Monday, September 6, 2021

சொந்த நாட்டின் அகதிகள்….!

 


 தமிழகத்தின் ஆளும் திராவிட முன்னேற்ற கழகமானது கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக தனது மாநிலத்திலமைந்துள்ள  முகாம்களில் தங்கி வாழ்ந்து வரும் இலங்கை அகதிகளுக்கு பல நலனோம்பு திட்டங்களை அறிவித்துள்ளது.

ஒரு தலைமுறையை கடந்து வாழ்ந்து வரும் அந்த மக்கள் இன்னும் அகதிகள் என்ற பெயரிலேயே வாழ்க்கையை கடத்துகின்றனர். இதன் காரணமாக மத்திய அரசாங்கத்தின் சட்டரீதியான பல உரிமைகளை அவர்கள் அனுபவிக்க முடியாத சூழ்நிலைகள்  மூன்று தசாப்த காலமாக தொடர்கின்றன. இந்த மக்களுக்கு இந்திய குடியுரிமையைப் பெறுவதற்கு சட்ட சிக்கல்கள் உள்ளன.

மனிதாபிமான ரீதியில் அதைப்பெற்றுக்கொள்ளும் வகையில் கடந்த கால மத்திய அரசாங்கங்கள் எதுவும் நகர்வுகளை மேற்கொண்டிருக்கவில்லை. உண்மையில் தமிழக முகாம்களிலும் மாநிலத்தின் வேறு இடங்களிலும் வாழ்ந்து வரக்கூடிய அகதிகளின் எண்ணிக்கை 90 ஆயிரத்துக்கும் அதிகமாகும். இவர்கள் தமது சொந்த நாட்டுக்கு திரும்புவதற்கு விரும்புகின்றார்களா , அதை இலங்கை அரசாங்கம் எவ்வாறு பார்க்கின்றது போன்ற கேள்விகளுக்கு தெளிவான பதில்கள் இல்லை.

 1983 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஆயிரக்கணக்கில் அங்கு சென்றவர்களின் பிள்ளைகள் அங்குள்ளவர்களை மணம் முடித்து தனியார் நிறுவனங்களில் பணி புரிந்து வருகின்றனர். ஆனால் இவர்களின் மீது இன்னும் அகதிகள் என்ற  பரிதாப பார்வையே நிலவி வருகின்றது.

தற்போது தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த மக்களுக்காக அறிவித்திருக்கும் திட்டங்கள் உண்மையில் வரவேற்கத்தக்கது. ஆனால் அதை இலங்கையிலுள்ள அரசியல் பிரமுகர்கள் எவ்வாறு பார்க்கின்றனர் என்பது முக்கிய விடயம். மிக முக்கியமாக மலையக அரசியல் பிரதிநிதிகள் பலர் நேரடியாக அங்கு சென்று தமிழக முதலமைச்சர் உட்பட தி.மு.க பிரதிநிதிகளை சந்தித்துள்ளனர். தமிழகத்தில் வாழ்ந்து வரும் அகதிகளுக்கு தி.மு.க எடுத்திருக்கும் நடவடிக்கைகள் குறித்து பாராட்டுதல்களை தெரிவித்துள்ளனர்.

ஆனால் தமக்கு  வாக்களித்து அழகு பார்த்த, சொந்த நாட்டின் அகதிகளாக வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்ட சமூகம் பற்றி அவர்கள் சிந்திக்கின்றார்களா என்று பார்த்தல் அவசியம். இங்கிருந்து தமிழகத்துக்கு அகதிகளாக சென்றவர்கள் கூட 30 வருடங்களுக்கு மேல் முகாம்களில் வாழ்ந்து வருகின்றனர். ஆனால் அதே தமிழக கிராமங்களிலிருந்து இங்கு வந்த உழைக்கும் வர்க்கத்தினர் கடந்த 200 வருடங்களாக முகாம்களை விட மோசமான லயன் குடியிருப்புகளில் காலத்தை தள்ளுகின்றனர்.

வாக்களிக்கும் உரிமையைப் பெற்றுவிட்டால் இவர்கள் இந்த நாட்டின் பிரஜைகளாகி விடமாட்டார்கள். ஏனென்றால் இன்னும் இவர்கள் இந்நாட்டின் பதிவுபிரஜைகளாகவே சான்றிதழை வைத்துக்கொண்டிருக்கின்றனர். இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்த்து இவர்களுக்கு இன்னும் அரசியலமைப்பில் வழங்கப்படவில்லை.

அவர்களின் தலைமுறையினருக்கும் இதே வேதனை தொடர்கின்றது. இந்த சமூகத்துக்கு நேரடியாக பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்று அரை  நூற்றாண்டு  நெருங்குகின்றது. அதற்கு இன்னும் 6 வருடங்கள் இருக்கின்றன. இத்தனை வருடங்களாக இந்த மக்களின் வாக்குகளைப் பெற்று அதிகார பீடங்களின் ஆசியுடன் அமைச்சர் ,பிரதி அமைச்சராக வலம் வந்தவர்கள் எவருக்குமே  லயன் குடியிருப்பை முற்றாக ஒழிக்க முடியவில்லை.

இந்த மக்களுக்கு சொந்தம் என்று கூறக் கூடிய சட்ட ரீதியான காணித்துண்டுகள் இல்லை. ஆங்கிலேயர் ஆட்சி காலத்தை விட மிக மோசமான அழுத்தங்களுக்கும் கொடுமைகளுக்கும் முகங்கொடுத்து வரும் சூழ்நிலைக்கு தற்போது இந்த மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

சில நேரங்களில் தமிழக அரசியல் பிரமுகர்கள் இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளுக்கு விஜயம் மேற்கொண்டால் அங்குள்ள அகதி முகாம் மக்கள் நன்றாக வாழ்கின்றனர் என திருப்திபட்டுக்கொள்வர். அதன் காரணமாகத்தான் கடந்த 4 தசாப்த காலமாக இச்சமூக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தி நாடாளுமன்றை அலங்கரித்து வந்த மலையக பிரதிநிதிகள் எவரும் தமிழக அரசியல்வாதிகளை இலங்கையின் பெருந்தோட்டப் பகுதிகளுக்கு அழைத்துச்சென்றதில்லை.

தமிழகத்தின் சுமார் 108 முகாம்களில் தங்கியுள்ள அகதிகளின் நலன்கள்  மற்றும் அவர்களின் பிள்ளைகளின் கல்வி எதிர்காலத்துக்காக  தமிழக அரசு அறிவித்துள்ள  சில நலனோம்புகை திட்டங்களை பார்க்கும் போது, மலையக பெருந்தோட்டப் பிரதேசங்களில் வறுமை கோட்டுக்குக் கீழ் கல்வி கற்க போராடும் மாணவர்கள் , போராட்டம் தோற்ற நிலையில் இடைவிலகியோர், பின்பு தலைநகரங்களுக்கு பணியாற்றச் சென்று மர்மமான முறையில் உயிரிழந்தோர் பற்றிய ஞாபகங்கள் வந்து போவதை தடுக்க முடியாதுள்ளது.

இது வரை எந்த மலையக தொழிற்சங்கமும் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு எந்த வித புலமை பரிசில்களையும் கல்விக்காக வழங்கியதாக சரித்திரம் இல்லை. மாறாக தொழிலாளர்களின் சந்தாவைப் பெற்றும் அதற்கு கணக்கு காட்டாதவர்களாகவே இன்று வரை இவர்கள் காலந்தள்ளுகின்றனர். உயிர் அச்சம் காரணமாக  வேறு ஒரு   நாட்டிலிருந்து வந்த தமது இன மக்களை  மனிதாபிமானத்தோடு அரவணைத்து அவர்களுக்கான நலன்களை கவனிக்கும் தமிழக அரசின் செயற்பாடுகளைப் பார்த்துச் சரி மலையக பிரதிநிதிகள் பாடங்கற்றுக்கொள்ள வேண்டும். இன்னொரு வகையில் கூறப்போனால் தாம் தமது மக்களை எவ்வாறு வைத்திருக்கிறோம் என்பதை நினைத்து வெட்கி தலை குனிய வேண்டும்.

அகதிகளுக்கு இவ்வாறெல்லாம் செய்திருக்கின்றீர்கள் எமது மக்களையும் கவனியுங்கள் என ஒவ்வொரு முறையும் இவ்வாறு ஓடோடிச்சென்று தமிழக அரசிடமோ இந்திய அரசிடமோ உதவிகளை கேட்பது எந்த வகையில் நியாயம் என்பது தெரியவில்லை. அப்படியானால் இந்த மக்களை அழைத்து வந்து பெருந்தோட்டங்களை உருவாக்கிய பிரித்தானியரிடமும் அல்லவா சென்று உதவி கேட்க வேண்டும்? தொப்புள் கொடி உறவென்ற விடயத்தை அடிப்படையாக வைத்துக்கொண்டு அதை உதவிகளைப் பெற்றுக்கொள்ள பயன்படுத்துவது நாகரிகமாகாது என்பதை இந்த பிரதிநிதிகள் புரிந்து கொள்வார்களாக. அகதிகளுக்காக ஒரு மாநில அரசு நிதி ஒதுக்கும் போது இங்கு சொந்த நாட்டில்  அகதி வாழ்க்கை வாழ்ந்து வரும் மலையக பெருந்தோட்ட சமூகத்தின் நலன்களுக்கு ஏன் ஒதுக்கீடுகளை செய்ய முடியாது என இலங்கை அரசாங்கத்திடம் கேள்வி கேட்கும் தைரியம் யாருக்குத் தான் உள்ளது?  

 

 

 

அகதிகளுக்கு பிரஜைகள் என்ற அந்தஸ்த்து கிடைப்பது எப்போது ?


தமிழகத்தின்  ஆளும் திராவிட முன்னேற்ற கழகத்தின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் நிர்வாக செயற்பாடுகள் குறித்து திருப்திகரமான கருத்துக்கள் முன் வைக்கப்பட்டு வருவதை மறுக்க முடியாது. அதில் தமிழகத்தில் வாழ்ந்து வரும் இலங்கை அகதிகள் குறித்த அவரது நகர்வு குறித்து பலரும் தமது பாராட்டுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

தமிழகத்தில் உள்ள அகதிகளில் நலனோம்பல் திட்டத்துக்கு தமிழக அரசால் 317 கோடி இந்திய ரூபாய் ஒதுக்கப்படும் என்றும் இனி அவர்கள் அவர்கள் வசிக்கும் இடங்கள் அகதி முகாம்கள் என்று அழைக்கப்படாதென்றும் ‘இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்’ என்றே அழைக்கப்படும் என்றும் அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் சட்டசபையில் அறிவித்துள்ளார். 

இதற்கு இலங்கை தமிழ் அரசியல்வாதிகளிடமிருந்து வரவேற்பும் வாழ்த்துக்களும் தமிழகத்தை சென்றடைந்துள்ளன. தமிழக தொடர்பு என்பது இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மக்களின்  தொப்புள் கொடி உறவு என்பதை வலியுறுத்தஇ இந்த சம்பவத்துக்குப்பிறகு  மலையக அரசியல் பிரமுகர்கள் சிலரும் தமிழகத்தை நோக்கி பறந்துள்ளனர் என்பது முக்கிய விடயம். 

1983 ஆம் ஆண்டு கறுப்பு ஜுலை கலவரத்துக்குப்பிறகே இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழகத்துக்குச் செல்லும் மக்கள் தொகை அதிகரித்தது. அந்த ஆண்டு முதல் அதன் பின்னரான யுத்த சூழல் காரணமாகவும் சுமார் 3 இலட்சத்துக்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தமிழகத்துக்கு அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர்.

தமிழகத்தின்   29 மாவட்டங்களில் உள்ள 108 முகாம்களில் தங்க வைக்கப்பட்டோரின் எண்ணிக்கை சராசரியாக 59 ஆயிரம் பேராகும். அதில் 34 ஆயிரம் பேர் உரிய பதிவுகளுக்குப்பிறகு வேறு இடங்களில் வசித்து வருவதாக முதலமைச்சர் ஸ்டாலினால் சட்டசபையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முகாம்களில் வாழ்ந்து வரும் மக்களுக்கான பல அடிப்படை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளதோடு மாணவர்களுக்கான கல்வி வசதிகள் மற்றும் உதவிகள் மெச்சத்தக்க வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளன. உதாரணமாக முதற்கட்டத்தில் 55 மாணவர்களுக்கான கல்வி மற்றும் விடுதி கட்டணத்தை தமிழக அரசே செலுத்துவதற்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பட்டதாரி மாணவர்களுக்கான புலமை பரிசில் தொகைகள் 5 ஆயிரம் இந்திய ரூபாயிலிருந்து 20 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. 

இந்த திட்டங்களை வரவேற்றிருந்த பா.ஜ.க எம்.பியான வானதி சீனிவாசன் கூடஇ மாநில அரசு அனுமதியளித்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்குமிடையிலான படகு சேவை போக்குவரத்தை ஆரம்பிக்க மத்திய அரசு தயாராக இருப்பதாக சட்டசபையில் கருத்துத் தெரிவித்திருந்தமை முக்கிய விடயம். இந்த நலனோம்பு திட்டங்கள் மூலம் தமிழக அரசுக்கும் இலங்கை அரசுக்குமிடையிலான ஒரு அரசியல் ரீதியான இமனிதாபிமான ரீதியிலான நட்பை முதலமைச்சர் ஸ்டாலின் புதுப்பித்திருக்கிறார் எனலாம். 

தொடர்ந்தும் அகதிகளாக…?

தமிழக அரசின் இந்த திட்டங்கள் வரவேற்பை பெற்றிருந்தாலும் அகதி முகாம்களை தமிழர் மறுவாழ்வு முகாம் என முதலமைச்சர் மாற்றியமைத்தாலும்  இந்திய குடியுரிமை சட்டத்தின் படி இவர்கள்  இந்திய பிரஜைகள் அல்லர். அகதிகள் தான் என்பது கசக்கும் உண்மையாகும். இவர்களுக்கு மறுவாழ்வு என்பது அகதிகள் என்ற பதத்திலிருந்து இந்திய பிரஜைகள் என்ற அந்தஸ்த்தை வழங்குவதேயாகும். எனினும் இங்கு முக்கியமான விடயம் என்னவெனில் இந்தியாவானது அகதிகள் தொடர்பான சர்வதேச சாசனத்தில் இது வரை கைச்சாத்திடாத நாடாக உள்ளது.  ஆகவே இந்தியா இவர்களை பிரஜைகள் அல்லாத நபர்களாகவே பார்க்கின்றதுஇ உபசரிக்கின்றது. நாட்டின் பிரஜைகள் அல்லாத நபர்கள் அகதிகளாகவே பார்க்கப்படுகின்றனர். இதன் காரணமாக அவர்களுக்கு மேலதிக வரப்பிரசாங்களை சட்டத்தின் படி வழங்க முடியாது. அதாவது இவ்வாறு முகாம்களில் வாழ்ந்து வருபவர்களுக்கு அரசாங்க வேலை வாய்ப்புகளை பெற முடியாது. வாக்குரிமை இல்லை. அசையா சொத்துக்களையும் வைத்திருக்க உரிமையில்லை. 

ஆகவே இவர்களை  அகதிகளாகவே வைத்திருப்பதா அல்லது குடிரிமை சட்டங்களில் திருத்தங்களை கொண்டு வந்து இவர்களுக்கு இந்திய பிரஜைகள் என்ற அந்தஸ்த்தை வழங்க முடியுமா என இந்த விவகாரத்தை புது டெல்லி தான் கையிலெடுத்து பரிசீலனை செய்ய வேண்டும். அதே வேளை 1977 களில் பல்வேறு காரணங்களுக்காக தமது தாயக பூமியை நோக்கி இடம்பெயர்ந்த இலங்கையில் வாழ்ந்து வந்த இந்திய வம்சாவளி தமிழர்களுக்கு இந்திய குடியுரிமை உட்பட வாக்குரிமைகளும் வழங்கப்பட்டுள்ளன என்பது முக்கிய விடயம். அவர்களில் பெருந்தொகையானோர் பல அரச பதவிகளில் கோலோச்சி தற்போது ஓய்வும் பெற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இவர்கள் அகதிகள் என்ற பெயரோடும் அந்த சூழ்நிலையிலும் இடம்பெயர்வை மேற்கொண்டிருக்கவில்லை.  இந்நிலையில்  இந்திய அரசானது 2005 ஆம் ஆண்டில் இந்திய குடியுரிமை சட்டத்தில் அறிமுகப்படுத்திய வெளிநாட்டு இந்திய குடியுரிமை (Overseas Citizenship of India (OCI)  என்ற சட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது.

உலகின் பல நாடுகளிலும்  பரந்து வாழ்ந்து வரக்கூடிய இந்திய வம்சாவளி மக்களை ஒன்றிணைக்கவும் அவர்களின் மூலம் இந்தியாவில் முதலீடுகள் மற்றும் ஏனைய வர்த்தக தொடர்புகளை பேணவும்இ கலாசார உறவுகளை தக்க வைக்கவுமே இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம் நான்கு தலைமுறைகளுக்கு முற்பட்ட காலத்தில் கூட இந்தியாவில் தமது வேர்களைக் கொண்டிருந்த இந்திய வம்சாவளியினர் அதை நிரூபிக்கும் ஆவணங்களை கொண்டிருந்தால் வெளிநாட்டு இந்திய குடியுரிமை என்ற அந்தஸ்த்தை கொண்ட அட்டையை பெற தகுதியுள்ளவர்களாக கணிக்கப்பட்டனர். இது ஓர் மட்டுப்படுத்தப்பட்ட இரட்டை குடியுரிமை சலுகை என வர்ணிக்கப்பட்டது. இதன் மூலம் இவ் அட்டையை கொண்டிருப்பவர்கள் எந்த நாட்டிலிருந்தாலும் விசா இன்றி இந்தியாவுக்குள் உட்பிரவேசிக்கலாம். எவ்வளவு நாட்களும் தங்கலாம். ஆனால் வாக்களிக்கும் உரிமை கிடையாது. அசையா சொத்துக்களை வாங்க வேண்டுமானால் ஏற்கனவே அவர்களது இரத்த வழி உறவினர்கள் அங்கு சொத்துக்களை வைத்திருப்பவர்களாக இருத்தல் வேண்டும் போன்ற கட்டுப்பாடுகள் இருக்கின்றன. இதன் மூலம் இலட்சக்கணக்கானோர் பயனடைந்தனர். தமது பிள்ளைகளின் கல்வி செயற்பாடுகளை இந்தியாவில் முன்னெடுத்தனர். வர்த்தக தொடர்புகளை இலகுவாக மேம்படுத்தினர். 

ஆனால் இதில் முரண்பாடுகள் நீடித்தன. ஏனென்றால் 1823 ஆம் ஆண்டளவில் தமிழகத்தின் தென்னிந்திய கிராமங்களிலிருந்து உழைக்கும் வர்க்கமாக மத்திய மலை நாட்டின் பல பிரதேசங்களுக்கு வருகை தந்த தோட்டத்தொழிலாளர்களுக்கு இந்த வரப்பிரசாதங்களை அனுபவிக்க முடியாது போயிற்று. காரணம் அக்காலத்தில் தமது மூதாதையர்களின் பிறப்பு சான்றிதழ் மற்றும் கடவுச்சீட்டு போன்றவற்றை இவர்கள் பாதுகாத்து வைக்கவில்லை. இரண்டாவது 83 ஜுலை கலவரத்தில் பலர் இவற்றை இழந்தனர். அனைத்தும் சாம்பராகிப் போனது. 

 ஆதலால் இந்த  வெளிநாட்டு இந்திய குடியுரிமையைப் பெற இவர்களுக்கு விண்ணப்பிக்க முடியாது போனது. எனினும் இவர்கள் சார்பாக சில ஊடகங்கள் கண்டியிலமைந்துள்ள உதவி இந்திய தூதரகத்தை அணுகின. 1948 ஆம் ஆண்டு முற்றிலுமாக வாக்குரிமை பறிக்கப்பட்டு நாடற்றவர்களாகிய இவர்களில் கணிசமானோர் சிறிமா– சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் கீழ் மீண்டும் தாயகம் நோக்கிச் செல்ல மிகுதியானோருக்கு பதிவு பிரஜை என்ற அந்தஸ்த்து சான்றிதழ் வழங்கப்பட்டது. (இன்றும் அப்படித்தான் உள்ளது)  இவர்கள் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற அடையாளத்துடன் இலங்கையில் வாழ்ந்து வரும் வதிவிட பிரஜைகளே. இவர்களுக்கு  இலங்கை பிரஜைகள் என்ற அந்தஸ்த்தை அரசியலமைப்பின் ஊடாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகள் புறந்தள்ளப்பட்டே வருகின்றன. இவ்வாறான வதிவிட பிரஜைகள் என்ற பெயரோடு வாழ்பவர்கள் இந்திய வம்சாவளியினரே ஒழிய வேறு நாட்டினர் இல்லை. ஆகவே குறித்த அந்த ஆவணத்தை ஏன் வெளிநாட்டு இந்திய குடியுரிமையைப் பெற இவர்களால் பயன்படுத்த முடியாது என்பது தான் கண்டி  இந்திய உதவி தூதரகத்தில் எழுப்பப்பட்ட கேள்வி. இதை ஒரு தனிப்பட்ட விவகாரமாக எடுத்து ஆலோசனைகளைப் பெற புது டெல்லிக்கு தகவல்கள் அனுப்பப்பட்டாலும் அங்கிருந்து சாதகமான பதில்கள் இது வரை கிடைக்கவில்லையென்பது முக்கிய விடயம்.

இதே வேளை 2019 ஆம் ஆண்டு டிசம்பம் மாதம் மோடி அரசாங்கத்தால் நிறைவேற்றப்பட்டஇ   பாகிஸ்தான்இ ஆப்கானிஸ்தான்இ பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து மத துன்புறுத்தல் காரணமாக இந்தியாவுக்கு வந்த முஸ்லிம் அல்லாதவர்களுக்கு இந்திய குடியுரிமை கிடைக்க வழி செய்யும் இந்திய குடியுரிமை சட்டத் திருத்த மசோதா  குறித்தும் பல கண்டனக்குரல்கள் எழுந்திருந்தன. இதில் ஏன் இலங்கை அகதிகளை சேர்க்க முடியாது? அவர்களுக்கு இலங்கை பெளத்தர்களால் துன்புறுத்தப்பட்டு உயிரை காப்பாற்ற கடல் கடந்து வந்தவர்கள் தாம்இ அதுவும் மது துன்புறுத்தல்களே. அப்படியானால் ஏன் கடந்த 30 வருடங்களுக்கு மேல் அகதிகளாக உள்ள இலங்கையர்களுக்கு குடியுரிமை வழங்க முடியாது என நாடாளுமன்றத்தில் விழுப்புரம் எம்.பி.ரவிக்குமார் அப்போது கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் வழங்கிய உள்துணை இணை அமைச்சர் நித்தியானந்தராய்இ "  இந்தியக் குடியுரிமை என்பது இ 1955 ஆம் ஆண்டு சட்டம் மற்றும்  குடியுரிமை விதிகள் 2009 இன் அடிப்படையில் வழங்கப்படுகின்றன. அந்த சட்டத்தின் பிரிவு 5 இன் படி பதிவு செய்துகொண்ட அயல்நாட்டவர் எவரும் இந்திய குடியுரிமை பெற முடியும். அந்த சட்டத்தின் பிரிவு 6 இன் படி இயல்புரிமை (யெவரசயடணையவழைn ) அடிப்படையில் குடியுரிமையைப் பெற முடியும். சட்டவிரோதமாகக் குடிபெயர்ந்தவர்கள் இந்த இரு விதத்திலும் இந்திய குடியுரிமையைப் பெற முடியாது" என்று தெரிவித்துள்ளார். 

அப்படியானால் இலங்கை அகதிகளை இ “அகதிகள் “  என்று அழைப்பதிலும் பார்க்க சட்டவிரோத குடியேறிகள் என்ற பெயரிலும் வைத்திருப்பதை இந்திய அரசு விரும்புகின்றதா என கேள்வி எழுப்பத்தோன்றுகின்றது. 

தமிழகத்தில் அகதிகளாக இருப்பவர்களில் பலர் அங்கேயே பிறந்து முதல் தலைமுறையை தாண்டியுள்ளனர். அவர்களுக்கு  இலங்கை என்பது அருகிலிருக்கும் ஒரு நாடு அவ்வளவு தான். இவர்களில் எத்தனைப்பேர் மீண்டும் இலங்கை வந்து இந்த நாட்டின் பிரஜைகளாக இருக்கப்போகின்றனரோ தெரியாது. ஆனால் ஒரு நாட்டில் அகதி என்ற பெயரோடு இருப்பதிலும் பார்க்க ஒரு நாட்டின் பிரஜை என்ற அந்தஸ்த்தோடு இருப்பதைத் தான் எவரும் விரும்புவர் என்பதை கூறத்தேவையில்லை. தமிழக அரசு ஒவ்வொரு வருடமும் இவர்களுக்கு நிதி ஒதுக்கீடு செய்யத் தயாரா அல்லது இதைத் தவிர்ப்பதற்கு இவர்களுக்கு இந்திய குடியுரிமையைப்பெற்றுத்தர டில்லியை ஏதாவதொரு வகையில் அணுகுமா? 

சிவலிங்கம் சிவகுமாரன்