Friday, October 10, 2008

எழுத வாசிக்க திறனற்றவர்கள் 781 மில்லியன் மக்கள்

இன்று உலகின் பல நாடுகள் எழுத்தறிவின் முக்கியத்துவத்தை உணர்ந்து கல்விச்செயற்பாடுகளில் அதிக அக்கறை காட்டி வருகின்றன.இதற்குக்காரணம் பூகோளமயமாக்கத்தின் விளைவு தான் என்றால் மிகையில்லை. அதி நவீன தொழில்நுட்ப திறனும் கணிணிப்பயன்பாடும் இன்றைய உலகை ஆக்கிரமித்தருக்கும் காலகட்டத்தில் எந்தவொரு நாடும் தனது மக்கள் எழுத்தறிவில் பின்தள்ளப்பட்டுள்ளனர் என்று கூற வெட்கப்படும் என்பதே நிதர்சனம்.
ஆனாலும் வறுமை, போஷாக்கின்மை, அரசியல் நெருக்கடிகள், கலாசார பாகுபாடு, அடிமைப்படுத்தல் போன்ற காரணங்களினால் இன்று உலகில் வயது வந்த சுமார் 781 மில்லியன் மக்கள் அடிப்படை எழுத்தறிவு இன்றி உள்ளனர் என்பதை நாம் நம்பித்தான் ஆகவேண்டியுள்ளது. அதாவது சனத்தொகையில் ஐந்தில் ஒருவருக்கு எழுத்தறிவு இல்லை,இதில் மூன்றில் இரண்டு பங்கினர் பெண்கள்.மேலும் 103 மில்லியன் சிறார்கள் இன்று பாடசாலை கல்வியைப்பெறமுடியாது வெளியே புறந்தள்ளப்பட்டுள்ளனர் என்பது இன்னொரு சோகமான விடயம்.கல்வியறிவு அல்லது எழுத்தறிவின் முக்கியத்துவம் தான் என்ன? சர்வதேசரீதியாக இது தொடர்பான செயற்றிட்டங்கள் எவ்வாறு முன்னெடுத்துச்செல்லப்படுகின்றன? இவற்றை கொண்டு செல்வது யார் என்ற கேள்விகளுக்கு நாம் பதில் காணவேண்டியவர்களாக உள்ளோம்.
எழுத்தறிவு ஏன் முக்கியம்?
எழுத்தறிவு என்பது மனித உரிமைகளுடன் தொடர்பு பட்ட ஒரு விடயம்.தனிநபர் ஆளுமையிலிருந்து சமூக மனித வள அபிவிருத்தி மற்றும் கல்வி செயற்பாடுகள் அதற்கான சந்தர்ப்பங்கள் என்பன எழுத்தறிவிலேயே தங்கியுள்ளன. ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி மற்றும் அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோவானது ஒவ்வொரு வருடமும் செப்டெம்பர் 8ஆம் திகதியை சர்வதேச எழுத்தறிவு தினமாக பிரகடனப்படுத்தியுள்ளது. ‘எந்த ஒரு மொழியிலும் இலகுவான வசனங்களை எழுதவும் படிக்கவும் தெரியமல் இருத்தலே எழுத்தறிவின்மையாகும்’ என ஐக்கிய நாடுகள் சபை எழுத்தறிவின்மையை தனது சாசனத்தில் வரையறை செய்துள்ளது.அடிப்படை கல்வியின் இதயம் என எழுத்தறிவை கூறலாம்.இதில் வறுமையை அழித்தல்,சிறுவர் இறப்பு வீதத்தை குறைத்தல்,ஜனத்தொகை அதிகரிப்பை கட்டுப்படுத்தல்,பால் சமத்தவத்தை கட்டியெழுப்பல், முறையான அபிவிருத்தியை உறுதி செய்தல்,சமாதானம் மற்றும் ஜனநாயகம் என பல விடயங்கள் செல்வாக்கு செலுத்துகின்றன. எழுத்தறிவு என்பது கல்விக்கு எந்தளவில் முக்கியமான ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது என்பதற்கு பல நல்ல வழுவான உதாரணங்களைக்கூறலாம்.ஒரு சிறந்த அடிப்படை கல்வியானது மக்களுக்கு வாழ்க்கைக்கு எந்தளவிற்கு முக்கியமோ அதேயளவிற்கு ஏனைய பிற தேவைகளுக்கும் காரணகர்த்தாவாக இருக்கின்றது. எழுத்தறிவின் பயனை அறிந்த பெற்றோர் தான் தமது பிள்ளைகளை பாடசாலைகளுக்கு அனுப்புகின்றனர். எழுத்தறிவு பெற்றோர் கல்வி வாய்ப்புக்களை இலகுவாக பெற்றுக்கொள்கின்றனர்,மேலும் ஒரு கல்வி கற்ற சமுதாயமானது அபிவிருத்தி இலக்குகளை இனங்கண்டு சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்டது. ஆனால் உலகில் இன்று பல நாடுகள் பல பிரச்சினைகள் காரணமாக எழுத்தறிவை பெறமுடியாதுள்ளனர்.
1965 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் திகதியன்று யுனெஸ்கோவினால் செப்டெம்பர் 8 ஆம் திகதி சர்வதேச எழுத்தறிவு நாளாக பிரகடனம் செய்யப்பட்டது. எழுத்தறிவின் முக்கியத்துவத்தை தனிப்பட்ட மக்களுக்கும் சமூகத்திற்கும்,அமைப்புக்களுகும் அறிய வைப்பது இதன் நோக்கமாகும்.யுனெஸ்கோவின் ‘அனைவருக்கும் கல்வி பற்றிய உலக அறிக்கையின் படி(2006) தென் மற்றும் மேற்கு ஆசிய பகுதிகளிலேயே மிகக்குறைந்த (58.9%)வீதமானோர் (வயது வந்தோரில்)படிப்பறிவில்லாமல் உள்ளனர்.இதற்கடுத்தப்படியாக ஆபிரிக்காவில் 59.7 வீதமும் அரபு நாடுகளில் 62.7 வீதமுமாக உள்ளது.இதில் சுட்டிக்காட்டப்படவேண்டிய விடயம் என்னவெனில் இந்த அறிக்கைக்கும் நாடுகளில் வறுமைக்கும் உள்ள நெருங்கிய தொடர்புகளாகும். ஒரு நாட்டின் கல்வியறிவு வீதத்தை தீர்மானிக்கும் காரணியாக இன்று வறுமை பூதகரமாக எழுந்து நிற்கின்றது. ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் தலிபான் போன்ற அமைப்புக்களின் கடுமையான சட்டதிட்டங்களால் அங்குள்ள பெண்கள் பாடசõலை கல்வியை பல வருட காலமாக இழந்து நிற்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இவ்வருடத்திற்கான கருப்பொருள்ஒவ்வொரு வருடமும் சர்வதேச எழுத்தறிவு தினம் ஒரு பிரகடனத்தை தாங்கி வரும்.இம்முறை யுனெஸ்கோவினால் ‘எழுத்தறிவே சிறந்த பரிகாரம்’ ("Literacy is the best remedy")என்ற கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இம்முறை சுகாதாரம் மற்றும் கல்விக்கிடையில் உள்ள தொடர்புகளை விளக்குவதாகவும் இக்கருப்பொருள் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளது.இன்று உலகை அச்சுறுத்தி வரும் எயிட்ஸ்,காசம்,மலேரியா மற்றும் ஏனைய நோய்கள் தொடர்பில் மக்களும் வளர்ந்து வரும் சமுதாயமும் அறிந்து கொள்ள வேண்டிய பல விடயங்களை இம்முறை கருப்பொருள் உணர்த்தி நிற்கின்றது. கொடிய உயிர்க்கொல்லி நோயான எயிட்ஸ் குறித்தான விழிப்புணர்வு செயற்றிட்டங்கள் மக்களிடையே சென்று சேராததற்குப்பிரதான காரணங்களில் ஒன்றாக எழுத்தறிவின்மை சுட்டிக்காட்டப்படுகிறது. இதற்காக யுனெஸ்கோவினால் ஆரம்பிக்கப்பட்ட திட்டம் தான் EDUCAIDS என்று அழைக்கப்படுகிறது. எச்.ஐ.வி மற்றும் எயிட்ஸ் தொடர்பான அறிவூட்டல்களை உலகெங்கும் எடுத்துச்செல்வது இதன் பிரதான நோக்கம். இத்திட்டத்தின் இரண்டு பிரதான இலக்குகள் உள்ளன.1) கல்வியறிவின் ஊடாக எச்.ஐ.வி பரவுவதை தடுக்கும் செயற்பாடு2) மோசமாக பாதிக்கப்பட்ட குறிப்பிட்ட ஒரு சமூகத்தில் கல்வியறிவை கொண்டு செல்வதன் மூலம் கட்டுப்படுத்தல்.
உலக நாடுகளின் எழுத்தறிவு விகிதங்கள்
1998 ஆம் ஆண்டு ஐ.நாவின் கணிப்பீட்டின் படி உலக சனத்தொகையில் 20வீதமானோர் எழுத்தறிவற்றவர்களாக இருந்தனர்.இந்தத்தொகையினர் எந்த மொழியிலும் அமைந்த மிக இலகுவான வாக்கியங்களை எழுதவோ வாசிக்கவோ முடியாதவர்கள்.எனினும் அமெரிக்க மத்திய புலனாய்வுத்துறை முகவர் அமைப்பின்(சீ.ஐ.ஏ) 2007 அறிக்கையின் படி தற்போது உலக சனத்தொகையின் எழுத்தறிவு வீதம் 82 ஆகும். நாடுகள் ரீதியாக பார்க்கும் பொழுது 100 சதவீத எழுத்தறிவை பெற்றுள்ள நாடு என்ற பெருமையை ஜோர்ஜியா பெற்றுள்ளது. இரண்டாவது இடத்தில் முறையே கியூபா ,எஸ்தோனியா,நெதர்லாந்து ஆகிய நாடுகள் உள்ளன.எமது இலங்கை தாய்நாடு இப்பட்டியலில் 87 ஆவது இடத்தைப்பிடித்துள்ளது. எழுத்தறிவு விகிதம்90.7ஆகும்.இப்பட்டியலில் இந்தியாவானது 147ஆவது இடத்தைப்பிடித்துள்ளது.எழுத்தறிவு விகிதம் 61 ஆகும். இந்தியாவிலுள்ள மக்கள் தொகை அதிகரிப்பே அது எழுத்தறிவு விகிதத்தில் பின்தள்ளப்பட்டுள்ளதற்குக்காரணம் என கூறப்படுகிறது.

இலங்கையும் எழுத்தறிவு வீதமும்
எழுத்தறிவை பொறுத்தவரை தென்னாசியாவில் இலங்கை ஒரு முக்கிய இடத்தைப்பிடித்துள்ளது.இலங்கையானது யுனெஸ்கோவின் கல்வி சார் அபிவிருத்தித்திட்டங்களில் இணைந்து செயற்படுவதற்காக 1949ஆம் ஆண்டு நவம்பர்14ஆம் திகதி யுனெஸ்கோ அமைப்பில் இணைந்து கொண்டது. இன்று இலங்கையின் எழுத்தறிவு வீதமானது நகரப்புறங்களிலேயே முன்னேற்றங்கண்டுள்ளது எனலாம்.சுதந்திரம் கிடைத்து 50வருடங்களுக்குப்பிறகும் கூடபெருந்தோட்டப்பகுதிகளில் அடிப்படை கல்வி வசதியை பெறத்தவறியுள்ளவர்கள் எத்தனையோ பேர்.இவ்வருடத்திவ் முதல் காலாண்டில் குடிசன மதிப்பீட்டு புள்ளி விபர திணைக்களத்தின் அறிக்கையின் படி இலங்கையின் நகர்ப்புறங்களில் எழுத்தறிவு வீதம் 95 ஆகவும் கிராமப்புறங்களில் 93 வீதமாகவும் பெருந்தோட்டப்பகுதிகளில் 76 வீதமாகவும் உள்ளது.பால் வேறுபாட்டில் ஆண்கள் 94 சதவீத கல்வியறிவையும் பெண்கள் 91.1வீத கல்வியறிவையும் பெற்றுள்ளனர்.யுனெஸ்கோவின் அவிவிருத்தித்திட்டங்களில் எழுத்தறிவித்தல் ஒரு முக்கிய இடத்தைப்பிடிக்கின்றது.ஒவ்வொரு நாடுகளிலும் இத்திட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படுகின்றமை முக்கிய அம்சம்.இதில் முதியோர்களுக்கு கல்வி போதித்தல் பிரதான இடத்தை வகிக்கின்றது.
சர்வதேச எழுத்தறிவு விருதுகள்
யுனெஸ்கோ அமைப்பானது ஒவ்வொரு வருடமும் சர்வதேச எழுத்தறிவு தினமன்று எழுத்தறிவு விருதுகளை (Literacy Prizes) பரிந்துரை செய்கின்றது இவ்வாண்டு இவ்விருதானது பிரேஸில் ,எத்தியோப்பியா,தென்னாபிரிக்கா,ஸாம்பியா ஆகிய நாடுகளில் யுனெஸ்கோவினால் முன்னெடுத்து செல்லப்பட்ட கல்வி செயற்பாடுகளுக்காக கிடைத்துள்ளது.மேலும் மொரோக்கோவிலும் பி.பி.சி நிறுவனத்தினாலும் தயாரிக்கப்பட்ட இரு திட்டங்களுக்கு கௌரவ விருதுகள் கிடைத்துள்ளன.

1 comment:

சிவத்தமிழோன் said...

சிவன் எனும் ஓசை ஒலிக்கும் இடமெல்லாம் நான் ஓடோடிச் செல்வது வழமை. தங்களின் பெயரும் தாண்டவம் எனும் தலைப்பும் என்னை கவர்ந்து தங்கள் வலைப்பூவிற்கு என்னை அழைத்து வந்து பல விடயங்களை உருசிக்கும் வாய்ப்பை எனக்கு ஊட்டித்தந்தது. நன்றிகள்.
சமூக விழிப்புணர்வுக்காய் உழைக்கும் தங்கள் எழுத்திற்கு எல்லாம் வல்ல தமிழ்நெறிப் பெருமான் சிவனவனின் அருள் என்றும் உண்டு.
தங்களின் எழுத்துச் சேவை தொடர வாழ்த்துகிறேன்.
"மேன்மைகொள் சைவநீதி விளங்குக உலகமெலாம்"
என்றும் இனிய
சிவத்தமிழோன்