Sunday, June 6, 2021

சிங்கள மன்னர்களின் வரலாற்றையே சீண்டி பார்க்கும் சீனா....! 

அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் சீனாவின் ஆதிக்கம் தொடர்பில் சர்வதேச நாடுகள் எதிர்ப்பை வெளிப்படுத்தினாலும் குறித்த நாடுகளே அதை ஏற்றுக்கொள்ளும் நிலை வரும் போது சர்வதேசம் வாய் மூடி மௌனமாகத்தான் இருக்க வேண்டியுள்ளது. பட்டபிறகு தெளியுங்கள் என்பது தான் சீனாவின் விடயத்தில் பல நாடுகளின் தத்துவமாக இருக்கின்றது.
இலங்கை விடயத்திலும் அப்படியே நடந்தது , நடந்து கொண்டிருக்கின்றது, நடக்கப்போகின்றது. . பௌத்தத்தை பின்பற்றும் உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடு என்ற ஒரே விடயமே இலங்கையை பல வழிகளிலும் சீனா கால்பதிக்கக் காரணம். இங்கு வாழ்ந்து வரும் தீவிர பௌத்த சிந்தனை கொண்டவர்களுக்கு அது ஒன்றே போதுமானதாக இருந்தது. ஆனால் சீனாவுக்குள்ளே
சென்று பார்த்தால் அது மதச்சார்பற்ற கம்யூனிச நாடு என்பதை சிறுகுழந்தையும் கூறும்.
தற்போதைய சீனாவின் வெளியுறவுக்கொள்கைகள் மற்றும் திறந்த பொருளாதார அணுகுமுறைகளைப்பார்த்தால் அதை கம்யூனிச நாடு என்று ஏற்றுக்கொள்வது கடினம்.
1949 ஆம் ஆண்டு புரட்சியாளர் மாவோ தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சியை கைப்பற்றியது. அதிலிருந்து இன்று வரை 70 ஆண்டுகளையும் கடந்து ஒரே கட்சி ஒரே நாடு என்ற தொனிப்பொருளிலேயே சீனா பயணித்துக்கொண்டிருக்கின்றது.. அந்த கொள்கையை தொடர்ந்தும் தக்க வைக்கும் திட்டமே ஒரே பாதை ஒரே மண்டலம். இதை பட்டுப்பாதை திட்டம்
என்று அழைக்கின்றனர். பல்லாயிரம் வருடங்களுக்கு முன்பு ஐரோப்பா கடந்து சீனா மேற்கொண்ட வணிகப் பாதையை ஒன்றிணைக்கும் திட்டமே இது. இதில் இலங்கையும் உள்ளடங்குகிறது. இதை முன்வைத்தே சீனாவானது, பட்டுப்பாதை திட்டம் ;முன்முயற்சியின் இலங்கை என்ற ( Belt & Road Initiative Sri Lanka (BRISL) என்ற பெயரில் இலங்கையை பிரபல்யப்படுத்தும் முயற்சியை ஆரம்பித்துள்ளது. இதற்கென பிரத்தியேகமான இணையத்தளம், சமூக ஊடக செயற்பாடுகளை அது முன்னெடுத் து வருகின்றது. இந்த பி.ஆர்.ஐ.எஸ்.எல் ஆனது கலாசார, வணிக மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பில் நிபுணத்துவம் பெற்ற ஒரு கல்வி மற்றும் ஆலோசனை தளம் என்று சீனா கூறுகின்றது.
இந்த வலைதளத்தின் ஓரிடத்தில் இவ்வாறான வாசகங்கள் ஆங்கிலத்தில் இடம்பெற்றுள்ளன.

 சீனாவிலுள்ள உலகின் மிகப்பெரிய சந்தைகளில் வாய்ப்புகளைப் பெற இலங்கையில் தயாரிக்கப்பட்ட உற்பத்திகளை இப்பகுதியில் விளம்பரம் செய்யவும் ......உங்களுக்கு சேவை செய்ய இங்கு நாம் தயாராக இருக்கின்றோம்........”

மெல்ல மெல்ல இலங்கையை ஆக்கிரமித்து வரும் சீனா அதன் வர்த்தக தலைநகரத்திலேயே துறைமுக நகர் என்ற பெயரில் தனது கால்களைப் பதித்துள்ளது. இனி இலங்கையின் எந்த பாகத்தையும் அது தடையின்றி தனது ஆதிக்கத்தால் கை வைக்கலாம். அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக இலங்கையை ஆக்கிரமித்து விட்ட சீனா, தற்போது வரலாற்றிலும்
கைவைக்க ஆரம்பித்துள்ளது. இது ஓரளவுக்கு சீனாவை ஏற்றுக்கொண்ட பௌத்த சிங்கள மக்களிடையே எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் வெசாக் நிகழ்வுகள்
கடந்த மே மாதம் 26 ஆம் திகதி சீனாவின் தலைநகர் பீஜிங்கில் அமைந்துள்ள இலங்கை தூதரகத்தில் அனுஷ்டிக்கப்பட்ட வெசாக் கொண்டாட்டங்களின் படம் ஒன்றை, பி.ஆர்.ஐ.எஸ்.எல் தனது டுவீட்டர் தளத்தில் பதிவேற்றியுள்ளது.. சீனாவிற்கான இலங்கை தூதுவர் கலாநிதி பாலித கோகன்ன உட்பட சீன அதிகாரிகளுக்கு மத்தியில் ஒரு பெண்ணும் நிற்கிறார். இலங்கை கோட்டை இராஜ்ஜியத்தை ஆண்ட 6 ஆம் பராக்கிரமபாகுவின் 19 ஆவது
தலைமுறை வாரிசான இலங்கை இளவரசி சூ ஷி ஹின் உம் இந்த நிகழ்வுகளில் கலந்து கொண்டார் என அதில் விளக்கம் தரப்பட்டுள்ளது.
இந்த டுவீட்டர் பதிவு இலங்கை மட்டுமல்லாது வெளிநாடுகளில் வாழ்ந்து வரும் பௌத்த சிங்கள மக்களிடையே கடும் எரிச்சலையும் கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளன. அவர்களில் பலர் இந்த பதிவுக்கு எதிர்ப்பதிவிட்டு இதற்கு ஆதாரம் என்ன என்று கேள்வி எழுப்பியுள்ளனர். எனினும்
சீனா குறிப்பிடும் அந்த இலங்கை இளவரசியான சூ ஷி ஹின் இலங்கை மக்களுக்கு புதியவரல்லர். இதற்கு முன்பதாக இரு சந்தர்ப்பங்களில் அவர் இலங்கை வருகை தந்துள்ளார். சில வருடங்களுக்கு முன்பு சீனாவுக்கு பயணம் மேற்கொண்டிருந்த ஊடகக்குழுவினர்களும்
இவரைப்பற்றிய செய்திகளை இலங்கை ஆங்கில ஊடகங்களுக்கு வழங்கியிருந்தனர். 
அப்போதெல்லாம் இலங்கையின் மன்னர் பரம்பரையுடன் தொடர்புடைய இலங்கை இளவரசி என்று தான் கூறப்பட்டிருந்தது.. இவர் மன்னர் பரம்பரை வாரிசு என்பதை சீனாவே பல வருட காலங்கள் மறைத்து வைத்திருந்தமை அவரிடம் மேற்கொள்ளப்பட்ட நேர்காணலின் மூலம் தெரிய
வருகின்றது. ஆனால் எந்த மன்னர் என்ற விடயத்தை இப்போது தான் சீனா
வெளிப்படுத்தியுள்ளது.. நான் ஒரு மன்னர் பரம்பரையில் வந்த இளவரசி என்பதை முன்பே அறிந்து வைத்திருந்தேன். எனது பரம்பரையினர் தேவையற்ற சிக்கல்களில் மாட்டிக்கொள்ளாமலிருக்கவே அது இரகசியமாக வைக்கப்பட்டிருந்தது என்று கூறும் இந்த இளவரசி இலங்கைக்கு தான் வந்த போது பல வரலாற்றாசிரியர்களை சந்தித்து தனது பூர்விகம்
பற்றி அறிய முயன்றதாகவும் இலங்கையர்களை சந்திக்கும் போதெல்லாம் தான் அவ்வாறே உணர்வதாகவும் தெரிவித்துள்ளார்.

1990 களில் வெளிவந்த இரகசியம்
1990களில் சீனாவானது ஒரு அபிவிருத்தித் திட்டத்துக்காக சிஹிஜா பிராந்தியத்தின் குவிங்யுவான் மலைப்பிரதேசத்திலமைந்துள்ள கல்லறைகளை அகற்ற முடிவு செய்த போதே இந்த இரகசியம் வெளிப்பட்டது. இது மன்னர் ஒருவரின் வாரிசுகளை பல ஆண்டு காலமாக அடக்கம் செய்யப்பட்ட இடம் என்பது தெரியவந்தது.. மட்டுமன்றி அந்த மன்னர் சீன பெண்ணை
மணந்த இலங்கை இளவரசர் என்ற கதைகளும் வெளிப்பட்டன.. அவர் ஷி என்ற பெயருடன் சீனாவிலேயே தங்கி விட்டார். அதற்குக் காரணம் அரசியல் அல்ல காதல் என்பதே உண்மை  என்கிறார் இப்போதைய இளவரசி சூ ஷி ஹின். குறித்த கல்லறைகளில் சிங்கம் மற்றும் சீன ட்ராகனின் உருவாங்கள் உள்ளன.
15 ஆம் நூற்றாண்டில் கோட்டை இராஜதானியை ஆண்ட திறமை மிக்க அரசனாக 6 ஆம் பராக்கிரமபாகு மன்னர் விளங்குகிறார். இவர் 1415 முதல் 1467 வரை ஆண்டதாக வரலாறு கூறுகின்றது. எனினும் சீன ஊடகங்கள் இவ்வாறானதொரு கதையைக் கூறுகின்றன. சீனாவின் மிங் சக்கரவர்த்தியின் யுகத்தில் 15 ஆம் நூற்றாண்டில் கோட்டை இராஜதானியை
அலகேஷ்வரா என்ற துணிச்சலான இளவரசர் ஆண்டு வந்ததாகவும் மிங் சக்கரவர்த்தியின் தளபதிகளால் அவர் கடத்தப்பட்டு சீனா கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் அங்கு சீன பெண்ணிடம் காதல் வயப்பட்டு அங்கேயே தங்கி விட்டதாகவும் பின்பே மிங் சக்கரவர்த்தி
கோட்டைக்கு 6 ஆம் பராக்கிரமபாகுவை மன்னராக்கியதாகவும் கூறப்படுகின்றது. . ஆனால் இந்த கதைகளை எவரும் அங்கீகரிக்கவும் நம்புவதற்கும் தயாராக இல்லை. 15 ஆம் நூற்றாண்டில் இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கம் குறித்து எமது வரலாற்றாசிரியர்களிடம் ஒரு கனத்த மௌனமே நிலவுகிறது. எனினும் இந்த சம்பவம் குறித்த
பதிவுகள் , குறிப்புகள் வரலாற்றாசிரியகளினால் திரட்டப்பட்டுள்ளன.. இந்த குறிப்புகள் இலங்கையை மட்டுமல்லாது சீனாவின் கடற்படை விரிவாக்கம் குறித்த சூழல்களையும் அரசியலையும் பிரதிபலிப்பதாக உள்ளன என்று தெற்காசிய பல்கலைக்கழகத்தின் சமூகவியல் பேராசிரியர் சசங்கா பெரேரா இந்த சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ளார்.. எனினும் மேற்படி டுவீட்டர் பதிவுக்கு கேலியும் கிண்டலும் கலந்த பரிகாச பதில்களை இலங்கையர்கள் வழங்கி வருகின்றனர். இந்த வரலாறு தொடர்பில் மர்மம் நிலவுகின்றதா அல்லது இது கட்டுக்கதையா என்பதை அரசாங்கமே தெளிவுபடுத்த வேண்டிய சூழ்நிலை எழுந்துள்ளது.

ஆனாலும் இது வரை இது குறித்து அரசாங்கம் எந்த கருத்துக்களையும் வெளிப்படுத்தவில்லை