Saturday, July 14, 2012

ஒரு நல்லாசானின் மறைவு
அட்டன் புனித ஜோன்
 பொஸ்கோ கல்லூரியில் தமிழ் ஆசானாக கடமையாற்றிய திரு.செபஸ்டியன் அவர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு வவுனியாவில் காலமானார்.
1958 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் நறுமலர்குளம் என்ற இடத்தில் பிறந்தார் திரு.செபஸ்டியன் அவர்கள்.  தனது ஆரம்ப கல்வியை மன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் பயின்ற இவர் உயர் கல்வியை மட்டகளப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். 1989 ஆம் ஆண்டு  அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் மாணவர் விடுதி மற்றும் அருட்சகோதரர் இல்லத்திற்கு பொறுப்பாளராய் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட அவர் சிறந்த பேச்சாற்றலும் தமிழ் மொழியை குறிப்பாக சங்க இலக்கியங்களை எமக்கு  அருமையாய் போதிக்கும் நல்லாசானாய் திகழ்ந்தார்.  மிகவும் கண்டிப்பு குணம் மிக்க இவர் மாணவர்களுடன் பாசத்துடன் பழகும் சுபாவம் மிக்கவர். வாசிப்பை மிகவும் நேசிக்கும் ஒருவராக விளங்கிய திரு.செபஸ்டியன் அவர்கள்  பல அரிய புத்தகங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். இவர் படிப்பிக்கும் பாங்கு மிகவும் அலாதியானது. சங்க இலக்கியங்களில் வரும் பாத்திரங்களின் தனித்தன்மையை தனது பாணியில் அற்புதமாக விளக்குவார். அவரது காலகட்டத்தில் இடம்பெற்ற பாடசாலை இலக்கிய மன்ற கூட்டங்களில் இவரது பேச்சை கேட்க  மாணவர்கள் மிகவும் ஆவலாய் இருப்பர். பிறப்பால் கத்தோலிக்கராய் இருந்தாலும் இவர் மதங்களை கடந்த ஒரு நல்ல மனிதராக இருந்தார் என துணிந்து கூறலாம். காரணம் நவராத்ரி மற்றும் ஏனைய விசேட நிகழ்வுகளில்  இந்து மத தத்துவங்களை பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் அற்புதமாய் சொற்பொழிவாற்றும் வல்லமையைப்பெற்றிருந்தார். இஸ்லாம் மதம் மற்றும் இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றி ஆழ்ந்த புலமையைப்பெற்றிருந்தார். இலக்கிய வகுப்புகள் நடத்தும் போது எமது வகுப்பில் இருக்கும் இஸ்லாமிய மாணவர்களை எழுப்பி இஸ்லாம் மதம் தொடர்பில் பல விளக்கங்களை அவர்கள் ஆச்சரியப்படும் படி எடுத்துக்கூறுவார். ஏனைய மதங்கள் பற்றியும் அவற்றின் உட்பொருள் பற்றியும் இவர் மாணவர்கள் மத்தியில் போதிப்பதை கூட ஒரு சிலர் விரும்பியிருக்க வில்லை  எனலாம். எனினும் மாணவர் மத்தியில் மரியாதைக்குரிய ஆசானாய் ஏனைய மதங்களை மதிக்கும் போற்றும் அதன் அருமை பெருமைகளை விளக்கும் ஒரே மனிதராய் அக்காலகட்டத்தில் எமது கல்லூரியில் விளங்கினார்.  தான் பெற்ற பல்துறை அறிவுக்கு காரணம் வாசிப்பு ஒன்றே என பெருமையாகக்கூறுவார். இவரது மேடைப்பேச்சில் திருக்குறலும் அதன் விளக்கங்களும் இடம்பெறாமல் இருந்ததில்லை.1995 ஆம் ஆண்டு வரை எமது கல்லூரியில் கடமையாற்றினார்.  சுகயீனமுற்று இருந்த அவர் கடந்த 12 ஆம் திகதி காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கல்லூரி  சமூகம்  மற்றும் பழைய மாணவர்கள் பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்திற்கும் தமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறது.

சிவலிங்கம் சிவகுமாரன்
பழைய மாணவர் ஒன்றியம்
புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி அட்டன்