Sunday, December 12, 2021

கண் இருந்தும் பார்வையை இழந்தவர்கள்…..!



பாகிஸ்தானின் பஞ்சாப் மாநிலம் சியால்கோட்டில் சித்திரவதைக்குட்படுத்தப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட இலங்கையர் பிரியந்த குமாரவுக்கு ஏற்பட்ட நிலைமையானது, தொழில் நிமித்தம் வேறு நாடுகளில் தங்கி வாழ்ந்து வரும் எந்த நாட்டவருக்கும் ஏற்பட்டு விடக்கூடாது.

இதை ஒரு துன்பியல் நிகழ்வாக கடந்து செல்ல முடியாதுள்ளது. சம்பவத்தின் பின்னணி மிக முக்கியமானது. பிரியந்த குமார முகாமையாளராக பணியாற்றிய ஆடை தொழிற்சாலையில் ஒரு குழுவினர் பதாதைகளை ஒட்டியதாகவும் அதை அகற்றக் கோரியமைக்காக, அவர் இஸ்லாம் மதத்தை நிந்தித்ததாகக் கூறியே தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் ஆரம்ப கட்டவிசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

பாகிஸ்தானை விட கடும் மத கட்டுப்பாடுகள் நிலவும் மத்திய கிழக்கு நாடுகளில் கூட இலங்கையர்களுக்கு இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றதில்லை எனலாம். எனினும் ஒரு சில இனவாத குழுக்களின் இந்த மிலேச்சத்தனமாக செயற்பாட்டினால் இன்று ஒரு நாடேவெட்கித்தலைகுனிந்து நிற்கின்றது.

இதை விட இலங்கை நாட்டிலிருந்து மனிதாபிமான ரீதியான உதவிகளில் ஒன்றை அதிகம் பெற்ற நாடுகளில் பாகிஸ்தான் முதலிடம் வகிக்கின்றது. அது இலங்கையிடமிருந்து பெற்ற கண்தானமாகும். இதை பாகிஸ்தானின் முன்னணி கண் அறுவை சிகிச்சை நிபுணரான டாக்டர் நியாஸ் ப்ரோகி உறுதிப்படுத்தியுள்ளார். அவர் இலங்கையிடமிருந்து கண்களை தானமாக பெறும் அமைப்பின் பாகிஸ்தான் நாட்டுக்குரிய உறுப்பினராக விளங்குகிறார்.

‘ 1967 ஆம் ஆண்டிலிருந்து இது வரை இலங்கை எமக்கு சுமார் 35 ஆயிரம் கருவிழிகளை தானமாக வழங்கியுள்ளது...எமது நாட்டில் இலங்கையர் ஒருவருக்கு ஏற்பட்ட சம்பவத்தால் நாமும் துயரத்தில் இருக்கின்றோம், இச்சம்பவத்தால் நாம் வெட்கி தலை குனிறோம் ‘ என அவர் தெரிவித்துள்ளார். இலங்கையின் கண் தான சங்கத்துக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் இப்படி குறிப்பிடுகிறார்,

‘ இலங்கையர் எமக்கு கண் தானம் செய்தார், ஆனால் நாம் பார்வையை இழந்தவர்களாகி விட்டோம் ‘

பிரியந்த குமாரவுக்கு ஏற்பட்ட சம்பத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து பாகிஸ்தானில் பல எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன. ‘ எம்மை மன்னித்து விடு இலங்கை நாடே’ என்ற வாசகங்கள் தாங்கிய பதாதைகளை அவர்கள் ஏந்தியிருந்தனர். இந்த சம்பவங்கள் எமக்கு ஒரு பாடத்தை உணர்த்துகின்றன. அங்கு கண் இருந்தும் பார்வையில்லாதவர்களாக இருப்போர் சாதாரண மக்கள் அல்லர்…இன, மதவாதத்தால் காருண்யமும் மனிதாபிமானமும் மறைக்கப்பட்டு மூளைச்சலவை செய்யப்பட்ட தீவிரவாத எண்ணப்போக்கு கொண்டவர்களே இவ்வாறான சம்பவங்களுக்குக் காரணகர்த்தாக்கள்.

இவ்வாறானவர்கள் சிறிய எண்ணிக்கையானோரே..ஆனால் சமூகங்களுக்கு மத்தியில் பெரும்கலவரத்தை தூண்டி விடுபவர்களாகவும் சந்தேகங்களை விதைப்பவர்களாகவும் உள்ளனர்.

பாகிஸ்தான் சம்பவத்துக்கு பிரதமர் இம்ரான்கான் பகிரங்கமாகவே மன்னிப்பு கோரியுள்ளார். இந்த சம்பவத்தோடு தொடர்பு பட்ட பிரதான சந்தேக நபர் உட்பட 250 பேர் வரையில் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு அந்நாட்டின் பயங்கரவாத தடைச்சட்டத்துக்குக் கீழ் வழக்கு தொடரப்பட்டு தண்டனை பெற்றுக்கொடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

ஆப்கானில் ஆட்சியை கைப்பற்றியுள்ள தலிபான்களைப் பற்றி உலகமே அறியும். அவர்களது ஆட்சியில் இப்படியான சம்பவங்கள் பழகிப்போனதொன்று. அதே போன்று மதத்தில் பெயரால் உலகெங்கினும் மோசமான தாக்குதல்கள் நடத்தியும் அப்பாவி வெளிநாட்டவர்களை கொடூரமாக கொலை செய்தும் வரும் ஐ.எஸ்.ஐ.எஸ் அமைப்பு பற்றியும் அனைவரும் அறிவர். ஆனால் பிரதமர் இம்ரான் கானின் ஆட்சியில், பாகிஸ்தானில் ஜனநாயக பண்புகளை எதிர்ப்பார்த்திருந்த சர்வதேசத்துக்கு இவ்வாறான சம்பவங்கள் அதிர்ச்சியையும் சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளன.

பாகிஸ்தான் மறைமுகமாக தீவிரவாதத்தையும் மதவாதத்தையும் ஊக்குவிக்கின்றதா என்ற சந்தேகம் இப்போது ஆசிய நாடுகளிடையே உருவாக ஆரம்பித்து விட்டது. கடந்து ஆகஸ்ட் மாதம் இதே பஞ்சாப் மாநிலத்தில் இந்துக்கள் அதிகம் வாழ்ந்து வரும் போங் எனும் நகரில் அமைந்துள்ள சித்தி விநாயகர் ஆலயம் முழுவதுமாக உடைத்து சேதமாக்கப்பட்டது. குறித்த நகரில் உள்ள மனநலம் குன்றிய 9 வயது இந்து சிறுவன், இஸ்லாமியரின் புனித இடமொன்றுக்கு வெளியே சிறுநீர் கழித்துள்ளார். எனினும் முறைப்பாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட சிறுவன் பின்பு பிணையில் விடுதலை செய்யப்பட்டதற்கு எதிர்ப்புத் தெரிவித்தே ஆலயம் சேதமாக்கப்பட்டுள்ளது.இந்த சம்பவத்துக்கும் பிரதமர் இம்ரான் தனது கண்டனங்களைதெரிவித்தது மட்டுமல்லாது அரச செலவில் ஆலயத்தை புனரமைப்பைதற்கும் உத்தரவிட்டிருந்தார்.

எனினும் பிரியந்த குமாரவோடு தொடர்புபட்ட சம்பவத்தின் பின்னணி பாரதூரமானது. அவரது இழப்புக்கு நட்டஈடு பெற்றுக்கொடுப்பதன் மூலம் அவரது குடும்பத்தினரின் நிரந்தர சோகத்தைஈடு செய்ய முடியாது. அதே வேளை பாகிஸ்தான் நாட்டின் ஒரு குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட இந்த படுபாதக செயலை வைத்து முழு பாகிஸ்தானியர்கள் மீதும் எவரும் தமது எதிர்ப்புணர்வை வெளிப்படுத்துவார்களாயின் அதை விட மடமைத்தனம் வேறோன்றுமில்லை.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து பாகிஸ்தானின் பஞ்சாப் மாநில பிரதேசங்களில் முன்னெடுக்கப்பட்ட எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் அதிகளவான இளையோர் கலந்து கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தியிருந்தனர். மத மற்றும் இனவாத செயற்பாடுகளை இளைய சமூகம் எந்தளவுக்கு வெறுக்கின்றது என்பதை இது எடுத்துக் காட்டும் அதே வேளை நம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளது.

பாகிஸ்தான் சம்பவத்தின் எதிரொலியாக இலங்கையில் கண்டனங்களும் எதிர்ப்பார்ட்டங்களும் இடம்பெற்றிருந்தன. மற்றும்படி அனைவருமே இவ்விடயத்தில் பக்குவமாக நடந்து கொண்டமை முக்கிய விடயம். இச்சம்பவத்தில் இலங்கை மக்களினது பிரதிபலிப்புகள், பாகிஸ்தான்
சம்பவத்துக்குக் காரணமானவர்களுக்கு நல்ல படிப்பினையையும் தந்துள்ளது என்றால் மிகையாகாது.

Saturday, December 4, 2021

தொடர்ச்சியான புறக்கணிப்புக்குள்ளாகி வரும் அட்டன் புனித கப்ரியல் மகளிர் கல்லூரி தமிழ்ப்பிரிவு !


 காலனித்துவ ஆட்சி காலத்தில் நுவரெலியா மாவட்டத்தின் அட்டன் பிரதேசத்தில் பிரசித்தி பெற்ற ஆங்கில மகளிர் கல்வி நிறுவனமாக விளங்கிய பாடசாலையே புனித கப்ரியல் மகளிர் கல்லூரி.  10/10/1931 ஆம் ஆண்டு , அட்டன் புனித திருச்சிலுவை ஆலயத்தின் மிஷனரி பாடசாலையாக பிரான்ஸ்சிஸ்கன் சபை அருட்சகோதரி  வூஸ்டன் என்பவரால் 5 மாணவிகளுடன் ஆரம்பிக்கப்பட்டது. ஆரம்பத்தில் இக்கல்லூரியின் பெயர் புனித கப்ரியல் ஆங்கில பாடசாலையாகும்.

பெருந்தோட்டப்பகுதி மாணவர்களுக்கு ஆங்கில வழி கல்வியையும் , சிறந்த பண்புகளையும்  கற்பிப்பதில், அன்பும், கருணையும்  மிகுந்த அருட்சகோதரிகள் தம்மை அர்ப்பணித்தனர். பிற்காலத்தில் இக்கல்லூரி மகளிர் பாடசாலையாக மாற்றம்பெறுவதற்கு முன்பதாக இங்கு ஆண் மாணவர்களும் (தரம் 1,2)  கல்வி கற்றனர் என்பது முக்கிய விடயம். 1934 ஆம் ஆண்டு திருச்சிலுவை ஆலயத்தின் அருட்தந்தை பஸில் ஹைட் அவர்களால் , புனித   ஜோசப் சமூக  அருட்சகோதரர்களின் நிர்வாகத்தின் கீழ் புனித ஜோன் பொஸ்கோ ஆண்கள் ஆங்கில கல்லூரி ஆரம்பிக்கப்பட்டவுடன் பெருமளவு ஆண் மாணவர்கள் இங்கு கற்கும்  வாய்ப்பைப் பெற்றனர். மத்தியில் புனித திருச்சிலுவை ஆலயம் பிரமாண்டமாய் விளங்க,  ஒருபுறம்  பொஸ்கோ ஆண்கள் கல்லூரி,    மறுபக்கம் புனித கப்ரியல் மகளிர் கல்லூரி ஆகிய இரு கல்வி நிறுவனங்களும் , அருட்சகோதரர்கள் –அருட்சகோதரிகளின் அர்ப்பணிப்பிலும் கண்டிப்பிலும்   கல்வி, ஓழுக்கம், விளையாட்டு, சீரிய பண்புகளினால் மாவட்டத்தில் புகழ் பூத்த கல்லூரிகளாக வளர்ச்சி பெற்று வந்தன.  

தமிழ் மற்றும் சிங்கள ஆங்கில பிரிவுகளை கொண்டு இப்பாடசாலை வளர்ச்சி பெற்று வந்த காலத்திலேயே மிஷனரி பாடசாலைகளை பொறுப்பேற்கும் திட்டத்தின் கீழ்  1963 ஆம் ஆண்டு அரசாங்கத்தால் மேற்படி பாடசாலை  பொறுப்பேற்கப்பட்டு,  புனித கப்ரியல் பாலிகா  வித்தியாலயம் என பெயரிடப்பட்டது. ஆரம்பத்தில் 1 c தர பாடசாலையாக விளங்கிய கல்லூரி 2005 ஆம் ஆண்டு 1 AB தரத்துக்கு உயர்த்தப்பட்டது. 

அரசாங்கத்தின் கீழ் வரும் போது இது  சிங்கள பாடசாலையாக பொறுப்பேற்கப்பட்டதால், சிங்கள அதிபர்களே இதன் பிரதான பாத்திரத்தை வகிக்க தமிழ்ப்பிரிவுக்கு பொறுப்பாக ஒரு அதிபர் (பிரிவுத்தலைவர்)  நியமிக்கப்பட்டு வருகின்றார். பின்னர் மாகாண சபைகள் அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் மாகாண பாடசாலையாக விளங்கியதுடன், தற்போதைய அரசாங்கத்தில்,  தேசிய பாடசாலைகள் திட்டத்தில் உள்வாங்கப்பட்டுள்ளது.


  அரசாங்கத்தால் பொறுப்பேற்கப்பட்ட பின்னர், சிங்கள, தமிழ்ப்பிரிவுகள் சிறப்பாக இயங்கி வந்தாலும் கூட மாகாண பாடசாலையாக மாற்றம் பெற்ற பின்னர் இப்பாடசாலையின் தமிழ்ப்பிரிவானது வளப்பகிர்வில் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வரும் ஒன்றாக விளங்கி வருவதை அனைவரும் பார்த்தும் பேசியுமே வருகின்றனரே ஒழிய அதற்கான தீர்வுகளை இது வரை தேடிப்பெறுவதாக இல்லை. ஏனென்றால் மாகாணத்தின் பிரதான கல்வி அமைச்சு பாத்திரத்தை வகிக்கக் கூடிய மாகாண முதலமைச்சர்களின் கட்டுப்பாட்டிலேயே இப்பாடசாலை காலா காலத்துக்கு வளர்ச்சி பெற்று வந்துள்ளது. இதன் காரணமாக தமிழ்க் கல்வி அமைச்சு என்ற பிரிவின் கீழ் இக்கல்லூரியின் தமிழ்ப்பிரிவுக்குத் தேவையான வளங்களைப் பெற்றுக்கொடுப்பதில்,  கடந்த காலத்தில் தமிழ்க் கல்வி அமைச்சர்களாக விளங்கிய அனைவருமே தோல்வியைத் தழுவியவர்களாகவே தமது பதவி காலம் முழுக்க இருந்து விட்டு போய் விட்டனர். 

அல்லது இக்கல்லூரியின் தமிழ்ப்பிரிவு பிரச்சினைகள்  பற்றி வாய் திறப்பதற்கு அச்சங்கொண்டு கண்டும் காணாதது போன்று தமது பதவி காலத்தை முடித்துக்கொண்டனர். இவர்களே இப்படி இருக்கும் போது தமிழ்ப்பிரிவுக்கு நியமிக்கப்படும் அதிபர்களின் நிலைகள் பற்றி கூற வேண்டிய அவசியம் இல்லை. அதே வேளை வலயக்கல்வி பணிமனையும் முதலமைச்சரின் ஆணைப்படியே நடக்க வேண்டிய நிர்பந்தமும் உள்ளது.  கட்டிடங்கள் ,தளபாடங்கள், பாட ஆசிரியர்கள் என சகல வளங்களிலும் புறந்தள்ளப்பட்ட ஒரு பிரிவாக தமிழ்ப்பிரிவு விளங்க, கிடைக்கும் அனைத்து வளங்களும் சிங்களப் பிரிவுக்கே சென்றடைந்தன. பொறுப்பு கூற வேண்டிய தரப்பினரே இவ்விடயத்தில்  வாய் மூடி மெளனமாக பாடசாலையை கடக்கையில் பாவம் மாணவிகள் என்ன செய்வர்? 

தற்போது சுமார் 1500 மாணவிகள் 77 ஆசிரியர்களுடன் இயங்கி வரும் இக்கல்லூரியில்  தொடர்ச்சியாக தரம் ஐந்து ,க.பொ. த. சாதாரண தரம் மற்றும் உயர்தரப்பிரிவுகளில் அதிக சித்திகளையும் பெறுபேறுகளையும் பெற்றுக்கொடுத்து வருபவர்கள் தமிழ்ப்பிரிவு மாணவிகளே. ஆனால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வரும் தரப்பினரும் அவர்களே.   இந்நிலையில் இக்கல்லூரியின்  சிங்கள மற்றும் தமிழ்ப்பிரிவின் கடந்த 10 வருட கால,  தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை , க.பொ.த. சா/தரம் மற்றும் உயர்தர பெறுபேறுகளை ஒப்பீட்டு ரீதியில் அறிந்து கொள்ள தகவல் அறியும் சட்டம் ஊடாக நாம் கேள்விகளை இவ்வருடம் மார்ச் மாதமளவில் கல்லூரி அதிபரிடம் கேட்டிருந்தோம்.  

எனினும் இதற்கான பதில்கள் கிடைக்காத பட்சத்தில் வலயக்கல்வி பணிமனையிடம் கேட்டபோது, தகவல் வழங்கும் சட்டத்தின் அடிப்படைகள் விளங்காத காரணங்களினால் கல்லூரி அதிபரிடமே பதில்களை கேட்குமாறு பதில் வழங்கப்பட்டிருந்தது. அடுத்த கட்டமாக நாம்  மேற்படி சட்டத்தின் வழிமுறைகளை பின்பற்றி தகவல் வழங்கும் ஆணைக்குழுவுக்கு மேன் முறையீடு செய்த போது,  இத்தகவல்களைப் பெற்றுக்கொடுக்க வலயக்கல்வி பணிமனையே நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆணைக்குழுவின் உறுப்பினர் சிரேஷ்ட சட்டத்தரணி கிஷாலி பிண்டோ ஜெயவர்தன,  வலயக் கல்வி பணிமனையின் தகவல் வழங்கும் அதிகாரிக்கு நேரடியாக உத்தரவிட்டிருந்தார். 

அதன் படி கல்லூரியின் அதிபர் திருமதி வீரதுங்கவின் உறுதிப்படுத்தலின் கீழ், பின்வரும் தகவல்கள் எமக்கு கிடைக்கப்பெற்றன. 


தரம் 5 புலமை பரிசில் பரீட்சையில் வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தியடைந்த மாணவர்களின்  விபரம் (2010–2020) 

ஆண்டு சிங்களப்பிரிவு தமிழ்ப்பிரிவு மொத்தம்    

2010                     05                         11                         16    

2011                     06                         13                         19    

2012                     03                         09                         12    

2013                     06                         12                         18    

2014                     05                         22                         27    

2015                     02                         13                         15    

2016                     03                         12                         15    

2017                     02                         16                         18    

2018                     03                         13                         16    

2019                     05                         26                         31    

2020                     03                         17                         20  


க.பொ,த சாதாரண தரப்பரீட்சையில் உயர்தரத்துக்கு நேரடியாக தகுதி பெற்ற மாணவிகள்

 ஆண்டு சிங்களப்பிரிவு தமிழ்ப்பிரிவு மொத்தம்    

2010                     31                            43                         74    

2011                     46                            50                         96    

2012                     34                            54                         88    

2013                     34                             62                 96    

2014                     27                             42                 69    

2015                     26                             54                 80    

2016                     31                             45                 76    

2017                     53                             46                 99    

2018                     47                             60                 107    

2019                     42                             78                 120    

2020  




க.பொ,த உயர்தரப்பரீட்சையில் சித்தி  பெற்ற மாணவிகள் (கலைப்பிரிவு)
 

 ஆண்டு சிங்களப்பிரிவு தமிழ்ப்பிரிவு மொத்தம்    

2010                 18                                 53                         71    

2011                 14                                 40                         54

2012                 10                                 42                         52    

2013                 12                                 56                         68    

2014                 19                                 58                         77    

2015                 16                                 40                         56    

2016                 25                                 42                         67    

2017                 21                                 40                         61    

2018                 21                                  26                     47    

2019                 19                                  23                         42    

2020                 40                                  24                         64  


பெறுபேறுகள் கூறும் பாடம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை பெறுபேறுகளைப் பார்க்கும் போது, கடந்த பத்து வருடங்களில் கல்லூரியின் சிங்களப்பிரிவில்  ஆகக்கூடிய அளவில் 6 மாணவிகளே வெட்டுப்புள்ளிகளுக்கு மேல் பெற்று சித்தி பெற்றுள்ளனர். தமிழ்ப்பிரிவு மாணவிகளின் சித்தியடைந்தோர் வீதம் மிகவும் சிறப்பாக உள்ளது. 2019 ஆம் ஆண்டு ஆகக்கூடுதலாக 26 பேர் சித்தி பெற்றுள்ளனர். அதே வேளை கடந்த 10 ஆண்டுகளின் க.பொ. த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகளை அவதானிக்கும் போது,  அதிக எண்ணிக்கையான தமிழ்ப்பிரிவு மாணவிகள் சித்தியடைந்திருப்பதையும் உயர்தரத்தில், 2010 ஆம் ஆண்டிலிருந்து அதிக எண்ணிக்கையான மாணவிகள் சித்தியடைந்து வந்தாலும் 2018 ஆம் ஆண்டிற்குப்பிறகு எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டிருப்பதையும் அவதானிக்கக்கூடியதாக உள்ளது. தொடர்ச்சியான  புறக்கணிப்புகள் ,வளப்பற்றாக்குறைகள் காரணமாக, தற்போது பெற்றோர்கள் தமது பிள்ளைகளை உயர்தரம் கற்க வேறு பாடசாலைகளை தெரிவு செய்யும் போக்கு காணப்படுகின்றது. 

நல்லாட்சி காலத்தில் ஒதுக்கப்பட்ட பணத்துக்கு என்ன நடந்தது? 

நல்லாட்சி காலத்தில் கல்வி இராஜாங்க அமைச்சராக விளங்கிய வே.இராதாகிருஷ்ணன் வடக்கு கிழக்கு மாகாணங்கள் உட்பட மத்திய ,ஊவா ,சப்ரகமுவ மாகாண பாடசாலைகளுக்கு கல்வி அமைச்சின் நிதிகளைப் பெற்றுக்கொடுத்து பல பாடசாலை கட்டிடங்கள் உருவாக காரணமாக விளங்கினார். அவரது சொந்த தேர்தல் தொகுதியான நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அட்டன் கப்ரியல் கல்லூரிக்கு 2017 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 9 ஆம் திகதி அவர் விஜயம் செய்த போது, தமிழ்ப்பிரிவின் உயர்தர மாணவிகள் தமது பிரிவில் நிலவும் குறைகளை ஒரு அறிக்கையாக அவரிடம் கையளித்திருந்தனர். இதை முழுவதுமாக உள்வாங்கிய அவர் உடனடியாக தமிழ்ப்பிரிவுக்கு 4 மாடி கட்டிடம் ஒன்றை அமைப்பதற்கு  நிதி ஒதுக்கீடு செய்திருந்தார். மட்டுமின்றி இப்பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பில் தனக்கு தவறான அறிக்கைகளை அது வரை வழங்கி வந்த அதிகாரிகளின் அலட்சிய போக்கையும் கண்டித்திருந்தார்.  எனினும் இந்த நிதி ஒதுக்கீட்டுக்கு என்ன நடந்தது என்பது தெரியவில்லை. வலயக்கல்வி பணிமனையும் அதை கண்டு கொள்ளவில்லை. மாறாக தமது பிரச்சினைகளை இராஜாங்க அமைச்சருக்கு எடுத்துக்கூறிய மாணவிகள், பின்பு விசாரிக்கப்பட்டதாக முறைப்பாடுகள் கிடைத்திருந்தன. இதற்கு முன்பதாக மத்திய மாகாண சபை உறுப்பினராக விளங்கிய ஆர்.ராஜாராம் இக்கல்லூரி நிகழ்வொன்றுக்கு சென்றிருந்த போதும், தமிழ்ப்பிரிவு  மாணவிகள் அவரை அழைத்துச்சென்று வளப்பற்றாக்குறைகள் பற்றி சுட்டிக்காட்டியிருந்தனர். அதன் பிறகே அவர் இவ்விவகாரத்தை கல்வி இராஜாங்க அமைச்சரிடம் முன்வைத்திருந்தார் என்பது முக்கிய விடயம்.

அரசாங்கம் பொறுப்பேற்பதற்கு முன்னர்

  மிஷனரிகள் மற்றும் கத்தோலிக்க ஆலயங்களின் நிர்வாகங்களின் கீழ் இயங்கி வந்த கல்வி நிறுவனங்களை அரசாங்கம் பொறுப்பேற்கும், 1961 ஆம் ஆண்டின் 8 ஆம் இலக்க சட்டத்தின் கீழ்,  (Assisted Schools & Training Colleges (Supplementary provisions) Act No 8 of 1961 –Vesting Order)  இக்கல்லூரி பொறுப்பேற்கப்பட முன்னர் சிங்கள கலவன், ஆங்கில மற்றும் தமிழ்க் கலவன்  என்ற மூன்று பிரிவுகளாக  இயங்கி வந்தது. ஆரம்பப்பிரிவில் 1 மற்றும் ௨ ஆம் தரங்கள் வரை ஆண் மாணவர்களும் கல்வி கற்று வந்தனர். பின்னரே மகளிர் கல்லூரியாக பெயர் மாற்றம் கண்டது. 1972 ஆம் ஆண்டு இப்பாடசாலை வளாகம் நில அளவை திணைக்களத்தினால் அளவீடு செய்யப்பட்ட போது தமிழ்ப்பிரிவுக்கு உரித்தான நிலையான 9 கட்டிடங்கள் இருந்ததாக புள்ளி விபரங்கள் தெளிவாகக் கூறுகின்றன. சிங்களப்பிரிவுக்கு நிரந்தரமாக இருந்த கட்டிடங்களின் எண்ணிக்கை 3 ஆகும். ஆங்கிலப்பிரிவுக்கு 4 கட்டிடங்கள். எனினும் தற்போது தமிழ்ப்பிரிவுக்கு இருக்கும் கட்டிடங்கள் எத்தனை? இதில் புதிய கட்டிடங்கள் உள்ளனவா? போன்ற கேள்விகள் முக்கியமானவை. தமிழ்ப்பிரிவுக்கு காட்டப்படும் பாரபட்சமும், அலட்சியப்போக்குகள் பற்றி மட்டுமே இங்கு பேசப்படுகின்றது. மாறாக  சிங்களப்பிரிவுக்கு அதிக வளங்கள் உள்ளமை பற்றி  இங்கு பிரஸ்தாபிக்கப்படவில்லை. அதையும் பெற்றுக்கொடுத்தது அரசியல்வாதிகளும் கல்வி அதிகாரிகளும் தான். ஆனால் அவர்கள் ஏன் தமிழ்ப்பிரிவுக்கு மாற்றாந்தாய் மனப்பான்மையோடு நடந்து கொள்கின்றனர் என்பதே இங்கு எழுந்திருக்கும் கேள்வி. இந்த கேள்விகளில் உள்ள  நியாயத்தன்மைகளைப் பற்றி வாய் மூடி மெளனமாக இருக்கும் பழைய மாணவிகள், பெற்றோர்களுக்கு நன்கு புரியும். இந்த விவகாரம் குறித்து தைரியமாக பேசக்கூடிய தமிழ் அரசியல் பிரமுகர்கள் எவரும் நுவரெலியா மாவட்டத்தில் இல்லையென்பது முக்கிய விடயம். இனி இப்பாடசாலை  தமிழ்ப்பிரிவின் எதிர்காலம் பற்றி கல்லூரி பழைய மாணவர் சங்கம் மற்றும் பெற்றோர்களுமே அக்கறை கொள்ள வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர்.   

 


Tuesday, November 23, 2021

நாட்டின் கடனை அடைப்பதற்கு தேயிலைக்கு மாற்றீடாக கஞ்சா ?


இவ்வருடம் மார்ச் மாதம் ஆங்கில வாரப்பத்திரிகையொன்று, பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமைகள் குறித்து தகவல் அறியும் சட்டம் ஊடாக எழுப்பப்பட்ட கேள்விகளை பாராளுமன்ற செயலாளர் நிராகரித்திருந்தமை குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. தகவல் அறியும் ஆணைக்குழு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் கூட , பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி பற்றி கேள்விகள் எழுப்புவது பொது நலன் சார்ந்த விடயமல்ல என்று பதில் வழங்கப்பட்டிருந்தது. அது பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட விடயம் என்றும் பதில் வழங்கப்பட்டுள்ளது.

சில உறுப்பினர்களின் நடத்தைகள், அவர்கள் கூறும் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டே எவ்வாறான தகைமை கொண்டவர்கள் நாட்டின் உயரிய சபையில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறித்து ஆராய வேண்டியேற்பட்டது. ஆனால் அந்த நிலைமை இன்னும் தொடர்வதையே சிலரின் பேச்சுக்கள் எமக்கு உணர்த்துகின்றன. அதில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி. டயானா கமகேயின் அண்மைக்கால கூற்றுக்கள் பலரை முகஞ்சுளிக்க செய்துள்ளன. எனினும் தனது கருத்திலிருந்து பின்வாங்காது மீண்டும் மீண்டும் அதையே கூறி தன்னை பேசுபொருளாக்க முயற்சி செய்கின்றாரோ தெரியவில்லை.

கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையை அதிலிருந்து மீட்க கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்ய வேண்டும் என கடந்த வாரம் அவர் பாராளுமன்றில்

உரையாற்றியிருந்தார். மேலும் இலங்கையின் பிரதான ஏற்றுமதி பயிரான தேயிலையின் பாரம்பரியம் தற்போது மறைந்து விட்டது என்றும் சீனா உட்பட பல நாடுகள் தமது நாடுகளில் தேயிலையை பயிரிட்டு வருவதால் இனியும் இலங்கையில் அதை நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்றும் பொருளாதார ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு கலாநிதி பட்டம் பெற்றவர் போன்று கருத்துக்களை முன் வைத்து வருகின்றார் அவர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பியாக அவர் தெரிவானாலும் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்ததன் காரணமாக, கட்சியின் கொள்கையை மீறியமைக்கு அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கும் படி ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. மேலும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்கியுள்ளது. எனினும் அவர் அதை எதிர்த்து உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை முக்கிய விடயம். தமக்கு ஆதரவாக செயற்பட்டமையால் அவருக்கு அரசாங்கத் தரப்பு ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்படியானவர்களை பாராளுமன்றில் பேச வைத்து உயரிய சபையை பரிகாசத்துக்குள்ளாக்கும் நிலைமை பற்றி அரசாங்கம் யோசிப்பதில்லை. இதே டயானா கமகே தான் இவ்வருடம் ஏப்ரல் மாதம் இணையமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது எமது நாட்டில் பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்றும் இலங்கையை தாய்லாந்து போன்று மாற்றியமைத்து இரவு நேர வாழ்க்கை முறை மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நடைமுறைகளை அமுல்படுத்த பெளத்த தர்மமும் கலாசாரமுமே தடையாகஇருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாய்லாந்து ஒரு பெரிய பெளத்த நாடு என்றும் அங்கு இவ்வாறு இருக்கையில் இங்கு ஏன் அப்படி இருக்க முடியாது என்று யாருக்கும் பதில் கூற முடியாத ஒரு அறிவுபூர்வமான கேள்வியை எழுப்பியிருந்தார். இத்தனைக்கும் அவரும் ஒரு பெளத்தர் தான். ஆனால் கடந்த வாரம் அவர் கஞ்சா பயிர் வளர்த்து ஏற்றுமதி செய்வதை சட்டமாக்குவதற்கும் அது தேயிலையின் மாற்றீடாக இருக்கும் என்பதற்கும் கூறிய விளக்கங்கள் முக்கியமானவை. அதாவது நாட்டின் கடனை அடைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் போன்று அமைப்புகளிடம் கையேந்தி யாசகம் எடுக்கத் தேவையில்லை என்றும் கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்தால் 3 வருடங்களில் நாட்டின் கடனை அடைத்து விடலாம் என்றும் குறிப்பிட்ட அவர் தேயிலையை இனி வணிக பயிராக ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இயற்கையினாலும் கடவுளினாலும் நாம் கஞ்சா செடிகளை ஆசிர்வாதமாகப் பெற்றிருக்கிறோம். 1800 களில் பிரித்தானியரால் கொண்டு வரப்பட்ட கஞ்சா பயிர் தொடர்பான சட்டங்களை இரத்து செய்ய வேண்டும். அதை இலங்கையில் சட்டபூர்வமாக்க நீதி அமைச்சர் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரையும் செய்கிறார்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் பாராளுமன்றில் டயானா கமகே எம்.பி இதே விவகாரத்தை பேசியிருந்தார். எனினும் தற்போது பெருந்தோட்ட பயிரான தேயிலைக்கு மாற்றீடாக அவர் கஞ்சா பயிர்ச்செய்கையை சுட்டிக்காட்டியிருப்பது சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை விட கஞ்சா பயிரை ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் வருமானத்தைப் பற்றியும் புள்ளி விபரமாகக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் (EIB) கணிப்புகளை எல்லாம் இவர் உதாரணம் காட்டுகின்றார். அடுத்த பத்து வருடங்களில் உலகளாவிய ரீதியில் கஞ்சாவின் சந்தை பங்கு ஆயிரம் வீதம் அதிகரிக்கும் என்றும் 2027 இல் அது 140 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தைப் பெறுமதியை பெற்றிருக்கும் என்றும் கூறுகிறார்.

கஞ்சாவை ஒரு மருத்துவ பொருளாக ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. ஏனென்றால் உலகில் அதை மருத்துவ மூலிகையாக பாவிப்பதை விட போதை பொருளாக பாவிப்பதே அதிகம். இதன் பிரதான மூன்று வகைகளே இன்று உலகெங்கும் பாவிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்ப காலத்தில் நாருக்காகவும் வித்து உற்பத்திக்காகவுமே இவை பயன்படுத்தப்பட்டன. எனினும் இதன் தாவர குடும்பத்தில் அதிபோதையூட்டும் வகைகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே இதை ஒரு போதை தாவரமாக உலகமே பார்க்கின்றது.

இன்று போதை பொருளை உற்பத்தி செய்வதில் முதலிடத்திலிருக்கும் ஆப்கானிஸ்தானின் நிலைமைகள் பற்றி ஒன்றும் கூறத்தேவையில்லை. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி வருமானமானது அபின் ,மோபைன், ஹாசிஸ் போன்ற போதை பொருட்கள் மூலமே கிடைக்கின்றமை பகிரங்க உண்மை. அங்கு அபின் தோட்டங்களை இங்குள்ள காய்கறி தோட்டங்கள் போன்று எங்கும் காணலாம். அச்செய்கையிலேயே கவனம் செலுத்தியதால் அங்கு தொழில்சார் பயிற்சியில்லாது உருவாகிய இளம் சமூகத்தினரின் எண்ணிக்கை மட்டும் 30 இலட்சத்துக்கும் அதிகமாகும். மிகவும் விலை கூடியதும் அதிக போதையை தருவதுமான அபினை தரும் ஓபியம் செடியை வளர்ப்பதிலேயே அந்நாட்டின் ஒரு தலைமுறை சீரழிந்து விட்டது. இதிலிருந்தே ஹெரோயின் உள்ளிட்ட வேறு போதை பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இன்று ஆப்கானை கைப்பற்றியிருக்கும் தலிபான்களின் வருமானம் இதிலேயே தங்கியுள்ளது.

ஆப்கானை போன்று ஒரு நிலைமையை இலங்கைக்கும் ஏற்படுத்த முயற்சிசெய்கின்றாரோ டயானா என்று கேட்கத்தோன்றுகின்றது. எனினும் ஆப்கானையும் இலங்கையையும் எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது. எந்த சந்தர்ப்பத்திலும் மலையக பிரதேசங்களுக்கு விஜயம் செய்திராத டயானா போன்றவர்கள் இவ்வாறு வாய்க்கு வந்தபடி பிதற்றுவதும் பொருளாதார நிபுணர்கள் போன்று நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு நகைப்புக்கிடமான கருத்துக்களை பாராளுமன்றில் கூறுவதும் புதிய விடயங்கள் அல்ல. ஆனால் சுதந்திரத்துக்கும் முன்னரும் பின்னரும்., இது வரையிலும் கூட நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரதன்மையோடு முன்னேற காரணம் தேயிலை ஏற்றுமதி மூலம் நாட்டுக்குக் கிடைத்த வருமானம் தான். அப்பொருளாதாரத்தை பெற்றுத்தந்த தேயிலை பயிர்ச்செய்கையை இவ்வாறு விமர்சனம் செய்வதை அத்தொழிலோடு இணைந்துள்ள சமூகத்தின் வாக்குகளைப் பெற்று வந்தவர்கள் கேட்டு மெளனம் காப்பதே இங்கு கொடுமையானது. நாடு செல்லும் நிலைமையைப் பார்த்தால், ‘சிலோன் டீ’ என்ற வர்த்தக நாமம் மாறி ‘சிலோன் கஞ்சா’ என்ற விடயத்தை ஊக்குவிக்கும் நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Monday, November 22, 2021

ஏமாற்றங்களுடன் வாழப்பழகுதல்…!

 ஒவ்வொரு அரசாங்கத்தினதும் வரவு செலவு திட்டங்களில், பெருந்தோட்ட சமூகம் மற்றும் அவர்களின் பிரதேச அபிவிருத்தி பற்றி கூறப்படும் விடயங்கள்  முன்மொழிவுகளாக மட்டுமே இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏனென்றால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரச சேவையாளர்களாவும்  இல்லாது தனியார் துறையையும் சாராது வேறுபட்டு நிற்கும் ஒரு பிரிவினர்,  அல்லது ஒதுக்கி வைக்கப்பட்ட   ஒரு சமூகத்தினர் என்று கூறலாம்.

நாட்டின் தேசிய வருமானத்துக்கு, சுதந்திரத்துக்கு முன்பும்  அதற்கு பின்னரும்   தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வரும் மக்கள் கூட்டம்  என பெருமையாக பேசுபவர்கள், சுதந்திரத்துக்கு முன்பு இருந்த நிலையிலேயே அவர்களது வாழ்க்கையும் வசிப்பிட உட்கட்டமைப்பும்  தற்போதும்  உள்ளது என்பது குறித்து பேச மாட்டர்.

அந்த வகையில்  2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்  பற்றியும் அதில் பெருந்தோட்ட  பிரதேசங்கள் மற்றும் அங்கு வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு என்ன வரப்பிரசாதங்கள் முன்மொழியப்பட்டன என்பது குறித்தும்  கட்டுரை எழுதுமளவுக்கு ஒன்றுமில்லை.  என்றாலும் இதற்கு முன்பும் இவ்வாறு வரவு செலவு திட்டத்தில் இம்மக்களுக்காக முன்மொழியப்பட்டவையும்  அப்படியே கிடப்பில் போட்டவையாகவே உள்ளன என்பதை உரிய தரப்புக்கு ஞாபகமூட்டுதல் அவசியமல்லவா?

மட்டுமல்லாது ஏனைய சமூகங்களுக்கும், அவர்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களுக்கும்,  அமைச்சுக்களுக்கும்  முன்மொழியப்பட்ட விடயங்களை சீர்தூக்கி பார்த்தாலாவது பெருந்தோட்ட சமூகம் எந்தளவுக்கு ஒரங்கட்டப்பட்டுள்ளது  என்பதை அந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதிநிதிகள், வரவு செலவு திட்ட விவாதங்களின் போது   கதைப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டப்பகுதி வீடுகள் அபிவிருத்திக்கு 500 மில்லியன் (ரூ50 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி 3 வருடங்களுக்குள் லயன் வீடுகளை இல்லாதொழிக்கும் ஒரு செயற்பாட்டுக்காகவே இத்.தொகை ஒதுக்கப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது மிகவும் நகைப்புக்குரியதாகவும் பெருந்தோட்டப்பகுதி குடியிருப்புகள் பற்றிய பூரணமான எந்தவொரு தெளிவுமின்றிய முன்மொழிவாகவே உள்ளது.

ஏனென்றால் ஊவா , மத்திய,சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வரையிலான லயன் குடியிருப்புகள் இன்னமும் உள.  இவற்றை  எங்ஙனம் 3 வருடங்களுக்குள் இல்லாமலாக்குவது ? மட்டுமின்றி 50 கோடி ரூபாயில் எத்தனை வீடுகள் அமைக்க முடியும்?  இப்போது நிதி அமைச்சராக விளங்கும் பஸில் ராஜபக்சவின் சகோதரர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும்  இருந்த போது,  2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவில் பெருந்தோட்டப்பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் என்றார். அந்நேரம் மலையகம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள ஒரு அமைச்சுப் பொறுப்பை கொண்டிருந்தது.

ஆனாலும்  2015 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்ட உரையை நிதி அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த போது, அது வரை  பெருந்தோட்டப்பகுதிகளில் ஒரு வீட்டுத்தொகுதி கூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அது குறித்து அவருக்கு ஆதரவு வழங்கிய இ.தொ.கா,   வாய் திறந்து ஒன்றுமே கேட்கவில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத்துறை சமூகம் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் கிராமப்புற வீடுகள் அபிவிருத்திக்கு முன்மொழியப்பட்டுள்ள தொகை. இதற்காக 5 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு நிலம் சொந்தமாகவுள்ளது. அந்த உரிமை ஒன்றே அவர்களுக்கு கிடைத்துள்ள பெரும் வரப்பிரசாதம். இங்கு நிலவுரிமையும் வீடுகளும் இல்லாதவர்களுக்கு  பிய்த்து கொடுத்தாற்போன்று 500 மில்லியன் ரூபாய் மட்டுமே ..! தற்போதுள்ள  வாழ்க்கைச்செலவு, கட்டுமான பொருட்களின் விலையேற்றத்துக்கு மத்தியில்  இத்தொகையில் அதிகபட்சமாக 350 வீடுகள் வரை மட்டுமே அமைக்க முடியும். பிறகு எப்படி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட லயன் குடியிருப்புகளை  3 வருடங்களில் ஒழிப்பது?

மட்டுமின்றி வனப்பாதுகாப்புக்குக் கூட 2 ஆயிரம் மில்லியனும் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய 3 ஆயிரம் மில்லியனும் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா தொற்று காலத்திலும் நாள் முழுக்க பணியாற்றி, சம்பள விடயத்தில் ஏமாற்றப்பட்டு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக நாட் சம்பளத்தைப் பெற்று வரும் தொழிலாளர்  சமூகத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள தொகை  வெறும் 50 கோடி ரூபாய் மட்டுமே !

முழுக்க முழுக்க பெரும்பான்மையினர் வாழ்ந்து வரும் கிராமப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகளை தாங்கி, அவர்களை விட கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கும் தோட்டத்தொழிலாளர்களை முழுமையாக புறக்கணித்து இந்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. ஏனென்றால் ஏற்கனவே இரசாயன பசளை விவகாரத்தில் கிராமப்புற விவசாயிகளின் கடுஞ் சீற்றத்துக்குள்ளாகியிருக்கும் அரசாங்கம், அவர்களை ஓரளவுக்குச் சரி திருப்திபடுத்துவதற்கு கிராமப்புற அபிவிருத்தி என்ற பெயரில் ‘ கிராமப்புற வாழ்வாதார அபிவிருத்திக்கு 19 ஆயிரம் மில்லியன்களும், கிராமப்புற அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் தனியாக 42 ஆயிரம் மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது.

வரவு செலவு திட்டங்களின் முன்மொழிவுகளை வைத்துக்கொண்டு இங்கு எவரும் கனவு காண முடியாது. ஏனென்றால் முன்மொழிவுகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. நிறைவேற்றியே தீர வேண்டும் என குறித்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அழுத்தம் கொடுக்கவும் முடியாது. ஏனென்றால் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் சில வேளைகளில் இல்லாமல் போகலாம் அல்லது பறிக்கப்படலாம். அதையும் மீறி அமைச்சரவையில் குரல் எழுப்புவதற்கு மலையக சமூகத்துக்கு அமைச்சரவை அந்தஸ்த்தும் கிடையாது.

எது எப்படியானாலும் இவ்வாறான சம்பவங்கள் தோட்டத்தொழிலாளர்களை இனியும் பாதிக்கப்போவதில்லை. ஒன்றரை நூற்றாண்டுகளாக பல விதத்திலும் ஏமாற்றப்பட்டே வாழ்க்கையை நகர்த்தி வரும் அவர்கள் ஏமாற்றங்களுடன் வாழ  பழகி  விட்டனர் என்றே கூற வேண்டும்.     

 

 


Monday, October 25, 2021

புத்தர் பரிநிர்வாணமடைந்த நகரமும் பகவத் கீதையும்....!

 

உத்தரபிரதேசத்தின் குஷிநகரில் சர்வதேச விமான நிலைய திறப்பு விழாவுக்கு முதன் முதலாகச் சென்று  தரையிறங்கியவர்கள்   என்ற பெருமையை எமது  நாட்டின் அமைச்சர் நாமலும் அவரோடு சென்ற சுமார் 100 பௌத்த பிக்குகளும் பெற்றிருக்கின்றனர். இந்த பயணத்தில் தமிழ்ப்பிரதிநிதியாக நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் இ.தொ.கா பொதுச்செயலாளரும் இராஜாங்க அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் கலந்து கொண்டிருக்கிறார்.

உத்தர பிரதேசத்திலமைந்த குஷி நகர் ஆனது அனைத்துலக பௌத்தர்களின் (  பௌத்த சிங்களவர்களினது மட்டுமல்ல) புனித தலமாக விளங்குகின்றது.  பௌத்த கோட்பாட்டை உருவாக்கிய சித்தார்த்த கௌதமர், பிறந்த இடம் நேபாள நாட்டின் லும்பினி எனும் இடமாகும். பின்பு ஞானம் பெற்று புத்தர் ஆன பிறகு தனது 80 ஆவது வயதில் அவர் பரிநிர்வாணம் அடைந்த நகரமே உத்தர பிரதேசத்தின் குஷி நகரம்.

அங்கு அமைக்கப்பட்ட விமான நிலையத்தின் திறப்பு விழாவுக்கே இலங்கையிலிருந்து சுமார் 110 பேர் விசேட விமானத்தில் சென்றிருந்தனர். இவ் விமான நிலையத்தை கடந்த 20 ஆம் திகதி  இந்திய பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைத்தார்.  குஷி நகரத்தின் சிறப்புகள் என்னவென்றால் புத்தர் பரிநிர்வாணம் அடைந்த  கோவில், அவரது உடல் தகனம் செய்யப்பட்ட இடம், அவரது அஸ்தி பாதுகாக்கப்படும் பகுதி என முக்கியமான அம்சங்கள் உள்ளன.  புத்தர் பிறந்த நேபாள நாட்டின் எல்லைப்புறத்தின் மிக அருகே இந்த நகர் அமைந்துள்ள அதே நேரம்  இராமர் பிறந்ததாக கூறப்படும் அயோத்யா நகரமும் அருகிலேயே உள்ளது.

மட்டுமின்றி இந்த உத்தரபிரதேசமானது  நாட்டின் மிகப்பெரிய மாநிலமாகும். முதல்வராக இருப்பவர் யோகி ஆதித்யநாத் என்ற துறவியாவார்.

இந்த நிகழ்வில் இலங்கை நாட்டின் பிரதிநிதியாக கலந்து கொண்ட அமைச்சர் நாமல் இந்திய பிரதமர் மோடிக்கு மும்மொழி பகவத் கீதை நூலை அன்பளிப்பாக வழங்கினார். இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையே 2500 வருடங்களாக காணப்படும் நட்புறவின் அடையாளமாகவும் பாரத தேசம் இந்த உலகிற்கு தந்த மிக புனிதமான நூாலாகவும் விளங்கும் பகவத் கீதை மும்மொழி வெளியீட்டின் முதற் பிரதியாகவும் இந்த பகவத் கீதை நூல் வழங்கப்பட்டதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது முகநூலில் தெரிவித்துள்ளார்.

 பாரத தேசம் தந்த பகவத் கீதையானது சிங்கள மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட முதலாவது சந்தர்ப்பமாக இது இருக்கலாம். ஆனால் அது உலகெங்கினும் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குருஷேத்திர போரின் போது தனது எதிரணியில் உறவினர்களையும் , வித்தைகள் கற்றுக்கொடுத்த ஆசிரியர்களையும் எதிர்ப்பதா என அருச்சுணன் மனங்கலங்கி நின்றபோது அவனது தேரோட்டியாக செயற்பட்ட கிருஷ்ணன் வாழ்க்கையின் தத்துவங்களை உபதேசமாக கூறி அருச்சுணனை தேற்றி போருக்கு தயார்ப்படுத்துவதே கீதா உபதேசமாக விளங்குகின்றது. மகாபாரதம் ஏராளமான உபகதைகளையும் சம்பவங்களையும் கொண்ட ஒரு திரட்டு. அதில் யுத்த களத்தில் அருச்சுணனுக்கு கிருஷ்ணன் உபதேசிக்கும் சம்பவமே கீதாஉபதேசமாகியது.

'தர்மத்தை நிலைநாட்டவும் அதர்மத்தை எதிர்க்கவும் சூழ்நிலைகள் தோன்றும் போது   உறவினர், நண்பர், குரு என்றெல்லாம் பார்ப்பது நியாயமில்லை. நீ உனது கடமையையே செய்கிறாய் ' என்கிறார் கிருஷ்ணர்.

ஆனால் குருஷேத்திர போர் உருவாக பின்னணி காரணம் என்ன என்று கேட்டால்  அது மண்ணாசை பெண்ணாசை பொன்னாசை என மிக சுருக்கமாக மூன்று விடயங்களை மாத்திரமே கூறுவர் ஆன்றோர். ஆகவே கௌதம புத்தர் பரிநிர்வாணம் அடைந்த குஷிநகரில் இந்த நூலை அமைச்சர் நாமல் வழங்கியதற்கும் புத்தருக்கும் தொடர்புகள் இருக்கின்றன. ஏனென்றால் இளவரசராக இருந்த அவரும் அற்ப ஆசைகளை வெறுத்து ஒதுக்கி  ராஜபோக வாழ்க்கையை தவிர்த்து துறவறம் பூண்டார். ஆனால் தன்னைப் போன்று அனைவரும் செயற்பட வேண்டும் என்று கூறவில்லை. ராஜபோகத்தை வெறுத்து ஒதுக்கி வந்ததால் தான் பல தத்துவங்களை அவரால் கூற முடிந்தது.   அளவிற்கு அதிகமான ஆசையே துன்பத்துக்கு காரணம் என்ற ஞானத்தையே புத்தர் பெற்றார்.

உத்தர பிரதேச மாநிலத்திலமைந்த குஷி நகருக்கு உலகெங்கினும் பௌத்த மதத்தை பின்பற்றுவோர் வந்து செல்கின்றனர். அந்த நாடுகளுடன்  ஒப்பிடும் போது, பௌத்த மதத்தை பின்பற்றும் குறைவானவர்களை கொண்ட நாடாகவே இலங்கை விளங்குகின்றது. ஆனால் புத்தர் பிறந்தவுடனேயே  இந்திய -இலங்கை தொடர்புகள் உருவானதென்றும்  அதற்கும் முன்னர் இரு நாடுகளுக்குமிடையில் எந்த தொடர்புகளுமே இல்லை என்ற அடிப்படையிலேயே தவறான கருத்தியல்கள் இப்போதும்  முன் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் இந்த சம்பவமும் ஒன்று.

  அதைத்தான் ஜனாதிபதியும் இந்தியாவுக்கும் இலங்கைக்குமிடையிலான 2500 வருட தொடர்புகள் என்று அழுத்தி கூறுகிறார். பகவத் கீதையை தந்த பாரத தேசம் தான் இராமாயணத்தையும் தந்தது. ஆனால் இராமாயணம் இலங்கையோடு மிகவும் தொடர்புடைய காவியம்.  இராமாயண சம்பவங்களோடு தொடர்புடைய பல இடங்கள் இலங்கையில் இருக்கின்றன. எனினும் இங்குள்ள கடும்போக்கு சிங்கள பௌத்த பிக்குகள் இராமரை, அந்நிய தேசத்திலிருந்து இலங்கைக்கு  படையெடுத்து வந்த ஒரு சக்தியாக பார்க்கும் அதே வேளை இலங்கையை மீட்க போராடி உயிர்நீத்த மன்னராகவும் மண்ணின் மைந்தனாகவும்  இராவணனை போற்றுகின்றனர். அதன் விளைவாகவே இராவண பல சேனா போன்ற அமைப்புகளும் தோற்றம் பெற்றன.

கூறப்போனால் இராமாயணம் மகாபாரதத்துக்கு முந்தியது என்றே கூற வேண்டும். ஏனென்றால் மகாபாரதத்தின் 18 காண்டங்களில் மூன்றாவது காண்டமான ஆரண்ய காண்டத்தில், அதாவது பாண்டவர்களின் வனவாச காலத்தில், மார்க்கண்டேய முனிவர் இராமாயண நிகழ்வுகளை தருமனுக்கு எடுத்துரைக்கின்றார் என்பது முக்கிய விடயம். ஆனால் மகாபாரதத்துக்கும் இலங்கைக்கும் தொடர்புகள் இருக்கின்றதா இல்லையா என்பதை கூற முடியாதுள்ளது. அல்லது உறுதியான வரலாற்று தகவல்கள் இல்லை. ஆகையால் தான் அது மும்மொழிகளிலும் மொழி பெயர்க்கப்பட்டுள்ளதோ தெரியவில்லை.

  இது வரை ஏன் கம்பராமாயணம் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்படவில்லையென எவரும் கேள்வி கேட்க முடியாது. ஏனென்றால் புத்தர் பிறப்பதற்கு முன்னரே இராமர் இலங்கை வந்து சென்று விட்டாரா ? இராவணன் என்ற தமிழ் மன்னன் ,சிவபக்தன் இலங்காபுரியை ஆண்டானா என கடும்போக்குவாதிகள் கேள்வி கேட்க ஆரம்பித்து விடுவர்.

எது எப்படியானாலும் இங்கு வாழ்ந்து வரும் பௌத்த சிங்கள மக்களினதும் அவர்களின் மனவோட்டத்தை புரிந்து அரசியல் செய்யும் பிரதான கட்சிகளினதும் நிலைப்பாடு என்னவென்றால் கௌதம புத்தர் பிறந்து பிறகே இலங்கைக்கும் இந்தியாவுக்கும் தொடர்பு ஏற்பட்டது என்பதாகும். இதன் காரணமாகவே அவர் பிறந்த தினமான புத்த பூர்ணிமா அல்லது புத்த ஜெயந்தியை இலங்கை வாழ் மக்கள்  தமது வரலாற்றின் தினமாக கொண்டாடுகின்றனர்.

அதே போன்று இலங்கை வரலாறு என்பது மகாவம்சத்திலிருந்தே ஆரம்பிக்கின்றது என கடும்போக்கு வரலாற்று ஆராய்ச்சியாளர்களும் இன்று வரை கூறி வருகின்றனர். அதற்கு முன்பு இங்கிருந்த அரசியல், கலாசார ,பண்பாட்டு விடயங்கள் பற்றிய ஆய்வு அவர்களுக்கு முக்கியமில்லை. தேவையுமில்லை.

இப்போது குஷிநகர் என்பது இலங்கையுடன் மிகவும் தொடர்புடைய நகரமாக மாறி விட்டது. புத்தர் பரிநிர்வாணம் அடைந்த நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ள சர்வதேச விமான நிலைய ஓடுதளத்தை,  முதன் முதலில் முத்தமிட்டது  இலங்கை விமானம் என்றும் வந்திறங்கியவர்கள் இலங்கை பௌத்த சிங்கள மக்கள் என்றும் வரலாற்று ஏடுகளில் பதியப்படப்போகின்றன. 

அடுத்ததாக இதே உத்தரபிரதேச மாநிலத்தின் அயோத்தி நகரில் இராமர் ஆலயம் உருவாகி வருகின்றது.  இராமாயண காலத்தையும் இலங்கையுடனான தொடர்பையும் நினைவு கூருவதற்கும் சில மாதங்களுக்கு முன்பு நுவரெலியா சீதையம்மன் ஆலயத்திலிருந்து பூஜிக்கப்பட்ட கல் ஒன்று அயோத்தி இராமர் ஆலய கட்டுமானத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளது.   அயோத்தி இராமர் ஆலயப் பணிகள் பூர்த்தியாகியவுடன் அந்நிகழ்வில் பங்கேற்பதற்காக உத்தர பிரதேசம் அயோத்தி நகருக்கு யார் இலங்கையிலிருந்து செல்லப்போகின்றார்கள், மற்றும்  பிரதமர் மோடிக்கு என்ன புத்தகத்தை கையளிக்கப்போகின்றார்கள் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

 

Tuesday, October 19, 2021

எதிர்ப்பலைகளை தடுத்தாடும் கலை…!


 

அத்தியாவசிய பொருட்களின்   நிர்ணய விலை கட்டுப்பாட்டை நீக்கியதால் கடந்த வாரம் பல உணவு பொருட்கள் உட்பட அதைச் சார்ந்த ஏனைய பொருட்களும் சமையல் எரிவாயுவும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் விலை அதிகரிப்பை கண்டிருந்தன. நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்சகூறுகிறார். மத்திய வங்கி ஆளுநரோ 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுகடன்களாக 11.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளோம், கையிருப்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கின்றன என்கிறார்.

மட்டுமின்றி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8 ஆக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கு 5 சதவீதமாக எதிர்ப்பார்க்கப்படும் அதே வேளை அடுத்த ஆண்டில் 6 இலிருந்து 6.5 வீத வளர்ச்சியை அடைய முடியும் என்கிறார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை,ஆனால் வர்த்தகர்கள் முன்வைத்த விலைபட்டியலை விட குறைந்த அளவில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவே அரசாங்கம் அனுமதியளித்துள்ளது என வழமையான தனது சமாளிப்பு கதையை கூறுகிறார் வர்த்தக அமைச்சர் பந்துல. மறுபக்கம் வெள்ளைப்பூண்டு சர்ச்சையில் பல சதோச அதிகாரிகள் கைதாகி வருகின்றனர். இதற்கும் தனக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை என்று கூறி வரும் வர்த்தக அமைச்சர்,உண்மையான கள்வர்களின் முகத்திரையை அகற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டால் மாத்திரமே நம்பப்படுவார்.

சில முக்கியமான அத்தியாவசிய பொருட்களின் நிர்ண விலை கட்டுப்பாட்டை நீக்கியதால் வர்த்தகர்களும் நிறுவனங்களும் தமதிஷ்டப்படியே விலை அதிகரிப்பை மேற்கொண்டிருந்தன. அரசாங்கத்துக்குத் தெரியாமல் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்ட பொருட்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

அரசாங்கத் தரப்பு அமைச்சர்கள் கூறும் விளக்கங்கள் ஒரு பக்கமிருக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைகள் பற்றியும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தனது கொள்கையை வலியுறுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிகழ்வு பூர்த்தியின் போது உரையாற்றியிருந்தார்.

நாடு இப்போதிருக்கும் நிலைமையில் புதிய அரசியலமைப்போ அல்லது தேர்தல் முறை மாற்றங்களோ பொருளாதார நெருக்கடியை தீர்க்கப்போவதில்லை. இப்போது நாட்டுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயற்படுதலே அரசாங்கத்துக்கு அழகு. இருப்பினும் தனக்கு வாக்களித்த பெளத்த சிங்கள மக்களை எப்படியாவது திருப்திபடுத்த வேண்டிய நோக்கத்திலேயே ஜனாதிபதி இருக்கின்றார்.

நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக என்ன எதிர்ப்பலைகள் உருவாகினாலும் அதை இலாவகமாக சமாளித்து மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி சாமர்த்தியமாக காய்கள் நகர்த்தும் திறனை ஜனாதிபதி கொண்டிருக்கின்றார். அவர் ஒரு பாரம்பரிய அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் தற்போது அந்த வித்தையை நன்கு கற்று வரும் ஒருவராக விளங்குகின்றார் என்றால் மிகையாகாது.

அதற்கு உதாரணமாக புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை குறித்து 9 ஆம் திகதி தனது முகநூல் பக்கம் அவர் தெரிவித்திருந்த விடயம் முக்கியமானது.

“நேற்று மாலை, ருவன்வெலிசாயவை வழிபட நான் சென்றிருந்தேன். அங்கு நான் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது - இளம் வயது பிக்கு ஒருவரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கேட்டார், ஜனாதிபதி அவர்களே, ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதாகக் கூறினீர்களே. அதனை நாம் மிகவும் எதிர்பார்த்திருக்கிறோம்  என்று.

இந்த வருட இறுதிக்குள் அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். அத்தோடு  அன்று நான் உறுதியளித்தவாறு, புதிய அரசமைப்பு ஒன்றைஉருவாக்குவதற்கும், அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன்.மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்.

 இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த கதையில் ஏன் பிக்கு வந்தார் என்பதைப் பற்றி புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் வராவிட்டால் தான் ஆச்சரியம். நாட்டின் தற்போதைய பல பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஒரு இளம் பிக்கு ஜனாதிபதியிடம் ஒரே நாடு ஒரே சட்டம் பற்றி கேள்வி எழுப்புகிறார். ஏற்கனவே இருக்கும் அரசியலமைப்பும் இந்த நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்து இன மக்களும் சமாதானத்தோடும் செளஜன்யத்தோடும் வாழும் பொதுநலத்தோடு உருவாக்கப்பட்டிருந்தால், இன்று அது 20 திருத்தங்களை கண்டிருக்காது. மட்டுமின்றி புதிய ஒரு அரசியலமைப்பு பற்றிய பேச்சுக்கும் அது இடமளித்திருக்காது. பல்லின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய எல்லா நாடுகளினதும் அரசியலமைப்பும் யாராவது ஒரு சாராரின் சுயலநலத்துக்காகத்தான் தான் உருவாக்கப்படுகின்றது.

அதே போன்று பல்லின மக்களில் சிறுபான்மையினத்தவர்களின் பிரதிநிதித்துவத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்தி வைத்திருக்கவே தேர்தல் முறை மாற்றம் பற்றி பேசப்படுகின்றது. அல்லது சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு நசுக்கப்படுகின்றன. இதை பகிரங்கமாக இந்த நாட்டின் பார்த்து அனுபவித்தவர்கள் இந்திய வம்சாவளி மலையக மக்கள். இம்மக்களின் சனத்தொகைக்கேற்பவும் அப்போதைய தேர்தல் முறையின் அடிப்படையிலும் இந்த சமூக மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றில்அதிகரித்து விடும் என்ற அச்சம் காரணமாகவே சுதந்திரம் கிடைத்த 1948 ஆம் ஆண்டில் ,இம்மக்களின் வாக்குரிமையும் குடியுரிமையும் ஐ.தே.கவால் பறிக்கப்பட்டன.

தற்போதைய ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்த பல்வேறு பிரயத்தனங்களை எடுத்து பெளத்த சிந்தனைகளை பெரும்பான்மை மக்களின் மனதில் பதிய வைக்க செயற்பட்ட முருத்தட்டுவே ஆனந்த தேரர் மற்றும் ஒமல்பே சோபித தேரர் ஆகியோர், அண்மைக்காலமாக ஜனாதிபதியை பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விலை அதிகரிப்பு விவகாரத்தில் சில வர்த்தகர்கள் ஜனாதிபதியை மண்டியிட வைத்து விட்டனர் என்றும் இந்நாட்டில் தீர்மானங்களை எடுக்கும் சக்தியாக அரசாங்கம் இல்லையென்றும் முருத்தட்டுவே ஆனந்த தேரர் கூறுகிறார். மிதமிஞ்சிய அதிகாரங்கள் இப்போதுள்ள ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவரால் உறுதியான தீர்மானம் ஒன்றை நாட்டு மக்கள் நலன் தொடர்பாக எடுக்க முடியாதுள்ளது என ஒமல்பே சோபித தேரர் கூறியிருக்கிறார்.

ஆனால் இதற்கெல்லாம் சளைத்தவரா ஜனாதிபதி? ஆகையால் தான் ருவன்வெலிசாயவை வழிபட சென்ற இடத்தில் ஒரு இளம் பிக்குவை வைத்தே புதியஅரசியலமைப்பு மற்றும் தேர்தல் மாற்றம் பற்றிய கதையை கூறியிருக்கிறார். அவரது இந்த தமிழ் முகநூல் பதிவுக்கு பின்னூட்டங்களை வழங்கியிருந்த நாட்டு மக்கள் அனைவருமே பொருட்களின் விலை அதிகரிப்பு, நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழல் உட்பட பல விடயங்களை சுட்டிக்காட்டி கிண்டலும் கேலியுமாக பதிவிட்டிருந்தனர். ஜனாதிபதியான புதிதில் அவரது பதிவுக்கு மிக நம்பிக்கையான பதிவுகளையும் வாழ்த்துக்களையும் அள்ளி தந்த மக்களின் தற்போதைய நிலைமாற்றத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இலங்கையின் 72ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு - அநுராதபுரம், சாலியபுர, கஜபா படையணி தலைமையகத்தில் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கு கிரிக்கட்டும் விளையாடினார். துடுப்பாட்டத்தின் போது தனக்கு வீசப்பட்ட பந்தை சிறப்பாக தடுத்தாடினார். அவர் எப்போதும் கிரிக்கெட் விளையாடிய ஒருவராக இருந்திருக்க மாட்டார். எனினும் அவரது துடுப்பாட்டம் சிறப்பானதொன்றாக இருந்தது. தனது ஆட்சிக்கு எதிராக வீசப்படும் எந்த எதிர்ப்பையும் சிறப்பாக தடுப்பதில் வல்லவர் என்பதை எதிரணியினருக்கு காட்டுவதற்கு அவர் அவ்வாறு செயற்பட்டாரா என்பது தெரியவில்லை. எனினும் நாட்டின் தற்போதைய மோசமான நிலைமையை ஏற்றுக்கொண்டதாகவே அவரது அன்றைய உரை அமைந்திருந்தது. என்மீதும் எமது அரசாங்கத்தின் மீதும் மக்கள் வெறுப்படைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக கூறிய அவர் அமைச்சர்களும் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் எனினும் அரசியல்வாதி அல்லாத ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் இருப்பது பெருமை என்றும் கூறியிருந்தமை முக்கியவிடயம். நாட்டின் பல முக்கிய பொறுப்புகள் கூடுதலாக இராணுவ தரப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அரசியல்வாதி அல்லாத இராணுவ அதிகாரி ஒருவர் ஜனாதிபதியானால் ஆட்சி இப்படித்தான் இருக்கும் என்பதையும் தனது உரையின் மூலம்
நாட்டு மக்கள் விளங்கிக்கொண்டிருப்பர் என்பதை அவர் மறந்து போனார் போலும் !

Monday, October 11, 2021

இராணுவ பிரசன்னத்தை கோருவதன் மூலம் தொழிலாளர்களை தீவிரவாதிகளாக சித்திரிக்க முயற்சியா?

 


பெருந்தோட்டப்பகுதிகளில் ஆயிரம் ரூபாய் நாட்சம்பளமானது சம்பள நிர்ணய சபையின் ஊடாக வழங்கப்பட்ட காலத்திலிருந்து, தொழிலாளர்களுக்கும் தோட்ட நிர்வாகங்களுக்கும் முரண்பாடுகள் அதிகரித்து தற்போது உச்ச நிலையை எட்டியுள்ளன.

தோட்ட முகாமையாளர்கள், சேவையாளர்களுக்கும் தோட்டத்தொழிலாளர்களுக்குமிடையிலான இந்த சம்பள முரண்பாடுகள், வாய்த் தர்க்கத்தில் ஆரம்பித்து  கைகலப்புகள் வரை சென்று பின்பு பொலிஸ் முறைப்பாடு, கைதுகள், தடுத்து வைப்பு, வழக்கு விசாரணை என தொடர்கின்றன.

ஆனால் தொழிற்சங்கங்களோ அரசாங்கமோ இவற்றை கண்டு கொள்வதில்லை. ஆயிரம் ரூபாய் பிரச்சினை தீர்ந்து விட்டது என  இருதரப்பினரும் மறுபக்கம் முகத்தை திருப்பி வைத்துக்கொண்டு சம்பவங்களை கண்டும் காணாதது போன்றும் கடந்து செல்கின்றனர். நீதிமன்றில் வழக்கு இருப்பதை காரணம் காட்டியே இவர்களின் மெளனமும் அலட்சியம் தொடந்தாலும் மறுபக்கம் தொழிலாளர்களின் தொழில் மற்றும் அடிப்படை உரிமைகள் என்ற விடயத்தை பிரதானமாக வைத்தாவது ஏதாவது பேசப்படுகின்றதா என்றால் அதுவும் இல்லை.

சில வாரங்களுக்கு முன்பு தலவாக்கலை பிரதேச கட்டுக்கலை தோட்டத்தில் இடம்பெற்ற சம்பவத்துக்கு அடிப்படை காரணமே இந்த சம்பள  விவகாரமேயாகும். 20 கிலோ கொழுந்து பறித்தால் மட்டுமே ஆயிரம் ரூபாய் நாட்சம்பளம் வழங்கப்படுகின்றது. அதற்கு ஒரு கிலோ குறைவாக இருந்தால் பறிக்கப்படும் கொழுந்தின் எடைக்கேற்ப, கொழுந்து ஒரு கிலோவுக்கு வழங்கப்படும் 40 ரூபாய் படியே தொழிலாளர்களுக்கு வழங்கப்படுகின்றது.

அதே வேளை ஆண் தொழிலாளர்கள் மாலை 4 மணி வரை பணிபுரியாவிட்டால் அரை பேர் வழங்கப்படுகின்றது. ஒரு நாளைக்கு 15 கிலோ வரை பறிக்கப்படும் கொழுந்தில் கழிவுக்காக ஒரு தொழிலாளியிடமிருந்து குறைக்கப்படுகின்றது. அப்படிப் பார்க்கும் போது ஒரு தொழிலாளி தினந்தோறும் 35 கிலோ வரை பறிக்க வேண்டியுள்ளது. கழிக்கப்படும் கொழுந்து தொழிற்சாலைக்கே அனுப்பப்படுகின்றது. ஆகவே இதில் தோட்ட நிர்வாகங்கள் எவ்வாறு இலாபத்தை பார்க்கின்றன என்பதை அறியலாம்.

இவற்றையெல்லாம் முன்வைத்தே தலவாக்கலை தோட்டத்தின் கட்டுக்கலை பிரிவு தொழிலாளர்கள் தோட்ட முகாமைத்துவம் மற்றும் சேவையாளர்களிடம் கேள்வி எழுப்பியுள்ளனர். அதற்கு முகாமையாளர், தொழிலாளர்களைப் பார்த்து தகாத வார்த்தை பிரயோகத்தை வெளிப்படுத்தியதாலேயே முரண்கள் உருவாகி கைகலப்பு வரை சென்றுள்ளது. இந்த சம்பவத்தில் 4 பெண் தொழிலாளர்கள் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டனர்.

இராணுவ  பிரசன்னத்தை கோரும்  முகாமையாளர்கள்

இச்சம்பவத்தையடுத்து தோட்ட முகாமையாளர்கள் சங்கமானது பத்திரிகையாளர் மாநாட்டை நடத்தி தாம் பொறுப்புகளிலிருந்து தற்காலிகமாக விலகிக்கொள்ளப்போவதாகவும் தமது பிரச்சினை குறித்து ஜனாதிபதி உடன் கவனம் செலுத்த வேண்டும் என்றும் கூறியிருந்தது. மேற்படி சங்கத்தின் தலைவரான தயா குமாரகே ஒரு படி மேலே சென்று, தொழிலாளர்களிடமிருந்து முகாமையாளர்களை பாதுகாக்க இரவு நேரங்களில் இராணுவ ரோந்த தோட்டப்பகுதிகளில் அவசியம் என பொலிஸ் மா அதிபருக்கு முறைப்பாடு செய்துள்ளார்.

யுத்த காலப்பகுதிகளில் தீவிரவாத செயற்பாடுகளை கட்டுப்படுத்தவும் மக்கள் பாதுகாப்பு கருதியும்  நாட்டின் பல பகுதிகளில் இராணுவ ரோந்து பணிகள் இடம்பெற்றமை வழமையானதொன்று. அதுவும் யுத்தம் இடம்பெற்ற பகுதிகளிலேயே இராணுவ ரோந்து நடவடிக்கைகள் அதிகமாக காணப்பட்டன. அதற்கு அப்பால் நாட்டின் தலைநகரம், முக்கியமான பாதுகாப்பு கேந்திர பகதிகளில்  சோதனைச் சாவடிகள், காவலரண்கள் போன்றன காணப்பட்டன. யுத்த காலத்தில் கூட பெருந்தோட்டப்பகுதிகளில் இராணுவ நடமாட்டம் இருந்ததில்லை.

அப்படியிருக்கும் போது தொழிலாளர்களிடமிருந்து பாதுகாப்பு கோரி தோட்டப்பகுதிகளில் இராணுவ பிரசன்னத்தை கோரியிருக்கும் முகாமையாளர்கள் சங்கம் தொழிலாளர்களை தீவிரவாதிகள் போன்று சித்திரிப்பது வேதனையான விடயம். அந்தளவுக்கு அவர்கள் மோசமாக நடந்து கொள்கின்றனர் என்ற ஒரு மாயத்தோற்றத்தை இவர்கள் ஏற்படுத்தவே முனைகின்றனர். ஏற்கனவே இவ்வாறான சம்பவத்தையடுத்து சாமிமலை ஓல்ட்டன் தோட்டத்துக்குள் பொலிஸ் நிலையமொன்றை அமைப்பதற்கான பணிகள் முடக்கி விடப்பட்டுள்ளன.

இதை அனைத்தும் தெரிந்தும் தமக்கு வாக்களித்த மக்களுக்கு ஒன்றுமே செய்ய முடியாத நிலையில் கைகளை பிசைந்து கொண்டு அரசாங்கத்திடமோ அல்லது கம்பனிகளிடமோ பேச முடியாது தத்தளித்துக்கொண்டிருக்கின்றனர் மலையக பிரதிநிதிகள்.

கொட்டகலையில் இராணுவ முகாம்

மக்கள் செறிவாக வாழ்ந்து வரும் பகுதிகளில் இராணுவ முகாம்கள் அமைக்கப்படுவதில்லை. ஆனால் கடந்த வருடம் கொரோனா நிலைமைகள் காரணமாக நாடு முடக்கப்பட்டிருந்த சந்தர்ப்பத்தில் கொட்டகலை கொமர்ஷல் கம்பனியின் கட்டிடங்களுக்குள்  வலுக்கட்டாயமாக இராணுவத்தினர் அத்துமீறி குடியேறியிருந்தனர். பின்பு அவ்விடத்தை ஆக்கிரமித்து தமது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்.

இது தொடர்பாக இராணுவத்தினருக்கு எதிரான வழக்கு அட்டன் நீதவான் நீதிமன்றில் நிலுவையில் உள்ளது. இது இராணுவ முகாம் அல்ல, அனர்த்த முகாமைத்துவ நிலையமே என இராணுவத் தளபதி கூறினாலும் குறித்த பகுதியில்  படைப்பிரிவின் பெயர்க்கல் அங்கு ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அங்கு சில எண்ணிக்கையான இராணுவத்தினர் நிலைகொண்டுள்ளனர். இந்த சம்பவத்துக்கும் மலையக பிரதிநிதிகள் வாய் திறக்கவேயில்லை. ஆனால் ஒரு பிரதிநிதி இலங்கையின் பாதுகாப்புக்காக எங்கு வேண்டுமானலும் இராணுவ முகாம்களை அமைப்பதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரமும் உரிமைகளும் உள்ளன என அதை நியாயப்படுத்தினார். இத்தனை நாட்கள் இல்லாத இராணுவ பிரசன்னம் அதுவும் யுத்தம் முடிவுற்ற பிறகு, யுத்தத்துக்கும் சற்றும் சம்பந்தமேயில்லாத இடத்துக்கு  எதற்கு என்ற கேள்விக்கு அவர் பதில் கூறவில்லை. யுத்தம் முடிவுற்று  ஒரு தசாப்தம் கடந்த நிலையில் இன்று வடக்கு கிழக்குப்பகுதிகளில் நிலை கொண்டுள்ள இராணுவ பிரசன்னத்தை குறைக்கும்படி சர்வதேச ரீதியாகவே அழுத்தங்கள் உள்ள நிலையில், மக்கள் நடமாட்டம் உள்ள ஒரு பகுதிக்குள் புதிய இராணுவ முகாம்கள் எதற்கு என்ற கேள்வியை எவருமே எழுப்ப முடியாத நிலையிலுள்ளனர்.

இப்போது நகர்களுக்கு மிக அருகில் இராணுவ முகாம்கள் வந்து விட்ட நிலையில் அடுத்ததாக தோட்ட முகாமையாளர்கள் கோருவது போன்று தோட்ட எல்லைப்புறங்களிலும் முகாம்கள் அமைக்கப்படுமா என்று தெரியவில்லை.  எது எப்படியானாலும் இறுதி யுத்த காலப்பகுதியில் வட பகுதி மக்களை பிரதிநிதிகள் கைவிட்டு , தமது உயிரை காப்பாற்றி கொள்ள அங்கிருந்து வெளியேறியது போன்று, மலையக மக்களை ஏற்கனவே பிரதிநிதிகள் கைவிட்டு தலைநகர் சென்று தங்கி விட்டனர் என்று தான் கூற வேண்டியுள்ளது.   இதில் எதிர்த்தரப்பினரும் அடங்குகின்றனர்.

ஏனென்றால் சாமிமலை ஓல்ட்டன் தோட்டம் மற்றும் தலவாக்கலை கட்டுக்கலை தோட்ட சம்பவங்கள் எதையுமே ஆளும் மற்றும் எதிர்த்தரப்பு மலையக பிரதிநிதிகள் கண்டு கொள்ளவே இல்லை. எவரும் அந்த பக்கம் எட்டியும் பார்க்கவில்லை. கட்டுக்கலை தோட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேரும் பிணையில் வெளிவந்து அவர்களுக்கும் தோட்ட நிர்வாகம் பணி வழங்கினால்  ஒழிய தாம் வேலைக்கு திரும்பப் போவதில்லையென தோட்ட மக்கள் உறுதியாக இருக்கின்றனர்.

அப்படியான உறுதியும் கட்டுக்கோப்பும் இன்று மலையக பிரதிநிதிகளிடம் இல்லையே என எண்ணும் போது வெட்கமாக உள்ளது. எனினும் கம்பனிகளும் தோட்ட முகாமையாளர்களும் தோட்டத்தொழிலாளர்கள் எதற்காக முரண்படுகின்றார்கள் என்ற விடயத்தை மறைத்து அவர்களை மிக மோசமான மனிதர்களாக சித்திரிப்பதில் கவனம் செலுத்துகின்றனர். இவர்கள் மூர்க்கமானவர்கள் என்ற மாயத்தோற்றத்தை உருவாக்க முயற்சிக்கின்றனர்.

நாட்சம்பள விவகாரத்துக்குப் பிறகு பெருந்தோட்டப்பகுதிகளில் தொழிற்சங்க செயற்பாடுகள் முற்றும் முழுவதுமாக செயலிழந்து போயுள்ள நிலையில் தொழிற்சங்க காரியாலயங்களும் வெறிச்சோடியுள்ளன. தொழிற்சங்க பிரமுகர்களையும்  அரசியல்வாதிகளையும் காணக்கிடைக்கவில்லை.    தேர்தல் என ஏதாவதொன்று வந்தால் அப்போது மக்களை காண பிரதிநிதிகள் வரும் போது இந்த நிர்வாக –தொழிலாளர் மோதல்கள் எந்தளவுக்கு உச்சத்தை தொட்டிருக்கும் என்று கூற முடியாதுள்ளது.  

சிவலிங்கம்  சிவகுமாரன்