Monday, March 8, 2010

இலங்கை அரசியலும் பெண்களின் பங்களிப்பும்.




* இலங்கையின் சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்களாவர்.


* 1931 ஆம் ஆண்டே வாக்களிக்கும் உரிமையை இலங்கை வாழ் பெண்கள் பெற்றனர் எனினும் இது வரையில் அவர்களின் அரசியல் பங்களிப்பு மோசமாகவே உள்ளது.


இலங்கை பாராளுமன்றத்தில் பெண்கள்
ஆண்கள் 212
பெண்கள் 13
மொத்தம் 225



*1931 ஆம் ஆண்டு பெண்களுக்கு வாக்களிக்கும் உரிமையை வழங்கியதன் மூலம் ஆசியா,ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்காவைச்சேர்ந்த நாடுகள் வரிசையில் இலங்கை இவ்விடயத்தில் முதல் நாடு என்ற பெருமையைப்பெற்றது.


*1960 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க உலகின் முதல் பெண் பிரதமர் என்ற பெருமையோடு பதவியேற்றார்.


*1994 ஆம் ஆண்டு இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையை சந்திரிகா குமாரதுங்க பெற்றார்.


பல்வேறு காலகட்டங்களில் பல தேர்தல்களை சந்தித்த நாடு என்ற வகையில் இலங்கையைப்பொறுத்தவரை சுதந்திரத்திற்கு பிற்பட்ட காலத்திலிருந்து இன்று வரை அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது எட்டாக்கனியாகவே உள்ளது. ஜனாதிபதி தேர்தலுக்கு முன்பதாக கொழும்பு லிப்டன் சதுக்கத்தில் இடம்பெற்ற ஒரு பெண்கள் ஒன்றுகூடல் நிகழ்வில் நாட்டின் பல பாகங்களிலிருந்தும் வருகை தந்திருந்த ஆயிரக்கணக்கான பெண்கள் நீதியானதும் சுதந்திரமானதுமான தேர்தலை வலியுறுத்தியதோடு அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும்படியும் கோரிக்கைகளை முன்வைத்தனர். பிரதான ஜனாதிபதி வேட்பாளர்கள் இருவருக்கும் இப்பெண்கள் எழுத்து மூலமான தமது கோரிக்கைகளை சமர்ப்பித்திருந்தனர் என்பதும் முக்கிய அம்சம்.எனினும் எதிர்காலத்தில் இது எந்த விதத்தில் சாத்தியப்படப்போகிறது என்பது கேள்விக்குறியே. இலங்கை நாட்டைப்பொறுத்தவரை அரசியலில் பெண்களின் பங்கு என்று பார்க்கும் போது உலகின் முதல் பெண் பிரதமர் மற்றும் இலங்கையின் முதல் பெண் ஜனாதிபதி என்ற வரையறையோடு அது நின்று விட்டதை காணக்கூடியதாக உள்ளது.
1931 ஆம் ஆண்டு இலங்கையில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையைப்பெற்றனர். இதன் மூலம் ஆசியா,ஆபிரிக்கா மற்றும் இலத்தீன் அமெரிக்க நாடுகள் வரிசையில் பெண்களுக்கு இவ்வரிமையை அளித்த முதல் நாடு என்ற பெருமையை இலங்கை பெற்றது. 1960 ஆம் ஆண்டு சிறிமாவோ பண்டாரநாயக்க முதல் பெண் பிரதமர் என்ற பெருமையைப்பெற்றார். 1994 ஆம் ஆண்டு சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க முதல் பெண் ஜனாதிபதி என்ற பெருமையையும் பெற்றார். வெவ்வேறு காலகட்டத்தில் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தல்களில் ஒரு சில தேர்தல் தொகுதிகளைப்பிரதிநிதித்துவப்படுத்தி பெண்கள் சிலர் பாராளுமன்ற பிரவேசம் செய்தாலும் இலங்கை அரசியலில் முத்திரைப்பதித்த பெண் அரசியல்வாதிகள் என்ற வரையறைக்குள் எவரையும் அடக்க முடியாத நிலைமையே உள்ளது.இதற்கு என்ன காரணம் என்பது முக்கிய விடயம்.
இலங்கையை விட பெண்கள் விடயத்தில் இறுக்கமான கலாசார பின்புலத்தைக்கொண்ட ஏனைய நாடுகளில் அரசியலில் பெண்களின் பங்களிப்பு என்பது அதிகமாக உள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. உதாரணமாக பங்களாதேஷ் பாராளுமன்றத்தில் உள்ள மொத்த உறுப்பினர்களில் 18.6 வீதமானோர் பெண்களாவர். தென்கிழக்காசிய நாடுகளை வரிசைப்படுத்தினால் இலங்கை பாராளுமன்றமே மிகக்குறைவான வீதத்தில் பெண்களைக்கொண்டிருக்கின்றது 225 உறுப்பினர்களில் 13 பேர் மட்டுமே பெண்கள்.
முதலில் உள்ளூராட்சி தேர்தல்களில் பெண்களின் பங்களிப்பை ஈடு செய்யும் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும். ஆனாலும் இலங்கையைப்பொறுத்தவரை உள்ளூராட்சி அமைப்புகளில் (பிரதேச,நகர ,மாநகர சபைகள்) பெண்களின் உறுப்புரிமை 1.8 வீதமாகவே உள்ளது. மாகாணசபைகளில் 4.1 ஆகவும் பாராளுமன்றத்தில் 5.8 ஆக உள்ளது.
இதன் காரணமாகவே காலாகாலமாக பெண்களின் அரசியல் பிரவேசம் குறித்து குறிப்பிடத்தக்க மாற்றங்கள் எதுவும் இங்கு ஏற்படவில்லை. வேட்பாளர் பட்டியலில் 30 வீதம் பெண்கள் இருக்க வேண்டும் என்பது ஒரு சில பெண்கள் சார் அமைப்புகளின் கோரிக்கை. இருப்பினும் இந்த முறையில் தேர்தல்களில் பெண் வேட்பாளர்களை களமிறக்கும் பட்சத்தில் குறிப்பிட்ட அரசியல் கட்சிகளோ தொழிற்சங்கங்களோ தமக்குரிய பெரும்பான்மை இல்லாது போய்விடும் என்ற மறைமுக அச்சத்தை கொண்டிருக்கின்றன. இதன் காரணமாகவே தொழிற்சங்கமோ அரசியல் கட்சியோ பெண்கள் தலைமைத்துவத்தைப்பொறுத்தவரை வெறும் மாவட்ட தலைவி,மகளிர் அணித்தலைவி என்ற வரையறைக்குள் மட்டும் அவர்களை வைத்துக்கொள்வதில் திருப்தி காண்கின்றன. இது மலையக அரசியலில் மட்டும் காணப்படும் ஒரு சாபக்கேடாகும். பெரும்பான்மை இனத்தைப்பொறுத்தவரை பெண்கள் தலைமைத்துவம் என்ற விடயத்தை அவர்கள் கையாளும் முறை பற்றி தமிழ் பெண்கள் அறிந்து கொள்ள வேண்டியது அதிகம் உள்ளது. இன்று கிராமப்புறங்களில் கூட பல அரசியல் கட்சிகளுக்கு உந்துசக்தியாக பெண்கள் இருப்பதை காணக்கூடியதாக இருக்கின்றது.
அரசியலில் பெண்கள் அங்கத்துவத்தை அதிகரிக்க தொகுதி வாரியாக பெண்களின் இருப்பை உறுதி செய்யும் முறையிலான அம்சங்களை அறிமுகப்படுத்தினோலே போதுமானது.உதாரணமாக இந்தியாவில் மாநிலங்களில் இடம்பெறும் உள்ளூராட்சி தேர்தல்களைக்கூறலாம். இங்குள்ள தொகுதிகளில் மூன்றில் ஒரு பகுதி தொகுதிகள் பெண்களுக்காக பதிவு செய்யப்பட்டிருக்கும்.கட்டாயமாக பெண்களே இத்தொகுதியில் போட்டியிட வேண்டும். இந்த முறை காரணமாக கிராமப்புறங்களிலிருந்து இலட்சக்கணக்கான பெண்கள் உள்ளூராட்சி மன்றங்களுக்குத்தெரிவு செய்யப்படுவதோடு அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் ஆரம்பகட்ட வாய்ப்பினை உறுதி செய்கின்றனர். இதனூடாக தமது அரசியல் பயணத்தை ஆரம்பிக்கின்றனர்.
இலங்கையின் மொத்த சனத்தொகையில் 52 வீதமானோர் பெண்கள்,அதே வேளை வாக்களிக்கும் உரிமையைப்பெற்றிருப்பவர்களிலும் 56 வீதமானோர் பெண்களே. இதை வைத்துப்பார்க்கும் போது எமது நாடு அரசியலில் எந்தளவிற்கு பெண்களை உள்ளீர்த்திருக்க வேண்டும் என்பதை சொல்லிப்புரியவைக்க வேண்டியதில்லை.
மேலும் தற்போதுள்ள அரசியல் செயற்பாடுகளை கருத்திற்கொண்டு பல படித்த பெண்கள் அரசியலில் ஈடுபடாமல் ஒதுங்கிப்போகின்றனர் எனலாம். வன்முறை அரசியல் தலைதூக்கியுள்ள இச்சந்தர்ப்பத்தில் பெண்கள் எங்ஙனம் அரசியலில் ஈடுபட அக்கறை காட்டுவர்?
எனினும் பாராளுமன்ற அரசியல் வரை உடனடியாக செல்ல வேண்டிய அவசியம் இல்லை.முதலில் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்கள் பிரதிநிதித்துவத்தை அதிகரிக்கும் வழிவகைகள் துரிதப்படுத்தப்படவேண்டும் என்பதே பலரினதும் அவா.இது குறித்த அழுத்தங்களை மேற்கொள்ள பெண்கள் தான் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் முன்வருவீர்களா சகோதரிகளே?

1 comment:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in