Friday, October 14, 2011

கல்வித்துறையில் அதிகரித்துள்ள இலஞ்ச ஊழல் செயற்பாடுகள்







இலங்கையில் பதிவாகும் இலஞ்ச ஊழல் குற்றச்சாட்டுகளில் 70 வீதத்திற்கும் மேலானவை கல்வித்துறையோடு சம்பந்தப்பட்டதாக இலஞ்சம் மற்றும் ஊழல்களை விசாரணை செய்யும் ஆணைக்குழு தலைவர் தெரிவித்துள்ளமையானது இலங்கை கல்வித்துறையில் எந்தளவிற்கு ஊழல் தலைவிரித்தாடுகிறது என்பதை அறியக்கூடியதாக இருக்கின்றது.கூடுதலாக பாடசாலைகளுக்கு மாணவர்களை அனுமதிப்பதிலேயே அதிபர்கள் இலஞ்சம் வாங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணமாகவோ அல்லது பொருளாகவோ அதிபர்கள் இலஞ்சம் பெறுகிறார்கள் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்த கால முறைப்பாடுகளை பார்த்தால் இலங்கையைப்பொறுத்தவரை இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு இலக்கானவர்களில் அதிகமானோர் பொலிஸ் அதிகாரிகளாவும் , அரசாங்க திணைக்களங்களைச்சேர்ந்தவர்களாகவுமே இருந்துள்ளனர்.எனினும் அண்மைக்காலமாக இலஞ்சம் மற்றும் ஊழல்களில் முதலாவது இடத்தை கல்வித்துறை பிடித்துள்ளது. சமுதாய மாற்றத்திற்கான ஒரே ஆயுதமாக கூறப்படும் கல்வித்துறையில் எட்ட வேண்டிய இலக்குகள் எத்தனையோ இருக்க இப்போது எட்டியிருக்கும் இலக்கை பார்க்கும் போது வெட்கித்தலை குனிய வேண்டிய நிலை தான் ஏற்பட்டுள்ளது. இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவானது (Commission to Investigate Allegations of Bribery or Corruption) நாளாந்தம் 15 இற்கும் குறையாத கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட குற்றச்சாட்டுகள் தமக்கு கிடைப்பதாகத் தெரிவிக்கின்றது. இதில் கூடுதலாக முதலாமாண்டுக்கு மாணவர்களை சேர்க்கும் போது பாடசாலை அதிபர்கள் பெற்றோர்களிடம் இருந்து பணம் பெறுவது தொடர்பாகவே இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவின் தலைவராக முன்னாள் நீதிபதி எஸ்.பாலபட்டபெந்தி விளங்குகிறார். அண்மையில் இவர் கல்வித்துறையோடு சம்பந்தப்பட்ட ஊழல் செயற்பாடுகள் பற்றி தனது விசனத்தையும் வெளிப்படுத்த தவறவில்லை.
இலஞ்சம் என்றால் என்ன?





இலங்கையில் பிரித்தானியர் ஆட்சி காலத்திலேயே இலஞ்சம் பெறல் வாங்குதல் குற்றவியல் தண்டனை சட்டக்கோவையில் கீழ் தண்டனை வழங்கப்படும் குற்றங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. (1883ஆம் ஆண்டிலிருந்து ) 1958 ஆம் ஆண்டின் 40 ஆம் இலக்கச்சட்டத்தின் மூலம் திணைக்களமாக நீதி அமைச்சின் கீழ் தாபிக்கப்பட்டது.இலஞ்ச சட்டத்தை மீரும் வகையில் சட்ட விரோதமாக அவா நிறைவொன்றை கொடுத்தல், கேட்டல், பெற்றுக் கொள்ளுதல் அல்லது அவ்வாறு ,இலஞ்ச சட்ட விதிமுறைகளை மீறும் வகையில் செய்யப்படும் செயற்பாடுகள் ,இலஞ்சமாக கருதப்படும். இதே சந்தர்ப்பத்தில் ஊழல் தொடர்பாகவும் கூறப்பட்டுள்ளதுஊழல் சம்பந்தமாக ,இலஞ்ச சட்டத்தின் 70ஆம் பிரிவின் கீழ் விபரிக்கப்பட்டுள்ளது. அதாவது அரச ஊழியர் ஒருவர் தனது பதவியின் பிரகாரம் தனக்கு பணிக்கப்பட்டுள்ள கடமையை நிறைவேற்றும் பொது அரசுக்கு நடத்தை ஏற்படுத்துவதற்கு தனக்கு நன்மையை அல்லது வேறு ஒருவருக்கு நன்மையை அல்லது தீமையை ஏற்படுத்தும் நோக்குடன் தெரிந்து செயற்படுதல் ஊழலாகக் கருதப்படும்.
பாடசாலைகளில் இலஞ்சம்மாணவர்களை முதலாம் தரத்திற்கு அனுமதிக்கும் போது ஒரு சில அதிபர்கள் தேசிய கல்விக்கொள்கைகளை மீறும் வகையில் ஒரு வகுப்பிற்கு அதிக மாணவர்களை அனுமதிக்கின்றனர். அச்சந்தர்ப்பத்தில் வெளி பிரதேச மாணவர்களை பிரபலமான நகர்ப்புற பாடசாலைகளுக்கு இந்த அதிபர்கள் உள்வாங்கும் போது அவர்களின் பெற்றோரிடமிருந்து இலஞ்சமாக பெருந்தொகை பணத்தை பெறுகின்றனர். மேலும் முதலமாண்டு மட்டுமின்றி உயர்தர அனுமதியிலும் அதிகமாக பணம் பெறுகின்றனர். இதில் முக்கியமான விடயம் என்னவெனில் பணமாகப்பெற்றால் சட்டத்தின் பிடியில் சிக்கிக்கொள்வோம் என்ற பயத்தில் பொருளாகவும் இலஞ்சம் பெறும் முறை பல மலையக பாடசாலைகளில் நடைமுறையில் இருக்கின்றது. பாடசாலைக்கு புதிய அலுமாரி தேவை என மாணவர் அனுமதிக்கு வரும் பெற்றோரிடம் அதிபர் கூறுவார்.பின்னர் நகரத்தில் அமைந்துள்ள குறிப்பிட்ட தளபாட வர்த்தக ஸ்தாபனத்தை கூறி அங்கு பணம் செலுத்தும் படியும் தாம் அதை பெற்றுக்கொள்வோம் என்றும் கூறி பின்னர் குறிப்பிட்ட வர்த்தக ஸ்தாபனத்திற்குச் சென்று ஒரு தொகையை ஸ்தாபனத்திற்கு செலுத்தி விட்டு மீதியை வாங்கிக்கொண்டு வந்து விடுவார் அதிபர். ஒரு சில பாடசாலைகளில் அபிவிருத்திச்சங்க செயலாளர்களே இந்த பண வசூலிப்பு விடயத்தில் முன்னிற்கின்றனர்.இதன் காரணமாக பல வருடங்களாக ஒரே சங்க செயலாளர்களே தொடர்ந்தும் பதவியில் இருக்கின்றார்கள். பல அதிபர்கள் அபிருத்திச்சபை கூட்டத்தை ஏற்பாடு செய்யாமல் இருப்பதும் இந்த பின்னணயிலே தான். பல பெற்றோர்களிடம் தளபாடங்கள் அலுமாரிகள் வாங்க வேண்டும் என்று கூறி பணத்தை வாங்கிக்கொண்டு அதிபர்கள் வாங்குவதோ ஒரே அலுமாரியைத்தான்இதே வேளை பல பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் கூட வெளி மாவட்ட மாணவர்களை பணம் கொடுத்து சேர்ப்பதில் ஒரு சில அதிபர்களுக்கு உதவி ஆசிரியர்களாக செயற்படுகின்றனர். மேலும் தவணை முடியும் சந்தர்ப்பத்திலும் இடையில் பல வகுப்புகளுக்கு மாணவர்களை பணம் வாங்கிக்கொண்டு சேர்க்கும் விடயம் பல பாடசாலைகளில் இடம்பெறுகிறது.

பெற்றோர்களின் அக்கறையின்மைதமது பிள்ளைகளின் கல்விச்செயற்பாடுகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்ற காரணத்தினால் தாம் இலஞ்சம் கொடுப்பதையும் அதிபர்கள் இலஞ்சம் வாங்குவதையும் வெளியில் கூறுவதற்கு பெற்றோர்கள் விரும்புவதில்லை. இந்த காரணங்களினாலேயே பல அதிபர்கள் எவ்வித இடையூறும் இன்றி இலஞ்சம் பெற்று வருகின்றனர். இச்செயற்பாடுகளே இவர்களை ஊக்குவிப்பதாக இருக்கின்றது. இதே வேளை பாடசாலைகளில் இடம்பெறும் இவ்வாறான செயற்பாடுகள் குறித்து விழிப்பாக இருக்க வேண்டிய வலயக்கல்வி காரியாலயங்களிலும் அதிகார துஷ்பிரயோகங்கள் ,ஊழல்கள் இடம்பெறுவதால் பாடசாலைகளைப்பற்றி கண்டு கொள்ளப்படுவதில்லை என்பதே உண்மையாகும். தமக்கு தேவையானவர்களின் பிள்ளைகளை பாடசாலைகளில் சேர்ப்பதற்கு சில வலயக்கல்வி பணிப்பாளர்களும் ,அதிகாரிகளும் கூட இலஞ்சம் பெறுவதை மறுப்பதற்கில்லை. இவர்களின் சிபாரிசுகளுடன் வரும் மாணவர்களை சேர்க்கும் அழுத்தத்திற்கும் சில நேர்மையான அதிபர்கள் உட்படுகின்றனர். ஆகவே கல்வித்துறை இலஞ்சம் மற்றும் ஊழல் என்பது பாடசாலைகளில் மட்டும் தங்கியிருக்கும் விடயமல்ல என்பதை பலரும் உணர்ந்து கொள்ளல் அவசியம்.
யார் குற்றச்சாட்டுக்கு உட்படுவர்? இலஞ்ச குற்றச்சாட்டுகளின் கீழ் அமைச்சரவை அமைச்சர்கள் , சபாநாயகர் மற்றும் பிரதி சபாநாயகர் , குழுக்களின் பிரதித் தலைவர் , பிரதி அமைச்சர்கள் , மாகாண ஆளுனர்கள் மாகாணசபை அமைச்சர்கள், உறுப்பினர்கள் , பாராளுமன்ற உறுப்பினர்கள் நீதிமன்ற உறுப்பினர்கள் , மாகாண, உள்ளுõராட்சி நிலையங்களின் அல்லது ,லஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல்படுத்தப்பட்டநிறுவனங்களில் நூற்றுக்கு 50 விதத்திற்கு மேற்பட்ட பங்குகள் அரசுடமையாகவுள்ள 1982ஆம் ஆண்டின் 17 ஆம் ,இலக்க கம்பனிகளின் தலைவர்கள், பணிப்பாளர்கள், ஆளுனர்கள், உறுப்பினர்கள், உத்தியோகத்தர்கள் ஊழியர்கள், ஜூரி சபை உறுப்பினர்கள் ஆகியோருக்கு எதிராக நடவடிக்கைகள் எடுக்க முடியும். இலஞ்ச சட்டத்தின் கீழ் ,இலஞ்சம் வாங்குவதைப் போல் ,இலஞ்சம் கொடுப்பதும் சமமான தண்டனைக்குரிய குற்றங்களாகும். என்ற போதிலும் ,இலஞ்சம் கொடுத்த நபர் முறைப்பாட்டாளராகும் சந்தர்ப்பங்களில் சட்டம் குறிப்பிட்ட நபரைக் குற்றவாளியாக அல்லது ,இலஞ்சம் கேட்ட நபரின் சூழ்ச்சியால் சிக்கிய அப்பாவியாகவே கருதும்.இருந்த போதிலும் ஒருவர் ,இலஞ்சம் கேட்கும் போது அதைக் கொடுப்பதற்கு முன்பாக ,இலஞ்ச ஆணைக்குழுவிற்கு முறைப்பாடு செய்தல் காலச் சிறந்த செயற்பாடாகும்.
தண்டனைகள்இலஞ்சம் கேட்டல், ஏற்றுக் கொள்தல், கொடுத்தல் அல்லது ,இதில் ஏதும் ஒன்றைச் செய்ய எத்தனித்தல், சூழ்ச்சி செய்தல் போன்ற குற்றங்களின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் 7 ஆண்டுகளுக்கு குறையாத சிறைத் தண்டனையுடன் ரூபா 5000 இற்கும் மேற்படாத தண்டப் பணம் அபராதமாக விதிக்கப்படும். ஏதும் ஆதனமொன்று ,இலஞ்சத்தின் மூலம் பெற்றுக் கொன்டதாக நிரூபிக்கப்படும் போது மேற் குறிப்பிட்ட தண்டனைக்கு மேலதிகமாக ,இலஞ்சத்தால் பெற்றுக் கொண்டதாக தீர்மானம் செய்யப்பட்ட ஆதனத்தின் பெருமதிக்கு குறையாத அல்லது மும்மடங்கிற்கு குறையாத தொகையைத் தணடப் பணமாக நியமித்தல் அல்லது குறிப்பிட்ட ஆதனத்தை அரசுடமையாக்குதல்.
ஊழல் குற்றச்சாட்டுக்கான தண்டனைகள்ஊழல் குற்றமொன்றில் குற்றவாளியாக்கப்படின் 10 ஆண்டுகளுக்கு குறையாத காலத்திற்குச் சிறைத் தண்டனையும் ஒரு ,இலட்சம் ரூபாவை விஞ்சாத தண்டப் பணம் அல்லது மேற் கூறிய ,இரண்டும் வழங்கப்படும்.தனது தொழிலை அல்லது பதவியை இழப்பதோடு ஓய்வூதியம் பணிக் கொடைக்கான உரித்தும் ,ரத்துச் செய்யப் படும்.பாராளுமன்றத் தேர்தல் எனின் 7 ஆண்டுகளுக்கும், உள்ளுõராட்சி மன்றத் தேர்தல் உனில் 5 ஆண்டுகளுக்கும் வாக்காளராக பதிவு செய்வதற்கு, வாக்களிப்பதற்கு, தெரிவு செய்யப்படுவதற்கும் தகைமையை இல்லாதாக்கலாம்.அரசின் அல்லது ,இலஞ்ச சட்டத்தின் கீழ் பட்டியல் படுத்தப்பட்ட நிறுவனங்களில் தொழில் ஒன்றை அல்லது பதவியைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை முற்று முழுதாக ,இழத்தல் என்பன அடங்கும். கல்வித்துறைக்கு அப்பாற்பட்டு பல அரசாங்க நிறுவனங்கள் திணைக்களங்களில் இலஞ்சம் மற்றும் ஊழல் தலைவிரித்தாடுவதை அனைவரும் அறிவர். மேலும் தனியார் நிறுவனங்கள் மீதான இலஞ்ச செயற்பாடுகள் மீது நடவடிக்கை எடுப்பதற்கும் சட்டத்தில் இடமில்லை. அண்டைய நாடான இந்தியாவில் தலை விரித்தாடும் ஊழல்கள் இன்று உலகப்பிரசித்தி பெற்று விட்டன. எனினும் சமூக அக்கறை என்ற விடயத்தில் கல்வி சமுகத்திற்கு பாரிய கடப்பாடு உள்ளது.எதிர்கால இலங்கையை கருத்திற்கொண்டு தமது இலக்குகளை இவர்கள் உணர்ந்து கொள்வார்களாக.

வெளிநாட்டு பறவைகளின் மோகத்தால் உள்ளூர் சிட்டுகுருவிகளை மறந்து விடுகிறோம்






காய்கறிகளில் இரசாயனம் கலந்த விஷங்களே இன்று உள்ளன.ஆகவே விஷம் நிறைந்த உணவுகளை உண்டு தான் இன்று பல மனிதர்கள் விஷமிகளாகி விட்டனர்.






தர்மம் குன்றி வரும் இக்காலகட்டதில் மக்கள் தங்களுக்கு முடிந்த வரை தான தருமங்கள் செய்ய வேண்டும். முக்கியமாக அடுத்த வேளை உணவுக்கு அல்லல்படுவோருக்கு அன்னம் வழங்க வேண்டும். தவங்களில் காலத்தை ட்டாமல் தரும நெறி சிந்தனையில் கவனத்தை திருப்ப வேண்டும். எவர் ஒருவர் தருமத்தை கடமையாக நினைத்து செய்கிறாரோ அந்த தருமம் அவரை காப்பாற்றும் இதுவே கீதையின் தத்துவம் என்கிறார் பிரம்மரிஷி காகபுஜண்டரின் சீடராகிய பிரம்மரிஷி மலை அன்னை சித்தர் இராஜ்குமார் குருஜி அவர்கள். மக்கள் நலன் கருதி அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் ஆலய மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற சித்தர்கள் மகா யாகத்தின் போது பக்தர்களுக்கு அருளுரை வழங்கிய போது அவர் தரும நெறி சிந்தனைகளை பக்தர்கள் மனதில் விதைத்தார். மிகவும் எளிமையாகவும் அதே நேரம் மனதில் பதியும் வண்ணமும் அற்புதமான பல கருத்துக்களை அன்றைய தினம் அன்னை சித்தர் அவர்கள் வெளிப்படுத்தினார். அவரின் கருத்துக்களை தொகுத்து தருகிறோம்.
சக்தி பிறக்கும் நகரிலிருந்து ஒரு யாகம்அட்டன் மாநகரில் இந்த யாகத்தை நடத்துவது என்பது எமது கைகளிலோ அல்லது இந்த யாகத்தை ஒழுங்கு செய்தவர்களின் கைகளிலோ இல்லை. இது சித்தர்களின் எண்ணம் போல நடக்கிறது என்பதே உண்மை. காரணம் இந்த அட்டன் மாநகரின் அருகாமையில் அமைந்திருக்கும் மஸ்கெலியா நகருக்கு செல்லும் வாய்ப்பு எனக்குக்கிடைத்தது .இங்கு அமைந்திருக்கும் நீர் மின் நிலையங்களை அறிந்தேன். ஆஹா, இங்கிருந்து தான் இலங்கையின் பல பாகங்களுக்கு மின்சாரம் எனும் சக்தி செல்கிறது,மின்சாரத்தின் மூலம் பல இடங்களுக்கு வெளிச்சம் கிடைக்கிறது. ஆகவே இது சக்தி உருவாகும் பிரதேசம். இங்கிருந்து யாம் செய்யும் இந்த யாகத்தின் பயன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்றடையும் .இது உண்மை. உள்ளன்போடு 210 சித்தர்களை இங்கு வரவழைத்து செய்யப்படும் இந்த யாகத்தில் எவரும் இலகுவில் கலந்து கொள்ளும் வாய்ப்பு கிடைக்காது. ஆகவே இங்கு வந்திருக்கும் அனைவரும் அனுக்கிரகம் பெற்றவர்கள்.
தானத்தின் பயன்
எத்தனை கோடி செல்வங்களை அள்ளிக்கொடுத்தாலும் எந்த வகையில் உதவிகளை வழங்கினாலும் அன்னதானத்திற்கு ஈடான தானம் எதுவும் கிடையாது இது சித்தர்களின் வாக்கு. ஆகவே அன்பர்களே உங்களுக்கு முடிந்த வரை அடுத்தவருக்கு அன்னதானம் செய்யுங்கள். இது கலியுகமாகும். படித்தவர்கள் படிக்காதவர்கள் செல்வந்தர்கள் ஏழைகள் அனைவருக்கும் வழிகாட்டுபவர்களாக சித்தர்கள் விளங்குகிறார்கள். சித்தர்கள் எந்த உருவிலும் நடமாடுவார்கள். பிச்சைகாரர்களாக ,பைத்தியம் பிடித்தவர்களாகக்கூட இருக்கலாம். எவரையும் அலட்சியம் செய்யாதீர்கள். எந்த சித்தராவது உங்களிடம் யாசகம் பெற்று விட்டால் நீங்கள் இந்த பிறவிப்பயனை அடைவீர்கள்.
உங்களிடம் வருபவர்கள் யார்?இது கலியுகம் என்று ஆரம்பத்திலேயே நான் கூறினேன்.இக்காலத்தில் செல்வந்தர்கள்,அரசியல்வாதிகள்,அதிகாரம் மிக்கவர்கள் எவரும் சாதாரண மக்களை தேடி வருவதில்லை மாறாக மக்களே அவர்களை தேடிப்போக வேண்டிய நிலைமை உண்டாகியுள்ளது. ஆனால் சித்தர்கள் அப்படியல்ல அவர்கள் சாதாரண மக்களிடத்தே வருவார்கள் அனுக்கிரகம் செய்வார்கள். ஆரம்பத்தில் 18 ஆக இருந்த சித்தர்களின் எண்ணிக்கை மீண்டும் மீண்டும் அவர்கள் இப்பூவுலகில் அவதரித்து 210 அவதாரங்களை எடுத்திருக்கிறார்கள். சித்தர்கள் இயற்கையை மிகவும் நேசிப்பவர்கள். உயிரினங்களிடம் அன்பு செலுத்துபவர்கள். ஆகவே எந்த உயிரையும் வதைப்பதோ அதை உணவாக உண்ணுவதோ சித்தர் வழிபாட்டுக்கு ஏற்பாகாது.
மோகம்யாருக்கு நாம் உதவி செய்ய வேண்டும் என்பது சிலருக்கு விளங்குவதில்லை. பல நாடுகளைச்சேர்ந்த பல அழகிய பறவைகளைப்பற்றி பேசுகிறோம்,ஆனால் எமக்கு அருகாமையில் இருந்து அடிக்கடி கீச்சிடும் அந்த சிட்டுகுருவிகளை மறந்து விடுகின்றோம். அருகில் உள்ள அந்த சிட்டுகுருவிகளுக்கு உணவிடுங்கள்,அருகிலுள்ள உயிர்களை ,மனிதர்களை நேசியுங்கள். தானம் செய்யும் போது உள்ளன்போடு செய்யுங்கள். பலனை எதிர்ப்பார்த்து செய்யாதீர்கள்.
நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில் என்று சித்தர் சிவபாக்கியர் கூறியிருக்கிறார். ஆக நாதன் எங்கிருக்கிருக்கிறார் என்ற சூட்சுமம் உங்களுக்கு விளங்க வேண்டும். நீங்கள் நாதனாக இருக்கிறீர்கள் ஆக உங்கள் மனதிலிருக்கும் தெய்வாம்சம் விழிப்புற வேண்டும் அதற்கு என்ன செய்ய வேண்டும் ? சித்தர்களை நாடுங்கள்.
ஓம் ஜெய் குருவே துணை என்ற மந்திரத்தை கூறுங்கள்
அப்போது உங்களுக்குரிய குரு தென்படுவார் அவரை பற்றிப்பிடித்துக்கொள்ளுங்கள்
விஷமும் விஷமிகளும்இன்றைய உலகம் மிகவும் உஷ்ணம் நிறைந்தது. விஞ்ஞானிகள் கூட மெய்ஞானத்தின் தெளிவை பெறாது அதை அறிய விரும்பாது உலக மாறுதல்களுக்கு பல காரணங்களை கூறி வருகின்றனர். உஷ்ணம் காரணமாகவே இன்று மனிதனுக்கு பல நோய்கள் உருவாகின்றன. நீங்கள் உண்ணும் ஒவ்வொரு உணவும் ஒரு மூலிகை தான் .எல்லா காய்கறிகளும் மூலிகைகளே. ஆனால் இன்று எல்லா காய்கறிகளிலும் விஷம் நிரம்பியே உள்ளது. வேதியல் இரசாயனங்கள் கலந்த காய்கறிகளையே நாம் இன்று உண்கிறோம். எனவே விஷம் நிறைந்த உணவுகளை உண்டு தான் இன்று மனிதர்களில் பலர் விஷமிகளாகி விட்டனர். ஆனால் உலகத்தில் நிகழவிருக்கும் மாற்றங்களை பல ஆயிரம் வருடங்களுக்கு முன்னரே சித்தர்கள் கூறி விட்டனர். 2010 இற்குப்பிறகு இந்த உலகத்தில் இயற்கை சீரழிகள் எப்படியெல்லாம் இடம்பெறும் என்பதை பிரும்மரிஷி காகபுஜன்டர் கூறி விட்டார்.

Monday, September 26, 2011

உலகின் மிகப்பெரிய பௌத்த ஆலயம்



உலகத்தில் மிகப்பெரிய பௌத்த ஆலயம் அமைந்துள்ள நாடானது உலகில் அதிக இஸ்லாமியர்கள் வசிக்கும் நாடான இந்தோனேசியா என்பது பலருக்கு தெரியாத விடயம் தான். ஆனால் அது தான் உண்மை.தென்கிழக்காசிய நாடுகளில் மகாயான பௌத்தம் வேரூன்றி இருந்த காலத்திலேயே அதாவது எட்டாம் நூற்றாண்டிலேயே போராபுதூர் என்ற இந்த பிரமாண்டமான பௌத்த ஆலயம் நிர்மாணிக்கப்பட்டது. இந்தோனேசியாவின் மத்திய ஜாவாவில் அமைந்துள்ளது இந்த ஆலயம்.இந்த பௌத்த ஆலயமானது ஆறு சதுர வடிவிலான மேடை அமைப்புக்களையும், அதன்மேல் அமைந்த மூன்று வட்ட வடிவ மேடைகளையும் கொன்டது. இவை, 2,672 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட




Sir Thomas Stamford Bingley Raffles




, 504 புத்தர் சிலைகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளதுடன் உச்சியில் அமைந்துள்ள மேடையின் நடுவில், குவிமாடமும் அதனைச் சுற்றி துளைகள் கொண்ட தாது கோபுரங்களுக்குள் அமர்ந்த நிலையிலான 72 புத்தர் சிலைகளும் காணப்படுகின்றன. பௌத்தருக்கான ஆலயமாக மட்டுமல்லாது யாத்திரைக்குரிய இடமாகவும் உள்ளது. புனிதப்பயணம் செய்வோர், இதன் அடியில் தொடங்கி, இதைச் சுற்றியபடியே மூன்று தளங்களுõடாக மேலேறுவர். இம் மூன்று தளங்களும்,



கா
மதாது
, ரூபதாது, அரூபதாது எனப்படும் பௌத்த அண்டக் கோட்பாட்டில் கூறியுள்ளவாறு மூன்று நிலைகளைக் குறிக்கின்றது. இந்தப் பயணத்தின்போது, புனிதப்பயணிகள், 1,460 புடைப்புச் சிற்பங்களைக் கொண்ட சுவர்கள், காப்புச் சுவர்கள் ஆகியவற்றுடன் அமைந்த படிக்கட்டுகள், நடைவழிகள் என்பவற்றினூடாகச் செல்வர் என்பது முக்கிய விடயம்.
வரலாறுபோராபுதூர் பௌத்த ஆலயமானது கிறிஸ்துவுக்குப்பின் 800 ஆம் ஆண்டு காலப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்டிருக்கலாம் என வரலாற்றுக்குறிப்புகள் தெரிவிக்கின்றன. தென்கிழக்காசிய நாடுகளில் மகாயான பௌத்தத்தை பரப்புவதில் முன்னின்ற சைலேந்திர மன்னர் வம்சம் மற்றும் சுமாத்ரா பகுதியில் ஆட்சி செலுத்தி ஸ்ரீ விஜயன் ஆகியோரின் காலப்பகுதிகளே இவை. இம்மன்னர்களின் இருவருமே இவ்வாலயத்தை நிர்மாணிப்பதில் செல்வாக்கு செலுத்தியுள்ளனர்.இந்த ஆலயத்தின் கட்டுமானப்பணிகள் சுமார் 75 வருடங்களாக இடம்பெற்றுள்ளன. சைலேந்திர மன்னர் வம்சத்தில் வந்த சமரதுங்காவின் ஆட்சி காலத்தில் இந்த கட்டுமான பணிகள் முடிவடைந்துள்ளன. இக்காலகட்டத்திலேயே சுமாத்ரா ,ஜவா பகுதிகளில் இந்து சமயத்தை பரப்பும் வகையில் இந்து ஆலயங்களும் அமைக்கப்பட்டுள்ளன என வரலாற்றாசிரியர்களும் தொல்லியலாளர்களும் தெரிவிக்கின்றனர். மேலும் சைலேந்திர வம்சமானது ஆரம்பத்தில் மகாயான பௌத்தத்தில் முனைப்பு காட்டினாலும் பின்னர் இந்து மதத்தில் ஆர்வம் காட்டியதாக தெரிவிக்கப்படுகிறது. காரணம் இதே காலப்பகுதியில் போராபுதூருக்கு 10 மைல் தொலைவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட சிவன் ஆலயம் தான் சிவபிரம்மனன். சைலேந்திர மன்னர்களின் ஆதரவில்லாமல் இவ்வளவு பிரமாண்ட சிவன் ஆலயத்தை அமைத்திருக்க முடியாது என்பது வரலாற்று குறிப்புகளின் தகவல்.
மறைந்து கிடந்த ஆலயம்14 ஆம் நூற்றாண்டில் இந்தோனேசியாவில் பௌத்த மற்றும் இந்து சாம்ராஜ்யங்கள் னீழ்ச்சியுற்றன.இதற்கு காரணம் இஸ்லாம் தலை தூக்கியதாகும். இதன் காரணமாக இந்து ,பௌத்த ஆலயங்களின் பராமரிப்பு கைவிடப்பட்டது. மேலும் இக்காலகட்டத்தில் இப்பகுதியில் ஏற்பட்ட எரிமலை வெடிப்புகள் காரணமாக எரிமலை சாம்பரால் மேற்படி போராபுதூர் ஆலயம் முற்றாக மூடப்பட்டமை குறிப்பிடத்தக்கதொன்று. பின்னர் காடுகள் மூடியதால் கிட்டத்தட்ட இப்பிரதேசமே மறைந்து விட்டது. இதை வரலாறுகள் தான் சொல்கின்றன.எனினும் இவ்வளவு பிரமாண்ட ஆலயமும் அதன் சுற்றுபுறமும் மறைந்தமையை வரலாற்று மர்மம் என்கின்றனர் தொல்லியலாளர்கள்.மீண்டும் கண்டி பிடிப்பு 1811 இலிருந்து 1816 வரை ஜவாவானது பிரிட்டிஷாரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்தது. இக்காலகட்டத்தில் ஜவாவின் கவர்னராக இருந்தவர் சேர் தோமஸ் ஸ்டென்போர்ட் பிங்லே ரபல்ஸ்ஸ் என்பவராவார்.( Sir Thomas Stamford Bingley Raffles) இவர் ஜாவாவின் வரலாற்றை அறிய மிகவும் அக்கறை காட்டினார். இதற்காக நெருந்தூர பயணங்களை மேற்கொண்டார். கோர்னலியஸ் என்ற டச்சு பொறியியலாளரை தலைமைத்துவமாக கொண்டு 200 பேர் கொண்ட குழுவினர் போராபுதூர் பகுதியை சுத்தம் செய்து மீண்டும் இந்த ஆலயத்தை கண்டு பிடித்தனர்.பின்பு முழுமையான ஆலயத்தை கண்டு பிடிக்க சுமார் 50 ஆண்டுகள் வரை சென்றன. மரங்களை வெட்டி இவ்விடத்தை சுத்தம் செய்வது இலகுவாக இருக்க வில்லை. இந்தோனேசிய அரசும், யுனஸ்கோவும் இணைந்து செயற்படுத்திய பெரிய அளவிலான மீளமைப்புத் திட்டம் ஒன்று 1975 ஆம் ஆண்டுக்கும் 1982 ஆம் ஆண்டுக்கும் இடையில் முன்னெடுக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து இந்த நினைவுச்சின்னம் யுனஸ்கோவின் உலகப் பாரம்பரியக் களங்களில் ஒன்றாகப் பட்டியலிடப்பட்டுள்ளது.
இந்த ஆலயத்தின் கட்டிட அமைப்புகள் மற்றும் புடைப்புச்சிற்பங்கள் பலரை திகைக்க வைக்கின்றன. உச்சியில் அமர்ந்த நிலையில் இருக்கும் புத்தர் சிலையானது தர்ம சக்கர முத்திரையடன் உள்ளது. வாயிலில் அமைக்கப்பட்டுள்ள காவற்சிங்க சிலைகள் மற்றும் புடைப்புச்சிற்பங்கள் என்பன அதிசயிக்க வைக்கின்றன. கௌதம புத்தரின் வாழ்க்கை வரலாற்றை சித்திரிக்கும் புடைப்புச்சிற்பங்களும் இந்த ஆலயத்தை இன்னும் மதிப்பால் உயர்த்துகிறது.உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள அதே வேளை பௌத்த யாத்ரீகர்கள் மற்றும் உல்லாசப்பயணிகள் விரும்பி வருகை தரும் இடமாகவும் இது விளங்குகிறது.

Tuesday, September 20, 2011

தேயிலை ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி எப்படி மீளப்போகிறது இலங்கை ?


தேயிலை ஏற்றுமதி 2010 ஆம் ஆண்டு (கி.கி மில்லியன்களில்)
கென்யா 441,021



இலங்கை 314,500



சீனா 302,419



இந்தியா 191,490



ஆர்ஜன்டீனா 98,025



உகண்டா 50,834



மாலவி 48,579



பங்களாதேஷ் 913


இலங்கையின் பிரதான ஏற்றுமதி பொருளாகவும் அந்நிய செலாவணியைப்பெற்றுத்தருவதில் கணிசமான பங்கையும் வகிக்கும் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமைகள் குறித்து பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் எழுந்துள்ளன. உண்மையில் மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி நிலைமைகள் காரணமாகவே தேயிலை ஏற்றுமதி வர்த்தகம் பாதிக்கப்பட்டிருப்பது என்பது உண்மை,எனினும் இதை காரணமாக முன்வைத்து தொழிலாளர்களின் வேதனம் குறைக்கப்பட வேண்டும் என்றும் அல்லது அவர்களின் வேலை நேரத்தை அதிகரித்து அதில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும் என்றும் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. இலங்கை தேயிலை வர்த்தக சங்கம் இந்த ஏற்றுமதி வர்த்தக நெருக்கடி விடயத்தை பி.பி.சி செய்தி சேவை வரை கொண்டு சென்று தொழிலாளர்களின் வேதனத்தை நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என்று கூறியதால் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்கள் மத்தியில் ஒரு வித குழப்ப நிலை தோன்றியது என்னவோ உண்மை .எனினும் தொழிலாளர் வேதனத்தை தீர்மானிக்கும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்ட பிரதான தொழிற்சங்கங்கள் தொழிலாளர் வேதனம் எந்த வகையிலும் குறைக்கப்பட மாட்டாது என்று ஊடகங்கள் மூலம் தெரிவித்ததையடுத்தே தொழிலாளர்கள் மத்தியில் ஓரளவிற்கு நிம்மதி பிறந்தது. எனினும் ஒரு சில தோட்டக்கம்பனிகள் தொழிலாளர் வேதனம் குறைக்கப்படாவிட்டாலும் உற்பத்தி அளவை கூட்ட வேண்டும் என்றும் அதற்காக அவர்களின் பணி நேரங்களில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வந்து பணி நேரமானது அதிகரிக்கப்பட வேண்டும் என்றும் பிரசாரம் செய்து வருவதாக சில தொழிற்சங்கங்கள் விசனம் தெரிவித்துள்ளன.




நெருக்கடி ஏன், எப்படி?



உலகளாவிய ரீதியில் தற்போதைய நிலையில் தேயிலை ஏற்றுமதி வர்த்தகத்தில் மூன்றாமிடம் பிடிக்கின்றது இலங்கை. இலங்கையிடமிருந்து தேயிலையை இறக்குமதி செய்வதில் மத்திய கிழக்கு நாடுகளான சிரியா,லிவியா ,ஈரான் ,ஈராக் ஆகிய நாடுகள் பிரதான இடத்தை வகிக்கின்றன. ஆண்டு தோறும் இலங்கை சுமார் 300 மில்லியன் கிலோ கிராம் தேயிலையை ஏற்றுமதி செய்கிறது. இதில் 78 வீதமானவை மேற்குறிப்பிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கே ஏற்றுமதியாகின்றது. அதைவது கிட்டத்தட்ட 235 மில்லியன் கிலோ கிராம்களாகும். எனினும் இந்த ஆண்டின் ஜனவரி மாதத்திலிருந்து 6 மாதம் வரை இலங்கை மேற்குறிப்பிட்ட நாடுகளுக்கு 55 மில்லியன் கிலோ கிராம் தேயிலையையே ஏற்றுமதி செய்துள்ளது. லிபியா ,சிரியா ஆகிய நாடுகளில் ஏற்பட்டுள்ள அரசியல் கொந்தளிப்பு நிலை காரணமாக அங்குள்ள துறைமுகங்களுக்கு கப்பல்கள் செல்ல முடியாத சூழநிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தேயிலை ஏற்றுமதி கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. இந்த நஷ்டத்திலிருந்து மீள வேண்டிய நிலையில் இலங்கை உள்ளது.




தொழிலாளர் வேதனமும் கூட்டு



ஒப்பந்தமும்இந்நிலையில் நஷ்டத்தை ஈடு கட்ட தொழிலாளர் வேதனத்திலிருந்து நூறு ரூபா வரை குறைக்க வேண்டும் என தேயிலையை ஏற்றுமதி செய்யும் ஒரு சில வர்த்தக சங்கங்கள் இலங்கை தேயிலைச் சபையிடமும் தோட்டக்கம்பனிகளிடமும் கோரிக்கை விடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இவ்வருடம் செய்து கொள்ளப்பட்ட புதி ய கூட்டு ஒப்பந்தத்தின் படி தொழிலாளி ஒருவருக்கு நாளொன்றுக்கு எல்லாம் அடங்களாக 515 ரூபா வழங்கப்பட வேண்டும்.இதில் நூறு ரூபாவை குறைக்க வேண்டும் என்பது இவர்களின் கோரிக்கை,எனினும் கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டவர்கள் முதலாளிமார் சம்மேளனமும் இ.தொ.கா,இலங்கை தேசிய தோட்டத்தொழிலாளர் சங்கம் மற்றும் பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு என்ற அமைப்புகளாகும். இச்சந்தர்ப்பத்தில் கூட்டு ஒப்பந்தம் என்பது இரண்டு வருடங்களுக்கு கைச்சாத்திடப்பட்டுள்ளது என்பது அனைவரும் அறிந்த ஒன்று .அந்த இரண்டு வருடங்களுக்கு இதில் எவ்வித மாற்றங்களும் செய்ய முடியாது. ஆகவே தொழிலாளர் வேதனம் என்பது எவ்விதத்திலும் குறைக்கப்பட சந்தர்ப்பங்களில்லை என தெரிவித்திருக்கும் பிரதான தொழிற்சங்கங்கள் இது குறித்து முதலாளிமார் சம்மேளனம் மாத்திரமே தம்முடன் பேச்சு நடத்துவதற்குரிய உரிமையைக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

தேயிலை வர்த்தக நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு எதிராக சிலர் விஷமத்தனமான பிரசாரங்களை ஆங்கில மற்றும் சிங்கள ஊடகங்கள் மூலமாக முன்னெடுத்து வருவதாக பெருந்தோட்ட தொழிற்சங்க கூட்டமைப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து இதன் தலைவரும் சிரேஷ்ட தொழிற்சங்க வாதியுமான ஓ.ஏ.இராமையா கருதுத்தெரிவிக்கையில் தொழிலாளர் வேதனத்தை குறைக்க பலர் பிரசாரம் செய்து வந்தனர்.ஆனால் அதற்கு சந்தர்ப்பமில்லை என்று தெரிந்தவுடன் தற்போது வேறு விதமான கருத்துக்களை ஊடகங்கள் மூலம் பரப்பி வருகின்றனர். அதாவது
1) தோட்டங்களில் உற்பத்தி திறன் மிகவும் குறைந்துள்ளது






2) தோட்டத்தொழிலாளர்களுக்கு ஏனைய தனியார் துறையினரை விட வேதனம் மற்றும் இதர சலுகைகள் அதிகம்






3) ஆண் தொழிலாளர்கள் குறைவான நேரமே பணியில் ஈடுபடுகின்றனர்



சில மாதங்களுக்கு முன்னர் கூட ஒரு சில தோட்டங்களில் பெண்களை அதிகளவு எடைக்கு கொழுந்து பறிக்கச்கூறி நிர்பந்திக்கப்பட்டது. இதன் பின்னணியிலுள்ள காரணமும் தேயிலை வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பு தான். மறு பக்கம் ஆண் தொழிலாளர்கள் மேல் கூறப்படும் குற்றச்சாட்டு குறித்து பார்க்க வேண்டும். ஒரு தொழிலாமி பகல் உணவு நேரம் தவிர்த்து 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் .எனினும் பெருந்தோட்டப்பகுதிகளில் குறிப்பாக ஆண் தொழிலாளர்கள் தமக்கு வழங்கப்படும் வேலை அளவுக்கு ஏற்ப (கூஅகுஓ) குறிப்பிட்ட நேரத்தில் வேலையை முடித்து விட்டு வேறு வேலைகளுக்கு சென்று விடுவர்.இதற்குக்காரணம் வேறு வருமானத்தை தேடிக்கொள்ளல் பகுதி நேர வேலைகளில் இணைந்து கொள்ளல் போன்றவை தான். இது அக்காலத்திலிருந்து பாரம்பரியமாக இருந்து வரும் ஒரு விடயமே தவிர இதில் இரகசியங்கள் இல்லை என்றார்.




உற்பத்தித் திறனை அதிகரிக்க அரசாங்கத்தின் முயற்சி



சகல வேலைத்தளங்களிலும் உற்பத்தித்திறனை கூட்டுவதற்கு அரசாங்கத்தினால் புதிய செயற்றிட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. உற்பத்திறன் மற்றும் தொழிற்றிறனை அதிகரித்தல் எனும் தலைப்பில் இது குறித்த கலந்துரையாடல்களை சிரேஷ்ட அமைச்சர் டியூ குணசேகர முன்னின்று நடத்தி வருவதாக சிரேஷ்ட தொழிற்சங்கவாதி ஒருவர் தெரிவிக்கிறார்.
இதே வேளை இந்த விவகாரம் பிரதான தொழிற்சங்கங்களிடையே அதிருப்தியை தோற்றுவித்துள்ளது. தொழிலாளர் நலன் பேணும் விடயங்களில் அக்கறை செலுத்தாது உற்பத்தித்திறனை அதிகரிக்கும் செயற்பாடுகளில் ஈடுபாடு காட்டுவதா என சில தொழிற்சங்க பிரமுகர்கள் விசனம் தெரிவித்துள்ளனர். தொழிலாளர் சம்பந்தப்பட்ட விடயங்களை தொழில் அமைச்சே கையாள வேண்டும் என்றும் இதை ஒரு சிரேஷ்ட அமைச்சர் மூலம் கொண்டு நடத்துவதன் உள்நோக்கம் என்ன என்றும் அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். சகல வேலைத்தளங்களிலும் இது அமுல்படுத்தப்பட்டாலும் தொழிலாளர் வர்க்கமே இதன் மூலம் பாதிப்பை எதிர்நோக்கவுள்ளதாக அவர் குறிப்பிடுகிறார்.




கூட்டு ஒப்பந்தத்தில் வேலை நேரத்தை கூட்ட முடியுமா?



தொழிலாளர்களின் பணி நேரம் என்பது தனித்து நோக்கப்பட வேண்டிய விடயமல்ல. தோட்டத்தொழிலாளர்களைப்பொறுத்த வரை தொழிற்சட்டம் ,கைத்தொழில் பிணக்குச்சட்டம் மற்றும் கூட்டும் ஒப்பந்தம் இந்த மூன்றையும் பார்க்க வேண்டும். பணி நேரத்தை அதிகரிப்பது அல்லது கட்டாயமாக்குவது என்பது நிர்வாகங்களுக்கும் தொழிலாளர்களுக்குமிடையில் விரிசலை ஏற்படுத்தும். கூட்டு ஒப்பந்தத்திற்குள் இதை கொண்டு வர முடியாவிட்டாலும் வேறு ஏதாவது ஒரு முறையில் இது கொண்டு வரப்படலாம் என்பதே பலரினதும் எதிர்ப்பார்ப்பு .




தற்போதைய நிலை என்ன?
கடந்த ஆறு மாத காலங்களில் ஏற்றுமதி செய்யப்பட்ட தேயிலையின் அளவு மிகக்குறைவாக உள்ள நிலையில் எங்ஙனம் இந்த சரிவிலிருந்து இலங்கை மீளப்போகிறது என்பது கேள்விக்குறியே. இந்த நிலைமை தொடர்ந்தும் இருப்பதாகவே பெருந்தோட்ட அமைச்சின் செயலாளர் மாலனி பீரிஸ் தெரிவிக்கிறார். இதன் காரணமாக நாம் வேறு நாடுகளுக்கு அதிகளவான தேயிலையை ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகத் தெரிவிக்கிறார்.இலங்கை தேயிலை சபையும் பெருந்தோட்ட அமைச்சும் இது குறித்து கலந்துரையாடி சீனா ,அமெரிக்கா ஜப்பான் ஆகிய நாடுகளின் உள்ளூர் தேவையை அறிந்து அங்கு தேயிலையை சந்தைப்படுத்தலாமா என யோசித்து வருவதாக அவர் தெரிவிக்கிறார். முக்கியமாக சீனாவில் இலங்கை பிளக் டீயிற்கு அதிக கிராக்கி நிலவுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.
உலக சந்தையை இழக்கிறதா இலங்கை?
தேயிலை ஏற்றுமதியில் உலகில் முன்னணியில் இருந்த இலங்கையை தற்போது ஆபிரிக்க நாடான கென்யா பின் தள்ளியுள்ளது. இருப்பினும் சிறந்த இரகம் மற்றும் விலை உயர்ந்த தேயிலையை ஏற்றுமதி செய்யும் நாடுகளுள் இலங்கை முன்னணியிலுள்ளது. தேயிலை தொழிற்றுரையை நம்பி நேரிடையாகவும் மறைமுகமாவும் இலட்சக்கணக்கானோர் உள்ளனர்.எனினும் சில கம்பனிகள் மீள் நடுகையில் அதிக அக்கறை காட்டுவதில்லை என தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக பழைய தேயிலை மலைகள் இன்று பாகம் பாகமாக பிரிக்கப்பட்டு வெளியாருக்கு விற்கும் நிலை தோன்றியுள்ளதை மறுக்க முடியாது. அந்நிய செலாவணியை பெற்றுத்தரும் முக்கிய பயிர் இது என்பதிலும் பார்க்க தொழிலாளர் வர்க்கத்தின் பெருமை கூறும் ஒரு வர்த்தக பொருளாக இன்று தேயிலை விளங்குகிறது. தொழிலாளர் வர்க்கத்தின் சமூக நலன்களை மேம்படுத்தும் வேலைத்திட்டங்களை முன்னெடுத்துச்சென்றால் மட்டுமே இத்தொழிற்றுரையை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச்செல்ல முடியும்.

Tuesday, May 3, 2011

ராஜபக்ச -பிரபாகரன் , ஒபாமா - பின்லேடன்














அல்கைதா தலைவர் ஒசாமா பின்லேடன் அமெரிக்க துருப்புக்களால் கொல்லப்பட்ட செய்தி சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக ஒளிஒலிபரப்பாகி கொண்டிருந்த போது ஒரு தொழிற்சங்க முக்கியஸ்த்தர் திடீரென எனக்கு தொலைபேசி அழைப்பினை ஏற்படுத்தினார். ஒசாமா கொல்லப்பட்ட விடயத்தை சர்வசாதாரணமாகவே இன்று உலக மக்கள் எடுத்துக்கொள்வர் என்று தெரிவித்த அவர் அமெரிக்காவிற்கு வேண்டுமானால் இது மகிழ்ச்சி தரும் விடயமாக இருக்கலாம் காரணம் ஒசாமாவால் அவர்கள் நேரடியாக பாதிக்கப்பட்டவர்கள். மற்றையோருக்கு இது சாதாரண விடயம் தான் என்றார்.ஏன் என்று கேட்டேன் அதற்கு அவர் சொன்ன பதில் இது. ஒசாமா ஒரு சர்வதேச தீவிரவாதியாக அடையாளம் காணப்பட்டவன். ஆகவே அவனுக்குள் பல திறமைகள் இருக்க வேண்டும் முக்கியமாக அமெரிக்க துருப்புகளின் கண்களில் படாமல் உலகெங்கும் அவர் சுற்றி வந்திருக்கிறான்.அப்படி இருக்கும் போது பாகிஸ்தானில் ஒரு வீட்டில் இருக்கும் போது அவன் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறான் என்றால் சந்தேகமேயில்லை அவனை யாரோ காட்டிக்கொடுத்துள்ளனர். இது காட்டிக்கொடுக்கும் மக்கள் அதிகரித்துள்ள உலகம். ஆகையால் இதை சாதாரணமாகத்தானே எடுத்துக்கொள்ள வேண்டியுள்ளது ? என்று திருப்பிக்கேட்டார்.
அது அவரது சொந்த கருத்து. இருப்பினும் மேற்குல நாடுகளுக்கு சிம்ம சொப்பனமாய் இருந்த ஒசாமா கொல்லப்பட்டு விட்டான். ஆனால் அவனது அமைப்பு பூரணமாக அழிக்கப்படவில்லை. அல்கைதா அமைப்பின் இரண்டாம் நிலை தலைவர் அய்மன் அல்சௌகாரி ஒசாமாவின் இடத்தை நிரப்ப காத்திருக்கிறார்.மேலும் தமது புனித யுத்தம் தொடரும் என்றும் தெரிவித்துள்ளார். இது அமெரிக்க உட்பட பல மேற்குலக நாடுகளுக்கு அபாய எச்சரிக்கை தான். அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ புஷ்ஷை கசாப்பு கடைக்காரன் என்று சொன்னவர் தான் இந்த அல் சௌகாரி. தனது ஆட்சி காலத்தில் ஈராக் மீதான ஆக்கிரமிப்பால் உலகம் முழுக்க விமர்சிக்கப்பட்டவர் ஜோர்ஜ் டபிள்யூ புஷ். சதாம் உசேனை தூக்கிலிட்ட பிறகும் கூட ஈராக்கில் இரசாயன ஆயுதங்கள் இருப்பதை அவரால் கண்டு பிடிக்கமுடியவில்லை. மறுபுரம் இவரது ஆட்சி காலத்திலேயே அமெரிக்கா இரட்டை கோபுரத்தையும் அல்கைதாவின் தாக்குதலில் பறி கொடுத்தது. இரண்டு தடவைகள் பதவியிலிருந்தும் உருப்படியான எந்த வேலையும் செய்யாமல் போன புஷ்ஷின் இடத்திற்கு வந்த பராக் ஒபாமாவின் நுணுக்கமான வியூகத்திற்குக் கிடைத்த வெற்றியே ஒசாமாவின் மரணம்.
இனி ஒபாமா தான் சில காலங்களுக்கு ஹீரோவாக ஜோலிக்கப்போகிறார். சரி அதிருக்கட்டும் தலைப்பிற்கு இன்னமும் வரவில்லையே? இலங்கையிலும் சுமார் 20 ஆண்டு கால யுத்தத்தை தனது இரும்புப்பிடியினால் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தவர் இன்றைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச. விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரன் உட்பட பலரை அழித்து புலிகள் இயக்கம் ஒன்றே இன்று இலங்கைக்குள் இல்லை என்று கூறப்படுகிறது. புலிகள் இராணுவ ரீதியாக தோல்வியை தழுவியதும் ஜனாதிபதி ராஜபக்ச நாயகனாக வலம் வந்தார்.இரண்டாவது தடவை அவர் பெரும்பான்மையுடன் ஜனாதிபதி பதவியை கைப்பற்றவும் அவரது கட்சி பாராளுமன்றத்தில் அறுதிப்பெரும்பான்மை பெற்று அரசியல் அமைப்பை மாற்றுமளவிற்கு முன்னேறவும் அவருக்கு வலிமையை கொடுத்தது இந்த வெற்றி தான்.மறுபுரம் போர்க்குற்றச்சாட்டுகளுக்கு அரசாங்கம் உட்படாமலில்லை. ஐ.நாவின் போர்க்குற்றச்சாட்டு அறிக்கைக்கு பதில் கொடுக்கும் கடப்பாட்டில் இலங்கை உள்ளது.
இலங்கை இராணுவத்திற்கும் விடுதலை புலிகளுக்குமிடையிலான யுத்தத்தின் இறுதி கட்டத்தில் பல பொது மக்கள் கொல்லப்பட்டதாகத் தான் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆனால் இது ஒபாமாக்களின் விடயத்தில் எல்லாம் எடுபடாது.காரணம் வியட்நாம்,ஈரான் மற்றும் ஆப்கான் மீதான ஆக்கிரமிப்பு காலத்தில் அமெரிக்கா மற்றும் அதன் நேசப்படைகள் செய்த அட்டூழியங்கள் பற்றி யார் தான் வாய் திறப்பார்கள்?
வாய் திறப்பவர்கள் இருக்கிறார்கள் ஆனால் யாராவது காட்டிக்கொடுக்க வேண்டுமே ? என்ன புரியவில்லையா? ஆரம்ப பந்தியை முதலிலிருந்து வாசிக்கவும்.

Monday, September 13, 2010

மலையக மக்களை நாம் மறக்க வில்லை…!



இலங்கையில் வடக்கு கிழக்கு தவிர்ந்த மத்திய மலை பிரதேசத்தில் செறிந்து வாழும் இந்திய வம்சாவளி மலையக மக்களை நாம் மறக்க வில்லை. மறக்கவும் முடியாது.தென்னிந்தியாவிலிருந்து அவர்கள் உழைக்கும் மக்களாக இங்கு வந்த காலம் முதல் இப்போதுள்ள சூழல் வரை எல்லாம் அறிந்து வைத்துள்ளோம். இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அறியாமலில்லை என்று கூறுகிறார் பாடகர் பத்மஸ்ரீ டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம்.வீரகேசரி பத்திரிகையின் 80 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு தலைநகர் கொழும்பு ,யாழ்ப்பாணம் ,மற்றும் மலையகத்தில் கொட்டகலை ஆகிய இடங்களில் இன்னிசை கச்சேரிகள் நடத்தி இசை ஆர்வலர்களை மட்டுமன்றி தனது அமைதியான அன்பான குணத்தின் மூலம் பலரினதும் மனதில் இடம்பிடித்து விட்டார் டாக்டர் சீர்காழி ஜி.சிவசிதம்பரம். சரீரத்தில் மட்டுமன்றி சாரீரத்திலும் தனது தந்தை சீர்காழி கோவிந்தராஜனை எமது கண் முன் கொண்டு வந்து ஆச்சரியப்படுத்திய அவரை சூரியகாந்தி பத்திரிகைக்காக அட்டனில் சந்தித்த போது அவர் தெரிவித்த கருத்துக்கள்.
மலையகம் என்ற சொற்பதம் எமக்கு புதியதல்ல அதன் தரைத்தோற்றம் மக்கள் ,அவர்களின் பண்புகள் எல்லாம் அறிந்து தான் வைத்துள்ளோம். எனது தந்தைக்கு எந்தளவிற்கு இங்கு இரசிகர்கள் உள்ளனரோ அதே போல் எனக்கும் எனது குழுவினருக்கும் இங்கு கிடைத்த வரவேற்பு நெகிழ்ச்சியைத் தருகிறது. 80 வருடம் தொடர்ச்சியாக ஒரு தமிழ் பத்திரிகை இலங்கையில் வந்து கொண்டிருப்பது ஆச்சரியம் அந்த பத்திரிகை நிறுவனத்தின் அழைப்பின் பேரில் என்னையும் எனது குழுவினரையும் அழைத்து இன்னிசை கச்சேரி நடத்தி எமக்கு மாபெரும் கௌரவத்தை அளித்து விட்டனர். என்று தான் கூற வேண்டும்.
மேலும் இவ்வாறான இசை நிகழ்வுகள் எமது உறவை மேலும் வலுப்படுத்துகின்றன. கலைகளுக்கு மொழியோ மதமோ ஒரு தடையாக இருப்பதில்லை. அதை பலமுறை பல சந்தர்ப்பங்களில் நாம் அவதானித்துள்ளோம் அனுபவித்துள்ளோம். இவ்வாறான நிகழ்வுகள் எம்மை மட்டுமல்லாது அனைத்து மொழி பேசும் மக்களுக்கும் உள அமைதியையும் ஆர்வத்தையும் ஏற்படுத்துகின்றன. இன்னிசை கச்சேரிக்காக இலங்கை மண்ணில் கால் பதித்த நாள் முதல் எமக்குக்கிடைத்த வரவேற்பும் அன்பும் மறக்க முடியாதவை. எனது தந்தையின் குரல் எனக்கு இருப்பதாக பலரும் கூறி ஆச்சரியப்படுகின்றனர்.இது எனக்குக்கிடைத்த வரம் என்றே கூற வேண்டும். குரலை வளப்படுத்த நான் விசேடமாக எதுவும் செய்வது கிடையாது. அதை அப்படியே விட்டு விட வேண்டும் என்று தான் கூறுவேன்.குரலை கடினப்படுத்தி பாடல்கள் என்ற பெயரில் சத்தமிடுவதை தவிர்த்தாலே போதும்.
மலையகத்தில் கொட்டகலை நகரில் நான்கு மணித்தியாலங்கள் தொடர்ச்சியாக இன்னிசை கச்சேரி நடந்தது.அனைவரும் அமைதியாக அமர்ந்து மெய்மறந்து இரசித்து பார்த்தது மட்டுமன்றி தமக்கு விருப்பமான பாடல்களை எழுதி தந்தனர். அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினோம். எம்மேல் அவர்கள் வைத்திருந்த அன்பின் வெளிப்பாட்டை மனமகிழந்து ஏற்றோம் என்றார்.
உங்களது தந்தை பக்தி பாடல்களால் புகழ் பெற்றவர் நீங்கள் விரும்பி வணங்கும் தெய்வம் யார் என்று கேட்டதற்கு சட்டென தாய் தான் என்று பதில் வந்தது. அதற்கு காரணமும் கூறினார். தந்தை தாயை விட வேறு தெய்வங்கள் இருப்பதாக எனக்குத்தெரியவில்லை. அதிலும் சிறுவயதில் சோறுட்டி ,பாலூட்டி ,தாலாட்டி ,சீராட்டி வளர்ப்பதில் தாயின் பங்கை எவரும் நிரப்பி விட முடியாது. பிள்ளையின் முதல் சொந்தம் தாய் தானே? நான் இன்றும் எனது தாயுடன் தான் வசித்து வருகிறேன் என்கிறார் சீர்காழி .ஜி.சிவசிதம்பரம். வித்தியாசமான அதே நேரம் மலையக மக்களையும் ஞாபகத்தில் வைத்திருக்கும் ஒரு இன்முகக் கலைஞரை சந்தித்ததில் மனம் நிரம்பியிருந்தது.
சிவலிங்கம் சிவகுமாரன்

Monday, July 19, 2010

இந்திய வம்சாவளியினரா மலையகத்தமிழர்களா நாங்கள்?

இத்தனை காலமும் இல்லாத சந்தேகம் இப்போது ஏன் திடீரென ஏற்பட வேண்டும் என்று பலர் நினைக்கக்கூடும் ஆனால் தமிழர்கள் என்ற பொதுவான அடையாளப்படுத்துதலின் கீழ் மலையக மக்கள் என்று கூறப்படுவோர் இன்று இல்லை அல்லது அவர்கள் வேறு விதமாக புரிந்து கொள்ளப்படுகின்றார்கள் என்ற சர்ச்சைகளுக்கு மத்தியிலேயே இப்படி ஒரு கேள்வியை கேட்கத்தோன்றியது. அண்மையில் கோவையில் இடம்பெற்ற உலகத் தமிழ் செம்மொழி மாநாட்டில் கூட மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் கலந்து கொண்ட குழுவினருக்கும் இதே அனுபவம் தான் ஏற்பட்டிருக்கிறது. நாங்கள் மலையகத்தமிழர்கள் என்று ரீதியில் ஒரு சமுக அந்தஸ்த்தோடு கூற விழைந்த போது மலையகமாக அது எங்குள்ளது நீங்கள் மலைச்சாதியினரா என்ற வகையில் வினா எழுப்பப்பட்டுள்ளது. மேற்படி குழுவுக்கு தலைமை தாங்கிய கவிஞர் சு.முரளிரதன் இச்சம்பவத்தை ஒரு நிகழ்வில் வேதனையோடு கூறியதை எவர் அலட்சியப்படுத்தினாலும் எம்மால் இருக்க முடியாது என்ற நிலையிலேயே விவாதத்திற்குரிய இவ்விடயம் பற்றி எல்லோரும் கலந்தாலோசித்து ஒரு முடிவுக்கு வர வேண்டும் என்று நினைக்கிறோம், காரணம் இன்னும் ஆயிரம் வருடங்களுக்குப்பிறகு நாம் குறிப்பிடும் மலையக சமுகம் அந்தப்பெயருடனேயா அல்லது வேறு பெயருடனேயா இருக்கப்போகின்றது, இயங்கப்போகின்றது என்பதை தீர்மானிக்கும் சக்திகளாக ஏன் இப்போதுள்ளவர்கள் விளங்கக்கூடாது என்ற கேள்வியும் எழாமலில்லை.
இச்சந்தர்ப்பத்தில் மேற்கூறிய விடயம் பற்றி அலசி ஆராய்வதற்குப் பல காரணங்கள் முன்னிற்கின்றன.

1)தென்னிந்தியாவிலிருந்து உழைக்கும் வர்க்கமாக இலங்கை வந்த ஒரு மக்கள் கூட்டம் இன்னமும் இங்கு வாழ்ந்து கொண்டிருப்பது பற்றி இந்தியாவில் உள்ள பெரும்பாலனவர்களுக்கு ஏன் தமிழ் நாட்டினருக்கே தெரியாமலிருப்பது.


2) இலங்கை தமிழர்கள் அல்லது இலங்கை தமிழ், இலக்கியம்,கலாசாரம்,பாரம்பரியம் என்றால் அது ஒன்று தான் இருக்கின்றது இருக்க வேண்டும் என்ற ரீதியில் இன்று உலகம் முழுக்க பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றமை.


3)இப்படி ஒரு தமிழ் பேசும் சமுகம் இருக்கும் பட்சத்தில் அவர்களின் எங்கிருந்து வந்தார்கள் அவர்களின் அடையாளப்படுத்தல் என்ன ஏன் அப்படி இருக்க வேண்டும் என்ற அக்கறை எவருக்கும் இல்லாது போனமை.


4) இந்நிலையில் மலையகம் என்ற பதம் பலருக்கு விளங்காத ஒரு சொல்லாகவும் கேலிக்குரிய விடயமாகவும் ஆக்கப்பட்டிருக்கின்றமை.


அண்மையில் புதிதாக வெளிவந்திருக்கும் ஒரு தமிழ் வாரமலரின் ஆசிரியத்தலையங்கத்திலேயே மலையக மக்கள் மலைபிரதேச மக்கள் என்று விளிக்கப்பட்டுள்ளனர்.குறிப்பிட்ட பிரதேசத்தில் வாழும் ஒரு மக்கள் கூட்டத்தினரை அப்பிரதேச புவியியல் அம்சங்களை வைத்து பெயர் சூட்டி அழைக்கும் பண்பு என்பது வேறு அதை இதோடு ஒப்பிடுவது ஏற்றுக்கொள்ள முடியாத விடயம். சங்க காலத்தில் மலையும் மலை சார்ந்த மக்களை குறிஞ்சி நில மக்கள் என்று அழைத்ததுண்டு. இப்போது அப்படியல்லவே? ஆபிரிக்காவின் சகாரா பகுதி வாழ் மக்களை பாலைவனக்கூட்டம் என்றா அழைக்கிறோம் அல்லது இமயமலை நேபாளம் பகுதி வாழ் மக்களை பனி மலை பகுதி வாழ் மக்கள் என்றா அழைக்கிறோம்? தமிழ் நாட்டைப்பொறுத்த வரை மலைசாதியினர் அல்லது மலைப்பகுதி மக்கள் என்று குறிப்பிடப்படுவோர் பூர்வீகக்குடிகள் அல்லது ஆதிவாசிகள் என்றே பொருள்படும். இந்தியாவில் 416 வகையான ஆதிவாசிகள் உள்ளனர். சரி விடயத்திற்கு வருவோம். மலையக மக்கள் என்ற பதம் எவ்வாறு உருவானது?
1844 ஆம் ஆண்டு இந்தியாவிலிருந்து இலங்கை கோப்பி தோட்டங்களில் பணி செய்வதற்காக லுதினன் கேர்னல் ஹென்றி சி.போர்ட் என்பவர் 14 பேரை அழைத்து வந்ததோடு வரலாறு ஆரம்பிக்கின்றது. ( ஆனால் 1818 ஆம் ஆண்டே இந்தியாவிலிருந்து இலங்கையின் மத்திய மலைப்பிரதேசத்திற்கு மக்கள் வந்ததாக ஒரு குறிப்பு கூறுகிறது)
இவர்கள் இலங்கையின் மத்திய மலைப்பிரதேசங்களுக்கே முதன் முதலில் வந்தனர் என்று வரலாறு கூறுகிறது.மலைகள் சூழந்த பிரதேசமாகையால் இப்பகுதி வாழ் மக்கள் மலைய மக்கள் என்று அழைக்கப்பட்டனர் என குறிப்பிடப்பட்டாலும் 1950 களுக்குப்பிறகே மலையகம் என்ற பதம் தோற்றம் பெற்றது. புவியியல் ரீதியில் சப்ரகமுவ குன்றுகளை தவிர்த்து கடல் மட்டத்திலிருந்து 300 மீற்றருக்கு மேல் அமைந்துள்ள பகுதிகள் மலையகம் என வரையறுக்கப்படுகிறது. ஆனால் சமுகம் சார்ந்து பார்க்கும் போது மாத்தளை,கண்டி,பதுளை,இரத்தினபுரி,கேகாலை, ஏன் தென் பகுதியின் காலி மாவட்டத்திலும் தென்னிந்தியாவிலிருந்து வந்த மக்கள் வாழ்கின்றார்கள். அப்படியானால் அவர்களை மலையகத்தவர்கள் என்று அழைப்பது சரியாகுமா?
மலையகம் ஒரு தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்ற குரல்கள் எழுந்து வருகின்றன ஆனால் எமது அடையாளம் என்பது இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் அதை எப்படி மாற்ற முடியும் என்ற பதில் குரல்களும் எழாமலில்லை.இந்தியாவின் அடைமொழியோடு நாம் வாழ விரும்பவில்லை இப்படி ஒரு மக்கள் கூட்டம் இருப்பதை அவர்கள் அறியாமலிருக்கும் போது ஏன் அந்தப்பெயரை நாம் சூட்டிக்கொள்ள வேண்டும் என்ற இளந்தலைமுறையினரின் கோபத்திலும் நியாயம் இல்லாமலில்லை. இது குறித்து ஒரு சந்தர்ப்பத்தில் சிரேஷ்ட தொழிற்சங்கவாதியான ஓ.ஏ.இராமையாவுடன் கலந்துரையாடிக்கொண்டிருக்கும் போது அவர் சில விளக்கங்களை கூறினார்.
‘ஒவ்வொரு சமுகத்திற்கும் ஒரு வரலாறு உண்டு ,வரலாற்றை திரிபுபடுத்த எவராலும் முடியாது.தென்னிந்தியாவிலிருந்து பணி செய்வதற்காக வந்த மக்கள் இலங்கைக்கு மட்டுமா வந்தார்கள்? மலேஷியா ,மொரிஷியஸ் நாடுகளுக்கும் சென்றார்கள்.அவர்கள் தாம் வாழ்ந்த பிரதேசத்திற்கு ஏற்ப சமுகப்பெயர்களை சூட்டிக்கொள்ள வில்லை.இன்றும் மலேஷியாவில் இந்திய வம்சாவளி தமிழர்கள் என்ற பதத்தை தான் பாவிக்கின்றனர். ஆகவே எமது வேர் இந்தியா தான் என்பதில் சந்தேகமில்லை. தொழில் ரீதியாக பார்க்கும் போது பெருந்தோட்டத்தொழிலாளர்கள் என்று கூறுவதில் தப்பில்லை. ஆனால் மலையகத்தவர் என்ற பதத்தை எப்படி ஏற்றுக்கொள்வது? இன்னும் ஆயிரம் வருடங்கள் சென்றாலும் எம்மை இந்திய வம்சாவளி தமிழர்கள் தான் என்றே வரலாறு கூறும் காரணம் அது தான் உண்மை. ஏன் எமது பிறப்பத்தாட்சி சான்றிதழ்களில் என்ன குறிப்பிடப்பட்டுள்ளது? மலையகத்தமிழர் என்றா உள்ளது? அப்படி மலையக சமுகம் என்று நாம் கூறிக்கொண்டாலும் அதை அரசாங்கத்திடம் கூறி சான்றிதழலில் மாற்றிக்கொள்ளத்தான் முடியுமா? இந்திய வம்சாவளி மக்களை ஓரங்கட்டுவதற்கும் அவர்களை கேலிப்பொருளாக சித்திரிப்பதற்கும் பலர் இன்று முனைப்பாக உள்ளனர்.ஒரு பேராசிரியர் சி.வி.வேலுப்பிள்ளையை தோட்டக்கவிஞர் என்று வர்ணிக்கிறார் இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியுமா? எமக்கென்று ஒரு வரலாறு உள்ள போது இடையில் ஏற்படுத்திக்கொண்ட ஒரு பெயரை வைத்துக்கொண்டு வாழ்தல் சரியா என்பதை சிந்திக்க வேண்டும்” என்றார்
எங்கள் சமுகத்தை நாம் எப்பெயர் கொண்டு அழைக்க வேண்டும் என்பது வாத பிரதிவாதங்களுக்கு உட்டபட்ட விடயம் எனினும் காலத்தின் தேவை அறிந்து இது குறித்து நாம் உடனடியாக செயற்பட வேண்டிய விடயமாகி விட்டது. கல்விமான்கள் ,புத்தி ஜீவிகள் , அரசியல் தொழிற்சங்க பிரதிநிதிகள் இது குறித்து ஆக்கபூர்வமான கருத்துகளை முன் வைக்க வேண்டும் என்பது எமது தாழ்மையான வேண்டுகோள்.


சிவலிங்கம் சிவகுமாரன்