Monday, April 14, 2025

 பிரதேச சபைகள் திருத்தச் சட்டத்தை 

எத்தனை மலையக கட்சிகள் பயன்படுத்திக் கொண்டன?

 

மலையக பெருந்தோட்ட மக்களை செறிவாகக் கொண்டிருக்கக் கூடிய மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் அமைந்துள்ள உள்ளூராட்சி சபைகளான பிரதேச சபைகளுக்கு அதிகளவில் பெருந்தோட்ட மக்களே தமது வாக்குகளை அளித்து வருகின்றனர். 2018 ஆம் ஆண்டு வரை அவ்வாறு வாக்களித்த மக்களுக்கு ஒரு சதத்தையேனும் பயன்படுத்த முடியாத கட்டுப்பாடுகளை பிரதேச சபைகள் கொண்டிருந்தன.

ஆனால் மேற்படி பிரதேச சபைகளுக்குள் வரும் கிராமப்புற அபிவிருத்திக்கு பிரதேச சபை நிதியை பயன்படுத்துவதில் எந்த சட்டச் சிக்கல்களும் இருக்கவில்லை. இந்த பாகுபாட்டை கருத்திற்கொண்டு பல சுற்று பேச்சுவார்த்தைகள், கலந்துரையாடல்களின் இறுதியிலேயே நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் 2018 ஆம் ஆண்டின் 30 ஆம் இலக்க பிரதேச சபைகள் (திருத்தச்) சட்டம் கொண்டு வரப்பட்டது. இதற்கு அப்போது அமைச்சுப்பதவிகளைக் கொண்டிருந்த தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பிரதிநிதிகளும் அவர்களின் ஆலோசகர்களாக இருந்தபு த்திஜீவிகளும் தமது பங்களிப்பை நல்கியிருந்தனர்.

அதன் படி மலையகப் பகுதிகளில் உள்ள பிரதேச சபைகள் தமது எல்லைக்குட்பட்ட பெருந்தோட்ட பிராந்தியங்களில் சில உட்கட்டமைப்பு வசதிகளை மேற்கொள்ள தமது நிதிகளை பயன்படுத்துவதற்கு முப்பது வருடங்களாக இருந்து வந்த தடைகள் நீங்கின.

குறித்த திருத்தச் சட்டம் அமுலுக்கு வருவதற்கு முன்பதாக பிரதேச சபை நிதியை சட்ட வரம்புகளை மீறி தோட்டப்பகுதி அபிவிருத் திக்கு பயன்படுத்தியது தொடர்பில் எழுந்த சர்ச்சையால் உடபலாத்த பிரதேச சபையானது 2008 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய மாகாண முதலமைச்சர் சரத் ஏக்கநாயக்கவால் கலைக்கப்பட்டமை ஒரு வரலாற்று சம்பவமாகும். அவ்வாறு உடபலாத்த பிரதேச சபை கலைக்கப்பட்டமைக்கு முன்வைக்கப்பட்ட காரணங்களாக அச்சபையின் நிலவரம்புக்கு உட்பட்ட நியூபீக்கொக்,செல்வகந்த,மெல்போர்ட் ஆகிய தோட்டப்பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்தி பணிகளாகும்.

பிரதேச சபைகளை விஸ்தரிப்பின் ஊடாகவே மக்களுக்கு சேவைகளையும் அதிகரிக்க முடியும் என்ற கோரிக்கை நல்லாட்சி காலத்தில் எழுந்ததால் நுவரெலியா மாவட்டத்தில் மேலதிகமாக நான்கு பிரதேச சபைகள் உருவாக்கப்பட்டன. அவை அனைத்துமே பெருந்தோட்டப்பகுதியை உள்ளடக்கிய சபைகளாகும். கொட்டகலை பிரதேச சபை, அக்கரபத்தனை பிரதேச சபை, நோர்வூட் பிரதேச சபை , மஸ்கெலியா பிரதேச சபை ஆகிய நான்கு உள்ளூராட்சி நிறுவனங்களின் நிலப்பரப்புகள் பெருந்தோட்டப்பகுதிகளை அதிகமாகக் கொண்டவை. நுவரெலியா மற்றும் அம்பகமுவ பிரதேச சபைகளும் அவ்வாறே. ஆனால் பிரதேச சபை திருத்தச்சட்டம் தடையாக இருந்ததால் அச்சந்தர்ப்பத்தில் நிதியைப் பயன்படுத்த முடியவில்லை.

2018 ஆம் ஆண்டு இடம்பெற்ற உள்ளூராட்சி தேர்தல்களின் பின்னர் இந்த திருத்தச் சட்டமூலத்தை பயன்படுத்தி மேற்படி பிரதேச சபைகள் எத்தனை தோட்டப்பிரதேசங்களுக்கு அபிவிருத்தித் திட்டங்களை மேற்கொண்டிருக்கின்றன என்பதை குறித்த தோட்டப்பகுதி மக்களே ஆராய வேண்டும்.

சில பிரதேச சபைகளின் உறுப்பினர்களாக வெற்றி பெற்று வந்தவர்கள் அப்பிரதேசத்தின் தோட்டத்தொழிலாளர்களின் பிள்ளைகளாவர். ஆனால் அவர்களால் பிரதேச சபை நிதியின் மூலம் வடிகாண்களை அமைக்கவோ அல்லது தோட்டத்திலுள்ள மைதானத்தை சுத்தப்படுத்தக் கூட முடியாத நிலைமை ஏற்பட்டிருந்தது. இதற்குக் காரணம் தோட்ட நிர்வாகம் இழுத்தடிப்புகளை செய்ததாகும். தோட்ட நிர்வாகம் ஏன் இதில் தலையிட வேண்டும் என்ற கேள்வி எழலாம். திருத்தச் சட்டத்தின் (2) உட்பிரிவு இவ்வாறு கூறுகின்றது;

  'பெருந்தோட்டப் பிராந்தியங்களின் விடயத்தில்,  பிரதேச சபைகள் விசேட தீர்மானமொன்றை சேர்த்துக் கொண்டதன் மேல் அத்துடன் இயைபான தோட்டத்தின் நிருவாக அதிகாரிகளுடனான கலந்தாலோசனையுடனும், அந்தந்த பெருந்தோட்ட பிராந்தியங்களில் வதிவோரின் சேமநலனுக்கென அவசியமான வீதிகள், கிணறுகள் மற்றும் வேறு பொது வாழ்வசதிகளை அத்தகைய வதிவோருக்கு வசதியளிப்பதற்கு பிரதேச சபை நிதியத்தை பயன்படுத்தலாம்.'


தோட்ட நிர்வாக அதிகாரிகள் என்றால் முகாமையாளர்களே விளங்குகின்றனர். சில தோட்டப்பகுதிகளின் முகாமையாளர்கள் கடும்போக்குக் கொண்டவர்களாக விளங்கியதால் உறுப்பினர்களால் மைதானத்தை சுத்தப்படுத்தும் பணிகளை கூட முன்னெடுக்க முடியவில்லை. இதற்குப் பின்னணியில் பல காரணங்கள் இருந்தன.

சபைகளில் ஆட்சியமைத்த கட்சியானது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தோட்டப்பகுதிகளில் அபிவிருத்தி பணிகளை செய்வதற்கு தடையாக இருந்தமை முக்கியமானது. இதற்குப் பல உதாரணங்களை காட்டலாம். தோட்ட முகாமையாளர்களுக்கு அதற்கான அனுமதியை வழங்க வேண்டாம் என மறைமுகமாக கூறப்பட்டது.

ஆனால் ஆட்சி அதிகாரத்தைக் கொண்டிருந்த கட்சியின் உறுப்பினர்கள் தமது தோட்டப்பகுதிகளில் அபிவிருத்திகளை தங்கு தடையின்றி முன்னெடுத்தனர். பலர் தமது குடியிருப்புகளுக்கு முன்பாக செல்லும் வீதிகளை கொங்றீட் இட்டு செப்பனிட்டது மாத்திரமின்றி வடிகாண்களையும் ஸ்திரமாக அமைத்துக்கொண்டனர்.

பெயருக்காக தமது தோட்டத்தின் சில வடிகாண்களை சிறிது தூரத்துக்கு அமைத்துக்கொண்டதுடன் வீதிகளை அரைகுறையாக செப்பனிட்டு படம் காட்டினர்.

இதற்கும் பல ஆதாரங்களை காட்டலாம்.பிரதேச சபையின் நிதியை தோட்டப்பகுதிக்கு பயன்படுத்தலாம் என்ற விடயத்தை சில உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த மக்களுக்கே மறைத்து செயற்பட்டனர். சில திட்டங்களை தமது கட்சித் தலைவர்,  செயலாளரின் தனிப்பட்ட நிதி ஒதுக்கீடு என்றெல்லாம் பெயரிட்டு மகிழ்ந்து கொண்டனர். இந்த செயற்பாடுகளை எதிர்வரும் தேர்தல்களுக்குப்பிறகு அமையப்போகும் சபைகளின் உறுப்பினர்கள் முற்றுப் புள்ளி வைக்க வேண்டும் என்பது மக்களினதும் கருத்தாக உள்ளது. பிரதேச சபை நிதியின் மூலம் தமது குடியிருப்பு பாதைகளை செப்பனிட்டு கொண்டவர்களும் வடிகாண்களை அமைத்துக் கொண்டவர்களும் இ தமது காணிகளை பெக்கோ இயந்திரங்கள் மூலம் சுத்தப்படுத்தியவர்களும் புதிய சபையின் ஆட்சிக்கு முன்பதாக பதில் கூற வேண்டிய நிலைமைகள் ஏற்படலாம். அநேகமாக மேற்படி சபைகளின் கடந்த கால ஆட்சியின் நிதி பயன்பாடுகள் பற்றிய கணக்காய்வுகள் மேற்கொள்ளப்படும் என்பது முக்கிய விடயம்.

அதன் போது பிரதேச சபையின் நிதியைப் பயன்படுத்தி தோட்டப்பிராந்தியங்களில் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திகள் பற்றிய உண்மைத் தகவல்கள் வெளிவரக்கூடும். அவற்றை முறைகேடாக பயன்படுத்திய பிரதிநிதிகள் இம்முறை தெரிவு செய்யப்பட்டாலும் படாவிட்டாலும் அவர்கள் சட்டத்துக்கு பதில் கூற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால் இது ஊழலுக்கு எதிரான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சி என்பதையும் மறந்து விடக் கூடாது.

சிவலிங்கம் சிவகுமாரன்

Sunday, April 13, 2025

 போர்க்குற்றங்களுக்கு அப்பால் ….!


 

சி.சிவகுமாரன்

இலங்கை இராணுவத்தினருக்கு எதிரான போர்க்குற்றங்கள்  விசாரிக்கப்படவேண்டியவை என்பதில் மாற்றுக்கருத்துக்களுக்கு இடமில்லை. யுத்த காலகட்டத்தை தவிர்த்துப் பார்க்கும் போது, இராணுவத்தில் இருந்து தப்பிச்சென்றவர்கள் மீதான குற்றச்சாட்டுகள் பாரதூரமானவையாக விளங்குகின்றன. குறிப்பாக  பாதாள உலக கோஷ்டியினருடன் அவர்களுக்கிருந்த தொடர்புகள், அதன் மூலம் அவர்கள் முன்னெடுத்த கொலை மற்றும் கொள்ளைச்சம்பவங்களை நாடே அறியும். ஆனால் அவர்கள் முன்னாள் இராணுவ வீரர்கள் என்பதால் கடந்த கால ஆட்சியாளர்கள் அதை பகிரங்கப்படுத்தாது அடக்கியே வாசிக்க வேண்டியேற்பட்டது.  

இலங்கை உள்நாட்டுப் போரின் போது நீதிக்குப் புறம்பான கொலைகள் சித்திரவதை மற்றும் பாலியல் வன்முறைகள் உட்பட கடுமையான மனித உரிமை மீறல்களுக்குப் பொறுப்பான நான்கு பேர்  மீது சொத்து முடக்கம் மற்றும் பயண தடைகளை விதித்துள்ளது பிரித்தானியா. புலம்பெயர் தமிழர்கள் மற்றும் அமைப்புகள் இதை வரவேற்றாலும்  இலங்கையில் வழமை போன்றே படையினரின்  மீதான அபாண்ட குற்றச்சாட்டாக இது பார்க்கப்படுகின்றது.

தடை விதிக்கப்பட்டுள்ள  நான்கு பேரில் மூவர்  முன்னாள் பாதுகாப்பு பிரதானிகளாவர்.   ஒருவர் விடுதலை புலிகளின் முன்னாள் தளபதியாக விளங்கி பின்னர் அரசாங்கத்தோடு இணைந்து செயற்பட்டவர்.

தடை விதிக்கப்பட்டுள்ளவர்களில்  முன்னாள்  கடற்படை தளபதியான    வசந்த கரனாகொட.   பிரித்தானியாவின் இந்த செயற்பாட்டுக்கு கூறியுள்ள  காரணம் விசித்திரமாகவுள்ளது. 

‘காலனித்துவ ஆட்சி காலத்தில் தனது செயற்பாடுகளுக்கு பிரித்தானியா என்றுமே மன்னிப்பு கோரவில்லை. இந்திய மற்றும் இலங்கையில் இடம்பெற்ற காலனித்துவ கால அட்டூழியங்கள் கவனிக்கப்படாத போதும், பிரித்தானியாவானது இலங்கையை குறி வைத்து மனித உரிமை தடைகளை விதித்து வருகின்றது’ என்று அவர் கூறியுள்ளார்.

காலனித்துவ கால ஆட்சியில்  பிரித்தானிய ஏகாதிபத்தியத்தை காலனித்துவ ஒடுக்கு முறை என்கிறார்கள். ஆனால் இலங்கையில் போர் இடம்பெற்ற காலப்பகுதியில் எந்த நாடும் இலங்கையை ஆக்கிரமித்திருக்கவில்லை. சுதந்திரம் பெற்ற ஜனநாயக நாடான இலங்கையிலேயே கோர யுத்தம் இடம்பெற்றது. இறுதி  யுத்த காலகட்டத்தில் நினைத்துப்பார்க்க முடியாத போர்க்குற்றங்கள் இலங்கை இராணுவத்தினர் மீதும் இராணுவ அதிகாரிகள் மீதும் சுமத்தப்பட்டன. இதை எவ்வாறு வசந்த கரனகொட போன்றோர் நியாயப்படுத்தப்போகின்றார்கள்?

காலனித்துவ காலத்தில் இடம்பெற்றதை விட மோசமான சம்பவங்களுக்கு இலங்கை இராணுவம் காரணமாக இருந்ததை நாட்டின் சிங்கள மக்களும் நன்கறிவர்.  

இதை நிரூபிக்கும் வகையில் சில இராணுவ அதிகாரிகள் மீது இலங்கை அரசாங்கமே நடவடிக்கை எடுத்துள்ளது.   2000 ஆம் ஆண்டு இடம்பெற்ற மிருசுவில் படுகொலை சம்பவம் அதில் முக்கியமானது. யுத்தம் காரணமாக தமது வீடுகளிலிருந்து வெளியேறிய   எட்டு பேர் யாழ்ப்பாணத்திலிருந்து மிருசுவில் சென்று கொண்டிருந்த போது இலங்கை இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர்.  . புதைக்கப்பட்ட சடலம் ஒன்றை விறகு சேகரிக்கச் சென்ற ஒருவர் கண்டு தமது உறவினர்களிடம் கூற மறு நாள் சிலர்  அவ்விடத்துக்குச் சென்று ஆராய்ந்துள்ளனர். எனினும் அங்கிருந்த எட்டு பேரை கைது செய்த இராணுவத்தினர் அவர்களை கொலை செய்து அருகிலுள்ள ஒரு வீட்டின் மலசல கூட குழியில் வீசியெறிந்துள்ளனர். இதில் சிறுவர்களும் அடங்குவர். இவர்களின் சித்திரவதைகளில் தப்பிச்சென்ற ஒருவர் வழங்கிய தகவலையடுத்தே இந்த விவகாரம் வெளிவந்தது.  ஐந்து இராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு வழக்கு தொடரப்பட்டது. விசாரணைகளின் பின்னர் எட்டு பேரின் கழுத்தை அறுத்து கொலை செய்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்ட இராணுவ சார்ஜன்ட் சுனில் ரத்நாயக்கவுக்கு கொழும்பு விசேட மேல் நீதிமன்றம் 2015 ஆம் ஆண்டு மரண தண்டனை விதித்தது. ஏனையோர் சாட்சிகள் இன்றி விடுதலை செய்யப்பட்டனர். ஆனால் தான் ஜனாதிபதியானவுடன் கோட்டாபய ராஜபக்ச 2020 ஆம் ஆண்டு பொது மன்னிப்பில் சுனில் ரத்னாயக்கவை விடுதலை செய்தார்.

நிறைவேற்றதிகாரமானது பிரித்தானிய காலனித்துவ அதிகாரங்களை விட கொடுமையானது என்பதற்கு இதை விட வேறு என்ன உதாரணங்களை காட்ட முடியும்?  இலங்கை இராணுவத்தினரின் செயற்பாடுகள் எப்படியானவை என்பதை ஒரு தடவை பிரித்தானியாவே நேரடியாக பார்க்கும் சந்தர்ப்பம் இடம்பெற்றது. 2018 ஆம் ஆண்டு பெப்ரவரி 4 ஆம் திகதி இலங்கையின் 70 ஆவது சுதந்திர தினமன்று இலண்டனில் உள்ள இலங்கை தூதரகத்துக்கு முன்பாக புலம்பெயர் தமிழர்கள் ஆர்ப்பாட்டமொன்றை மேற்கொண்டிருந்தனர். அச்சந்தர்ப்பத்தில் தூதரகத்தில் பாதுகாப்பு ஆலோசகராக செயற்பட்ட பிரிகேடியர் பிரியங்க பெர்ணான்டோ வெளியே வந்து ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி அலட்சியமான  உடல்மொழியை வெளிப்படுத்தியது மாத்திரமல்லாது கழுத்தை அறுத்து விடுவேன் என சைகை மூலம் அச்சுறுத்தியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என புலம்பெயர் அமைப்புகள் பிரித்தானியாவிடம் கோரிக்கை விடுத்தாலும் இலங்கை அரசாங்கமானது அவரை பாதுகாக்கும் முயற்சிகளிலேயே ஈடுபட்டது.       பிரிகேடியர் பிரியங்கா பெர்னாண்டோ, 1961 ஆம் ஆண்டு இராஜதந்திர உறவுகள் தொடர்பான வியன்னா மாநாட்டின் படி இராஜதந்திர விலக்குரிமைக்கு உட்பட்டவர் என்பதுடன் அவர் மீது பிரித்தானியா சட்ட நடவடிக்கைகள் எடுக்க முடியாது என தொடர்ச்சியாக வலியுறுத்தி வந்தது.

  ICPPG என்ற அமைப்பு இலண்டன் வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவருக்கு எதிராக வழக்கொன்றை தொடர்ந்தது. அவர் குற்றவாளியென நீதிமன்றம் இனம் கண்டதால் அவருக்கு பிடியாணை பிறப்பித்தது.   இலங்கை அரசாங்கமானது பிரித்தானிய வெளிவிவகார அமைச்சுக்கு வழங்கிய கடும் அழுத்தங்கள் காரணமாக  பிடியாணை மீளப்பெறப்பட்டது. எனினும் குறித்த அமைப்பு அவர் மீது மீண்டும் வழக்கு தொடர்ந்ததில்  2019 இல் அவர் குற்றவாளியென தீர்ப்பளித்த வெஸ்ட் மினிஸ்டர்  நீதிமன்றம் அவருக்கு 2400 பவுண்கள் அபராதம் விதித்தது.  இதை இலங்கை அரசாங்கம் ஒரு பொருட்டாகவே எடுக்கவில்லை. முன்னதாக நாட்டுக்கு அழைக்கப்பட்டிருந்த பிரியங்க பெர்னாண்டோ பின்னர் மேஜர் ஜெனரல் தரத்துக்கு பதவி உயர்த்தப்பட்டார்.

மட்டுமின்றி    அவருக்கு விதிக்கப்பட்டிருந்த அபராதத் தொகையை செலுத்துவதற்கு நாட்டு மக்களிடம் பணம் சேகரிக்கும் முயற்சிகளும் இலங்கையில் ஆரம்பிக்கப்பட்டிருந்தன. பிரியங்கவுக்கு ஆதரவாக அப்போது அட்மிரல் வசந்த கரனகொட ஆதரவான கருத்துக்களை வெளிப்படுத்திருந்தார். பயங்கவாதத்தை ஒழிப்பதற்கு தியாகங்கள் செய்த ஒத்துழைப்பு நல்கிய இராணுவ அதிகாரிகளை பாதுகாக்கவும் அவர்களுக்கு ஆதரவாக செயற்படவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்போது அவர் கூறியிருந்தார். இப்போதும் அதையே கூறுகின்றார்.

பிரித்தானியாவால் தடை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் இராணுவத் தளபதியான சவேந்திர சில்வா மற்றும் முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனகொட ஆகியோர்  மீது ஏற்கனவே அமெரிக்காவானது     பயணத்தடைகளை விதித்துள்ளமை முக்கிய விடயம். யுத்தம் முடி­வுக்கு கொண்­டு­வ­ரப்­பட்­டதன் பின்னர் 2010ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை சவேந்­திர சில்வா அமெரிக்­காவில் அமைந்­துள்ள ஐ.நா. தலை­மை­ய­கத்தில் இருக்கும் இலங்­கையின் நிரந்­தர வதி­விடப் பிர­தி­நி­தியின் அலு­வ­ல­கத்தில் துணைத் தூது­வ­ராக பணி­யாற்­றி­யி­ருந்தார். அவர் இலங்கை திரும்பி இராணுவத் தளபதியாக பொறுப்பேற்று ஆறு மாதங்களில் 2020 ஆம் ஆண்டு அவருக்கு பயணத்தடை விதிக்கப்பட்டது.   முன்னாள் கடற்படை தளபதி வசந்த கரனகொடவுக்கு  2023 ஆம் ஆண்டு பயணத்தடை விதிக்கப்பட்டது.  2008 ஆம் ஆண்டு கொழும்பு மற்றும் அதனை அண்டிய பகுதிகளில் 11 இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் வசந்த கரனகொட மீது வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் முக்கிய விடயம்.

தடை விதிக்கப்பட்டுள்ள ஜகத் ஜெயசூரிய மற்றும் வசந்த கரனகொட ஆகியோர் மீது முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேக்கா பாராளுமன்றத்திலேயே பகிரங்கமாக குற்றம் சுமத்தியிருந்தார். 2021 ஆம் ஆண்டு அவர் பாராளுமன்று உறுப்பினராக இருந்த போது, பாதுகாப்பு அமைச்சின் மீதான விவாதத்தில் மேற்கூறிய இருவரின் பெயர்களை குறிப்பிட்டு அவர்கள் குற்றமிழைத்தவர்கள். இராணுவத்தின் ஒரு சில அதிகாரிகள் செய்யும் தவறுகளுக்கு முழு இராணுவத்தையும் போர்க்குற்றவாளிகளாக்க முடியாது. ஆகவே அவர்கள் தண்டிக்கப்படல் வேண்டும் எனக் கூறியிருந்தார்.

அநுர அரசாங்கமும் இவர்கள் மீதான தடையானது ஒரு தலைப்பட்சமானது என்று கூறியுள்ளது.  ஆனால்  பிரித்தானியாவின் இந்த தடை விவகாரத்தை தனது எழுச்சிக்கு பயன்படுத்திக்கொள்ளப்பார்க்கின்றார் முன்னாள் ஜனாதிபதி மகிந்த. யுத்தத்தை நடத்தியது மட்டுமல்லாது தீர்மானங்களை எடுத்தது நானே ! அதை அமுல்படுத்திய பணிகளை செய்தது மாத்திரமே இராணுவ அதிகாரிகள் என்று அவர் கூறியதன் மூலம் போர்க்குற்றங்கள் இடம்பெற்றிருந்தால் அதற்கும் தானே பொறுப்பு என்ற அர்த்தத்தில் சிங்கள பெளத்த மக்களையும் இராணுவத்தினரையும் ஈர்க்கும் வகையில் கருத்து வெளியிட்டுள்ளார். போர்க்குற்றங்களை சுமந்து நின்ற  அதிகாரிகளுக்கு தனது காலத்திலேயே பதவி உயர்வுகள் வழங்கியவர் மகிந்த. இப்போது மிகவும் கீழிறங்கி தனது அரசியல் இருப்புக்காக தனது உண்மையான சுயரூபத்தை வெளிப்படுத்த தயாராகின்றார்.  

இவர்கள் அனைவருமே தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை ஏதாவதொரு வழியில்   பலவீனமடையச்செய்யும் தருணத்துக்காக காத்திருப்பவர்கள். இப்போது பிரித்தானியாவின் பயணத்தடை விவகாரம் அவர்களுக்கு வெறும் வாய்க்கு அவலாக  கிடைத்துள்ளது.   போர்க்குற்றங்களை சுமந்து நிற்கும் இராணுவத்தினரை  விட, அவர்களுக்கு கடுமையான உத்தரவுகளை பிறப்பித்த    சூத்திரதாரிகளே தண்டிக்கப்பட வேண்டியவர்களாவர்.

 

 

 

 

  


 உள்ளூராட்சி மன்றத் தேர்தல் –2025

உறுப்பினர்களிடம் வாக்காளர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன?




எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் தமது பிரதேசத்துக்கு என்ன வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிடும் பிரதேச மக்கள் முதலில் அவர் என்னென்ன குணாதியசங்களையும் தகுதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும் என்பது குறித்தும் பேசத் தலைப்பட்டுள்ளனர். கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி நுவரெலியா சம்பத் விருந்தகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வுகள் இடம்பெற்றன. நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திட்டப் பணிப்பாளர் கே. யோகேஷ்வரி , திட்ட அதிகாரி கிருஷாந்தினி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர். 

சிரேஷ்ட பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் பிரதேச சபை சட்டத் திருத்தம் பற்றியும் தகவல் அறியும் சட்டம் ஊடாக உள்ளூராட்சி நிறுவனங்களிடம் எப்படியான தகவல்களைப் பெறலாம் என்பது குறித்தும் உரையாடினார். இந்நிகழ்வில் உரையாற்றிய பெ.முத்துலிங்கம் பிரதேச இளைஞர் யுவதிகள் மற்றும் ஏனைய தரப்பினர் சமூக மாற்றத்தை ஏற்படுத்துதல் பற்றி சிந்திப்பது மாத்திரமன்றி அதை உருவாக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கக் கூடிய அரசியல் பிரமுகர்களிடம் கேள்விகளை எழுப்ப வேண்டும்.

தற்போது இலங்கையில் மாத்திரமின்றி மலையகத்திலும் தேர்தல் கால வேட்பாளர்களை தெரிவு செய்வதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஆரம்ப காலத்தில் பாராளுமன்றத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு மக்களுக்கு பரீட்சியமானோர் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்படுவர். அவர்கள் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்களாகவும் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் மக்களால் மதிக்கத்தக்கவர்களாகவும் இருப்பர். மிக முக்கியமாக மக்களால் விரும்பி தெரிவு செய்யப்படும் நபர்களாக விளங்குவர்.ஆனால் இப்போது அப்படியில்லை. மக்களுக்கு தெரியாத நபர்களை கட்சிகள் தான் வேட்பாளர்களாக நியமிக்கின்றன. அவர்கள் யார் எவர் எங்கிருந்து தமது பிரதேசத்துக்கு வந்தார் அவரது பின்னணி என்ன என்பது குறித்து மக்களுக்குத்தெரிவதில்லை. ஆனால் வேறு வழியின்றி அவர்கள் வாக்களிக்கின்றனர்.

ஆகவே இந்த கலாசாரம் மாறுவதற்கு நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அந்த உரிமை உங்களிடம் உள்ளது’ என்றுத் தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் நுவரெலியா,வலப்பனை,தலவாக்கலை,கொத்மலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து பல மன்றங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் துடிப்பான இளைஞர் யுவதிகள் மற்றும் பிரமுகர்கள் ஆர்வமாக பங்குபற்றியிருந்தனர்.



பசுமை கிராம அபிவிருத்திமன்றம், அதிஷ்ர்டநட்சத்திரம் சமூக அபிவிருத்தி மன்றம், பொழி சமூக அபிவிருத்திமன்றம், கல்கி சமூக அபிவிருத்தி மன்றம், தமிழ் தாரகை சமூக அபிவிருத்தி மன்றம், அரும்பு சமூக அபிவிருத்தி மன்றம், கோல்டன் சமூக அபிவிருத்தி மன்றம், நாவலர் சமூக அபிவிருத்தி மன்றம். உதவும் கரங்கள் சமூக அபிவிருத்தி மன்றம், ஹெதர்செட் சமூக அபிவிருத்திமன்றம், பகலவன் சமூகஅபிவிருத்திமன்றம், குறிஞ்சி சமூக அபிவிருத்தி மன்றம், சக்தி பெண்கள் அபிவிருத்தி மன்றம், யுனைட்டட் சமூக அபிவிருத்தி மன்றம், மலையருவி சமூகஅபிவிருத்தி மன்றம், கொன்கோடியா சமூக அபிவிருத்தி மன்றம் ஆகிய அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் கலந்து கொண்டு காத்திரமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர். மிக முக்கியமாக சில கட்சிகள் சார்பில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு தலைப்புகளின் கீழ் தத்தமது கருத்துக்களை முன்வைக்கும் படி கோரப்பட்டிருந்தது.

1) எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்ன?

2) வேட்பாளரின் தகுதிகள் மற்றும் குணாம்சங்கள் எப்படி இருக்க வேண்டும்?

மேற்படி தலைப்பில் குழுக்கள் முன்வைத்த கருத்துகள் இங்கு தொகுத்து தரப்படுகின்றன.வேட்பாளரின் தகுதிகள் மற்றும் குணாம்சங்கள் வேட்பாளர் முதலில் உரிய கல்வித் தகைமை உடையவராக இருத்தல் அவசியம். அதை விட ஊழலை எதிர்க்கக்கூடியவராகவும் சமூகத்திற்கு சேவை செய்ப்பவராக இருத்தல் வேண்டும். தனக்கு வாக்களித்த மக்களிடம் புரிந்துணர்வுடன் நடத்தல் அவசியம். சுயநலம் இல்லாமல் பொதுநலம் பேணுபவராகவும் மூகத்தில் நன் மதிப்பைபெற்றவராக இருக்கும் அதே வேளை பேச்சுத்திறனும் மக்களிடம் முறையான தொடர்பாடலை மேற்கொள்பவராகவும் இருத்தல் அவசியமாகும். குறித்த வேட்பாளர் தான் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை குறித்த சட்டங்களை அறிந்திருத்தல் வேண்டும். அதன் மூலமாக அரச சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பவராக இருத்தல் வேண்டும்.

பக்கச் சார்பு இல்லாமல் மக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டிய அதே நேரம் தனது தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் பற்றிய தெளிவினை கொண்டிருந்தல் வேண்டும்.

2018 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க பிரதேசசபைகள் (திருத்தச்) சட்டம் ஏன் வந்தது ? எதற்காக வந்தது? யாருக்காக மாற்றப்பட்டது என்பது குறித்து தெளிவைப் பெற்று தோட்டப்புற அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்பவராக இருத்தல் வேண்டும்.

எதிர்ப்பார்ப்பது என்ன?

பெருந்தோட்டப் பாதைகள் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டதாகவே உள்ளன.பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அக்கறை காட்டாத இவ்விடயத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அக்கறை காட்ட வேண்டும். பிரதேசங்களில் அரச முன்பள்ளிகளை அமைத்துக்கொடுத்தல், ட்டவைத்தியசாலைகளில் தேவையானஅளவு வைத்தியர்களை நியமித்தல் மற்றும் அபிவிருத்திசெய்தல், அரச போக்குவரத்து சேவைகளை விஸ்தரித்தல், கர்ப்பிணிபெண்களுக்குசிறந்தசுகாதாரசேவைகளைபெற்றுக்கொடுத்தல், விளையாட்டு மைதானங்களை அமைத்தல் – புனரமைத்தல், வாசிகசாலைகளை அமைத்து வாசிப்பைஊக்குவித்தல் , தொழிற்பயிற்சிதிட்டங்களைஉருவாக்குதல் ,வீதிகளுக்கு மின் விளக்குகளைப் பொருத்துதல், கழிவு முகாமைத்துவத்தினை முறையாக மேற்கொள்ளல், சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல் என்பன பிரதான கோரிக்கைககளாக முன்வைக்கப்பட்டன. மலையகப் பெருந்தோட்டப் பெண்களின் பிரச்சினைகள் குறித்து இங்கு பேசப்பட்டன. முக்கியமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு மலசல கூடங்கள் மற்றும் மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு உடுதுணிகளை மாற்றிக்கொள்வதற்குக் கூட தேயிலை மலைகளில் வசதிகள் இல்லாதது குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும் சிறுவர் பூங்காக்களைஅமைத்தல்,விவசாயப்பயிர்ச்செய்கைக்குஉதவுதல், பொதுசுகாதாரம் தொடர்பாக கரிசனை காட்டுதல் ,வறியவர்களுக்கான வீடமைப்பு திட்டத்தினை கொண்டுவரல், தொழிற்சாலை மற்றும் வியாபார வலையமைப்புக்களை உருவாக்குதல், குடியிருப்புகள் மற்றும் தேயிலை மலைகளில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றுதல், யதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல் ,உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருதல் ,சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைத்தல் , கலாச்சார அபிவிருத்தி மன்றங்களை ஊக்குவித்தல் மயான பூமிகளை அமைத்து முறையான பராமரிப்பினை உறுதிசெய்தல் போன்ற விடயங்களை இவர்கள் முன்வைத்திருந்தனர். எதிர்வரும் தேர்தலை முன்னிட் மலையகப் பிரதேசங்கள் தோறும் இவ்வாறான பயிற்சி கருத்தரங்குகளை நடத்தி உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கண்டி சமூக அபிவருத்தி நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் இதன் போது தெரிவித்தார்.