இடமுண்டு. பலரிடம் பல கேள்விகளை கேட்டு விசாரணைகளை நடத்த வேண்டும் ஆகையால் சொன்னதை மட்டும் செய்து கொண்டிராமல் விழிப்பாக இருக்கவேண்டும் எதிர் கேள்விகள் கேட்க தைரியம் வேண்டும் அப்படியான ஒருவரை தெரிவு செய்யத்தான் இப்படி ஒரு வித்தியாச இண்டர்வியூ.நாங்க எதிர்ப்பார்த்த யாரும் எங்களை ஏன் சம்பந்தமில்லாம கேள்வி கேட்கிறிங்க என்று கேட்க திரணியற்று முணுமுணுத்து விட்டு போய்விட்டனர்.
பட் யூ?
அதே புன்முறுவல்
‘யெஸ்’ எங்க முயற்சி வீணாகவில்லை கடைசி ஆளா வந்தாலும் நாங்க எதிர்ப்பார்த்த தகுதி உங்ககிட்ட தான் இருக்கு யூ ஆர் அப்பாய்ண்ட்டட்’



பின்குறிப்பு: இந்த கதையில் வரும் நாயகன் என் நண்பன் தேவஅதிரன் தான் ஆனால் அவனுக்கும் இப்படி எதிர் கேள்வி கேட்கும் விடயத்திற்கும் சம்பந்தமே இல்லைங்கோ…!

சொல்லுங்கள் நிர்ஷன்….!

வலைப்பக்கம் ஒன்றை ஆரம்பிக்க வேண்டும் என்ற அவா நெடுநாட்களாக இருந்த போதிலும் வேலைப்பளு காரணமாக அது கைகூடவில்லை. இப்போது மட்டும் சும்மா இருக்கிறேனா என்று கேட்காதீர்கள்.எனினும் என்னை இவ்விடயத்தில் ஈடுபாடு காட்ட உதவிய எனது அன்புச்சகோதரனும் என்னுடன் வீரகேசரி தலைமைகாரியாலயத்தில் பல விடயங்களை பகிர்ந்து கொண்ட இளரத்தம் நிர்ஷனுக்கு எனது நன்றிகள் பல.மேலும் வந்தியதேவனுக்கும் தான்.சரி ஆரம்பித்து விட்டேன் இனி ஆடப்போகிறேன் தாண்டவம்.நிர்ஷன் எதிலிருந்து ஆரம்பிக்கலாம்? இல்லாத ஒரு பாத்திரத்தை சிருஷ்டித்து அதற்கு ‘அண்ணன் “ எனபபெயரிட்டு நாம் செய்த அட்டகாசங்களையா?அல்லது எமது பாடல் கேட்டு செவியை மூடிய புத்தர் சிலை கதையையா சொல்லுங்கள் நிர்ஷன் சொல்லுங்கள்….!

ஊடகத்தாண்டவம்


தாண்டவம் என்ற பெயரில் இப்பக்கத்தை ஆரம்பித்ததற்குக்காரணத்தை பலர் கேட்கலாம்.அதற்குப்பதில் தொடர்ச்சியான எனது பதிவுகளில் கிடைக்கும்.எனது முதல் பதிவு பேனா போராளிகளாக விளங்கி ஊடக சுதந்திரத்திற்காக தமது உயிரை தியாகம் செய்த பத்திரிகையுலக நண்பர்களுக்காகவும் இலத்திரனியல் ஊடகவியலாளர்களுக்கும் அஞ்சலியாக விளங்கட்டும். மேலும் கடந்த திங்கட்கிழமை அனுராதபுரத்தில் செய்தி சேகரிக்கச்சென்ற போது குண்டுவெடிப்பில் கொல்லப்பட்ட சிரச வலைப்பின்னல் பிராந்திய நிருபர் அன்புச்சகோதரன் ரஷ்மி மஹ்ரூப்புக்கும் எனது வீர வணக்கங்கள். அருகில் காணப்படும் படத்தை உற்றுநோக்குங்கள்.இது அனுராதபுரம் குண்டு வெடிப்பில் உயிர் துறந்த பிரதேச செய்தியாளருடையது தான். சேதமுற்றாலும் செய்தி சேகரித்து விட்ட இறுமாப்பில் இருக்கும் இந்த கமராவுக்கு ஒரு சல்யூட். என்ன தான் எம்மை நசுக்கி பிழிந்தாலும் தொடர்ந்தும் ஆடுவோம் …… ஊடகத்தாண்டவம்!