

*சமாதி நிலையில் அமைந்தவாறு செதுக்கப்பட்டு வரும் இச்சிலை 67.5 அடி உயரத்தில் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது.
*இந்தியாவின் பிரபல சிற்பகலாமணி பத்மஸ்ரீ எம்.முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையின் கீழ் அவரது குழுவினர் இச்சிலையை செதுக்கி வருகின்றனர்.
* 2001ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் உள்ள புத்தர் சிலை சேதமாக்கப்பட்ட சம்பவத்தின் எதிரொலியாகவே இச்சிலை உருவாக்கும் எண்ணம் இப்பகுதி கிராம மக்களுக்கு எழுந்துள்ளது.
இலங்கையில் பௌத்த மதம் வேரூன்றிய பிறகு பௌத்தத்தை வளர்த்தெடுப்பதற்காக பண்டைய மன்னர்கள் நிர்மாணித்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை நாம் இன்று கண்குளிர கண்டு வருகிறோம். பண்டைய காலத்திலிருந்து அதாவது கி.பி 1235 ஆம் ஆண்டுக்குப்பிறகு அனுராத புரம் ,பொலனறுவை யுகங்கள் என அழைக்கப்பட்ட காலங்களே பௌத்தம் தலை தூக்கிய பொற்காலம் என குறிப்புகள் சொல்கின்றன. 12 ஆம் நூற்றாண்டுக்கு முற்பட்ட காலத்திலும் மன்னர்களால் நிர்மாணிக்கப்பட்ட அவுகன புத்தர் சிலை, வெல்லவாயபுதுருவாகல சிலை, புத்தலமாளிகாவில சிலை, என்பவற்றை உதாரணங்களாகக்கூறலாம்.பண்டைய கால பௌத்த பாரம்பரியங்களை எமக்கு எடுத்துக்கூறும் வகையில் அமைந்துள்ள புத்தர் சிலைகள் மற்றும் விகாரைகள் என்பன இலங்கையின் பௌத்த வரலாற்றையும் பண்டையகால கட்டிடகலை நுணுக்கங்களையும் எமக்கு பாறை சாற்றுகின்றன.
இந்நிலையில் இலங்கையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் மிக உயர்ந்து கருங்கல் சமாதி புத்தர் சிலை பற்றிய தகவல்களை இங்கு குறிப்பிடுதல் அவசியம். குருணாகல் பகுதியில் அமைந்துள்ள ரம்படகல,ரிதிகமமொனராகலை விகாரையில் அமைந்துள்ள கருங்கற்பாறையில் ஒரு சமாதி நிலை புத்தர் சிலை நிர்மாணிக்கப்பட்டு வருகின்றது. 2001 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இப்பணிகள் தற்போது முடிவடையும் கட்டத்தில் உள்ளதாக மேற்படி விகாரையின் பிரதம குருவான வணக்கத்துக்குரிய அமரமௌலி தேரோ எமக்குத்தெரிவித்தார்.
சிலை செதுக்கப்பட முன்னர் கருங்கற் பாறையின் உருவம்
இதில் குறிப்பிடப்படவேண்டிய முக்கிய அம்சம் என்னவெனில் இச்சிலையை இந்தியாவின் பிரபல சிற்பக்கலைஞரான பத்மஸ்ரீ சிற்ப கலாமணி எம்.முத்தையா ஸ்தபதியின் ஆலோசனையின் பேரில் அவரது குழுவினரே நிர்மாணித்து வருகின்றனர். சமாதி நிலையில் அமைந்தவாறு செதுக்கப்பட்டு வரும் இச்சிலை 67.5 அடி உயரத்தில் அமையுமாறு நிர்மாணிக்கப்பட்டு வருகிறது. இச்சிலையை நிர்மாணிப்பதற்கு இரண்டரை கோடி ரூபா செலவாகும் என மதிப்பிடப்பட்டிருந்தாலும் இவ்விடத்தை சீர்படுத்தி தனியான தியான மண்டபங்கள் அமைப்பதற்கு மேலும் ஒரு கோடியே 40 இலட்சம் ரூபாவரை செலவாகும் என பிரதம குரு அமரமௌலி தேரோ தெரிவிக்கிறார். இது குறித்து அவர் கருத்துத்தெரிவிக்கையில் செலவீனத்தை பார்க்காமல் இந்த புத்தர் சிலையை நிர்மாணிப்பதற்குறிய வேலைகளை சிற்பக்குழுவினர் 2002 ஆம் ஆண்டு மனத்திடத்துடன் ஆரம்பித்து விட்டனர்.
வரலாற்றில் இடம்பிடிக்கப்போகும் இச்சிலை நிர்மாணப்பணிகளுக்காக அப்போதைய இந்தியத்தூதுவர் நிருபமா ராவ் ரூபா 25 இலட்சத்தை மனமுவந்து கொடுத்துதவினார். மேலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா அம்மையார் ஒரு இலட்சததையும்,மலீக் சமரவிக்ரம ரூபா 5 இலட்சத்தையும், மற்றும் தாராள சிந்தையுடையோர் பலர் இந்நிர்மாணப்பணிகளுக்காக மனமுவந்த நிதியுதவி செய்துள்ளனர். ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 25 இலட்சம் ரூபா கொடுத்துதவியதையும் எம்மால் மறக்க முடியாது.
இச்சிலை பற்றி குறிப்பிட்டுக்கூறவேண்டிய முக்கிய விடயம் என்னவென்றால் பண்டை காலத்திலிருந்து அதாவது 12 ஆம் நூற்றாண்டுக்கு பிற்பட்ட காலத்தில் வெளிநாட்டவரின் ஆதிக்கத்தின் கீழ் அக்காலப்பகுதியில் ஏற்பட்ட சமூக ,பொருளாதார மாற்றங்களினால் எமது பண்பாடு கலாசாரத்துடன் இணைந்து கலைகளும் படிப்படியாக வீழ்ச்சியுறத்தொடங்கின. சுதந்திரத்துக்கு பிற்பட்ட காலப்பகுதியில் குறிப்பிட்டுக்கூறப்படவேண்டிய கலைப்படைப்பு என்றால் 1950 களில் நிர்மாணிக்கப்பட்ட விகேரஹேன புத்தர் சிலையைக்குறிப்பிடலாம். இச்சிலையானது கருங்கல்லில் நிர்மாணிக்கப்படாதபோதும் சுதந்திரத்தின் பின்னர் உருவாகிய எமது கலைப்பண்பாட்டை எடுத்துக்கூறும் குறிப்பிடத்தக்க ஒரு வராற்று சின்னமாக விளங்குகிறது. இதற்குப்பின்னர் எமது இலங்கை தீவில் பரவலாக இச்சிலையை ஒத்த சிலைகள் ,கருங்கல்லில் செதுக்கப்படாத சிலைகள் என்பன எழுந்தள்ளதை அவதானிக்கமுடிகின்றது.
தற்போது எமது வித்தியா சாகர பிரிவென விகாரையில் நிர்மாணிக்கப்பட்டு வரும் சமாதி நிலை புத்தர் சிலை அமைக்கப்படுவதற்கு பின்புலமாய் இருந்த காரணங்களை இவ்விடத்தில் கூறுவது சாலச்சிறந்தது என்றே நான் கருதுகிறேன்.2001 ஆம் ஆண்டு ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள பாமியன் புத்தர் சிலைகள் தலிபான்களால் சேதமாக்கப்பட்ட சம்பவம் எமது கிராமத்தில் உள்ள மக்களை வெகுவாக பாதித்தது.இக்கசப்பான நிகழ்வினால் ஏற்பட்ட மனத்தாக்கத்தின் வெளிப்பாடே இம்மக்கள் திடசங்கற்பத்துடன் இக்கருங்கல் புத்தர் சிலை செதுக்கும் பணிக்கு ஆதரவளிக்க ஏதுவாயிற்று. இச்சிலையை நிர்மாணிக்கும் வேலைப்பணிகளுக்கு இக்கிராம மக்கள் அடிக்கடி தமது உடல் உழைப்பை வழங்கி அருஞ்சேவையாற்றி வருகின்றனர்.மேலும் சிலர் பண உதவிக்கு அப்பாற்பட்டு இப்பணிக்குத்தேவையான இயந்திர உபகரணங்களையும் வழங்கி உதவி செய்து வருகின்றனர் என்று கூறினார்.
எதிர்கால செயற்பாடுகள்இக்கருங்கல் சமாதி புத்தர் சிலை தொடர்பான எதிர்கால செயற்றிட்டங்கள் குறித்து அமரமௌலி தேரர் கூறுகையில் ‘இச்சிலை செதுக்குவதற்கு ஒதுக்கப்பட் பகுதியைச்சூழவுள்ள பாறையின் ஏனைய பகுதிகள் அகற்றப்பட்டுவிட்டன.குறிப்பிட்ட பாறையில் சிலையின் மேற்பகுதி அதாவது சிரசு பாகம் முழுமையாக செதுக்கப்பட்டு விட்டது. இச்சிலையை 2009ஆம் ஆண்டளவில் முழுமையாக செதுக்கி முடித்து விட முடியும் என பிரதான சிற்பி நம்பிக்கை தெரிவித்துள்ளார். இச்சிலை நிர்மாணம் தொடர்பில் உள்ளூர் மற்றும் வெளிநாட்டவர்களும் கூட மிக உற்சாகத்துடன் தமது ஒத்துழைப்பை வழங்கி வருகின்றார்கள்.
இங்கு இன்னுமோர் விடயத்தை கூற வேண்டும். எமது பண்டைய மன்னர்கள் கற்பாறைகளில் செதுக்கி வைத்ததும்,இன்று சிதைவடைந்த நிலையில் உள்ளதுமான அனுராதபுரம் பொலன்னறுவை கால சிலைகள் உங்கள் பார்வையில் படும் போது ஏற்படும் மகிழ்சி உணர்வை உங்களால் மதிப்பிட முடியுமா? அதன் பெறுமதியை வெறும் பண அடிப்படையில் எடை போட முடியுமா? மொனராகலை பிரிவெனா விகாரையில் உள்ள இளம்பிக்குமாரும்,கிராமத்தவர்களும் அனுபவம் மிக்க இந்திய சிற்ப கலைஞர்களின் உதவியுடன் மொனராகலை இரம்பொடகலையில் அமைந்துள்ள ஓர் உயிரற்ற பாறைக்கு உயிரூட்டி மிகப்பிரமாண்டமான தனிக்கருங்கற் புத்தர் சிலை ஒன்றை உருவாக்கி வருகின்றனர். ஆகவே உயிரற்ற ஒரு பாறை புத்த பெருமானின் மேன்மையான இயல்புகள் வெளிப்படும் விதமாக படிப்படியாக உயிரூட்டப்படுவதை பார்த்து ஆனந்தமடைய உங்கள் அனைவரையும் குடும்பம் சகிதம் அன்போஐ அழைக்கின்றோம். தேசிய பொக்கிசமாகவும் எம் எதிர்காலச் சந்ததியினரின் சொத்தாகவும் விளங்கப்போகும் இப்பிரமாண்டமான சிலையை வெற்றிகரமாகக்செதுக்கி முடிக்க தங்கள் அனைவரதும் தாராளமான பங்களிப்பையும் பெறுமதி மிக்க ஒத்துழைப்பையும் இக்கருங்கற்சிலை நிர்மாண குழு மிகவும் ஆவலுடன் எதிர்ப்பார்க்கின்றது’ என்கிறார் தேரர்.இலங்கையின் வரலாற்றில் இடம்பெறப்போகின்ற இக்கருங்கற் சமாதி புத்தர் சிலைநிர்மாணப்பணிகள் சிறப்பாக இடம்பெற நாமும் பிரார்த்திப்போம்.இச்சிலையின் நிர்மாணப்பணிகள் மற்றும் விகாரையின் வரலாறு குறித்து அறிந்து கொள்ள http://www.samadhibuddhastatue.org/ எனும் இணையத்தளத்தில் பிரவேசித்து தகவல்கள் படங்களை பெறமுடியும்.
* இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது?
‘காலநிலை மாற்றமானது இன்று உலகை அச்சுறுத்தும் ஒரு விடயமாக மாறியுள்ளது. இந்த பூமி பந்தை பாதுகாப்பான எவ்வித சூழல் பாதிப்புகளும் இல்லாத ஒன்றாக மாற்றுவதற்குரிய வழிவகைகளை முன்னெடுத்துச்செல்ல இளைஞர்கள் தமது சக்தியை முதலீடு செய்ய முன் வரவேண்டும், காலநிலை மாற்றங்குறித்து விழிப்புணர்வை பெறவேண்டும்.அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளில் உள்ள இளையோர்,குறிப்பாக இளம்யுவதிகளும் பெண்களும் விவசாயம், உணவு, நீர்,விறகு சேகரித்தல் என்பவற்றில் கூடுதல் பங்காற்றுகின்றனர். ஆனால் எதிர் காலத்தில் இதற்கு பற்றாக்குறை நிலவும் அபாயம் அதிகமாகவே உண்டு.ஆகவே புதிய தொழில்நுட்பம் மற்றும் பழக்கவழக்கங்களை (கல்வியறிவு) கொண்டு இளையோர் எதிர்கால அபாயமான காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளும் வகையில் இப்போதிருந்தே தமது பங்களிப்பை நல்க வேண்டும்’
பான் கீன் மூன் (செயலாளர் நாயகம் ஐக்கிய நாடுகள் சபை)
சர்வதேச இளையோர் தினமான ஓகஸ்ட் 12 ஆம் திகதியன்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அவர்கள் தனது விசேட அறிக்கையில் தெரிவித்திருந்த கருத்துக்களின் சாரமே இது.அவர் ஏன் காலநிலை மாற்றம் குறித்து உலக வாழ் இளையோருக்குக்கூறியுள்ளார்? காரணம் இல்லாமலில்லை. இவ்வாண்டு அனுஷ்டிக்கப்பட்ட சர்வதேச இளையோர் தினத்தின் பிரதான கருப்பொருள் என்ன தெரியுமா? ‘ இளையோரும் காலநிலை மாற்றமும் ; செயற்படுத்துவதற்கன தருணம் (YOUTH AND CLIMATE CHANGE: TIME FOR ACTION) என்பதாகும். ஐக்கிய நாடுகள் சபையினால் வருடாவருடம் குறிப்பிட்ட ஒரு கருப்பொருள் பிரகடனப்படுத்தப்பட்டு அதற்கேற்ப அவ்வருடம் செயற்றிட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்படும். சரி இதை ஏன் இச்சந்தர்ப்பத்தில் கூற வந்தேன் என்கிறீர்களா? ஐக்கிய நாடுகள் சபையானது தனது மில்லேனிய அபிவிருத்தி இலக்குகளுக்கேற்பவே திட்டங்களை முன்னெடுத்துச்செல்கிறது. அந்த வகையில் ஒவ்வொரு பிராந்தியத்திற்கும் அங்குள்ள நாடுகளுக்கும் இத்திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்படவேண்டும் என்பதே நோக்கு. ஆனால் அபிவிருத்திடைந்து வரும் நாடுகளில் உள்ள இளைஞர் யுவதிகள் இன்று எதிர்நோக்கியுள்ள பெரும் பிரச்சினை வேலையின்மையாகும். இது ஒரு பூகோள பிரச்சினை என ஐ.நாவும் ஏற்றுக்கொள்கிறது.
இச்சந்தர்ப்பத்தில் முதலாம் உலக நாடுகளிலும் இப்பிரச்சினை இல்லை என்று கூறமுடியாது ஆனால் அங்குள்ளவர்கள் மூன்றாம் உலக நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினர் போல் பொருளாதார ரீதியிலும் அடக்குமுறையிலும் பாதிக்கப்பட்டவர்கள் இல்லை என்பதே உண்மை. இந்நிலையில் ஐ.நா கூட தனது இலக்குகளை முன்னெடுத்துச்செல்ல இளையோரை எவ்வாறு அதில் பங்குகொள்ளச்செய்கிறது என்பதை அறியக்கூடியதாகவுள்ளது. உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள சர்வதேச இளையோர் தினத்தின் இவ்வருட கருப்பொருளும் ஐ.நாவின் பிரகடனமும்.ஆனால் எமது இலங்கை போன்ற நாடுகளில் வாழும் இளம் சமுதாயத்தினருக்கு இது பொருந்துமா என்பதை நினைத்துக்கூட பார்க்கமுடியாதுள்ளது. நமது நாட்டின் பொருளாதார சூழல், யுத்த நிலைமை,அரசியல் ஸ்திரமற்ற தன்மை என்பவற்றால் ஏற்பட்டிருக்கும் வேலையில்லா திண்டாட்டம் அது தொடர்பில் இளைஞர் யுவதிகளின் ஏக்கம், போராட்டம் என்பன குறித்து புதிதாக ஒன்றும் கூறத்தேவையில்லை. இப்படி ஒரு நிலையில் இருக்கும் இளைஞர் கூட்டத்திடம் சென்று காலநிலை மாற்றத்திற்கு உதவுங்கள் என்றால் என்ன நடக்கும் ? இச்சந்தர்ப்பத்தில் நாம் ஐ.நாவை குற்றம் கூறவில்லை. மாறாக பல நாடுகளில் வசிக்கும் இளையோர் பலர் தன்னிறைவு பெற்ற பொருளாதார சூழலில் வாழ்ந்து இன்று உலகம் எதிர்நோக்கும் பல பிரச்சினைகளுக்கு தீர்வு காண ஆயத்தமாகிக்கொண்டிருக்கும் போது நாம் இது வரையிலும் வேலையில்லா பிரச்சினைக்கு முகங்கொடுத்துக்கொண்டிருக்கிறோம்.
இலங்கையும் இளையோரும்இலங்கையின் மொத்த சனத்தோகையில் கால் பங்கினர் இளையோராவர்.இளையோரை எந்த வயதுக்குள் அடக்கலாம் என்பது பல நாடுகளுக்கும் உள்ள ஒரு தடுமாற்றம்.எனினும் 1529 வயதுக்குட்பட்டோரே இளையோர் என்பது பொதுவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு கணக்கு. இளைஞர் யுவதிகள் இலங்கையின் அபிவிருத்தியில் எந்தளவிற்கு பங்களிப்பை வழங்குகின்றனர் என்பது ஒரு பக்கம் இருக்க மறுபுறம் கல்வி கற்று பட்டதாரிகளாகியும் வேலையில்லாதவர்களின் நிலையும் கணக்கிலெடுக்கப்படவேண்டியதொன்று. இவர்களின் தொடர்ச்சியான போராட்டத்தை நாம் அவ்வப்போது ஊடகங்கள் வாயிலாக அவதானித்துக்கொண்டு தான் வருகிறோம் ஆனால் என்ன பயன்? இறுதியில் நாட்டின் அபிவிருத்தியில் பங்களிப்பு நல்காது இருக்கும் ஒரு கூட்டம் என்ற பெயர் தான் இவர்களுக்கு கிட்டப்போகின்றதா என்று கவலையுடன் நினைக்கத்தோன்றுகின்றது. இதற்கு அரசாங்கங்களின் உரிய கொள்கை வகுப்பின்மையே என காரணங்காட்டப்படுகிறது. தொடர்ச்சியாக இவர்கள் அலட்சியப்படுத்தப்பட்டுக்கொண்டே வந்தால் இவர்களுக்கு அடுத்தபடியாக களமிறங்க காத்திருக்கும் கூட்டத்திற்கு என்ன பதில் சொல்வது? இவர்கள் கற்க கல்வி ஒரு சதவீதத்திற்கும் பயன்படாமல் போகப்போகின்றதா? 2006ஆம் ஆண்டு அமைச்சரவை தீர்மானத்தின் படி இளைஞர் வேலை வாய்ப்பிற்கான தேசிய செயற்பாட்டு திட்டம் ஒன்று கொண்டு வரப்பட்டது. இதன் பிரதான திட்டங்களில் ஒன்று 2010 ஆம் ஆண்டில் வேலையில்லாத இளையோர் தொகையை 15 வீதமாக குறைத்தல்,இதுவே 2015ஆம் ஆண்டில் 8 வீதமாக்கப்படவேண்டும் என்பதாகும்.இந்த திட்டமானது ஐ.நாவின் YEN எனப்படும் பூகோள இளையோர் வேலைவாய்ப்பு வலைப்பின்னல் என்ற வேலைத்திட்டத்தின் கீழ் அமுல் படுத்தப்பட்டதொன்றாகும். இதற்கு சர்வதேச தொழிலாளர் ஸ்தாபனமும் உலக வங்கியும் ஆதரவு வழங்குகின்றன. 2007ஆம் ஆண்டின் படி இலங்கையில் வேலையில்லா இளையோரின் சதவிகிதம் 20 ஆகும். ஆக இன்னுமொரு சர்வதேச இளையோர் தினமும் வந்து போய்விட்டது,நாம் என்ன செய்து கொண்டிருக்கிறோம்?இத்திட்டத்தை ஒரேடியாக நாடு முழுவதிலும் செயற்படுத்த முடியாது எனக்கூறப்படுகிறது. சர்வதேச தொழில் ஸ்தாபனம் நாடு முழுவதிலும் முதலில் இது தொடர்பான ஆய்வொன்றை மேற்கொள்ள வேண்டும் என இளைஞர் விவகார அமைச்சு கூறியுள்ளது.
இலங்கையைப்பொறுத்தவரை பல்வேறு கல்வித்தகைமையுடைய சுமார் ஒரு இலட்சத்து ஐம்பதினாயிரம் பேர் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தையில் நுழைய ஆயத்தமாகின்றனர். ஆனால் இவர்களில் எத்தனைபேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கின்றது? 2008 ஆம் ஆண்டின் ஒரு ஆய்வின் படி இலங்கையில் வேலையற்றிருப்போரில் அரைவாசி பேர் இளையோர் தானாம்.இது சதவிகிதத்தில் 41 ஆகும். இவர்கள் 1524 வயதுக்கிடைப்பட்டவர்கள் என்பது இன்னுமொரு சோகம்.
வேலையில்லாதோரின் கல்வித்தராதரங்களைப்பார்க்கும் போது இலங்கையில் வேலை வாய்பொன்றை பெற்றுக்கொள்ளும் வகையில் தொழிற்கல்வி முறை இல்லாதது ஒரு பிரதான குறைபாடாகத்தெரிகிறது. வேலையில்லாதிருப்பவர்களில் க.பொ.த சா/ தரத்திற்கு குறைந்த தகைமை கொண்டோர் 3.2 வீதமாகும். க.பொ.த சா/தரம் கொண்டவர்கள் 6.4 வீதம்ஆனால் வேலையில்லா இளையோரில் உயர் தரம் மற்றும் அதற்கு மேலான தகைமைகளை கொண்டோர் 11 வீதமென் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.அப்படி பார்க்கும் போது வேலையில்லா பட்டதாரிகளின் போராட்டம் நியாயமாகவே படுகின்றது.
கல்வி கற்று வீட்டில் இருக்கும் யுவதிகள்இலங்கையில் வேலையில்லாதோர் தொகையில் இளைஞர்களின் தொகையை விட (14.9%) இருமடங்கு இளம் யுவதிகளின் தொகையாகும் (28.4%வயது 1524) இது ஒரு பாரதூரமான விடயம்.இதில் குறிப்பிட்டுக்கூறவேண்டிய மற்றுமோர் விடயம் ஒரே பணியே இருபாலருக்கும் கொடுக்கப்பட்டாலும் பெண்ணிற்கு வழங்கப்படும் ஊதியத்தொகை குறைவாகும்.இதனால் இவர்களில் பலர் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லாததால் வேலைக்குச்செல்லாமல் வீட்டில் இருக்கின்றனர். நிர்மாணம் மற்றும் விவசாயத்தோட தொடர்புபட்ட பல தொழில் வாய்ப்புகள் பெண்களுக்கென்று இருந்தாலும் அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்கப்படுவதில்லையென சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
பொதுவாக இன்று இளையோர் அரசாங்க வேலைகளை மட்டும் எதிர்ப்பார்த்திருப்பதாக ஒரு குற்றச்சாட்டு நிலவுகிறது.ஆனால் அதை விட ஊதியம் கிடைக்கும் தனியார் துறை வேலைக்கு ஏற்றவாறு தங்களை உருவாக்கிக்கொள்ள பல தடைகள் உள்ளதாகத்தெரிவிக்கப்படுகிறது. இருப்பினும் அரச மற்றும் தனியார் துறை இரண்டும் இணைந்ததாக முன்னெடுத்துச்செல்லப்படும் வேலைத்திட்டங்கள் மூலம் இவர்களின் கனவை நனவாக்கலாம் என்கின்றனர் சில ஆய்வாளர்கள். அரசாங்க தொழில் வாய்ப்புகள் மூலம் ஏனைய சலுகைகளையும் பெறலாம் ஆனால் தற்போதுள்ள இளையோர் ஊதியம் மற்றும் தொழில் பாதுகாப்பு போன்ற விடயங்களில் மாத்திரம் அக்கறை காட்டுபவர்கள் அல்ல என்கின்றது ஒரு ஆய்வு. எனினும் அரசாங்கமும் ஒவ்வொரு வருடமும் தொழில் சந்தைக்கு உள் நுழைய காத்திருக்கும் இளையோரின் எண்ணிக்கையைப்பார்த்து சரி அவர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத்தரும் திட்டங்களை முன்னெடுக்கவேண்டும். இதில் வெளி நாட்டு வேலை வாய்ப்பும் முக்கிய இடத்தைப்பிடிக்கலாம். இல்லாவிடின் அடுத்த தலைமுறை வாரிசுகளும் போராட்டத்தில் தான் காலத்தை கடத்த வேண்டியேற்படும்.