Tuesday, November 23, 2021

நாட்டின் கடனை அடைப்பதற்கு தேயிலைக்கு மாற்றீடாக கஞ்சா ?


இவ்வருடம் மார்ச் மாதம் ஆங்கில வாரப்பத்திரிகையொன்று, பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித்தகைமைகள் குறித்து தகவல் அறியும் சட்டம் ஊடாக எழுப்பப்பட்ட கேள்விகளை பாராளுமன்ற செயலாளர் நிராகரித்திருந்தமை குறித்து செய்தி வெளியிட்டிருந்தது. தகவல் அறியும் ஆணைக்குழு பதில் அளிக்குமாறு உத்தரவிட்டிருந்தும் கூட , பாராளுமன்ற உறுப்பினர்களின் கல்வித் தகுதி பற்றி கேள்விகள் எழுப்புவது பொது நலன் சார்ந்த விடயமல்ல என்று பதில் வழங்கப்பட்டிருந்தது. அது பாராளுமன்ற உறுப்பினர்களின் தனிப்பட்ட விடயம் என்றும் பதில் வழங்கப்பட்டுள்ளது.

சில உறுப்பினர்களின் நடத்தைகள், அவர்கள் கூறும் கருத்துக்களை அடிப்படையாகக்கொண்டே எவ்வாறான தகைமை கொண்டவர்கள் நாட்டின் உயரிய சபையில் அங்கம் வகிக்கின்றார்கள் என்பது குறித்து ஆராய வேண்டியேற்பட்டது. ஆனால் அந்த நிலைமை இன்னும் தொடர்வதையே சிலரின் பேச்சுக்கள் எமக்கு உணர்த்துகின்றன. அதில் ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பி. டயானா கமகேயின் அண்மைக்கால கூற்றுக்கள் பலரை முகஞ்சுளிக்க செய்துள்ளன. எனினும் தனது கருத்திலிருந்து பின்வாங்காது மீண்டும் மீண்டும் அதையே கூறி தன்னை பேசுபொருளாக்க முயற்சி செய்கின்றாரோ தெரியவில்லை.

கடன் நெருக்கடியில் சிக்கித்தவிக்கும் இலங்கையை அதிலிருந்து மீட்க கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்ய வேண்டும் என கடந்த வாரம் அவர் பாராளுமன்றில்

உரையாற்றியிருந்தார். மேலும் இலங்கையின் பிரதான ஏற்றுமதி பயிரான தேயிலையின் பாரம்பரியம் தற்போது மறைந்து விட்டது என்றும் சீனா உட்பட பல நாடுகள் தமது நாடுகளில் தேயிலையை பயிரிட்டு வருவதால் இனியும் இலங்கையில் அதை நம்பிக்கொண்டிருப்பதில் பயனில்லை என்றும் பொருளாதார ஆய்வு முயற்சிகளில் ஈடுபட்டு கலாநிதி பட்டம் பெற்றவர் போன்று கருத்துக்களை முன் வைத்து வருகின்றார் அவர்.

ஐக்கிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் எம்.பியாக அவர் தெரிவானாலும் 20 ஆவது திருத்தச்சட்டத்துக்கு ஆதரவளித்ததன் காரணமாக, கட்சியின் கொள்கையை மீறியமைக்கு அவரது பாராளுமன்ற உறுப்புரிமையை நீக்கும் படி ஐக்கிய மக்கள் சக்தி தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அறிவித்துள்ளது. மேலும் கட்சி உறுப்புரிமையிலிருந்தும் நீக்கியுள்ளது. எனினும் அவர் அதை எதிர்த்து உயர்நீதிமன்றில் மனுவொன்றை தாக்கல் செய்துள்ளமை முக்கிய விடயம். தமக்கு ஆதரவாக செயற்பட்டமையால் அவருக்கு அரசாங்கத் தரப்பு ஆலோசனைகளையும் ஆதரவையும் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

ஆனால் இப்படியானவர்களை பாராளுமன்றில் பேச வைத்து உயரிய சபையை பரிகாசத்துக்குள்ளாக்கும் நிலைமை பற்றி அரசாங்கம் யோசிப்பதில்லை. இதே டயானா கமகே தான் இவ்வருடம் ஏப்ரல் மாதம் இணையமொன்றுக்கு வழங்கிய நேர்காணலின் போது எமது நாட்டில் பாலியல் தொழிலை சட்டமாக்க வேண்டும் என்றும் இலங்கையை தாய்லாந்து போன்று மாற்றியமைத்து இரவு நேர வாழ்க்கை முறை மற்றும் கலாசாரத்தை ஊக்குவிக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டிருந்தார்.

இவ்வாறான நடைமுறைகளை அமுல்படுத்த பெளத்த தர்மமும் கலாசாரமுமே தடையாகஇருப்பதாகக் குறிப்பிட்ட அவர், தாய்லாந்து ஒரு பெரிய பெளத்த நாடு என்றும் அங்கு இவ்வாறு இருக்கையில் இங்கு ஏன் அப்படி இருக்க முடியாது என்று யாருக்கும் பதில் கூற முடியாத ஒரு அறிவுபூர்வமான கேள்வியை எழுப்பியிருந்தார். இத்தனைக்கும் அவரும் ஒரு பெளத்தர் தான். ஆனால் கடந்த வாரம் அவர் கஞ்சா பயிர் வளர்த்து ஏற்றுமதி செய்வதை சட்டமாக்குவதற்கும் அது தேயிலையின் மாற்றீடாக இருக்கும் என்பதற்கும் கூறிய விளக்கங்கள் முக்கியமானவை. அதாவது நாட்டின் கடனை அடைப்பதற்கு சர்வதேச நாணய நிதியம் போன்று அமைப்புகளிடம் கையேந்தி யாசகம் எடுக்கத் தேவையில்லை என்றும் கஞ்சாவை பயிரிட்டு ஏற்றுமதி செய்தால் 3 வருடங்களில் நாட்டின் கடனை அடைத்து விடலாம் என்றும் குறிப்பிட்ட அவர் தேயிலையை இனி வணிக பயிராக ஏற்க முடியாது என்றும் கூறியிருந்தார்.

இயற்கையினாலும் கடவுளினாலும் நாம் கஞ்சா செடிகளை ஆசிர்வாதமாகப் பெற்றிருக்கிறோம். 1800 களில் பிரித்தானியரால் கொண்டு வரப்பட்ட கஞ்சா பயிர் தொடர்பான சட்டங்களை இரத்து செய்ய வேண்டும். அதை இலங்கையில் சட்டபூர்வமாக்க நீதி அமைச்சர் வழிவகைகளை ஏற்படுத்த வேண்டும் என பரிந்துரையும் செய்கிறார்.

இவ்வருடம் ஏப்ரல் மாதம் பாராளுமன்றில் டயானா கமகே எம்.பி இதே விவகாரத்தை பேசியிருந்தார். எனினும் தற்போது பெருந்தோட்ட பயிரான தேயிலைக்கு மாற்றீடாக அவர் கஞ்சா பயிர்ச்செய்கையை சுட்டிக்காட்டியிருப்பது சந்தேகங்களையும் ஏற்படுத்தியுள்ளது. ஏனென்றால் அவர் தேயிலை ஏற்றுமதி வருமானத்தை விட கஞ்சா பயிரை ஏற்றுமதி செய்தால் கிடைக்கும் வருமானத்தைப் பற்றியும் புள்ளி விபரமாகக் கூறியுள்ளார்.

ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் (EIB) கணிப்புகளை எல்லாம் இவர் உதாரணம் காட்டுகின்றார். அடுத்த பத்து வருடங்களில் உலகளாவிய ரீதியில் கஞ்சாவின் சந்தை பங்கு ஆயிரம் வீதம் அதிகரிக்கும் என்றும் 2027 இல் அது 140 பில்லியன் அமெரிக்க டொலர் சந்தைப் பெறுமதியை பெற்றிருக்கும் என்றும் கூறுகிறார்.

கஞ்சாவை ஒரு மருத்துவ பொருளாக ஏற்றுமதி செய்வதன் மூலம் கிடைக்கப்போவது ஒன்றுமில்லை. ஏனென்றால் உலகில் அதை மருத்துவ மூலிகையாக பாவிப்பதை விட போதை பொருளாக பாவிப்பதே அதிகம். இதன் பிரதான மூன்று வகைகளே இன்று உலகெங்கும் பாவிக்கப்பட்டு வருகின்றன. ஆரம்ப காலத்தில் நாருக்காகவும் வித்து உற்பத்திக்காகவுமே இவை பயன்படுத்தப்பட்டன. எனினும் இதன் தாவர குடும்பத்தில் அதிபோதையூட்டும் வகைகள் கண்டு பிடிக்கப்பட்ட பின்னரே இதை ஒரு போதை தாவரமாக உலகமே பார்க்கின்றது.

இன்று போதை பொருளை உற்பத்தி செய்வதில் முதலிடத்திலிருக்கும் ஆப்கானிஸ்தானின் நிலைமைகள் பற்றி ஒன்றும் கூறத்தேவையில்லை. நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் மூன்றில் ஒரு பகுதி வருமானமானது அபின் ,மோபைன், ஹாசிஸ் போன்ற போதை பொருட்கள் மூலமே கிடைக்கின்றமை பகிரங்க உண்மை. அங்கு அபின் தோட்டங்களை இங்குள்ள காய்கறி தோட்டங்கள் போன்று எங்கும் காணலாம். அச்செய்கையிலேயே கவனம் செலுத்தியதால் அங்கு தொழில்சார் பயிற்சியில்லாது உருவாகிய இளம் சமூகத்தினரின் எண்ணிக்கை மட்டும் 30 இலட்சத்துக்கும் அதிகமாகும். மிகவும் விலை கூடியதும் அதிக போதையை தருவதுமான அபினை தரும் ஓபியம் செடியை வளர்ப்பதிலேயே அந்நாட்டின் ஒரு தலைமுறை சீரழிந்து விட்டது. இதிலிருந்தே ஹெரோயின் உள்ளிட்ட வேறு போதை பொருட்களும் தயாரிக்கப்படுகின்றன. இன்று ஆப்கானை கைப்பற்றியிருக்கும் தலிபான்களின் வருமானம் இதிலேயே தங்கியுள்ளது.

ஆப்கானை போன்று ஒரு நிலைமையை இலங்கைக்கும் ஏற்படுத்த முயற்சிசெய்கின்றாரோ டயானா என்று கேட்கத்தோன்றுகின்றது. எனினும் ஆப்கானையும் இலங்கையையும் எவ்விதத்திலும் ஒப்பிட முடியாது. எந்த சந்தர்ப்பத்திலும் மலையக பிரதேசங்களுக்கு விஜயம் செய்திராத டயானா போன்றவர்கள் இவ்வாறு வாய்க்கு வந்தபடி பிதற்றுவதும் பொருளாதார நிபுணர்கள் போன்று நாட்டின் கடன் சுமையை குறைப்பதற்கு நகைப்புக்கிடமான கருத்துக்களை பாராளுமன்றில் கூறுவதும் புதிய விடயங்கள் அல்ல. ஆனால் சுதந்திரத்துக்கும் முன்னரும் பின்னரும்., இது வரையிலும் கூட நாடு பொருளாதார ரீதியில் ஸ்திரதன்மையோடு முன்னேற காரணம் தேயிலை ஏற்றுமதி மூலம் நாட்டுக்குக் கிடைத்த வருமானம் தான். அப்பொருளாதாரத்தை பெற்றுத்தந்த தேயிலை பயிர்ச்செய்கையை இவ்வாறு விமர்சனம் செய்வதை அத்தொழிலோடு இணைந்துள்ள சமூகத்தின் வாக்குகளைப் பெற்று வந்தவர்கள் கேட்டு மெளனம் காப்பதே இங்கு கொடுமையானது. நாடு செல்லும் நிலைமையைப் பார்த்தால், ‘சிலோன் டீ’ என்ற வர்த்தக நாமம் மாறி ‘சிலோன் கஞ்சா’ என்ற விடயத்தை ஊக்குவிக்கும் நிலைமை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

Monday, November 22, 2021

ஏமாற்றங்களுடன் வாழப்பழகுதல்…!

 ஒவ்வொரு அரசாங்கத்தினதும் வரவு செலவு திட்டங்களில், பெருந்தோட்ட சமூகம் மற்றும் அவர்களின் பிரதேச அபிவிருத்தி பற்றி கூறப்படும் விடயங்கள்  முன்மொழிவுகளாக மட்டுமே இருப்பது ஒன்றும் ஆச்சரியமல்ல. ஏனென்றால் பெருந்தோட்டத் தொழிலாளர்கள் அரச சேவையாளர்களாவும்  இல்லாது தனியார் துறையையும் சாராது வேறுபட்டு நிற்கும் ஒரு பிரிவினர்,  அல்லது ஒதுக்கி வைக்கப்பட்ட   ஒரு சமூகத்தினர் என்று கூறலாம்.

நாட்டின் தேசிய வருமானத்துக்கு, சுதந்திரத்துக்கு முன்பும்  அதற்கு பின்னரும்   தொடர்ச்சியாக பங்களிப்பு செய்து வரும் மக்கள் கூட்டம்  என பெருமையாக பேசுபவர்கள், சுதந்திரத்துக்கு முன்பு இருந்த நிலையிலேயே அவர்களது வாழ்க்கையும் வசிப்பிட உட்கட்டமைப்பும்  தற்போதும்  உள்ளது என்பது குறித்து பேச மாட்டர்.

அந்த வகையில்  2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டம்  பற்றியும் அதில் பெருந்தோட்ட  பிரதேசங்கள் மற்றும் அங்கு வாழ்ந்து வரக்கூடிய மக்களுக்கு என்ன வரப்பிரசாதங்கள் முன்மொழியப்பட்டன என்பது குறித்தும்  கட்டுரை எழுதுமளவுக்கு ஒன்றுமில்லை.  என்றாலும் இதற்கு முன்பும் இவ்வாறு வரவு செலவு திட்டத்தில் இம்மக்களுக்காக முன்மொழியப்பட்டவையும்  அப்படியே கிடப்பில் போட்டவையாகவே உள்ளன என்பதை உரிய தரப்புக்கு ஞாபகமூட்டுதல் அவசியமல்லவா?

மட்டுமல்லாது ஏனைய சமூகங்களுக்கும், அவர்கள் வாழ்ந்து வரும் பிரதேசங்களுக்கும்,  அமைச்சுக்களுக்கும்  முன்மொழியப்பட்ட விடயங்களை சீர்தூக்கி பார்த்தாலாவது பெருந்தோட்ட சமூகம் எந்தளவுக்கு ஒரங்கட்டப்பட்டுள்ளது  என்பதை அந்த சமூகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் இரண்டு பிரதிநிதிகள், வரவு செலவு திட்ட விவாதங்களின் போது   கதைப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறோம்.

இம்முறை வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டப்பகுதி வீடுகள் அபிவிருத்திக்கு 500 மில்லியன் (ரூ50 கோடி) ஒதுக்கப்பட்டுள்ளது. மட்டுமின்றி 3 வருடங்களுக்குள் லயன் வீடுகளை இல்லாதொழிக்கும் ஒரு செயற்பாட்டுக்காகவே இத்.தொகை ஒதுக்கப்படுவதாக நிதி அமைச்சர் அறிவித்துள்ளார். இது மிகவும் நகைப்புக்குரியதாகவும் பெருந்தோட்டப்பகுதி குடியிருப்புகள் பற்றிய பூரணமான எந்தவொரு தெளிவுமின்றிய முன்மொழிவாகவே உள்ளது.

ஏனென்றால் ஊவா , மத்திய,சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில், ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட சுமார் ஒரு இலட்சத்து 30 ஆயிரம் வரையிலான லயன் குடியிருப்புகள் இன்னமும் உள.  இவற்றை  எங்ஙனம் 3 வருடங்களுக்குள் இல்லாமலாக்குவது ? மட்டுமின்றி 50 கோடி ரூபாயில் எத்தனை வீடுகள் அமைக்க முடியும்?  இப்போது நிதி அமைச்சராக விளங்கும் பஸில் ராஜபக்சவின் சகோதரர் மஹிந்த ராஜபக்ச, ஜனாதிபதியாகவும் நிதி அமைச்சராகவும்  இருந்த போது,  2014 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்ட முன்மொழிவில் பெருந்தோட்டப்பகுதிகளில் 50 ஆயிரம் வீடுகள் அமைக்கப்படும் என்றார். அந்நேரம் மலையகம் அமைச்சரவை அந்தஸ்த்துள்ள ஒரு அமைச்சுப் பொறுப்பை கொண்டிருந்தது.

ஆனாலும்  2015 ஆம் ஆண்டுக்கான  வரவு செலவு திட்ட உரையை நிதி அமைச்சராக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச சமர்ப்பித்த போது, அது வரை  பெருந்தோட்டப்பகுதிகளில் ஒரு வீட்டுத்தொகுதி கூட உருவாக்கப்பட்டிருக்கவில்லை. அது குறித்து அவருக்கு ஆதரவு வழங்கிய இ.தொ.கா,   வாய் திறந்து ஒன்றுமே கேட்கவில்லை.

2022 ஆம் ஆண்டுக்கான வரவு செலவு திட்டத்தில் பெருந்தோட்டத்துறை சமூகம் எந்தளவுக்கு புறக்கணிக்கப்பட்டிருக்கின்றது என்பதற்கு மற்றுமொரு உதாரணம் கிராமப்புற வீடுகள் அபிவிருத்திக்கு முன்மொழியப்பட்டுள்ள தொகை. இதற்காக 5 ஆயிரம் மில்லியன் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுவாக கிராமப்புறங்களில் உள்ளவர்களுக்கு நிலம் சொந்தமாகவுள்ளது. அந்த உரிமை ஒன்றே அவர்களுக்கு கிடைத்துள்ள பெரும் வரப்பிரசாதம். இங்கு நிலவுரிமையும் வீடுகளும் இல்லாதவர்களுக்கு  பிய்த்து கொடுத்தாற்போன்று 500 மில்லியன் ரூபாய் மட்டுமே ..! தற்போதுள்ள  வாழ்க்கைச்செலவு, கட்டுமான பொருட்களின் விலையேற்றத்துக்கு மத்தியில்  இத்தொகையில் அதிகபட்சமாக 350 வீடுகள் வரை மட்டுமே அமைக்க முடியும். பிறகு எப்படி ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட லயன் குடியிருப்புகளை  3 வருடங்களில் ஒழிப்பது?

மட்டுமின்றி வனப்பாதுகாப்புக்குக் கூட 2 ஆயிரம் மில்லியனும் விளையாட்டுத்துறையை அபிவிருத்தி செய்ய 3 ஆயிரம் மில்லியனும் முன்மொழியப்பட்டுள்ளன. ஆனால் கொரோனா தொற்று காலத்திலும் நாள் முழுக்க பணியாற்றி, சம்பள விடயத்தில் ஏமாற்றப்பட்டு ஆயிரம் ரூபாய்க்கும் குறைவாக நாட் சம்பளத்தைப் பெற்று வரும் தொழிலாளர்  சமூகத்துக்கு முன்மொழியப்பட்டுள்ள தொகை  வெறும் 50 கோடி ரூபாய் மட்டுமே !

முழுக்க முழுக்க பெரும்பான்மையினர் வாழ்ந்து வரும் கிராமப் பிரதேசங்களை அபிவிருத்தி செய்வதற்கான முன்மொழிவுகளை தாங்கி, அவர்களை விட கடும் உழைப்பையும் அர்ப்பணிப்பையும் வழங்கும் தோட்டத்தொழிலாளர்களை முழுமையாக புறக்கணித்து இந்த வரவு செலவு திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது என்றால் மிகையாகாது. ஏனென்றால் ஏற்கனவே இரசாயன பசளை விவகாரத்தில் கிராமப்புற விவசாயிகளின் கடுஞ் சீற்றத்துக்குள்ளாகியிருக்கும் அரசாங்கம், அவர்களை ஓரளவுக்குச் சரி திருப்திபடுத்துவதற்கு கிராமப்புற அபிவிருத்தி என்ற பெயரில் ‘ கிராமப்புற வாழ்வாதார அபிவிருத்திக்கு 19 ஆயிரம் மில்லியன்களும், கிராமப்புற அபிவிருத்தி திட்டங்கள் என்ற பெயரில் தனியாக 42 ஆயிரம் மில்லியன்களையும் ஒதுக்கியுள்ளது.

வரவு செலவு திட்டங்களின் முன்மொழிவுகளை வைத்துக்கொண்டு இங்கு எவரும் கனவு காண முடியாது. ஏனென்றால் முன்மொழிவுகள் அனைத்தையும் நிறைவேற்ற வேண்டிய அவசியம் அரசாங்கத்துக்கு இல்லை. நிறைவேற்றியே தீர வேண்டும் என குறித்த சமூகத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்கள் அழுத்தம் கொடுக்கவும் முடியாது. ஏனென்றால் அவர்களுக்குக் கிடைக்கும் சலுகைகள் சில வேளைகளில் இல்லாமல் போகலாம் அல்லது பறிக்கப்படலாம். அதையும் மீறி அமைச்சரவையில் குரல் எழுப்புவதற்கு மலையக சமூகத்துக்கு அமைச்சரவை அந்தஸ்த்தும் கிடையாது.

எது எப்படியானாலும் இவ்வாறான சம்பவங்கள் தோட்டத்தொழிலாளர்களை இனியும் பாதிக்கப்போவதில்லை. ஒன்றரை நூற்றாண்டுகளாக பல விதத்திலும் ஏமாற்றப்பட்டே வாழ்க்கையை நகர்த்தி வரும் அவர்கள் ஏமாற்றங்களுடன் வாழ  பழகி  விட்டனர் என்றே கூற வேண்டும்.