Monday, November 28, 2011

உள்ளுறுப்புகளை இழந்து உயிரை விடவா எம் நாட்டு பெண்கள் வெளிநாடுகளுக்குச் செல்கின்றனர்?




இலங்கையிலிருந்து மத்திய கிழக்கு மற்றும் ஏனைய நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் குறித்து கடந்த காலங்களில் பல அதிர்ச்சிகரமாக தகவல்களை ஊடகங்கள் வாயிலாக மக்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. உடம்பில் ஆணிகள் ஏற்றப்பட்டு அனுப்பி வைக்கப்பட்ட பெண்மணிகளிலிருந்து மர்மமான முறையில் மரணித்தவர்கள் பற்றியும் தகவல்கள் வெளிவந்தன. ஒரு சில மரணங்கள் விசாரிக்கப்படாமல் அப்படியே மூடி மறைக்கப்பட்டன. மரணத்தை தழுவியவர்களின் உறவினர்களோ தமக்கு இறந்தவரின் உடல் கிடைத்தாலே போதும் என்ற ரீதியில் அதற்கான முயற்சிகளிலேயே ஈடுபட்டனர்.இதற்காக அவர்கள் இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் மற்றும் வேலைக்கு அனுப்பிய முகவர்களிடம் அலைந்து திரிவதிலேயே தமது காலத்தை கழிக்க வேண்டிய நிர்பந்தத்திற்கு தள்ளப்பட்டனர். ஆனால் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக கடமையாற்றுவோரின் மரணத்தின் மற்றொரு பக்கம் கடந்த வாரம் வெளிவந்து பலரை பீதியடையச்செய்துள்ளது. குவைத் நாட்டில் வீட்டுப்பணிப்பெண்ணாக பணியாற்றச்சென்ற 28 வயதுடைய சியாமலி குமாரி குணவர்தன என்ற பெண் மர்மமான முறையில் மரணத்தை தழுயுள்ளார்.இவரது உடல் இலங்கைக்கு கொண்டு வரப்பட்ட பின்னர் பிரேத பரிசோதனைக்குட்படுத்தப்பட்ட போதே அவரது உள்ளுறுப்புகள் பல மாயமாகியிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.இது அவரது உறவினர்களுக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது. மேற்படி யுவதியின் சகோதரர் பிரியந்த பண்டார குணவர்தன தனது சகோதரியின் மரணத்தில் சந்தேகம் ஏற்பட்டதையடுத்தே நீர்கொழும்பு வைத்தியசாலைக்கு தனது சகோதரியின் உடலை பிரேத பரிசோதனைக்குட்படுத்த வேண்டும் என தமது குடும்ப வைத்தியரின் உதவியை நாடியுள்ளார். மரணித்தமைக்கான காரணத்தை ) அறியவே அவர் இந்த முயற்சியில் இறங்கியுள்ளார். நீர் கொழும்பு வைத்தியசாலையின் பணிப்பாளர் ஏ.தயாபாலவினால் பிரேத பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்ட போது இந்த யுவதியின் உள்ளுறுப்புகள் குவைத்தில் வைத்தே அகற்றப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. குவைத் வைத்தியசாலையில் சியாமலி குமாரியின் உடல் பிரேத பரிசோதனைக்கு ( Post Mortem) உட்படுத்தப்பட்டதாயினும் பரிசோதனை அறிக்கையில் உள்ளுறுப்புகள் அகற்றப்பட்டமை குறித்து எந்த வித குறிப்புகளும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.இதுவே இந்த மரணத்தில் சந்தேகம் ஏற்பட பிரதான காரணமாகும். கலாவௌ விஜித புர என்ற இடத்தைச்சேர்ந்த சியாமலி குமாரி 7 வயது சிறுமியின் தாயாராவார். கடந்த ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி இவர் திடீரென மரணித்ததாக குவைத்தில் பணி புரியும் வேறு ஒரு பணிப்பெண் மூலமாகவே இவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. சியாமலியின் உடல் கடந்த 11 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை வந்துள்ளது. இவர் அனுராதபுரத்திலுள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு முகவர் ஒருவரின் மூலமாக கடந்த வருடம் ஏப்ரல் 23 ஆம் திகதி குவைத் சென்றுள்ளார். இவரின் பரிதாபகரமான மரணம் மத்திய கிழக்கில் பணி புரியும் ஏனைய பெண்களுக்கு உள்ள ஆபத்தினையும் பாதுகாப்பின்மையையும் அப்பட்டமாக இலங்கைக்கு தெரிவித்துள்ளது என்றே கூற வேண்டியுள்ளது.இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகமானது தம்மிடம் பதிவு செய்து கொள்ளாத முகவர்கள் மூலமாக வெளிநாடு செல்ல வேண்டாம் என எச்சரிக்கை செய்தாலும் பலர் அதை உதாசீனப்படுத்துவதை மறுக்க முடியாது,எனினும் பதிவு செய்து கொள்ளாது இயங்கும் வேலை வாய்ப்பு முகவரமைப்புகளுக்கு எதிராக பணியகம், கடந்த காலங்களில் என்ன சட்ட நடவடிக்கை எடுத்துள்ளது என்பதை ஆராய்ந்தால் பலன் பூஜ்யமே. இவ்வாறு இயங்கும் போலி முகவர்களை தடை செய்யும் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்பதே பலரினதும் கோரிக்கைகளாகும்.வெளிநாடுகளில் இலங்கை பணிப்பெண்கள்இலங்கைக்கு அந்நிய செலவாணியை பெற்றுத்தரும் முக்கியமான தொழிற்றுறையில் வெளிநாட்டு வேலை வாய்ப்பு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது. இதில் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக செல்வோர் பிரதான இடத்தை வகிக்கின்றனர். எனினும் இவர்களில் பணம் சம்பாதித்து சுகபோக வாழ்க்கை வாழ செல்லவில்லை , தமது குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை காரணமாகவே சொந்த பந்தங்களை விட்டு தொலை தூரம் உழைக்கச்செல்கின்றனர். எனினும் இவர்களுக்கு அங்கு உரிய தொழில் பாதுகாப்பு வழங்கப்படுகின்றதா என்பது குறித்து குறிப்பிட்ட நாடுகளிலுள்ள இலங்க தூதரகங்கள் அக்கறையுடன் செயற்படுவதில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. சியாமலியின் மரணம் கூட குவைத்தில் உள்ள இலங்கை தூதரகம் மூலம் அவரது உறவினர்களுக்கு அறிவிக்கப்படவில்லை ,அதை அவர்கள் அறிந்திருந்தார்களா என்பதும் அவர்களுக்கே வெளிச்சம். தற்போது அங்குள்ள இலங்கை தூதரகம் மூலமாக விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என இலங்கை வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் அறிவித்திருந்தாலும் சியாமலியின் மரணத்திற்கான காரணம் வெளியிடப்படுமா என்பது சந்தேகமே. இதற்கு முன்னர் உடம்பில் ஆணிகள் ஊசிகள் ஏற்றப்பட்டு வந்த பணிப்பெண்கள் குறித்து விசாரணைகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதாகவே தெரிகிறது. மத்திய கிழக்கு நாடுகளைப்பொறுத்தவரை சவுதி அரேபியா மற்றும் குவைத் ஆகிய நாடுகளிலேயே இலங்கை பணிப்பெண்கள் அதிகமாக பணியாற்றுகின்றனர். இவ்விரு நாடுகளில் மட்டும் சுமார் 75 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் வீட்டுப்பணிப்பெண்களாக பணியாற்றுகின்றனர். அதற்கு அடுத்தபடியாக ஐக்கிய அரபு இராஜ்யம், மற்றும் கட்டார்,லெபனான் ஆகிய நாடுகளில் பணியாற்றுகின்றனர்.கூடுதலாக கிராம மற்றும் மலையகப்பகுதிகளிலிருந்து பல பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பணிப்பெண்களாக உழைத்து வருகின்றனர்.
மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான சட்டதிட்டங்கள் அமுலில் இருந்தாலும் வெளிநாடுகளில் இருந்து பணியாற்ற வருவோர் மீது தான் இவை செயல்படுத்தப்படுகின்றன என்று தான் கூற வேண்டியுள்ளது. காரணம் பணியாளர்கள் மீது மனிதாபிமானமற்ற முறையில் நடந்து கொள்ளும் எஜமானர்களோ அல்லது எஜமானிகள் மீதோ இந்த சட்டங்கள் இது வரையில் பயன்படுத்தப்பட்டுள்ளனவா என்றால் இல்லை என்பதே பதில். மேலும் இதற்கு முன்பு குறிப்பிட்ட நாடுகளில் பணிபுரிந்து மர்மமான முறையில் மரணத்தைத் தழுவியவர்களின் உடலில் இருந்து உறுப்புகள் அகற்றப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் நிலவுவதாக மனித உரிமை ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் இலங்கையின் பல பாகங்களிலிருந்து பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளுக்கு பணிப்பெண்களாக சென்றாலும் குறிப்பிட்ட சில இடங்களில் மாத்திரமே வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகம் தனது பிராந்தி ய நிலையங்களை கொண்டுள்ளது. இதன் காரணமாக வெளிநாடுகளில் தொழில் புரியும் தமது பிள்ளைகள் குறித்த தகவல்களை உடனடியாக பெற்றுக்கொள்ள முடியாத நிலை பெற்றோர் மற்றும் பாதுகாவலர்களுக்கு ஏற்படுகின்றது. ஆகவே இது தொடர்பில் பணியகம் அக்கறை செலுத்துமா என்பதையும் அறிய வேண்டும். அந்நிய செலாவணியைப்பெற்றுத்தரும் தொழில் என்ற வகையில் வெளிநாட்டு வேலை வாய்ப்புப்பெற்றுச்செல்லும் பெண்களின் பாதுகாப்பு குறித்து இலங்கை அரசாங்கத்திற்கும் பாரிய கடப்பாடு உள்ளதை மறுக்க முடியாது. காரணம் கடந்த காலங்களை எடுத்து நோக்கினால் வெளிநாடு செல்லும் பெண்களின் தொகை அதிகரித்து வண்ணமே உள்ளது. அந்த வகையில் அந்நிய செலாவணி அதிகரிப்புக்கும் இவர்கள் பங்களிப்பை நல்குவதை மறுக்க முடியாது. மறுபக்கம் இந்த விவகாரத்தை மனிதாபிமான ரீதியில் கையாள முன் வர வேண்டும். வறுமை சூழல் காரணமாக வெளிநாடு செல்லும் பெண்கள் எந்தளவிற்கு மன உளைச்சலுடன் இரவு பகல் பாராமல் உழைக்கின்றனர் என்பதை சொல்லி புரிய வைக்க வேண்டியதில்லை. மேலும் இவர்களின் ஊதியத்தில் எத்தனை பேர் தங்கியிருக்கின்றனர் என்பதும் முக்கிய விடயம். புதிதாக வெளிநாடு செல்வோர் மற்றும் அவர்களின் குடும்பங்களின் நலன் கருதி இவ்விடயத்தை சற்று கூடுதல் அக்கறை கொண்டு அரசாங்கம் அணுக வேண்டும். வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்யாத அனைத்து முகவர்கள் குறித்தும் உடன் நடவடிக்கைகள் எடுக்கப்படுதல் அவசியம்.இல்லாவிடின் எதிர் காலத்தில் பல சியாமலிகள் உறுப்புகளை இழந்து உயிரற்ற சடலங்களாகவே வர வேண்டிய சூழ்நிலைகள் ஏற்படுவதை தடுக்க முடியாது.

அதிகரித்து வரும் பெண்களுக்கெதிரான வன்முறைகள்


மிரபல் சகோதரிகள்











சர்வாதிகாரி ட்ரூஜிலோ












பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாள் நேற்று 25 ஆம் திகதி சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்பட்டது. பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பது (International Day for the Elimination of Violence against Women) ஒரு துன்பியல் நிகழ்வை ஞாபகப்படுத்தும் விதத்தில், ஐக்கிய நாடுகளின் பொதுச்சபையால் , 1999 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படல் வேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அவ்வாண்டு 17 ஆம் திகதி பொதுச்சபை கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டது. அந்த துன்பியல் நிகழ்வு என்ன என்பதை பலரும் அறிந்து கொள்ள வேண்டும்.


மிரபல் சகோதரிகள் (Mirabal sisters)


930 1960 இற்கு இடைப்பட்ட காலகட்டம் அது . டொமினிக்கன் குடியரசை ராபெல் ட்ரூஜிலோ (Rafael Trujillo) சர்வாதிகாரி ஆண்டு வந்தான். இவனது ஆட்சிக்கு எதிராக குரல் கொடுப்போர் யாராக இருந்தாலும் இரும்புக்கரம் கொண்டு நசுக்கப்படுவர். ட்ரூஜிலோவின் ஆட்சியில் பெண்கள் சொல்லணாத்துயரை எதிர்நோக்கினர். பெண்களுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட காட்டுமிராண்டித்தனத்தை கண்டித்து மிரபல் என்ற குடும்பப்பெயரை கொண்ட மூன்று சகோதரிகள் குரல் கொடுத்தனர். இச்சகோதரிகள் ஒன்றிணைந்து சர்வாதிகாரியின் ஆட்சிக்கு எதிராக அரசியலிலும் குதித்தனர். இதை ஒடுக்க நினைத்த ட்ரூஜிலோ அவர்களை கொல்வதற்கு உத்தரவிட்டான். 1960 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25 ஆம் திகதி மிரபல் சகோதரிகள் கொடூரமாக ஒரே இடத்தில் கொல்லப்பட்டனர். இதை நினைவு கூறும் முகமாகவே ஐக்கிய நாடுகள் சபையினால் அந்த நாள் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு நாளாக பிரகடனமாயிற்று. பின்னாளில் இவர்கள் மறக்க முடியாத வண்ணத்துப்பூச்சிகள் என்று அழைக்கப்பட்டனர். 1980 ஆம் ஆண்டு முதல் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட நாளானது பால் நிலை வன்முறைகளுக்கு எதிராக விழிப்புணர்ச்சியை ஏற்படுத்துவதற்கு தெரிவு செய்யப்பட்டது.
பெண்களுக்கெதிரான வன்முறைகள்எமது நாட்டின் சனத்தொகையில் அரைவாசியானோர் பெண்கள் தான்.எனினும் பல்வேறு வகையில் இன்று பெண்களுக்கெதிரான வன்முறைகள் அதிகரித்துள்ளன. உள,.உடல் ரீதியான கொடுமைகள் நாளுக்கு நாள் வித்தியாசப்படுவதையும் இங்கு குறிப்பிடல் வேண்டும். என்னென்ன கொடுமைகள் பெண்களுக்கெதிரானவை என பட்டியல் படுத்தப்பட்டுள்ளன .இதில் பிரதானமானவை இவை:



1) திராவகம் வீசுதல்


2) சீதனக்கொடுமைகள்


3) வீட்டில் மனைவியை,சகோதரியை,தாயை பிள்ளையை துன்புறுத்தல்


4) பாலியல் துன்புறுத்தல்கள்


5) விபசாரத்திற்கு நிர்பந்தித்தல்


6) கர்ப்பிணிகளை கொலை செய்தல்


7) பெண் உறுப்பை சிதைத்தல் ( Female Genital Mutilation)



8) கடத்தல் சம்பவங்கள்



9) கௌரவ கொலைகள்


10) ஹித்திரவதைகள்



12) வேலைத்தளங்களில் வன்முறைகள்



13) பெண் சிசு கொலை




14) தரக்குறைவாக நடத்துதல் மற்றும் போர்க்குற்றங்கள்



15) இன ரீதியான ஒடுக்குமுறை
இவ்வாறு வகைப்படுத்தப்பட்டுள்ள வன்முறைகளை இன்று உலகெங்கினும் உள்ள பெண்கள் அனுபவித்து வருகின்றனர். பெண்களை பாதுகாக்கவும் அவர்களின் உரிமைகளை இனங்காணவுமே சர்வதேச மகளிர் தினம் மற்றும் பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு தினம் என்பன அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றன. எனினும் குறிப்பிட்ட நாள் மட்டுமே இவர்கள் ஞாபகப்படுத்தப்படுகின்றார்களோ என்ற சந்தேகமும் நிலவுகின்றது. அண்மைக்காலமாக வீட்டு வன்முறைகளுக்கு பெண்கள் அதிகமாக முகங்கொடுத்து வருவதைக் காணக்கூடியதாக உள்ளது. கடந்த மாதம் மலையகப்பகுதியில் மாமனார் ஒருவர் மருமகளை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்தது. வெளி உலகுக்கு வராத எத்தனையோ கொடுமைகளை இன்று எமது சகோதரிகள் அனுபவித்து வருகின்றனர். குடும்ப சூழ் நிலை, கௌரவம் , குழந்தைகள் என்ற வட்டத்திற்குள் இவர்கள் இருப்பதால் எல்லாவற்றையும் தாங்கிக்கொண்டும் மனதுக்குள் அழுது கொண்டும் இருக்கும் இவர்கள் இறுதியில் மனஉளைச்சலுக்கு ஆளாகி மனநிலை பாதிப்படைகின்றனர்.ஒரு சில சந்தர்ப்பங்களில் பெண்களே பெண்களை கொடுமைப்படுத்தும் அநியாயங்களும் இடம்பெறுகின்றன. அதே போல் வேலைத்தளங்களிலும் உயர் அதிகாரிகளின் வக்கிர எண்ணங்களுக்கும் செயற்பாடுகளுக்கும் பலியாகின்றனர். வீட்டிலிருந்து வேலைக்கு செல்லும் போது பஸ்ஸிலோ இரயிலிலோ அவர்கள் அனுபவிக்கும் கொடுமைகள் வெளியில் சொல்ல முடியாதவை. ஆபிரிக்க நாடுகளில் இன்று வரை வழமையில் உள்ள பெண்ணுறுப்பை சிதைத்தல் , மனித உரிமை ஆர்வலர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் விடயமாகும். மத அனுட்டானங்களின் ஒரு அங்கமாக இதை அங்குள்ளவர்கள் கருதினாலும் இது அப்பட்டமான மனித உரிமை மீறல் என்றும் பெண் பிள்ளைகளுக்கு உடல் ,உள ரீதியாக பாதிப்பை ஏற்படுத்தும் அதே வேளை பல சிறுமிகள் அதிக இரத்தப்போக்கினால் இதில் உயிராபத்தையும் சந்தித்துள்ளனர் என்பதும் சோகமான விடயம். இந்தியாவில் பல மாநிலங்களில் இளவயது திருமணங்கள் இன்றும் வழக்கில் உள்ளன. பருவம் எய்த முன்னர் சிறுமிகளை இவ்வகையில் திருமணம் செய்து கொடுத்தலானது அந்த சிறுமிக்கு எதிரான வன்முறையே என்பதில் ஐயமில்லை. அதே போல் பெண் சிசுக்கொலை மற்றும் சாதி ரீதியாக பெண்களை ஒடுக்குதல் , அவர்களை துஷ்பிரயோகம் செய்தல் ,கொலை செய்தல் ,உடன் கட்டை ஏறச்செய்தல் போன்றன இன்றும் இந்தியாவில் இடம்பெற்று வரும் அக்கிரமங்களாகும். காதல் என்ற போர்வையில் இன்று பெண்களுக்கு எதிராக இழைக்கப்படும் வன்முறைகளும் எல்லையில்லாது போய் விட்டது. தனது இச்சைகளுக்கு இணங்காத பெண்களின் முகம் மீது திராவகம் வீசுதல் அல்லது இணைய அரட்டை, சமூக வலை தளம் மூலம் தகவல்களைப்பெற்று அவர்களுக்கு நெருக்குதல் தருதல் போன்றனவும் இன்று பெருகி விட்டன. கடந்த வாரம் தமிழ் நாட்டில் ஏற்பட்ட இவ்வாறான சம்பவம் முழு இலக்கிய உலகையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. பிரபல எழுத்தாளர் தனது வாசகர் வட்டத்தைச்சேர்ந்த ஒரு இளம் பெண்ணிடம் வக்கிரமான முறையில் இணைய அரட்டையில் ஈடுபட்டு அது அம்பலமாகி தற்போது தமிழ் நாட்டில் அதிகம் பேசப்பட்டு வரும் விடயமாகி விட்டது. நாம் நேரில் பார்க்கும் சில மனிதர்களின் மறு பக்கம் மிக மோசமானது என்பது இவ்வாறான விடயங்களில் அம்பலமாகின்றது. மனரீதியாக பாதிக்கப்பட்ட அந்த இளம் வாசகி இவ்விடயத்தை மற்றுமொரு பெண் இலக்கியவாதியாகவும் சமூக ஆர்வலராகவும் விளங்கும் ஒருவரிடம் தைரியமாக எடுத்துக்கூறியதாலேயே இந்த சம்பவம் வெளி உலகுக்கு தெரிய வந்தது.முதற்கண் பெண்கள் தமக்கு எதிராக இடம்பெறும் வன்முறைகள் குறித்து வாய் திறக்க வேண்டும். தனக்கு ஏற்பட்ட துன்பங்கள் மற்றுமொரு பெண்ணுக்கும் ஏற்படக்கூடாது என்ற உத்வேகமே இப்படியான சம்பவங்களை முடியுமானவரை தடுக்க வழி கோலும். சகோதரிகளே எத்தனை காலம் தான் வாய் மூடி மௌனியாக இருக்கப்போகின்றீர்கள்? பெண் கொடுமையை எதிர்த்து சர்வாதிக்கெதிராக குரல் கொடுத்து மரணத்தை தழுவிய மிரபல் சகோதரிகள் போன்று தியாகம் செய்யச்சொல்லவில்லை. உங்களுக்கோ அக்கம் பக்கத்தில் உங்களுக்குத்தெரிந்த தெரியாதவர்களுக்கோ ஏற்படும் வன்முறைகள் குறித்து சரி வாய் திறக்கலாமே!