Tuesday, October 19, 2021

எதிர்ப்பலைகளை தடுத்தாடும் கலை…!


 

அத்தியாவசிய பொருட்களின்   நிர்ணய விலை கட்டுப்பாட்டை நீக்கியதால் கடந்த வாரம் பல உணவு பொருட்கள் உட்பட அதைச் சார்ந்த ஏனைய பொருட்களும் சமையல் எரிவாயுவும் மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் விலை அதிகரிப்பை கண்டிருந்தன. நாட்டில் பஞ்சம் ஏற்பட இடமளிக்க மாட்டோம் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்சகூறுகிறார். மத்திய வங்கி ஆளுநரோ 2020 மற்றும் 2021 ஆம் ஆண்டுகளில் வெளிநாட்டுகடன்களாக 11.6 பில்லியன் அமெரிக்க டொலர்களை செலுத்தியுள்ளோம், கையிருப்பில் 5 பில்லியன் அமெரிக்க டொலர்கள் இருக்கின்றன என்கிறார்.

மட்டுமின்றி இந்த ஆண்டின் ஆரம்பத்தில் இலங்கையின் பொருளாதார வளர்ச்சி வீதம் 8 ஆக இருந்தது. ஆனால் இப்போது இந்த ஆண்டின் பொருளாதார வளர்ச்சி இலக்கு 5 சதவீதமாக எதிர்ப்பார்க்கப்படும் அதே வேளை அடுத்த ஆண்டில் 6 இலிருந்து 6.5 வீத வளர்ச்சியை அடைய முடியும் என்கிறார்.

அத்தியாவசிய பொருட்களின் விலை அதிகரிப்பை எம்மால் கட்டுப்படுத்த முடியவில்லை,ஆனால் வர்த்தகர்கள் முன்வைத்த விலைபட்டியலை விட குறைந்த அளவில் விலை அதிகரிப்பை மேற்கொள்ளவே அரசாங்கம் அனுமதியளித்துள்ளது என வழமையான தனது சமாளிப்பு கதையை கூறுகிறார் வர்த்தக அமைச்சர் பந்துல. மறுபக்கம் வெள்ளைப்பூண்டு சர்ச்சையில் பல சதோச அதிகாரிகள் கைதாகி வருகின்றனர். இதற்கும் தனக்கும் எவ்விதத்திலும் தொடர்பில்லை என்று கூறி வரும் வர்த்தக அமைச்சர்,உண்மையான கள்வர்களின் முகத்திரையை அகற்றுவதற்கு முன்னின்று செயற்பட்டால் மாத்திரமே நம்பப்படுவார்.

சில முக்கியமான அத்தியாவசிய பொருட்களின் நிர்ண விலை கட்டுப்பாட்டை நீக்கியதால் வர்த்தகர்களும் நிறுவனங்களும் தமதிஷ்டப்படியே விலை அதிகரிப்பை மேற்கொண்டிருந்தன. அரசாங்கத்துக்குத் தெரியாமல் இவ்வாறு விலை அதிகரிக்கப்பட்ட பொருட்கள் நூற்றுக்கணக்கில் உள்ளன.

அரசாங்கத் தரப்பு அமைச்சர்கள் கூறும் விளக்கங்கள் ஒரு பக்கமிருக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவோ புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறைகள் பற்றியும் ஒரே நாடு ஒரே சட்டம் என்ற தனது கொள்கையை வலியுறுத்தும் வகையில் இலங்கை இராணுவத்தின் 72 ஆவது ஆண்டு நிகழ்வு பூர்த்தியின் போது உரையாற்றியிருந்தார்.

நாடு இப்போதிருக்கும் நிலைமையில் புதிய அரசியலமைப்போ அல்லது தேர்தல் முறை மாற்றங்களோ பொருளாதார நெருக்கடியை தீர்க்கப்போவதில்லை. இப்போது நாட்டுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து செயற்படுதலே அரசாங்கத்துக்கு அழகு. இருப்பினும் தனக்கு வாக்களித்த பெளத்த சிங்கள மக்களை எப்படியாவது திருப்திபடுத்த வேண்டிய நோக்கத்திலேயே ஜனாதிபதி இருக்கின்றார்.

நாட்டில் அரசாங்கத்துக்கு எதிராக என்ன எதிர்ப்பலைகள் உருவாகினாலும் அதை இலாவகமாக சமாளித்து மக்களின் உணர்வுகளை தூண்டும் வகையில் பேசி சாமர்த்தியமாக காய்கள் நகர்த்தும் திறனை ஜனாதிபதி கொண்டிருக்கின்றார். அவர் ஒரு பாரம்பரிய அரசியல்வாதியாக இல்லாவிட்டாலும் தற்போது அந்த வித்தையை நன்கு கற்று வரும் ஒருவராக விளங்குகின்றார் என்றால் மிகையாகாது.

அதற்கு உதாரணமாக புதிய அரசியலமைப்பு மற்றும் தேர்தல் முறை குறித்து 9 ஆம் திகதி தனது முகநூல் பக்கம் அவர் தெரிவித்திருந்த விடயம் முக்கியமானது.

“நேற்று மாலை, ருவன்வெலிசாயவை வழிபட நான் சென்றிருந்தேன். அங்கு நான் படிக்கட்டுகளில் ஏறிக்கொண்டிருக்கும் போது - இளம் வயது பிக்கு ஒருவரைச் சந்தித்தேன். அப்போது அவர் என்னிடம் கேட்டார், ஜனாதிபதி அவர்களே, ஒரே நாடு, ஒரே சட்டத்தை உருவாக்குவதாகக் கூறினீர்களே. அதனை நாம் மிகவும் எதிர்பார்த்திருக்கிறோம்  என்று.

இந்த வருட இறுதிக்குள் அந்த வாக்குறுதியை நான் நிறைவேற்றுவேன். அத்தோடு  அன்று நான் உறுதியளித்தவாறு, புதிய அரசமைப்பு ஒன்றைஉருவாக்குவதற்கும், அடுத்த வருடத்துக்குள் நடவடிக்கை எடுப்பேன்.மக்களின் எதிர்பார்ப்புக்கமைய, புதிய தேர்தல் முறைமையொன்றையும் அடுத்த வருடத்துக்குள் உருவாக்குவேன்.

 இவ்வாறு தெரிவித்திருந்தார். இந்த கதையில் ஏன் பிக்கு வந்தார் என்பதைப் பற்றி புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை. ஏனென்றால் அவர்கள் வராவிட்டால் தான் ஆச்சரியம். நாட்டின் தற்போதைய பல பிரச்சினைகளுக்கும் மத்தியில் ஒரு இளம் பிக்கு ஜனாதிபதியிடம் ஒரே நாடு ஒரே சட்டம் பற்றி கேள்வி எழுப்புகிறார். ஏற்கனவே இருக்கும் அரசியலமைப்பும் இந்த நாட்டில் வாழ்ந்து வரும் அனைத்து இன மக்களும் சமாதானத்தோடும் செளஜன்யத்தோடும் வாழும் பொதுநலத்தோடு உருவாக்கப்பட்டிருந்தால், இன்று அது 20 திருத்தங்களை கண்டிருக்காது. மட்டுமின்றி புதிய ஒரு அரசியலமைப்பு பற்றிய பேச்சுக்கும் அது இடமளித்திருக்காது. பல்லின மக்கள் வாழ்ந்து வரக்கூடிய எல்லா நாடுகளினதும் அரசியலமைப்பும் யாராவது ஒரு சாராரின் சுயலநலத்துக்காகத்தான் தான் உருவாக்கப்படுகின்றது.

அதே போன்று பல்லின மக்களில் சிறுபான்மையினத்தவர்களின் பிரதிநிதித்துவத்தை எவ்வகையிலும் கட்டுப்படுத்தி வைத்திருக்கவே தேர்தல் முறை மாற்றம் பற்றி பேசப்படுகின்றது. அல்லது சிறுபான்மை மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டு நசுக்கப்படுகின்றன. இதை பகிரங்கமாக இந்த நாட்டின் பார்த்து அனுபவித்தவர்கள் இந்திய வம்சாவளி மலையக மக்கள். இம்மக்களின் சனத்தொகைக்கேற்பவும் அப்போதைய தேர்தல் முறையின் அடிப்படையிலும் இந்த சமூக மக்களின் பிரதிநிதித்துவம் பாராளுமன்றில்அதிகரித்து விடும் என்ற அச்சம் காரணமாகவே சுதந்திரம் கிடைத்த 1948 ஆம் ஆண்டில் ,இம்மக்களின் வாக்குரிமையும் குடியுரிமையும் ஐ.தே.கவால் பறிக்கப்பட்டன.

தற்போதைய ஜனாதிபதியை ஆட்சியில் அமர்த்த பல்வேறு பிரயத்தனங்களை எடுத்து பெளத்த சிந்தனைகளை பெரும்பான்மை மக்களின் மனதில் பதிய வைக்க செயற்பட்ட முருத்தட்டுவே ஆனந்த தேரர் மற்றும் ஒமல்பே சோபித தேரர் ஆகியோர், அண்மைக்காலமாக ஜனாதிபதியை பற்றி மிகவும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விலை அதிகரிப்பு விவகாரத்தில் சில வர்த்தகர்கள் ஜனாதிபதியை மண்டியிட வைத்து விட்டனர் என்றும் இந்நாட்டில் தீர்மானங்களை எடுக்கும் சக்தியாக அரசாங்கம் இல்லையென்றும் முருத்தட்டுவே ஆனந்த தேரர் கூறுகிறார். மிதமிஞ்சிய அதிகாரங்கள் இப்போதுள்ள ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள போதிலும் அவரால் உறுதியான தீர்மானம் ஒன்றை நாட்டு மக்கள் நலன் தொடர்பாக எடுக்க முடியாதுள்ளது என ஒமல்பே சோபித தேரர் கூறியிருக்கிறார்.

ஆனால் இதற்கெல்லாம் சளைத்தவரா ஜனாதிபதி? ஆகையால் தான் ருவன்வெலிசாயவை வழிபட சென்ற இடத்தில் ஒரு இளம் பிக்குவை வைத்தே புதியஅரசியலமைப்பு மற்றும் தேர்தல் மாற்றம் பற்றிய கதையை கூறியிருக்கிறார். அவரது இந்த தமிழ் முகநூல் பதிவுக்கு பின்னூட்டங்களை வழங்கியிருந்த நாட்டு மக்கள் அனைவருமே பொருட்களின் விலை அதிகரிப்பு, நாட்டின் தற்போதைய நெருக்கடி சூழல் உட்பட பல விடயங்களை சுட்டிக்காட்டி கிண்டலும் கேலியுமாக பதிவிட்டிருந்தனர். ஜனாதிபதியான புதிதில் அவரது பதிவுக்கு மிக நம்பிக்கையான பதிவுகளையும் வாழ்த்துக்களையும் அள்ளி தந்த மக்களின் தற்போதைய நிலைமாற்றத்தில் ஆச்சரியப்படுவதற்கு ஒன்றுமில்லை.

இலங்கையின் 72ஆவது இராணுவ தினத்தை முன்னிட்டு - அநுராதபுரம், சாலியபுர, கஜபா படையணி தலைமையகத்தில் விளையாட்டு மைதானத்தை திறந்து வைத்த ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அங்கு கிரிக்கட்டும் விளையாடினார். துடுப்பாட்டத்தின் போது தனக்கு வீசப்பட்ட பந்தை சிறப்பாக தடுத்தாடினார். அவர் எப்போதும் கிரிக்கெட் விளையாடிய ஒருவராக இருந்திருக்க மாட்டார். எனினும் அவரது துடுப்பாட்டம் சிறப்பானதொன்றாக இருந்தது. தனது ஆட்சிக்கு எதிராக வீசப்படும் எந்த எதிர்ப்பையும் சிறப்பாக தடுப்பதில் வல்லவர் என்பதை எதிரணியினருக்கு காட்டுவதற்கு அவர் அவ்வாறு செயற்பட்டாரா என்பது தெரியவில்லை. எனினும் நாட்டின் தற்போதைய மோசமான நிலைமையை ஏற்றுக்கொண்டதாகவே அவரது அன்றைய உரை அமைந்திருந்தது. என்மீதும் எமது அரசாங்கத்தின் மீதும் மக்கள் வெறுப்படைந்துள்ளதை ஏற்றுக்கொள்வதாக கூறிய அவர் அமைச்சர்களும் இந்த பொறுப்பை ஏற்க வேண்டும் என்றும் எனினும் அரசியல்வாதி அல்லாத ஒருவர் இந்த நாட்டின் ஜனாதிபதியாகவும் முப்படைகளின் தலைவராகவும் இருப்பது பெருமை என்றும் கூறியிருந்தமை முக்கியவிடயம். நாட்டின் பல முக்கிய பொறுப்புகள் கூடுதலாக இராணுவ தரப்பினருக்கு வழங்கப்பட்டு வரும் சூழ்நிலையில் அரசியல்வாதி அல்லாத இராணுவ அதிகாரி ஒருவர் ஜனாதிபதியானால் ஆட்சி இப்படித்தான் இருக்கும் என்பதையும் தனது உரையின் மூலம்
நாட்டு மக்கள் விளங்கிக்கொண்டிருப்பர் என்பதை அவர் மறந்து போனார் போலும் !

No comments: