Friday, February 10, 2012

லதா அக்கா....!



வீரகேசரி ஆசிரியப்பீடத்தில் மெட்ரோ நியூஸ் பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்த போது எங்கிருந்தோ வந்து எம்முடன் இணைந்து கொண்டவர் லதா அக்கா. மிகவும் கடும்போக்கான குணத்தையுடையவர் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்தாலும் நாட் செல்ல செல்ல எங்கள் வழிக்கு வந்து விட்டார். அவர் வளர்ந்த சூழநிலை அவரைச்சுற்றி ஒரு வேலியை போட வைத்திருக்கலாம். இசைக்கும் நகைச்சுவைக்கும் இவர் அடிமை ,அது தான் இவரது பலவீனமும் என்று கூட சொல்லலாம்,காரணம் அவர் மிகக்கோபமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அவருக்கு பிடித்த பாடலை மெதுவாக இசைக்க விடுவேன் தூரத்திலிருந்து அவர் முகத்தை பார்ப்பேன் முகம் மலரத்தொடங்கும் கீச்சு குரலில் அந்த பாடலை வாய் முணுமுணுக்கும் பிறகு என்ன வழமையான லதா அக்கா தான். நகைச்சுவைக்கு வாய் விட்டு சிரிக்கும் அவர் சில நேரங்களில் கண்ணீர் வரும் அளவுக்குக்கூட ரசித்து சிரிப்பார். சர்ச்சைக்குரிய செய்திகள் வரும் போதும் அது விவாதத்திற்குட்படும் சந்தர்ப்பங்களிலும் அவர் தனது நிலையிலிருந்து பின் வாங்கமாட்டார். தீவிரமான பெண்ணியவாதியான இவர் ஒரு சில சந்தர்ப்பங்களில் நான் முன்னுதாரணம் காட்டும் சில விடயங்களை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டு விடுவார். பின்பு என்ன அவரை வழிக்கு கொண்டு வரத்தான் இருக்கிறதே பாரதி கண்ணம்மா பாடல் ,எனக்குத்தெரிய அவர் மிகவும் இரசித்து கேட்கும் பாடல்கள் நிழல் நிஜமாகிறது படங்களில் வரும் அனைத்துப்பாடல்களும் , கம்பன் ஏமாந்தான் , பாரதி கண்ணம்மா, மற்றும் மூங்கிலிலே பாட்டிசைத்து ,என் இனிய பொன் நிலாவே , இப்படி பல ...! இப்போதும் கூட இந்த பாடல்களை எனது கணிணி வழியாக கேட்கும் போது உங்கள் ஞாபகங்கள் வந்து போகும் லதா அக்கா! போராட்டம் ஒன்று தான் வாழ்க்கை என்று அடிமை தளையை தூக்கியெறிந்து விட்டு எமது ஆசிரியப்பீடத்திலிருந்து வெளியேறி விட்டீர்கள் நீங்கள். உங்களது காலகட்டத்தில் பலரது மௌனங்களை மொழிபெயர்த்து மொழிபெயர்க்கப்பட்ட மௌனங்கள் என்ற நூலை வெளிக்கொணர்ந்த நீங்கள் இப்போது மௌனத்தையே கடைபிடிப்பது ஏன் என்று தெரியவில்லை நான் ரஜீவன் ,சார்ல்ஸ், ரவி அண்ணா, நிரஞ்சனி அவ்வப்போது உங்கள் பேப்பர் பந்தில் திடீர் அடி வாங்கும் எமது ஒப்பு நோக்காளர் பாலசிங்கம் என நல்ல ஒரு குழு இப்போது பிரிந்து எங்கெங்கோ இருக்கிறோம். எமது குழுவில் மூத்த சகோதரி என்ற வகையில் அவ்வப்போது பல நல்ல அறிவுரைகளை கூறியிருக்கிறீர்கள் எங்களை ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை ஆனால் நீங்கள் பாங்கொங் போய் வந்த நேரம் எனக்கு ஆசையாய் வாங்கி வந்த தாய்லாந்து என்ற பெயர் பொறித்த வெள்ளை டீ சேர்ட்டை நான் இன்னமும் பாதுகாத்து வருகிறேன் லதா அக்கா!

சர்வதேச தாய் மொழி தினம்


உயிர் நீத்த மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபி




சர்வதேச தாய் மொழி தினம் ((International Mother Language Day) இம்மாதம் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியாக இந்த தாய் மொழி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.இலங்கையில் இந்த வருடத்திலிருந்து மும்மொழி அமுலாக்கம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன.இதை அமுல் படுத்தவும் அதில் உள்ள நன்மைகளை விளக்கவும் இந்திய குடியரசின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூட அண்மையில் எமது நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். ஆகவே இத்தினம் குறித்து நாம் பார்க்க வேண்டியுள்ளது. சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படும் தினங்களுக்கு பின்னால் ஏதோ ஒரு சம்பவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் இதற்கு பின்னணியிலும் ஒரு சம்பவம் உள்ளது. சரி வாசகர்களே 1948 ஆம் ஆண்டுக்கு செல்வோமா?
1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மொகமட் அலி ஜின்னா. அச்சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் இரண்டு பிரிவுகளாக இருந்தது. மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் ஆகிய பிரிவுகளே அவை. இப்போது கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் அலி ஜின்னா பாகிஸ்தான் நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக உருதை பிரகடனம் செய்தார். இது கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு பிடிக்கவில்லை,காரணம் அங்கு வாழ்ந்து வந்தோர் தமது தாய் மொழியாக வங்காள மொழியை கொண்டிருந்தனர். வங்காள மொழியானது இந்திய ஆரிய மொழி குடும்பத்திலிருந்து தோன்றியதொன்றாகும். வங்காள மொழி பேசப்பட்டதால் தான் வங்காளதேசம் என இந்நாடு பின்னாளில் இந்தியாவின் உதவியுடன் சுதந்திர நாடாகியது. இந்த மொழியை உலகின் 232 மக்கள் பேசுகிறார்கள் என்பது கூடுதல் தகவல். சரி இனி விடயத்திற்கு வருவோம் அலி ஜின்னாவின் இந்த பிரகடனத்தால் கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை தாய்மொழியாக பிரகடனம் செய்ய வேண்டும் என்ற மக்கள் இயக்கம் தோற்றம் பெற்றது. சுமார் நான்கு வருடங்கள் இந்த இயக்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்பட்டன. இதன் உச்சகட்டமாக 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி டாக்கா பல்கலைகழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை பாகிஸ்தான் இராணுவமும் பொலிஸாரும் தமது இரும்பு கரங்களால் நசுக்கினர். இதன் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். உலகில் தாய் மொழியை பாதுகாப்பதற்காக இடம்பெற்ற ஒரே போராட்டம் என்ற பெருமை இதற்கு உண்டு அதே வேளை தாய் மொழியை காப்பதற்காக உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ஒரே சந்தர்ப்பமாகவும் இது விளங்குகிறது. உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக டாக்கா பல்கலைகழகத்தின் முன்றலில் நினைவு தூபி ஒன்று எழுப்பப்பட்டது. இந்த மொழி வேறுபாடு காரணமாகவே கிழக்கு பாகிஸ்தானில் தனி நாடு கோரிக்கை வலுப்பெற்றது என்பதும் இந்தியாவின் உதவியுடன் 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் என்ற பெயருடன் இது தனி சுதந்திர நாடாகியது என்பது வரலாறு. இந்த சம்பவத்தை முன்வைத்தே ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோ, 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற தனது 30 ஆவது அமர்வின் போது பெப்ரவரி 21 ஐ சர்வதேச தாய் மொழி தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என பிரகடனம் செய்தது.
தமிழ் மொழி
ஆதி கால மனிதனின் மொழியானது சைகைகளாலும் ஓசைகளை வெளிப்படுத்தியும் தோற்றம் பெற்றது ,இன்று கருத்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுமல்லாது வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மொழி விளங்குகிறது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் 30006000 வரையான மொழிகள் பேசப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதனின் மொழியை இயற்கையின் மொழி என்று சிலாகிக்கின்றனர். பெரும்பாலான மொழிகள் ஏதோ ஒரு குடும்பத்தை சார்ந்தனவாகவே உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச்சேர்ந்த மொழிகள் எல்லாம் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. அந்த வகையில் உலகின் புராதன மொழியாக விளங்கும் எமது தாய் மொழியான தமிழ் கூட இன்று அழிவுறும் நிலையில் உள்ளது என பல அறிஞர்கள் கூறி வருகின்றனர். சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான தமிழ் மொழி,திராவிட மொழி குடும்பத்தின் முதன்மையானதும் செம்மொழியாகவும் விளங்குகிறது. இந்தியா ,இலங்கை ,மலேசியா ,சிங்கபூர் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாகவும் ஐக்கிய அரபு இராஜியம்,தென்னாபிரிக்கா,மொரீஷயஸ், பிஜி தீவுகள்,டிரினிடாட் ஆகிய நாடுகளில் சிறிய அளவிலும் பேசப்படுகிறது. உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட பத்து கோடி மக்களால் தமிழ் மொழி பேசப்படுகிறது. உலகலவில் தாய் மொழியை பேசும் மக்களின் எண்ணிக்கையில் பார்த்தால் எமது தமிழ் மொழி 18 ஆவது இடத்தில் உள்ளது. இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் தமிழர்கள் எமது மொழியைப்பேசியும் பரப்பியும் வருகின்றனர்,ஆனால் தமது பிள்ளைகளுக்கு ஏனோ அவர்கள் தமிழ் மொழி கல்வியை வழங்குவதில்லை என்பது கவலைக்குரியது.
வரலாற்றைப்பார்த்தால் எமது மொழி கி.மு.300 நூற்றாண்டைச்சேர்ந்த பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டதாகும். வரலாற்று ரீதியாக எமது தமிழ் மொழி பல அந்தஸ்த்துகளைப்பெற்றுள்ளது. உதாரணத்திற்கு சிலவற்றைப்பார்ப்போம். இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாகவுள்ளது. இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் 22 மொழிகளில் தமிழும் ஒன்று.மேலும் எமது நாடான இலங்கையிலும் மூன்று ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று (அது முறையாக அமுல்படுத்தப்படுகிறதா என்பது வேறு விடயம்) சிங்கபூரில் நாடளாவிய அங்கீகாரம் தமிழுக்கு உண்டு.மேலும் தென்னாபிரிக்காவில் தமிழ் மொழிக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரமே உள்ளது. மலேசியாவின் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் அடக்கம்.
செம்மொழி அங்கீகாரம்
இந்தியாவிலும் மற்றும் உலகெங்கனும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக தமிழ் மொழிக்கு இந்திய அரசினால் செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. இந்த செம்மொழி அந்தஸ்த்து பெற்ற முதலாவது இந்திய மொழியாக தமிழ் விளங்குகிறது. 2004 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தொடரின் போது அப்போதைய குடியரசு தலைவரும் தமிழ் பற்றாளருமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ( ஆனால் தமிழ் நாட்டில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில்,ஏற்பாட்டாளர்களால் இவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்பது ஒரு சோக வரலாறு)
இன்று தமிழ் மொழி தமிழ் நாட்டின் பல இடங்களில் பல வித்தியாசமான பேச்சு மொழியாக உள்ளது.இலங்கையிலும் கூட யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் மலையகப்பகுதிகளில் தமிழ் வித்தியாசமான பேச்சு வழக்காகவே உள்ளது. சில வட்டார வழக்குச்சொற்களின் சேர்க்கையும் இதற்குக்காரணம் எனினும் பேச்சுத்தமிழ் என்று பார்க்கும் போது மேடைகளில் செந்தமிழையே அனைவரும் வழக்காக கொண்டு வருகின்றனர். காலங்காலமாக எமது தமிழ் மொழியை அறிஞர்களும் ,கவிஞர்களும் எழுதியும், பாடியும்,பேசியும் வந்திருக்கின்றனர். ஆனாலும் அந்தஸ்த்து ,தொழில் வாய்ப்பு என்ற ரீதியில் இன்று தமிழ் மொழி கல்வி அழிந்து வருகின்றது. தமிழ் நாட்டில் இது மிக அதிகம். நான் தமிழில் பேசி விட்டேன் என அங்கு பெருமைப்பட்டு கொள்வது ஒரு கலாசாரமாகி விட்டது.ஒருவன் தனது தாய் மொழியில் பேசுகிறேன் என்று ஆச்சரியப்படுவது எவ்வளவு மோசமான கலாசாரம்? அந்த வகையில் இலங்கை மக்களாகிய நாம் எமது தாய்மொழியை போற்றியும் வளர்த்தும் வருகின்றோம் என்பதை உறுதியாக சொல்லலாம். டாக்கா பல்கலைகழக மாணவர்கள் போல தாய் மொழிக்காக போராட்டம் செய்து உயிர் விடத்தயாராகும் படி சொல்லவில்லை. வீட்டிலும்,வீதியிலும் ஏன் தமிழர்களைக்கண்டால் தமிழிலேயே பேசுவோமே ,கல்லூரிகளில் தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி எமது மொழியின் செழுமையை வலிமையை உணரச்செய்வோமே இது வரை செய்யாவிட்டால் பரவாயில்லை இந்த வருட சர்வதேச தாய் மொழி தினத்திலிருந்து திடசங்கற்பம் பூணுவோம். ஏனெனில் தாய் வேறு தாய் மொழி வேறு அல்ல நண்பர்களே!

வகைகள்
தமிழ்
செந்தமிழ்
கொடுந்தமிழ்
முத்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்

பிரிவுகள் வாரியாகத் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
ஆட்சித் தமிழ்
சட்டத் தமிழ்
அறிவியல் தமிழ்
மீனவர் தமிழ்
மருத்துவத் தமிழ்
செம்மொழித் தமிழ்

வட்டார வழக்கு தமிழ் பிரிவுகள்
அரிசனப் பேச்சுத் தமிழ்
கொங்குத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
மட்டக்களப்பு பேச்சுத் தமிழ்
மலேசியத் தமிழ்
பிராமணத் தமிழ்
முஸ்லிம்கள் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
தஞ்சாவூர்த் தமிழ்
மதுரைத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
குமரிமாவட்டத் தமிழ்
கரிசல் தமிழ்
சென்னைத் தமிழ்
மணிப்பிரவாளம்
தமிங்கிலம்
ஜுனூன் தமிழ் (இலக்கண விதிகளை மீறிய தமிழ்)


Monday, February 6, 2012

மரங்களை தறிப்பதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கம்தேயிலை மீள் நடுகை பற்றி வாய்திறப்பதேயில்லை





மலையக பெருந்தோட்டப்பகுதிகளை கம்பனிகள் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் மீள்நடுகை, தேயிலை மலைகளை பராமரித்தல் போன்றவற்றில் அதிக அக்கறை காட்டப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளன.முக்கியமாக தரிசு நிலங்களில் புதிய தேயிலை கன்றுகளை நடுவதில்லை என்றும் ஆரம்ப காலத்தில் பயிரிடப்பட்ட மிகவும் வயது கூடிய தேயிலைச்செடிகளை நீக்கி விட்டு அவ்விடத்தில் புதிய கன்றுகளை நடுவதில் எந்த தோட்ட நிர்வாகமும் அக்கறை காட்டவில்லை என்று பரவலாகவே கூறப்பட்டு வந்தது. இதற்காக அதிக பநணத்தை செலவளிப்பதை சில நிர்வாகங்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.அதற்கு மாற்றீடாக குறைந்த செலவில் அதிக இலாபத்தை தரும் வழிமுறைகளையே சில கம்பனிகள் கையாண்டன. இதில் முக்கியமான ஒருவிடயம் பெறுமதி வாய்ந்த மரங்களை தறித்து வெளியாருக்கு விற்பதாகும். பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகம் காணப்படும் கருப்பந்தேயிலை,சவுக்கு மற்றும் காட்டு வேப்பம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பலகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் காரணமாக பல இலட்சக்கணக்கான மரங்கள் தறித்து விற்கப்பட்டன. ஒரு சில தோட்டப்பகுதிகளில் தரிசு நிலங்களாக இருந்த இடங்களில் தேயிலைக்குப்பதிலாக மரக்கன்றுகளே நடப்பட்டன. காரணம் தேயிலையைப் போல் இதற்கு பராமரிப்பு செலவு எதுவும் இல்லை என்ற காரணம் தான். இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது,எனினும் 22 கம்பனிகளுக்கு 56 வருடங்கள் என்ற அடிப்படையில் தோட்டப்பகுதிகள் கையளிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட காலப்பகுதி வரை சில விடயங்களுக்கும் விட்டு கொடுப்புகளுக்கும் அரசாங்கம் உட்பட வேண்டியதாயிற்று.இதன் காரணமாக தொழிலாளர்களின் குரல் வெளிவரவேயில்லை. பெருந்தோட்டப்பகுதிகளில் மரங்கள் தறிக்கப்பட்டு வெளியாருக்கு விற்படுதல் பற்றி எவருமே வாய் திறக்க வில்லை.இதை ஒரு வர்த்தக நோக்காக அன்றி சூழலியல் தாக்கம் என்ற வகையில் கூட இலங்கையில் உள்ள எந்த ஒரு நிறுவனமே அமைப்போ கருத்து கூற வில்லை. இச்சந்தர்ப்பத்தில் தான் கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இவ்வாறு மரங்கதள தறிப்பதற்கான தடை உத்தரவை அரசாங்கம் கொண்டு வந்தது. இதற்கு பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய வற்றின் எதிர்ப்புக்குரல்கள் வழிசமைத்தன எனலாம். அதன் பிறகு மரங்ஙகள் தறிப்பது முடிவுக்கு வந்தது . இச்சந்தர்ப்பதில் பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகளின் நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்களை எரிபொருளுக்காக மட்டும் தறிப்பதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் கேட்டிருந்தது முதலாளிமார் சம்மேளம். இந்த அனுமதியை பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க ஊடாகவே மேற்படி சம்மேளனம் கேட்டிருந்தது. கடந்த ஒரு வருட காலமாக இது குறித்து பேசப்பட்டு வந்தது இதற்கான அனுமதியை அரசாங்கம் கடந்த வாரம் வழங்கியிருக்கிறது. இதை வரவேற்றுள்ள முதலாளிமார் சம்மேளனம் இந்த தடையுத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக பெருந்தோட்ட கம்பனிகள் தமது தொழிற்சாலைகளுக்கு தேவயான எரிபொருள் விறகுகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், இதற்காக இனிவரும் காலங்களில் பெருமளவு தொகையை செலவிட தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது. முக்கியமான விடயம் என்னவெனில் தறிக்கப்படும் மரங்கள் எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா அல்லது விற்கப்படுகின்றனவா என்பது அவர்களுக்கே வெளிச்சம். மரங்களை தறிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டவுடன் முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையின் சில வசனங்களை வாசித்துப்பாருங்கள்இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலமாக, அதிகளவு செலவீனங்களின் மூலம் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுக்கு பதிலாக மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய இந்த விறகுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். எரிபொருள் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மாற்றுவழிகளில் வருமானமீட்டக்கூடியதாகவும் இது அமையும். பெருமளவான பெருந்தோட்ட கம்பனிகள் நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் முற்றிலும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. இந்த மரங்கள் விசேடமாக எரிபொருள் தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. அதாவது இந்த மரங்கள் நடப்படும் பொழுதே தெரியும் என்றோ ஒரு நாள் தறிக்கப்படப்போகிறது என. இவற்றை தறிக்கும் பொழுது கூட முறையான விதிமுறைகள் கைக்கொள்ளப்படுகின்றன .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் தறிக்கப்படும் போது முறையான விதிமுறைகள் கையாளப்படுகின்றன எனக்கூறும் முதலாளிமார் சம்மேளனம் தறிக்கப்பட்ட இடத்தில் உடனடியாக மற்றுமோர் மரக்கன்று நடப்படும் என்று தெரிவிக்கவில்லை. மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளைப்பொறுத்தவரை இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லை. எனினும் தேயிலைச்செடிகளுக்கு பாதுகாப்பாக மட்டுமன்றி மலையகத்துக்கு அழகு சேர்க்கும் ஒரு அம்சமாகவும் மழை வீழ்ச்சிக்கு பெரும் பங்காற்றும் காரணியாகவும் உள்ள மரங்கள் தறிக்கப்படுவது பற்றி எவருமே அக்கறை கொள்ளாதிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். மேலும் பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று கைவிடப்பட்ட நிலையில் பல தேயிலைமலைகள் காடு மன்றி கிடக்கின்றன. இப்பகுதிகளில் மீள் நடுகை செலவை காரணங்காட்டி சில நிர்வாகங்களும் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே இன்று தோட்டப்பகுதிகளில் அதிக வேலை நாள் இன்மை மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் எந்த வித அக்கறையுமின்றி செயற்படுவதற்குக் காரணம் இங்கு வாழ்வோர் சிறுபான்மையினத்தவர் என்பதினாலோ தெரியவில்லை. காரணம் இதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவராக கடமையாற்றி வருகின்றார். தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள தேசிய பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசங்களுக்கு விளக்கும் பதிலளிக்கும் பெரும் நெருக்கடியான பணியையே இதற்கு பொறுப்பான அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.இச்சந்தர்ப்பத்தில் உள்ளூர் விவகாரங்கள் குறித்து அக்கறைப்பட அவருக்கு காலநேரம் இல்லை அதாவது பெருந்தோட்டத்துறை பற்றிய சிக்கல்களை தீர்ப்பதற்கும் இனங்காணுவதற்கும் இவருக்கு நேரமில்லை என்பதே யதார்த்தமாகும். மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் எவருக்காவது இந்த பொறுப்பை கொடுத்திருக்கலாம் என்றால் அதற்கு சாத்தியமே இல்லாத நிலையே உள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க கம்பனிகள் வசம் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை மீள் நடுகை ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்றும் இல்லாவிடின் குறித்த பகுதிகள் மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அத்தோடு சரி ஒன்றுமே நடக்கவில்லை. மறுபக்கமோ அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள தேயிலை தோட்டங்கள் நஷ்டத்தில் படுபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. இந்த தகவலையும் அரசாங்கமே வெளியிட்டுள்ளது. தற்போது பெருந்தோட்டப்பகுதி தொழிற்றுறையானது மிகவும் அபாயகரமான ஒரு காலகட்டத்தை சந்தித்து வருகின்றது. தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக இயங்கி வருகின்றன.தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.இருக்கும் வளங்களை விஸ்தரித்து மேற்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக வளங்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் செயற்பாடுகளே ஆங்காங்கு இடம்பெற்று வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் வர்த்தக நோக்கிற்காக தேயிலை பயிரிடப்பட்டு 145 வருடங்களாகின்றன என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வரைந்திருந்தேன். இதை வாசித்த ஒரு அன்பர் ஒரு காலத்தில் இலங்கையில் தேயிலை பயிரிடப்பட்டிருந்தது என்று எழுதும் காலகட்டம் விரைவில் வரும் என்று கவலையுடன் தெரிவித்தார். நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது எமக்கே தெரியவில்லை. ஊடகங்கள் வாயிலாக நாம் எமது சமூகம் எதிர்நோக்கி வரும் ஆபத்துக்கள் பற்றி பல தடவைகள் சுட்டிக்காட்டினாலும் அக்கறை உள்ளவர்கள் இந்நிதலை குறித்து வாய் திறப்பார்களா?