உள்ளூராட்சி மன்றத் தேர்தல் –2025
உறுப்பினர்களிடம் வாக்காளர்கள் எதிர்ப்பார்ப்பது என்ன?
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெற்றி பெறும் சந்தர்ப்பத்தில் தமது பிரதேசத்துக்கு என்ன வகையான வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டும் என்று குறிப்பிடும் பிரதேச மக்கள் முதலில் அவர் என்னென்ன குணாதியசங்களையும் தகுதிகளையும் கொண்டிருத்தல் வேண்டும் என்பது குறித்தும் பேசத் தலைப்பட்டுள்ளனர். கண்டி சமூக அபிவிருத்தி நிறுவகத்தின் ஏற்பாட்டில் கடந்த ஞாயிற்றுக்கிழமை 6 ஆம் திகதி நுவரெலியா சம்பத் விருந்தகத்தில் இது தொடர்பான கலந்துரையாடல் நிகழ்வுகள் இடம்பெற்றன. நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் திட்டப் பணிப்பாளர் கே. யோகேஷ்வரி , திட்ட அதிகாரி கிருஷாந்தினி ஆகியோரும் கலந்து கொண்டிருந்தனர்.
சிரேஷ்ட பத்திரிகையாளர் சிவலிங்கம் சிவகுமாரன் பிரதேச சபை சட்டத் திருத்தம் பற்றியும் தகவல் அறியும் சட்டம் ஊடாக உள்ளூராட்சி நிறுவனங்களிடம் எப்படியான தகவல்களைப் பெறலாம் என்பது குறித்தும் உரையாடினார். இந்நிகழ்வில் உரையாற்றிய பெ.முத்துலிங்கம் பிரதேச இளைஞர் யுவதிகள் மற்றும் ஏனைய தரப்பினர் சமூக மாற்றத்தை ஏற்படுத்துதல் பற்றி சிந்திப்பது மாத்திரமன்றி அதை உருவாக்கும் அதிகாரத்தை கொண்டிருக்கக் கூடிய அரசியல் பிரமுகர்களிடம் கேள்விகளை எழுப்ப வேண்டும்.
தற்போது இலங்கையில் மாத்திரமின்றி மலையகத்திலும் தேர்தல் கால வேட்பாளர்களை தெரிவு செய்வதில் பல மாற்றங்கள் ஏற்பட்டு விட்டன. ஆரம்ப காலத்தில் பாராளுமன்றத்தேர்தல் மற்றும் உள்ளூராட்சி சபைத் தேர்தல்களுக்கு மக்களுக்கு பரீட்சியமானோர் வேட்பாளர்களாகத் தெரிவு செய்யப்படுவர். அவர்கள் மக்கள் மத்தியில் நன்கு அறிமுகமானவர்களாகவும் சமூக சேவைகளில் ஈடுபாடு கொண்டவர்களாகவும் மக்களால் மதிக்கத்தக்கவர்களாகவும் இருப்பர். மிக முக்கியமாக மக்களால் விரும்பி தெரிவு செய்யப்படும் நபர்களாக விளங்குவர்.ஆனால் இப்போது அப்படியில்லை. மக்களுக்கு தெரியாத நபர்களை கட்சிகள் தான் வேட்பாளர்களாக நியமிக்கின்றன. அவர்கள் யார் எவர் எங்கிருந்து தமது பிரதேசத்துக்கு வந்தார் அவரது பின்னணி என்ன என்பது குறித்து மக்களுக்குத்தெரிவதில்லை. ஆனால் வேறு வழியின்றி அவர்கள் வாக்களிக்கின்றனர்.
ஆகவே இந்த கலாசாரம் மாறுவதற்கு நீங்கள் கேள்வி எழுப்ப வேண்டும். அந்த உரிமை உங்களிடம் உள்ளது’ என்றுத் தெரிவித்தார். மேற்படி நிகழ்வில் நுவரெலியா,வலப்பனை,தலவாக்கலை,கொத்மலை ஆகிய பிரதேச செயலகப் பிரிவுகளில் இருந்து பல மன்றங்களைப் பிரதிநிதித்துவம் செய்யும் துடிப்பான இளைஞர் யுவதிகள் மற்றும் பிரமுகர்கள் ஆர்வமாக பங்குபற்றியிருந்தனர்.
பசுமை கிராம அபிவிருத்திமன்றம், அதிஷ்ர்டநட்சத்திரம் சமூக அபிவிருத்தி மன்றம், பொழி சமூக அபிவிருத்திமன்றம், கல்கி சமூக அபிவிருத்தி மன்றம், தமிழ் தாரகை சமூக அபிவிருத்தி மன்றம், அரும்பு சமூக அபிவிருத்தி மன்றம், கோல்டன் சமூக அபிவிருத்தி மன்றம், நாவலர் சமூக அபிவிருத்தி மன்றம். உதவும் கரங்கள் சமூக அபிவிருத்தி மன்றம், ஹெதர்செட் சமூக அபிவிருத்திமன்றம், பகலவன் சமூகஅபிவிருத்திமன்றம், குறிஞ்சி சமூக அபிவிருத்தி மன்றம், சக்தி பெண்கள் அபிவிருத்தி மன்றம், யுனைட்டட் சமூக அபிவிருத்தி மன்றம், மலையருவி சமூகஅபிவிருத்தி மன்றம், கொன்கோடியா சமூக அபிவிருத்தி மன்றம் ஆகிய அமைப்புகளை பிரதிநிதித்துவம் செய்பவர்கள் கலந்து கொண்டு காத்திரமான கருத்துக்களை முன்வைத்திருந்தனர். மிக முக்கியமாக சில கட்சிகள் சார்பில் எதிர்வரும் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் தேர்தல் பணிகளில் ஈடுபடுபவர்களும் இதில் கலந்து கொண்டிருந்தனர். இவர்கள் குழுக்களாக பிரிக்கப்பட்டு இரண்டு தலைப்புகளின் கீழ் தத்தமது கருத்துக்களை முன்வைக்கும் படி கோரப்பட்டிருந்தது.
1) எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலில் வெற்றி பெறும் வேட்பாளரிடம் நீங்கள் எதிர்ப்பார்ப்பது என்ன?
2) வேட்பாளரின் தகுதிகள் மற்றும் குணாம்சங்கள் எப்படி இருக்க வேண்டும்?
மேற்படி தலைப்பில் குழுக்கள் முன்வைத்த கருத்துகள் இங்கு தொகுத்து தரப்படுகின்றன.வேட்பாளரின் தகுதிகள் மற்றும் குணாம்சங்கள் வேட்பாளர் முதலில் உரிய கல்வித் தகைமை உடையவராக இருத்தல் அவசியம். அதை விட ஊழலை எதிர்க்கக்கூடியவராகவும் சமூகத்திற்கு சேவை செய்ப்பவராக இருத்தல் வேண்டும். தனக்கு வாக்களித்த மக்களிடம் புரிந்துணர்வுடன் நடத்தல் அவசியம். சுயநலம் இல்லாமல் பொதுநலம் பேணுபவராகவும் மூகத்தில் நன் மதிப்பைபெற்றவராக இருக்கும் அதே வேளை பேச்சுத்திறனும் மக்களிடம் முறையான தொடர்பாடலை மேற்கொள்பவராகவும் இருத்தல் அவசியமாகும். குறித்த வேட்பாளர் தான் தெரிவு செய்யப்படும் உள்ளூராட்சி சபை குறித்த சட்டங்களை அறிந்திருத்தல் வேண்டும். அதன் மூலமாக அரச சேவைகளை மக்களுக்கு பெற்றுக்கொடுப்பவராக இருத்தல் வேண்டும்.
பக்கச் சார்பு இல்லாமல் மக்களுக்கு சேவைகளை வழங்க வேண்டிய அதே நேரம் தனது தொகுதியில் நிலவும் பிரச்சினைகள் பற்றிய தெளிவினை கொண்டிருந்தல் வேண்டும்.
2018 ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க பிரதேசசபைகள் (திருத்தச்) சட்டம் ஏன் வந்தது ? எதற்காக வந்தது? யாருக்காக மாற்றப்பட்டது என்பது குறித்து தெளிவைப் பெற்று தோட்டப்புற அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்பவராக இருத்தல் வேண்டும்.
எதிர்ப்பார்ப்பது என்ன?
பெருந்தோட்டப் பாதைகள் ஆங்கிலேயர் காலத்தில் அமைக்கப்பட்டதாகவே உள்ளன.பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் அக்கறை காட்டாத இவ்விடயத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்கள் அக்கறை காட்ட வேண்டும். பிரதேசங்களில் அரச முன்பள்ளிகளை அமைத்துக்கொடுத்தல், ட்டவைத்தியசாலைகளில் தேவையானஅளவு வைத்தியர்களை நியமித்தல் மற்றும் அபிவிருத்திசெய்தல், அரச போக்குவரத்து சேவைகளை விஸ்தரித்தல், கர்ப்பிணிபெண்களுக்குசிறந்தசுகாதாரசேவைகளைபெற்றுக்கொடுத்தல், விளையாட்டு மைதானங்களை அமைத்தல் – புனரமைத்தல், வாசிகசாலைகளை அமைத்து வாசிப்பைஊக்குவித்தல் , தொழிற்பயிற்சிதிட்டங்களைஉருவாக்குதல் ,வீதிகளுக்கு மின் விளக்குகளைப் பொருத்துதல், கழிவு முகாமைத்துவத்தினை முறையாக மேற்கொள்ளல், சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்தல் என்பன பிரதான கோரிக்கைககளாக முன்வைக்கப்பட்டன. மலையகப் பெருந்தோட்டப் பெண்களின் பிரச்சினைகள் குறித்து இங்கு பேசப்பட்டன. முக்கியமாக தேயிலை மலைகளில் கொழுந்து பறிக்கும் பெண்களுக்கு மலசல கூடங்கள் மற்றும் மாதவிலக்கு காலங்களில் அவர்களுக்கு உடுதுணிகளை மாற்றிக்கொள்வதற்குக் கூட தேயிலை மலைகளில் வசதிகள் இல்லாதது குறித்து சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. மேலும் சிறுவர் பூங்காக்களைஅமைத்தல்,விவசாயப்பயிர்ச்செய்கைக்குஉதவுதல், பொதுசுகாதாரம் தொடர்பாக கரிசனை காட்டுதல் ,வறியவர்களுக்கான வீடமைப்பு திட்டத்தினை கொண்டுவரல், தொழிற்சாலை மற்றும் வியாபார வலையமைப்புக்களை உருவாக்குதல், குடியிருப்புகள் மற்றும் தேயிலை மலைகளில் உள்ள ஆபத்தான மரங்களை வெட்டி அகற்றுதல், யதொழில் வாய்ப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல் ,உட்கட்டமைப்பு வசதிகளை செய்து தருதல் ,சிறுவர் பராமரிப்பு நிலையங்களை அமைத்தல் , கலாச்சார அபிவிருத்தி மன்றங்களை ஊக்குவித்தல் மயான பூமிகளை அமைத்து முறையான பராமரிப்பினை உறுதிசெய்தல் போன்ற விடயங்களை இவர்கள் முன்வைத்திருந்தனர். எதிர்வரும் தேர்தலை முன்னிட் மலையகப் பிரதேசங்கள் தோறும் இவ்வாறான பயிற்சி கருத்தரங்குகளை நடத்தி உள்ளூராட்சி தேர்தல் தொடர்பில் இளைஞர் யுவதிகளை வலுப்படுத்தும் செயற்திட்டங்களை முன்னெடுக்கவுள்ளதாக கண்டி சமூக அபிவருத்தி நிறுவகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் பெ.முத்துலிங்கம் இதன் போது தெரிவித்தார்.
No comments:
Post a Comment