செம்மணி மனித புதைகுழி விவகாரத்தின் உண்மையான சூத்திரதாரிகள் யார் என்பதை இறுதி விசாரணைகளின் பின்னரே அறியலாம் என்று தெரிவித்துள்ள நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷண நாணயக்கார இ இந்த விவகாரத்தில் உண்மையான குற்றவாளிகள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு அவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்படும் என கடந்த வாரம் ஊடகங்களுக்கு தெரிவித்திருந்தார். கடந்த 28 ஆம் திகதி இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பின் போது கருத்து வெளியிட்டிருந்த அவர் "இந்த பேரவலத்திற்கு தமிழீழ விடுதலைப் புலிகளாஇ இந்திய அமைதிப்படையினரா அல்லது இலங்கை ஆயுதப்படைகளா காரணம் என்பது தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளின் இறுதியிலேயே முழுமையாகத் தெரியவரும்" எனக் கூறினார்.
மேற்படி விவகாரத்தில் அவர் ஏன் இந்திய அமைதி காக்கும் படையினரை தொடர்புபடுத்தினார் என்பது தெரியவில்லை. செம்மணி விவகாரத்தில் இதுவரையில் இலங்கை இராணுவத்தினர் மற்றும் விடுதலை புலிகள் ஆகிய இரு தரப்பினரையும் தொடர்புபடுத்தியே செய்திகளும் விமர்சனங்களும் வெளிவந்துக் கொண்டிருக்கின்றன. எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை இராணுவத் தரப்பிலிருந்தோ அல்லது முன்னாள் போராளிகள் மற்றும் புலம்பெயர் தமிழர்கள் பக்கமிருந்தோ இந்திய அமைதி காக்கும் படையினர் செம்மணி விவகாரத்தில் தொடர்பு பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகவில்லையென்பது குறிப்பிடத்தக்கது.
சமூக ஊடகங்களில் செம்மணி புதைகுழியில் அகழப்பட்ட மனித என்பு கூடுகளின் படங்களை வைத்து தமிழ் மற்றும் சிங்கள தரப்பினரிடையே கடும் வார்த்தைப் பிரயோகங்கள் இடம்பெற்று வருவதை சர்வசாதாரணமாக அவதானிக்க முடிகின்றது. இலங்கை இராணுவத்தினரே இதற்குப் பொறுப்பு கூற வேண்டும் என சமூக ஊடகங்களின் மூலம்இ இலங்கை மற்றும் புலம்பெயர் தமிழர்கள் கடுமையாக பதிவுகளை இட்டு வரும் அதே வேளை இலங்கையிலுள்ள சிங்கள சமூகத்தினரில் சிலர் விடுதலை புலிகள் கொன்று புதைத்தவர்களே இவர்கள் என அதற்கு பதில்களை வழங்கி வருகின்றனர்.
செம்மணி மனித புதைகுழிகள் தொடர்பில் பல முக்கிய தகவல்களை வழங்கியவர் சோமரத்ன ராஜபக்ச என்ற முன்னாள் இராணுவ சிப்பாய் என்பதை இலங்கை உட்பட சர்வதேச சமூகமும் அறியும். 1998 ஆம் ஆண்டு இடம்பெற்ற மாணவி கிருஷாந்தி குமாரசாமி படுகொலை வழக்கில் மரண தண்டனை பெற்ற இவரே செம்மணி புதைகுழியில் நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டு புதைக்கப்பட்டுள்ளனர் என்ற உண்மையை அம்பலப்படுத்தினார். ஆனால் அச்சந்தர்ப்பத்தில் இந்த விவகாரத்தை மூடி மறைக்கும் செயற்பாடுகள் மிக இரகசியமாக முன்னெடுக்கப்பட்டமையை பலரும் அறிவர். சோமரத்ன ராஜபக்ச மனித புதைகுழி சம்பவத்தை கூறிய பின்பு செம்மணி மயானப் பகுதியில் இரவிரவாக இராணுவ வாகனங்கள் வந்து சென்றதையும் அப்பகுதியில் அதிகளவான இராணுவத்தினரின் நடமாட்டத்தையும் அப்பிரதேச மக்கள் அறிந்திருந்தாலும் அது குறித்து கதைப்பதற்கோ அல்லது தகவல்களை வழங்குவதற்கோ எவரும் முன்வர முடியாத சூழ்நிலைகள் நிலவின.
மனித புதைகுழிகள் உள்ளதாக அவர் கூறிய விடயம் பாரதூரமானது என்பதால் பின்பு நீதிமன்ற உத்தரவுக்கு அமைய செம்மணி பகுதியில் அவ்வாறான இடங்களை அடையாளம் காட்டுமாறு அவரிடம் கேட்கப்பட்டது. அவரும் குறித்த இடத்துக்கு வந்து சில இடங்களை காட்டினாலும் அப்போது அகழப்பட்ட இடங்களில் மனித புதைகுழிகள் இருந்ததற்கான ஆதாரங்களை காணக்கிடைக்கவில்லை. 1999 ஆம் ஆண்டு சித்துபாத்தி மயானப்பகுதியில் கட்டிட அத்திவாரம் ஒன்றுக்கு நிலத்தை அகழ்ந்த போதே சில மனித என்புகூடுகள் வெளிவந்தன. அப்போது இடம்பெற்ற அகழ்வில் 15 உடல்கள் மீட்கப்பட்டன. எனினும் அதற்குப்பிறகு இந்த விவகாரமானது ஆட்சியாளர்களால் அலட்சியப்போக்குடனேயே கையாளப்பட்டது. ஆரம்பத்தில் மீட்கப்பட்ட உடல்களில் சில அடையாளம் காணப்பட்டிருந்தன. அவர்களில் சிலர் விசாரணைகளுக்காக இராணுவத்தினரால் அழைத்துச்செல்லப்பட்டவர்கள் என்ற விடயம் வெளிவந்தவுடன் ஏழு இராணுவ வீரர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது. 2000 ஆம் ஆண்டு அவர்களை கைது செய்வதற்கான ஆணைகள் பிறப்பிக்கப்பட்டாலும் பின்பு சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டனர்.
கடந்த ஆண்டு ஜுன் மாதமளவில் குறித்த இடத்தில் மேற்கொள்ளப்பட் அகழ்வாராய்ச்சிகளின் போது அதிர்ச்சி தரும் வகையில் குழந்தைகள் சிறுவர்களின் என்புகூடுகள் மீட்கப்பட்டன. அதன் பிறகே இதன் தீவிரம் உணரப்பட்டு நீதிமன்ற அனுமதியின் பின்னர் இவ்வாண்டு ஜுலை மாதம் வரை மூன்று கட்ட அகழ்வுகள் இடம்பெற்றதுடன் 470 வரையான எலும்புக்கூட்டுத் தொகுதிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளன. முன்னாள் இராணுவ வீரர் சோமரத்ன ராஜபக்ச கூறிய விடயங்கள் உண்மை என இலங்கை வாழ் மக்கள் அறியக் கூடியதாக இருந்தாலும் இனவாதிகளால் அதை ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இராணுவத்தினர் குற்றங்களை புரிந்தார்கள் என சிலர் ஏற்றுக்கொண்டிருந்தாலும் அவர்கள் நாட்டை காக்க தீவிரவாதிகளையே கொன்றனர் என்ற நியாயப்படுத்தல்களை சில சிங்கள தரப்பினர் முன்னெடுத்து வருகின்றனர். போர்க்குற்றங்கள் தொடர்பில் இவ்வாறு சிங்கள– தமிழ்த் தரப்பினரிடையே நீறுபூத்த நெருப்பாக இருக்கும் உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கு மத்தியில் மூன்றாவது தரப்பாக இந்திய அமைதி காக்கும் படைகளையும் கோர்த்து விட்டிருக்கின்றார் நீதி அமைச்சர்.
1987 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட இலங்கை – இந்திய ஒப்பந்தத்தின் கீழ் வடக்கு கிழக்குப் மாகாணங்களில் அமைதியை நிலைநாட்ட இந்தியாவால் அனுப்பப்பட்ட இந்திய அமைதி காக்கும் படையினர் (ஐPமுகு) 1990 வரை மூன்று ஆண்டு காலம் இங்கிருந்தனர். அவர்களது வருகையையும் ஒப்பந்தத்தையும் கடுமையாக எதிர்த்தவர் அப்போதைய பிரதமர் ரணசிங்க பிரேமதாச. 1989 ஆம் ஆண்டு தான் ஜனாதிபதியானவுடன் இந்திய படைகளை வெளியேறும்படி பணித்தார். கட்டம் கட்டமாக இந்தியாவுக்கு திரும்பிய இந்திய படையினர் 1990 மார்ச் மாதத்தோடு முழுமையாக தமது நாட்டுக்கு சென்றடைந்தனர்.
இந்திய அமைதி காக்கும் படையினர் வடக்கு கிழக்கு பகுதிகளில் இருந்த காலகட்டத்தில் விடுதலை புலிகளை கட்டுப்படுத்த தாக்குதல்களை மேற்கொண்டிருந்தனர். இதில் இரு தரப்பினருக்கும் சேதங்கள் ஏற்பட்டிருந்ததை மறுக்க முடியாது. சுமார் 1500 இந்திய அமைதி காக்கும் படையினர் இதில் கொல்லப்பட்டனர் என்று தெரிவிக்கப்படுகின்றது. இந்திய படையினர் வடக்கு கிழக்குப் பகுதிகளில் அமைதி காக்கும் பணிகளில் ஈடுபட்டிருந்த போதுஇ சிவிலியன்கள் மீது தாக்குதல்களை மேற்கொண்டதாகவோ அல்லது அவர்களை கொன்று புதைத்ததாகவோ முறைப்பாடுகள் எழுந்ததாகத் தெரியவில்லை. 1994 ஆம் ஆண்டு சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியானவுடன் வடக்கு கிழக்கு பகுதிளில் இராணுவ சோதனைச் சாவடிகளில் இடம்பெற்ற மனித உரிமை மீறல் மற்றும் குற்றச்சம்பவங்கள் பற்றி அதிக முறைப்பாடுகள் பதிவாகின. சந்தேகத்தின் பேரில் தடுத்து வைக்கப்பட்ட பல பேரை தேடி சோதனை சாவடிகளுக்குச் சென்றவர்கள் காணாமல் போன சம்பவங்களே இடம்பெற்றன.
அவ்வாறு வெளி உலகுக்கு வந்த சம்பவமே மாணவி கிருஷாந்தி குமாரசாமி படுகொலைச் சம்பவமாகும். 1996 ஆம் ஆண்டு கைதடி இராணுவ காவலரணில் கிருஷாந்தி தடுத்து வைக்கப்பட்டதன் பின்னர் அவருக்கு என்ன நடந்தது என்பதை எவரும் அறிந்திருக்கவில்லை. அவ்வழியே சென்ற மக்களால் தகவல் வழங்கப்பட்டதன் பின்னர் அவரைத் தேடிச் சென்ற அவரது தாயார் இ சகோதரர் இ அயலவர் ஆகியோரை குறித்த சோதனைச் சாவடியில் பணியில் இருந்த இராணுவத்தினரே படுகொலை செய்தனர். கிருஷாந்தி ஆறு இராணுவத்தினரால் கூட்டு பாலியல் வல்லுறவுக்குட்படுத்தப்பட்டார். அனைவருமே கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்டனர். இந்த விவகாரம் அப்போது ஜனாதிபதியாகவிருந்த சந்திரிகா பண்டாரநாயக்கவுக்கு கடும் அழுத்தங்களை ஏற்படுத்தியிருந்தது. சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட மனித உரிமை அமைப்புகள் குறித்த சம்பவத்துக்குக் காரணமான இராணுவ வீரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென தொடர்ச்சியான பிரசாரத்தை முன்னெடுத்தமை காரணமாகவே விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு அதில் சம்பந்தப்பட்ட அனைவருக்கும் மரண தண்டனை வழங்கப்பட்டது.
2005 ஆம் ஆண்டு வரை இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகவிருந்த சந்திரிகா பண்டாரநாயக்கவின் காலப்பகுதியிலேயே அதிகளவானோர் காணாமலாக்கப்பட்டனர் என சர்வதேச மனித உரிமை அமைப்புகள் சம்பவங்களை ஆவணப்படுத்தியுள்ளன. எனவே இவ்வாறு காணாமலாக்கப்பட்டவர்கள் கொன்று புதைக்கப்பட்ட சம்பவங்கள் இடம்பெற்ற காலப்பகுதியில் இருந்தவர்கள் இலங்கை இராணுவத்தினரே ஒழிய இந்திய அமைதி காக்கும் படையினர் இல்லையென்பது தெளிவு. இவ்வாறிருக்கையில் நீதி அமைச்சர் இந்த விவகாரத்தில் இந்திய அமைதி காக்கும் படையினரை தொடர்படுத்தியிருப்பது ஆச்சரியமாகும்.
இறுதி யுத்த காலத்தில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் தொடர்பில் சர்வதேச விசாரணையை தமிழ்த் தரப்பினர் தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகின்றனர். செம்மணி விவகாரம் தொடர்பிலும் சர்வதேச விசாரணை பொறிமுறையை கோரி பல தரப்பினரும் ஆர்ப்பாட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு பதில் கூறுவதற்காக நீதி அமைச்சர் இவ்வாறு கூறியிருந்தாலும்இ இது இருநாடுகளுக்கிடையிலான இராஜதந்திர உறவுகளை பாதிப்புறச் செய்யும் என்பதை அவர் ஏன் உணர்ந்து கொள்ளவில்லையென்ற கேள்வி எழுகின்றது. இதற்கு இந்திய தரப்பிலிருந்து இது வரை உடனடியாக எந்த பிரதிபலிப்புகளும் எழவில்லையென்பதும் முக்கிய விடயம்.