Friday, August 1, 2025

அரசியல் காலாவதியானவர்களின் கூட்டணி …!

  



 

தற்போது காலாவதியாகிய அரசியல்வாதியாக விளங்கும் ஜீ.எல்.பீரிஸ் எனும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தயாராகும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் முதலில் அவர் யாருடன் இணைந்துள்ளார் என்பதை தேடிப்பார்க்க வேண்டும்.பீரிஸ் இப்போது தனது 80 ஆவது வயதில் ஓய்வு காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். இந்த வயதில் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்து சர்வதேச நாடுகளுடன் தொடர்பை பேணி இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போகின்றாரா? இதை அவருடன் இணையப்போகும் அரசியல்வாதிகள் தான் தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.ஆனால் இவர்கள் அனைவரும் இணைந்து சஜித்தை நடுவீதியில் நிற்க வைக்கும் அதே வேளை தாமும் அவ்வாறே நடுவீதியில் நிற்கப்போகின்றனர். 159 பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எவ்வாறு இவர்கள் கவிழ்க்கப் போகின்றனர் என்பதே ஒரு கேள்வி.


அநுரகுமார திசாநாயக்க தலைவராக உள்ள தேசிய மக்கள் சக்தியின் ஊழலுக்கெதிரான செயற்பாடுகளால் எதிர்க்கட்சி வரிசையில் உள்ளவர்களும் முன்னாள் அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் கடும் அச்சத்தை எதிர்நோக்கியுள்ளனர்.ஏதாவதொரு வகையில் அநுர அரசாங்கத்துக்கு அழுத்தங்களை பிரயோகித்து வருவதை தமது பிரதான பணியாக அவர்கள் கொண்டிருந்தாலும் மிகவும் பலகீனமான எதிர்க்கட்சித்தலைவர் மற்றும் ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கிக்கொண்டுள்ள முன்னாள்அமைச்சர்களால் அதை செயற்படுத்த முடியாத நிலைமைகள் காணப்படுகின்றன.

எதிர்க்கட்சித் தலைவராக உள்ள சஜித் பிரேமதாச பாராளுமன்றத்துக்குள்ளேயும்வெளியேயும் காத்திரமாக செயற்பட முடியாத ஒருவராக விளங்குகின்றார். ரணில் விக்ரமசிங்கவை போன்று அவருக்கு சர்வதேச ரீதியான தொடர்புகள் இல்லாத அதே நேரம் உள்ளூரிலும் ஆளுமையற்ற தன்மையை வெளிப்படுத்தும் ஒருவராக உள்ளார்.

இதன் காரணமாக எதிரணியில் ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்துள்ள பலரும்இப்போது தமக்கு பொருத்தமான எதிர்க்கட்சித் தலைவரை தேட ஆரம்பித்து விட்டார்கள் என்று தான் கூற வேண்டியுள்ளது.

மகிந்த தரப்பில் உள்ள பல முன்னாள் அமைச்சர்கள் எம்.பிக்களே தற்போது அதிக ஊழல் மோசடி குற்றச்சாட்டுகளில் சிக்கியுள்ளனர். ரணில் விக்ரமசிங்க இனி நேரடி அரசியலில் ஈடுபடுவார் என்று கூற முடியாது. அவர் அவ்வாறான முயற்சிகளில் ஈடுபடுவார் என்பதை அறிந்தே தேசிய மக்கள் சக்தியினர் அவசர அவசரமாக பட்டலந்த வதை முகாம் விவகாரத்தை கையிலெடுத்து அதை பாராளுமன்றம் வரை கொண்டு வந்தனர்.

பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடா விட்டாலும் ஊடகங்களுக்கு இனவாதகருத்துகளை அவ்வப்போது கூறி வரும் உதய கம்மன்பில, விமல் வீரவன்ச மற்றும் சரத் வீரசேகர போன்றவர்களின் கதைகளை நாட்டு மக்கள் காடு கொடுத்து கேட்பதில்லை.

இவர்களை தூண்டி விடும் தரப்பினராக மகிந்த மற்றும் நாமல் தரப்பினர் விளங்குகின்றனர். சஜித்தின் ஜனாதிபதி கனவு இனிமேல் பலிக்காது என்ற நிலையிலேயே நாமல் ராஜபக்சவை அடுத்த ஜனாதிபதி என்ற ரீதியில் மொட்டுகட்சியினர் கதைகளை பரப்பி வந்தனர். ஆனால் நாமல் ராஜபக்ச மீது இளையோருக்கு இருக்கும் ஈர்ப்பு நாட்டு மக்களில் ஏனையோருக்கு இல்லை. ஏனென்றால் அவர் மீதும் பல குற்றச்சாட்டுகள் உள்ளன.

இந்நிலையில் எதிரணியில் உள்ள சிலர் திடீரென முன்னாள் நிதி அமைச்சரும்புத்திஜீவியுமாக வலம் வந்த ஜீ.எல்.பீரிஸை வைத்து அனைத்து எதிர்க் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியை ஆரம்பித்துள்ளனர். எதிர்க்கட்சித் தலைவராக சஜித் ஒரு ஆளுமையற்றவராக விளங்குவதால் அவரை வெறுக்கும் எதிரணியினர் தனியே இயங்கி வருகின்றனர். அவரது தலைமைத்துவத்தை கேலி செய்யும் சரத் பொன்சேக்கா , பாட்டலி சம்பிக்க ரணவக்க, உதய கம்மன்பில் போன்றோரை வேறு வழியில் ஒன்றிணைக்க வேண்டுமானால் சஜித்தை விட அனுபவமும் அறிவும் பெற்ற வெளிநபர் ஒருவரை அணுக வேண்டிய தேவை எதிரணியினருக்கு ஏற்பட்டது. அதற்கு அவர்கள் தேடி கண்டு பிடித்த நபரே பேராசிரியர் பீரிஸ்.

கடந்த வாரம் கொழும்பிலுள்ள பீரிஸின் இல்லத்தில் எதிரணி உறுப்பினர்கள் பலர் ஒன்று கூடி சந்திப்பொன்றை மேற்கொண்டிருந்தனர். கலந்து கொண்ட சில அரசியல் பிரமுகர்கள் கூறிய கருத்து குழப்பகரமானதாகவும் நகைச்சுவையானதாகவும் இருந்தது.

இது தேசிய மக்கள் சக்திக்கு எதிரான கூட்டணி அல்ல, எதிரணிகளை ஒன்றிணைக்க ஏற்பாடு செய்யப்பட்ட கூட்டணியே என சில சஜித் தரப்பு தமிழ் எம்.பிக்கள் கூறினர். அப்படியானால் இப்போது எதிரணி பிளவு பட்டு தான் இருக்கின்றது என்பதை அவர்கள் ஏற்றுக்கொண்டிருக்கின்றனர்.

மேலும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித்தின் பலவீனத்தையும் இதுஅம்பலப்படுத்தியுள்ளது. எல்லாவற்றையும் விட அரசியலில் காலாவதியான பீரிஸ் போன்றோரை தலைவராக் கொண்டு எதிரணியை ஒன்று திரட்டும் இந்த முயற்சி எதற்கு என்பதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. என்ன தான் பேராசிரியர் ஆக இருந்தாலும் ஜீ.எல்.பீரிஸின் கல்விப் புலமையை இலங்கை பெற்றது என்று கூற முடியாது. சந்திரிகா மூலம் தேசிய பட்டியல் ஊடாக அரசியலுக்கு பிரவேசித்த பீரிஸ் இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு எந்த பிரச்சினைகளும் இல்லையென சர்வதேச ஊடகங்களுக்கு இலங்கை சார்பாக குரல் கொடுக்கும் ஒரு அரசியல் ஊதுகுழலாகவே விளங்கினார். வெளிவிவகார அமைச்சராக இருந்த போது அவர் தாராளமாக தனது கருத்துகளை கூறியும் இலங்கை அரசை பாதுகாப்பதிலும் தனது புலமையைப் பாவித்துக்கொண்டார்.

சந்திரிகா பண்டாரநாயக்க அவரை அரசியலுக்கு கொண்டு வந்தமைக்கு பிரதானகாரணம் அவர் ஒரு சட்டத்துறை பேராசிரியராவார். தனது ஆட்சியில் சட்டரீதியான நகர்வுகளை மேற்கொள்ளவும் ஆலோசனைகளைப் பெறவுமே அவர் பீரிஸ் போன்றோரை தனது அமைச்சரவையிலும் இணைத்தார். ஆனால் சந்திரிகாவின் பதவி காலம் முடிந்து மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக தெரிவானவுடன் அவருடன் சென்று இணைந்து அங்கேயும் அமைச்சராகி சகல சொகுசுகளையும் அனுபவித்த ஓரு அரசியல்வாதியாக மாறிப் போனார்.

தற்போது 80 ஆவது வயதில் காலடி எடுத்து வைக்கவுள்ள பீரிஸ் தனது இறுதி காலத்தில் அமைச்சராகவோ அல்லது திடீர் அரசியல் மாற்றத்தால் பிரதமர் பதவியையோ வகிக்க ஆசைப்படுவதாக அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகின்றது. கடந்த சில வாரங்களாக தேசிய மக்கள் சக்திக்குள் பிளவு என்ற செய்தி அடிபடத் தொடங்கியது. பிரதமர் ஹரிணி, ரோகித்த ராஜபக்ச விண்வெளிக்கு அனுப்பியதாகக் கூறப்படும் செயற்கை கோள் தொடர்பில் தவறான தகவல்களை பாராளுமன்றத்தில் வழங்கினார் என்பதை முன் வைத்து அவர் மீது மக்கள் விடுதலை முன்னணியின் சிரேஷ்ட உறுப்பினர்கள் குற்றம் சுமத்தி அவரை பிரதமர் பதவியிலிருந்து அகற்றுவதற்கு செயற்படுகின்றார்கள் என்ற கதைகள் பரவின. ஆனால் அப்படியொன்றும் இல்லையென்பதை தேசிய மக்கள் சக்தியினரே ஒரு நிகழ்வில் உணர்த்தினர். சிரேஷ்டஅமைச்சர்கள் மற்றும் உறுப்பினர்கள் ஒன்றாக தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய நிகழ்வொன்றின் படம் அனைவரினதும் வாய்களை அடைத்து விட்டது.

தேசிய மக்கள் சக்தியில் எப்போது பிளவு வரும் என்று காத்துக் கிடந்தவர்கள் பீரிஸை பிடித்து பொது கூட்டணி அமைக்க முடிவு செய்து விட்டனர். ஆனால் யார் எங்கு கூட்டணி அமைத்தாலும் அல்லது அது தொடர்பான சந்திப்புகள் இடம்பெற்றாலும் ஓடோடிச் சென்று கலந்து கொள்ளும் தரப்பினராக தமிழ் முஸ்லிம் பிரதிநிதிகள் விளங்குகின்றனர். ஜீ.எல்.பீரிஸின் வீட்டில் இடம்பெற்ற சந்திப்பின் பின்னர் வெளியேறிய தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசனிடம் கேள்விகள் எழுப்பிய ஒரு சிங்கள ஊடகவியலாளர் ஏன் சஜித்தின் தலைமைத்துவம் கசந்து விட்டதோ என்று கேள்வியெழுப்பிய போது அதற்கு ஒன்றும் கூறாது வாகனத்தில் ஏறிச் சென்றார் மனோ கணேசன்.

தற்போது காலாவதியாகிய அரசியல்வாதியாக விளங்கும் ஜீ.எல்.பீரிஸ் எனும் மண்குதிரையை நம்பி ஆற்றில் இறங்கத் தயாராகும் தமிழ், முஸ்லிம் பிரதிநிதிகள் முதலில் அவர் யாருடன் இணைந்துள்ளார் என்பதை தேடிப்பார்க்க வேண்டும். மாறாக தமது அற்ப அரசியல் ஆசைகளுக்காக இவ்வாறு ஓடோடிச் சென்று அரசாங்கத்தை கவிழ்க்கும் சூழ்ச்சிகளை செய்து கொண்டிருந்தால் ஏற்கனவே அவர்களை எதிர்க்கட்சியில் உட்கார வைத்த வாக்காளர்கள் அவர்களின் அரசியல் எதிர்காலத்தை சூனியமாக்கி விடுவர் என்பதை அவர்கள் உணர வேண்டும்.

பீரிஸ் இப்போது தனது ஓய்வு காலத்தை அனுபவித்துக்கொண்டிருக்கின்றார். இந்த வயதில் அவர் மீண்டும் அரசியலுக்கு வந்து சர்வதேச நாடுகளுடன் தொடர்பை பேணி இலங்கை நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கப் போகின்றாரா? இதை அவருடன் இணையப்போகும் அரசியல்வாதிகள் தான் தமக்குள் கேட்டுக்கொள்ள வேண்டும்.

ஆனால் இவர்கள் அனைவரும் இணைந்து சஜித்தை நடுவீதியில் நிற்க வைக்கும் அதே வேளை தாமும் அவ்வாறே நடுவீதியில் நிற்கப்போகின்றனர். 159 பெரும்பான்மை ஆசனங்களை பாராளுமன்றத்தில் கொண்டிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை எவ்வாறு இவர்கள் கவிழ்க்கப் போகின்றனர் என்பதே ஒரு கேள்வி.

Wednesday, July 30, 2025

ரஜினி தவறவிட்ட அரசியலை கெட்டியாக பிடித்துக்கொண்ட கமல்…!

 ரஜினி கர்நாடகாவை பிறப்பிடமாகக்கொண்டாலும் அவர் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக நிரந்தரமாக கொண்டாடப்பட்டு வருகின்றார். எனினும் அவர் அரசியலில் பிரவேசிக்காதது அவரது இரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. இப்போது 74 வயதாகும் ரஜினிகாந்த் இதற்குப் பின்னரும் அரசியலில் பிரவேசம் செய்வாரா என்பது தெரியாது. ஆனால் அவரது இரசிகர்கள் இன்னும் அவரது அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பார்த்துள்ளனர். அந்த இடத்தை கெட்டியாகப் பிடித்துக்கொண்டுள்ளார் கமலஹாசன். கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் அவர் தெரிவு செய்யப்பட்டார். இப்போது ராஜ்யசபா எம்.பியாக பதவி ஏற்றுள்ளார்.

 












‘நான் எப்ப வருவேன் எப்படி வருவேன்னு யாருக்கும் தெரியாது ஆனால் வர வேண்டிய நேரத்தில் வருவேன்’ என பல வருடங்களாக தனது அரசியல் பிரவேசத்தை சினிமா வசனங்கள் வாயிலாக கூறி தனது இரசிகர்களை உசுப்பேத்தி வந்தவர் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்த். ஆனால் இறுதி வரை அவர் அரசியலுக்கு வரவே இல்லை. தமிழகத்தின் கட்சிகள் மற்றும் தேசிய அளவிலான பாரதீய ஜனதா கட்சி ஆகியவை ரஜினிகாந்தை அரசியல் ரீதியாக அணுகினாலும் அவர் எதற்கும் மசியவில்லை.

அவ்வப்போது தனது படங்களில் அரசியல் ஆசைகளை வசனங்களின் மூலம் வெளிப்படுத்தி வந்தார் ரஜினி. அவர் அரசியலுக்கு வர வேண்டும் தமிழகத்தின் முதலமைச்சராக வேண்டும் என்ற ஆர்வம் அரசியல் கட்சிகளை விட தமிழகத்தில் அவருக்கிருந்த இரசிகர்களுக்கு சற்று அதிகமாகவே இருந்தது. ஏனென்றால் ரஜினி தனது திரைப்படங்களில் வித்தியாசமான ஸ்டைலால் அனைத்து இரசிகர்களையும் கவர்ந்து இழுத்த அதே நேரம் மிகவும் எளிமையாகவும் இயல்பாகவும் தனது வாழ்க்கையை அமைத்துக்கொண்டவர். பல கோடி ரூபாய் சொத்துகளுக்கு அதிபதியாக இருந்தாலும் சினிமாவை தவிர்த்து தன்னை ஒரு ஆன்மிகவாதியாக வெளிப்படுத்தியவர்.

சினிமா வேறு வாழ்க்கை வேறு என்பதை பல சந்தர்ப்பங்களில் நிரூபித்தவர். சினிமா மேக்கப்பை தனது நிஜ வாழ்க்கையில் தவிர்த்தவர். படங்களில் தலைக்கு டோபா வைத்து நடிக்கும் அவர் ஏனைய அனைத்து சந்தர்ப்பங்களிலும் அதாவது தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் பங்கேற்கும் போது தனது உண்மையான உருவத்தில் பொதுவெளியில் நடமாடுவதை அவர் விரும்பினார். இந்த இயல்பான அவரது நடவடிக்கைகளே அவரை இரண்டு தலைமுறை இரசிகர்களையும் அவர் பக்கம் இழுத்து வைத்தன.

ரஜினி கர்நாடகாவை பிறப்பிடமாகக்கொண்டாலும் அவர் தமிழகத்தின் சூப்பர் ஸ்டாராக நிரந்தரமாக கொண்டாடப்பட்டு வருகின்றார். எனினும் அவர் அரசியலில் பிரவேசிக்காதது அவரது இரசிகர்களை மிகவும் ஏமாற்றத்துக்குள்ளாக்கியது. இப்போது 74 வயதாகும் ரஜினிகாந்த் இதற்குப் பின்னரும் அரசியலில் பிரவேசம் செய்வாரா என்பது தெரியாது. ஆனால் அவரது இரசிகர்கள் இன்னும் அவரது அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பார்த்துள்ளனர்.

ரஜினிகாந்தின் அரசியல் பிரவேச தயக்கத்தை பயன்படுத்திக்கொண்டவர் அவரது சமகால சூப்பர் நடிகரான கமல்ஹாசன். தனது தனித்துவமான நடிப்பு மற்றும் சினிமா பற்றிய ஆழ்ந்த அறிவு , நுணுக்கம் போன்றவற்றால் அகில் இந்திய சினிமா இரசிகர்களை மாத்திரமின்றி உலக அளவில் வாழ்ந்து வரும் தமிழர்களை தன் பக்கம் ஈர்த்தவர் கமல்ஹாசன். இதன் காரணமாகவே அவர் உலக நாயகன் என்று அழைக்கப்படுகின்றார்.

தனது திரைப்படங்களில் அரசியல் சார்பான மறைமுக வசனங்களை தவிர்த்து வந்த அவர் ஒரு கட்டத்தில் அரசியலில் குதிப்பதற்கு தீர்மானித்தார். அதற்குக் காரணம் ரஜினியின் அரசியல் பிரவேசம் ஒரு கட்டத்தில் கேள்விக்குறியானதாகும்.

தமிழக மக்கள் இரண்டு விடயங்களில் தமது உயிரையும் கொடுப்பர் என்பது அவருக்கு நன்கு தெரிந்திருந்தது. ஒன்று சினிமா மற்றையது கிரிக்கெட். ஆனால் அரசியல் என்ற விடயத்தில் நிதானித்தே முடிவெடுப்பர் என்பதை அவர் உணர்ந்திருந்தார். இதில் சினிமாவை மையமாகக்கொண்டு அவர்களை அரசியல் பக்கம் இழுக்க கமலஹாசன் தீர்மானித்தார். ரஜினி இனி அரசியலில் பங்கெடுக்க மாட்டார் என்பதை உறுதி செய்து கொண்டே கமலஹாசன் அரசியலில் பிரவேசிப்பதற்கு முடிவு செய்தார் என்பதை உறுதியாகக் கூறலாம். அந்த வகையில் அவர் 2018 ஆம் ஆண்டு மக்கள் நீதி மய்யம் என்ற அரசியல் கட்சியை உத்தியோகபூர்வமாக தனது ஆழ்வார் பேட்டை இல்லத்தில் ஆரம்பித்தார். கட்சியின் சின்னத்தில் உள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், மற்றும் நடுவில் உள்ள நட்சத்திரம் மக்களைக் குறிக்கும். மக்களையும், நீதியையும் மய்யமாக வைத்து தொடங்கப்பட்ட கட்சி மக்கள் நீதி மய்யம் என்று கமல் கூறினார். தேர்தல் ஆணையத்தால் மக்கள் நீதி மய்யத்திற்கு "கை மின்விளக்கு" சின்னம் ஒதுக்கப்பட்டது 2021 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை இலக்கு வைத்தே கமலஹாசன் அரசியல் கட்சியை ஆரம்பித்தார் என்பது அனைவருக்கும் தெரியும். தமிழக அரசியலில் சினிமாவின் ஆதிக்கத்தை நன்குணர்ந்திருந்த கமலஹாசன் தனது இரசிகர்கள் தனக்கு ஆதரவளிப்பார்கள் என்ற நம்பிக்கையில் அவ்வாண்டு சட்டமன்றத் தேர்தலில் வேட்பாளர்களுடன் குதித்தார்.

இத்தேர்தலில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமலஹாசன் தலைமையிலான கூட்டணியில் நடிகர் சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி, பச்சைமுத்து பாரிவேந்தரின் இந்திய ஜனநாயகக் கட்சி, கே. எம். சரீப்பின் தமிழக மக்கள் ஜனநாயக கட்சிஇ கர்நாடகத்தை சேர்ந்த முன்னாள் முதல்வரும், இந்திய பிரதமருமான தேவகவுடாவின் மதச்சார்பற்ற ஜனதா தளம் இடம் பெற்று இருந்தனர்.

மேலும் இக்கட்சி சார்பில் அதன் தலைவர் கமலஹாசன் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பார் அல்லது தமிழக சட்டமன்றத்தில் பலமான எதிர்கட்சி தலைவராக விளங்குவார் என்று கட்சியின் ஆதரவாளர்கள் மற்றும் தமிழக மக்கள் நினைத்த போது அனைத்திற்கும் மாறாக கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் கூட்டணி கட்சி சட்டமன்ற உறுப்பினர்களும் தோல்வியைத் தழுவினார்கள்.

மேலும் கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் தோல்வியைத் தழுவினார். சினிமா வேறு அரசியல் வேறு என்பதை உணர்ந்து கொள்ள கமலுக்கு இத்தனை காலம் எடுத்துள்ளது.

பின்னர் இக்கட்சியின் தோல்விக்கு காரணம் கூறப்பட்டது. கமல்ஹாசன் தேர்தல் பிரசார களத்தில் தமிழக அரசியலில் அதிமுக–பாஜக ஆட்சியை விமர்சித்த அளவிற்கு கடந்த 50 வருட காலமாக தமிழகத்தை ஆண்டு வந்த தி.மு.க ஆட்சியையும், 50 வருட கால மத்திய காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சிக்காமல் போனதாலே அவர்கள் தோல்விக்கு காரணம் என்றும் கூறப்படுகிறது.

அதைவிட தேர்தல் களத்தில் கமலஹாசன் அ தனது கூட்டணிக்கு கடந்த காலத்தில் இந்தியாவை ஊழலில் தலைக்க செய்த காங்கிரஸ் கட்சியை அழைத்தது, கமலஹாசனின் கட்சி ஆதரவாளர்கள், ரசிகர்கள் மற்றும் பொது மக்களிடையேவும் பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது என்றும் கூறப்படுகிறது. ஆனால் கமலஹாசன் மீது திராவிட முன்னேற்ற கழகம் ஒரு கண் வைத்திருந்தது. அதற்குக் காரணம் திராவிட கொள்கைகளான நாத்திகம் மற்றும் பகுத்தறிவு போன்ற விடயங்களில் கமலஹாசன் உறுதியான கொள்கைவாதியாக விளங்கியமையாகும். இனி தமிழகத்தில் தனித்து அரசியல் செய்வது சரிபட்டு வராது என்ற முடிவுக்கு கமலஹாசன் வந்தார் என்று தான் கூற வேண்டும். இந்நிலையில் தனது அரசியல் நிலைப்பாட்டில் திடீரென ஒரு முடிவை எடுத்தார் கமலஹாசன்.

கடந்த ஜூன் மாதம் நடந்த மாநிலங்களவை தேர்தலில் தி.மு.க தலைமையிலான கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன், மக்கள் நீதி மய்யத்தின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினராகத் அவர் தெரிவு செய்யப்பட்டார். இதற்கு தமிழகத்தில் பலத்த விமர்சனங்கள் எழுந்தன. 2021 ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் தமிழகத்தின் அனைத்து கட்சிகளையும் ஊழல் அமைப்புகள் என்ற பிரசார் செய்த கமல் இப்போது அவர்களுடன் இணையலாமா என ஊடகங்கள் அவரை வறுத்தெடுத்தன. மக்களுக்காக இந்த முடிவை எடுத்திருக்கிறேன் என்ற ஒரு வார்த்தையில் அனைத்து ஊடகங்களையும் மெளனமாக்கினார் கமல்.

அதையடுத்து வெள்ளிக்கிழமை 25 ஆம் திகதி கமலஹாசன் நாடாளுமன்றத்தில் பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டு ராஜ்யசபா எம்.பியாக பதவியேற்றுள்ளார். வெள்ள சட்டை, கருப்பு நிற காற்சட்டை அணிந்து நாடாளுமன்றத்துக்கு வருகை தந்த கமல்ஹாசன், தமிழ் மொழியில் உறுதிமொழி எடுத்துக் கொண்டார்.  மாநிலங்களவையின் உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கும் கமல்ஹாசன் எனும் நான், சட்டத்தினால் நிறுவப்பெற்றதான இந்திய அரசியல் சட்டத்தின் மீது உண்மையான பற்றார்வமும்,பற்றுறுதியும் கொண்டிருப்பேன் என்றும், இந்தியாவின் இறையாண்மையையும்,ஒருமைப்பாட்டையும் உறுதியாகப் பற்றி நிற்பேன் என்றும் நான் இப்போது ஏற்கவிருக்கும் கடமையினை நேர்மையாக நிறைவேற்றுவேன் என்றும், விழுமிய முறைமையுன் உறுதிகூறுகிறேன். வணக்கம்" என உறுதி எடுத்து, பதவிப் பிரமாணம் ஏற்றுக் கொண்டார் . கமல்ஹாசனை வாழ்த்தி அவரது கட்சியினர் சமூக ஊடகங்களில் வாழ்த்துகளை தெரிவித்து வருவதோடு தமிழ் சினிமா கலைஞர்களும் ஏனைய இந்திய சினிமா கலைஞர்களும் கமலஹாசனுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.

மறுபக்கம் நடிகர் விஜய் தனது தமிழக முன்னேற்ற கழகம் கட்சியை அடுத்த தேர்தலுக்கு தயார்ப்படுத்தி வரும் நிலையில் தமிழக அரசியல் களம் நடிகர்களால் ஆக்கிரமிக்கப்படும் சூழலை தக்க வைத்து வருகின்றதோ என்று கூறத்தோன்றுகின்றது. ஆனால் தமிழக சினிமாவிலும் அரசியலிலும் சூர்ப்பர் ஸ்டார் ரஜனி காந்துக்கு இருந்த வரவேற்பு கமலஹாசனுக்கு இல்லை என்றாலும் சரியான நேரத்தில் முடிவெடுத்து இன்று ராஜ்யசபா எம்.பியாகியுள்ளார் கமலஹாசன் . அந்த வாய்ப்பை நழுவ விட்டுள்ளார் ரஜினி காந்த். இனி ரஜினி காந்த் அரசியலில் காலடி எடுத்து வைக்க நினைத்தாலும் அவரது இரசிகர்களே அதை மறுப்பர் என்று தான் கூற வேண்டும்.