Saturday, July 14, 2012

ஒரு நல்லாசானின் மறைவு
அட்டன் புனித ஜோன்
 பொஸ்கோ கல்லூரியில் தமிழ் ஆசானாக கடமையாற்றிய திரு.செபஸ்டியன் அவர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு வவுனியாவில் காலமானார்.
1958 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் நறுமலர்குளம் என்ற இடத்தில் பிறந்தார் திரு.செபஸ்டியன் அவர்கள்.  தனது ஆரம்ப கல்வியை மன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் பயின்ற இவர் உயர் கல்வியை மட்டகளப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். 1989 ஆம் ஆண்டு  அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் மாணவர் விடுதி மற்றும் அருட்சகோதரர் இல்லத்திற்கு பொறுப்பாளராய் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட அவர் சிறந்த பேச்சாற்றலும் தமிழ் மொழியை குறிப்பாக சங்க இலக்கியங்களை எமக்கு  அருமையாய் போதிக்கும் நல்லாசானாய் திகழ்ந்தார்.  மிகவும் கண்டிப்பு குணம் மிக்க இவர் மாணவர்களுடன் பாசத்துடன் பழகும் சுபாவம் மிக்கவர். வாசிப்பை மிகவும் நேசிக்கும் ஒருவராக விளங்கிய திரு.செபஸ்டியன் அவர்கள்  பல அரிய புத்தகங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். இவர் படிப்பிக்கும் பாங்கு மிகவும் அலாதியானது. சங்க இலக்கியங்களில் வரும் பாத்திரங்களின் தனித்தன்மையை தனது பாணியில் அற்புதமாக விளக்குவார். அவரது காலகட்டத்தில் இடம்பெற்ற பாடசாலை இலக்கிய மன்ற கூட்டங்களில் இவரது பேச்சை கேட்க  மாணவர்கள் மிகவும் ஆவலாய் இருப்பர். பிறப்பால் கத்தோலிக்கராய் இருந்தாலும் இவர் மதங்களை கடந்த ஒரு நல்ல மனிதராக இருந்தார் என துணிந்து கூறலாம். காரணம் நவராத்ரி மற்றும் ஏனைய விசேட நிகழ்வுகளில்  இந்து மத தத்துவங்களை பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் அற்புதமாய் சொற்பொழிவாற்றும் வல்லமையைப்பெற்றிருந்தார். இஸ்லாம் மதம் மற்றும் இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றி ஆழ்ந்த புலமையைப்பெற்றிருந்தார். இலக்கிய வகுப்புகள் நடத்தும் போது எமது வகுப்பில் இருக்கும் இஸ்லாமிய மாணவர்களை எழுப்பி இஸ்லாம் மதம் தொடர்பில் பல விளக்கங்களை அவர்கள் ஆச்சரியப்படும் படி எடுத்துக்கூறுவார். ஏனைய மதங்கள் பற்றியும் அவற்றின் உட்பொருள் பற்றியும் இவர் மாணவர்கள் மத்தியில் போதிப்பதை கூட ஒரு சிலர் விரும்பியிருக்க வில்லை  எனலாம். எனினும் மாணவர் மத்தியில் மரியாதைக்குரிய ஆசானாய் ஏனைய மதங்களை மதிக்கும் போற்றும் அதன் அருமை பெருமைகளை விளக்கும் ஒரே மனிதராய் அக்காலகட்டத்தில் எமது கல்லூரியில் விளங்கினார்.  தான் பெற்ற பல்துறை அறிவுக்கு காரணம் வாசிப்பு ஒன்றே என பெருமையாகக்கூறுவார். இவரது மேடைப்பேச்சில் திருக்குறலும் அதன் விளக்கங்களும் இடம்பெறாமல் இருந்ததில்லை.1995 ஆம் ஆண்டு வரை எமது கல்லூரியில் கடமையாற்றினார்.  சுகயீனமுற்று இருந்த அவர் கடந்த 12 ஆம் திகதி காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கல்லூரி  சமூகம்  மற்றும் பழைய மாணவர்கள் பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்திற்கும் தமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறது.

சிவலிங்கம் சிவகுமாரன்
பழைய மாணவர் ஒன்றியம்
புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி அட்டன்

Friday, February 10, 2012

லதா அக்கா....!



வீரகேசரி ஆசிரியப்பீடத்தில் மெட்ரோ நியூஸ் பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்த போது எங்கிருந்தோ வந்து எம்முடன் இணைந்து கொண்டவர் லதா அக்கா. மிகவும் கடும்போக்கான குணத்தையுடையவர் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்தாலும் நாட் செல்ல செல்ல எங்கள் வழிக்கு வந்து விட்டார். அவர் வளர்ந்த சூழநிலை அவரைச்சுற்றி ஒரு வேலியை போட வைத்திருக்கலாம். இசைக்கும் நகைச்சுவைக்கும் இவர் அடிமை ,அது தான் இவரது பலவீனமும் என்று கூட சொல்லலாம்,காரணம் அவர் மிகக்கோபமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அவருக்கு பிடித்த பாடலை மெதுவாக இசைக்க விடுவேன் தூரத்திலிருந்து அவர் முகத்தை பார்ப்பேன் முகம் மலரத்தொடங்கும் கீச்சு குரலில் அந்த பாடலை வாய் முணுமுணுக்கும் பிறகு என்ன வழமையான லதா அக்கா தான். நகைச்சுவைக்கு வாய் விட்டு சிரிக்கும் அவர் சில நேரங்களில் கண்ணீர் வரும் அளவுக்குக்கூட ரசித்து சிரிப்பார். சர்ச்சைக்குரிய செய்திகள் வரும் போதும் அது விவாதத்திற்குட்படும் சந்தர்ப்பங்களிலும் அவர் தனது நிலையிலிருந்து பின் வாங்கமாட்டார். தீவிரமான பெண்ணியவாதியான இவர் ஒரு சில சந்தர்ப்பங்களில் நான் முன்னுதாரணம் காட்டும் சில விடயங்களை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டு விடுவார். பின்பு என்ன அவரை வழிக்கு கொண்டு வரத்தான் இருக்கிறதே பாரதி கண்ணம்மா பாடல் ,எனக்குத்தெரிய அவர் மிகவும் இரசித்து கேட்கும் பாடல்கள் நிழல் நிஜமாகிறது படங்களில் வரும் அனைத்துப்பாடல்களும் , கம்பன் ஏமாந்தான் , பாரதி கண்ணம்மா, மற்றும் மூங்கிலிலே பாட்டிசைத்து ,என் இனிய பொன் நிலாவே , இப்படி பல ...! இப்போதும் கூட இந்த பாடல்களை எனது கணிணி வழியாக கேட்கும் போது உங்கள் ஞாபகங்கள் வந்து போகும் லதா அக்கா! போராட்டம் ஒன்று தான் வாழ்க்கை என்று அடிமை தளையை தூக்கியெறிந்து விட்டு எமது ஆசிரியப்பீடத்திலிருந்து வெளியேறி விட்டீர்கள் நீங்கள். உங்களது காலகட்டத்தில் பலரது மௌனங்களை மொழிபெயர்த்து மொழிபெயர்க்கப்பட்ட மௌனங்கள் என்ற நூலை வெளிக்கொணர்ந்த நீங்கள் இப்போது மௌனத்தையே கடைபிடிப்பது ஏன் என்று தெரியவில்லை நான் ரஜீவன் ,சார்ல்ஸ், ரவி அண்ணா, நிரஞ்சனி அவ்வப்போது உங்கள் பேப்பர் பந்தில் திடீர் அடி வாங்கும் எமது ஒப்பு நோக்காளர் பாலசிங்கம் என நல்ல ஒரு குழு இப்போது பிரிந்து எங்கெங்கோ இருக்கிறோம். எமது குழுவில் மூத்த சகோதரி என்ற வகையில் அவ்வப்போது பல நல்ல அறிவுரைகளை கூறியிருக்கிறீர்கள் எங்களை ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை ஆனால் நீங்கள் பாங்கொங் போய் வந்த நேரம் எனக்கு ஆசையாய் வாங்கி வந்த தாய்லாந்து என்ற பெயர் பொறித்த வெள்ளை டீ சேர்ட்டை நான் இன்னமும் பாதுகாத்து வருகிறேன் லதா அக்கா!

சர்வதேச தாய் மொழி தினம்


உயிர் நீத்த மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபி




சர்வதேச தாய் மொழி தினம் ((International Mother Language Day) இம்மாதம் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியாக இந்த தாய் மொழி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.இலங்கையில் இந்த வருடத்திலிருந்து மும்மொழி அமுலாக்கம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன.இதை அமுல் படுத்தவும் அதில் உள்ள நன்மைகளை விளக்கவும் இந்திய குடியரசின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூட அண்மையில் எமது நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். ஆகவே இத்தினம் குறித்து நாம் பார்க்க வேண்டியுள்ளது. சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படும் தினங்களுக்கு பின்னால் ஏதோ ஒரு சம்பவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் இதற்கு பின்னணியிலும் ஒரு சம்பவம் உள்ளது. சரி வாசகர்களே 1948 ஆம் ஆண்டுக்கு செல்வோமா?
1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மொகமட் அலி ஜின்னா. அச்சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் இரண்டு பிரிவுகளாக இருந்தது. மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் ஆகிய பிரிவுகளே அவை. இப்போது கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் அலி ஜின்னா பாகிஸ்தான் நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக உருதை பிரகடனம் செய்தார். இது கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு பிடிக்கவில்லை,காரணம் அங்கு வாழ்ந்து வந்தோர் தமது தாய் மொழியாக வங்காள மொழியை கொண்டிருந்தனர். வங்காள மொழியானது இந்திய ஆரிய மொழி குடும்பத்திலிருந்து தோன்றியதொன்றாகும். வங்காள மொழி பேசப்பட்டதால் தான் வங்காளதேசம் என இந்நாடு பின்னாளில் இந்தியாவின் உதவியுடன் சுதந்திர நாடாகியது. இந்த மொழியை உலகின் 232 மக்கள் பேசுகிறார்கள் என்பது கூடுதல் தகவல். சரி இனி விடயத்திற்கு வருவோம் அலி ஜின்னாவின் இந்த பிரகடனத்தால் கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை தாய்மொழியாக பிரகடனம் செய்ய வேண்டும் என்ற மக்கள் இயக்கம் தோற்றம் பெற்றது. சுமார் நான்கு வருடங்கள் இந்த இயக்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்பட்டன. இதன் உச்சகட்டமாக 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி டாக்கா பல்கலைகழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை பாகிஸ்தான் இராணுவமும் பொலிஸாரும் தமது இரும்பு கரங்களால் நசுக்கினர். இதன் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். உலகில் தாய் மொழியை பாதுகாப்பதற்காக இடம்பெற்ற ஒரே போராட்டம் என்ற பெருமை இதற்கு உண்டு அதே வேளை தாய் மொழியை காப்பதற்காக உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ஒரே சந்தர்ப்பமாகவும் இது விளங்குகிறது. உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக டாக்கா பல்கலைகழகத்தின் முன்றலில் நினைவு தூபி ஒன்று எழுப்பப்பட்டது. இந்த மொழி வேறுபாடு காரணமாகவே கிழக்கு பாகிஸ்தானில் தனி நாடு கோரிக்கை வலுப்பெற்றது என்பதும் இந்தியாவின் உதவியுடன் 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் என்ற பெயருடன் இது தனி சுதந்திர நாடாகியது என்பது வரலாறு. இந்த சம்பவத்தை முன்வைத்தே ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோ, 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற தனது 30 ஆவது அமர்வின் போது பெப்ரவரி 21 ஐ சர்வதேச தாய் மொழி தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என பிரகடனம் செய்தது.
தமிழ் மொழி
ஆதி கால மனிதனின் மொழியானது சைகைகளாலும் ஓசைகளை வெளிப்படுத்தியும் தோற்றம் பெற்றது ,இன்று கருத்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுமல்லாது வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மொழி விளங்குகிறது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் 30006000 வரையான மொழிகள் பேசப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதனின் மொழியை இயற்கையின் மொழி என்று சிலாகிக்கின்றனர். பெரும்பாலான மொழிகள் ஏதோ ஒரு குடும்பத்தை சார்ந்தனவாகவே உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச்சேர்ந்த மொழிகள் எல்லாம் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. அந்த வகையில் உலகின் புராதன மொழியாக விளங்கும் எமது தாய் மொழியான தமிழ் கூட இன்று அழிவுறும் நிலையில் உள்ளது என பல அறிஞர்கள் கூறி வருகின்றனர். சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான தமிழ் மொழி,திராவிட மொழி குடும்பத்தின் முதன்மையானதும் செம்மொழியாகவும் விளங்குகிறது. இந்தியா ,இலங்கை ,மலேசியா ,சிங்கபூர் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாகவும் ஐக்கிய அரபு இராஜியம்,தென்னாபிரிக்கா,மொரீஷயஸ், பிஜி தீவுகள்,டிரினிடாட் ஆகிய நாடுகளில் சிறிய அளவிலும் பேசப்படுகிறது. உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட பத்து கோடி மக்களால் தமிழ் மொழி பேசப்படுகிறது. உலகலவில் தாய் மொழியை பேசும் மக்களின் எண்ணிக்கையில் பார்த்தால் எமது தமிழ் மொழி 18 ஆவது இடத்தில் உள்ளது. இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் தமிழர்கள் எமது மொழியைப்பேசியும் பரப்பியும் வருகின்றனர்,ஆனால் தமது பிள்ளைகளுக்கு ஏனோ அவர்கள் தமிழ் மொழி கல்வியை வழங்குவதில்லை என்பது கவலைக்குரியது.
வரலாற்றைப்பார்த்தால் எமது மொழி கி.மு.300 நூற்றாண்டைச்சேர்ந்த பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டதாகும். வரலாற்று ரீதியாக எமது தமிழ் மொழி பல அந்தஸ்த்துகளைப்பெற்றுள்ளது. உதாரணத்திற்கு சிலவற்றைப்பார்ப்போம். இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாகவுள்ளது. இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் 22 மொழிகளில் தமிழும் ஒன்று.மேலும் எமது நாடான இலங்கையிலும் மூன்று ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று (அது முறையாக அமுல்படுத்தப்படுகிறதா என்பது வேறு விடயம்) சிங்கபூரில் நாடளாவிய அங்கீகாரம் தமிழுக்கு உண்டு.மேலும் தென்னாபிரிக்காவில் தமிழ் மொழிக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரமே உள்ளது. மலேசியாவின் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் அடக்கம்.
செம்மொழி அங்கீகாரம்
இந்தியாவிலும் மற்றும் உலகெங்கனும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக தமிழ் மொழிக்கு இந்திய அரசினால் செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. இந்த செம்மொழி அந்தஸ்த்து பெற்ற முதலாவது இந்திய மொழியாக தமிழ் விளங்குகிறது. 2004 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தொடரின் போது அப்போதைய குடியரசு தலைவரும் தமிழ் பற்றாளருமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ( ஆனால் தமிழ் நாட்டில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில்,ஏற்பாட்டாளர்களால் இவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்பது ஒரு சோக வரலாறு)
இன்று தமிழ் மொழி தமிழ் நாட்டின் பல இடங்களில் பல வித்தியாசமான பேச்சு மொழியாக உள்ளது.இலங்கையிலும் கூட யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் மலையகப்பகுதிகளில் தமிழ் வித்தியாசமான பேச்சு வழக்காகவே உள்ளது. சில வட்டார வழக்குச்சொற்களின் சேர்க்கையும் இதற்குக்காரணம் எனினும் பேச்சுத்தமிழ் என்று பார்க்கும் போது மேடைகளில் செந்தமிழையே அனைவரும் வழக்காக கொண்டு வருகின்றனர். காலங்காலமாக எமது தமிழ் மொழியை அறிஞர்களும் ,கவிஞர்களும் எழுதியும், பாடியும்,பேசியும் வந்திருக்கின்றனர். ஆனாலும் அந்தஸ்த்து ,தொழில் வாய்ப்பு என்ற ரீதியில் இன்று தமிழ் மொழி கல்வி அழிந்து வருகின்றது. தமிழ் நாட்டில் இது மிக அதிகம். நான் தமிழில் பேசி விட்டேன் என அங்கு பெருமைப்பட்டு கொள்வது ஒரு கலாசாரமாகி விட்டது.ஒருவன் தனது தாய் மொழியில் பேசுகிறேன் என்று ஆச்சரியப்படுவது எவ்வளவு மோசமான கலாசாரம்? அந்த வகையில் இலங்கை மக்களாகிய நாம் எமது தாய்மொழியை போற்றியும் வளர்த்தும் வருகின்றோம் என்பதை உறுதியாக சொல்லலாம். டாக்கா பல்கலைகழக மாணவர்கள் போல தாய் மொழிக்காக போராட்டம் செய்து உயிர் விடத்தயாராகும் படி சொல்லவில்லை. வீட்டிலும்,வீதியிலும் ஏன் தமிழர்களைக்கண்டால் தமிழிலேயே பேசுவோமே ,கல்லூரிகளில் தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி எமது மொழியின் செழுமையை வலிமையை உணரச்செய்வோமே இது வரை செய்யாவிட்டால் பரவாயில்லை இந்த வருட சர்வதேச தாய் மொழி தினத்திலிருந்து திடசங்கற்பம் பூணுவோம். ஏனெனில் தாய் வேறு தாய் மொழி வேறு அல்ல நண்பர்களே!

வகைகள்
தமிழ்
செந்தமிழ்
கொடுந்தமிழ்
முத்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்

பிரிவுகள் வாரியாகத் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
ஆட்சித் தமிழ்
சட்டத் தமிழ்
அறிவியல் தமிழ்
மீனவர் தமிழ்
மருத்துவத் தமிழ்
செம்மொழித் தமிழ்

வட்டார வழக்கு தமிழ் பிரிவுகள்
அரிசனப் பேச்சுத் தமிழ்
கொங்குத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
மட்டக்களப்பு பேச்சுத் தமிழ்
மலேசியத் தமிழ்
பிராமணத் தமிழ்
முஸ்லிம்கள் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
தஞ்சாவூர்த் தமிழ்
மதுரைத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
குமரிமாவட்டத் தமிழ்
கரிசல் தமிழ்
சென்னைத் தமிழ்
மணிப்பிரவாளம்
தமிங்கிலம்
ஜுனூன் தமிழ் (இலக்கண விதிகளை மீறிய தமிழ்)


Monday, February 6, 2012

மரங்களை தறிப்பதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கம்தேயிலை மீள் நடுகை பற்றி வாய்திறப்பதேயில்லை





மலையக பெருந்தோட்டப்பகுதிகளை கம்பனிகள் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் மீள்நடுகை, தேயிலை மலைகளை பராமரித்தல் போன்றவற்றில் அதிக அக்கறை காட்டப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளன.முக்கியமாக தரிசு நிலங்களில் புதிய தேயிலை கன்றுகளை நடுவதில்லை என்றும் ஆரம்ப காலத்தில் பயிரிடப்பட்ட மிகவும் வயது கூடிய தேயிலைச்செடிகளை நீக்கி விட்டு அவ்விடத்தில் புதிய கன்றுகளை நடுவதில் எந்த தோட்ட நிர்வாகமும் அக்கறை காட்டவில்லை என்று பரவலாகவே கூறப்பட்டு வந்தது. இதற்காக அதிக பநணத்தை செலவளிப்பதை சில நிர்வாகங்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.அதற்கு மாற்றீடாக குறைந்த செலவில் அதிக இலாபத்தை தரும் வழிமுறைகளையே சில கம்பனிகள் கையாண்டன. இதில் முக்கியமான ஒருவிடயம் பெறுமதி வாய்ந்த மரங்களை தறித்து வெளியாருக்கு விற்பதாகும். பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகம் காணப்படும் கருப்பந்தேயிலை,சவுக்கு மற்றும் காட்டு வேப்பம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பலகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் காரணமாக பல இலட்சக்கணக்கான மரங்கள் தறித்து விற்கப்பட்டன. ஒரு சில தோட்டப்பகுதிகளில் தரிசு நிலங்களாக இருந்த இடங்களில் தேயிலைக்குப்பதிலாக மரக்கன்றுகளே நடப்பட்டன. காரணம் தேயிலையைப் போல் இதற்கு பராமரிப்பு செலவு எதுவும் இல்லை என்ற காரணம் தான். இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது,எனினும் 22 கம்பனிகளுக்கு 56 வருடங்கள் என்ற அடிப்படையில் தோட்டப்பகுதிகள் கையளிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட காலப்பகுதி வரை சில விடயங்களுக்கும் விட்டு கொடுப்புகளுக்கும் அரசாங்கம் உட்பட வேண்டியதாயிற்று.இதன் காரணமாக தொழிலாளர்களின் குரல் வெளிவரவேயில்லை. பெருந்தோட்டப்பகுதிகளில் மரங்கள் தறிக்கப்பட்டு வெளியாருக்கு விற்படுதல் பற்றி எவருமே வாய் திறக்க வில்லை.இதை ஒரு வர்த்தக நோக்காக அன்றி சூழலியல் தாக்கம் என்ற வகையில் கூட இலங்கையில் உள்ள எந்த ஒரு நிறுவனமே அமைப்போ கருத்து கூற வில்லை. இச்சந்தர்ப்பத்தில் தான் கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இவ்வாறு மரங்கதள தறிப்பதற்கான தடை உத்தரவை அரசாங்கம் கொண்டு வந்தது. இதற்கு பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய வற்றின் எதிர்ப்புக்குரல்கள் வழிசமைத்தன எனலாம். அதன் பிறகு மரங்ஙகள் தறிப்பது முடிவுக்கு வந்தது . இச்சந்தர்ப்பதில் பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகளின் நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்களை எரிபொருளுக்காக மட்டும் தறிப்பதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் கேட்டிருந்தது முதலாளிமார் சம்மேளம். இந்த அனுமதியை பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க ஊடாகவே மேற்படி சம்மேளனம் கேட்டிருந்தது. கடந்த ஒரு வருட காலமாக இது குறித்து பேசப்பட்டு வந்தது இதற்கான அனுமதியை அரசாங்கம் கடந்த வாரம் வழங்கியிருக்கிறது. இதை வரவேற்றுள்ள முதலாளிமார் சம்மேளனம் இந்த தடையுத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக பெருந்தோட்ட கம்பனிகள் தமது தொழிற்சாலைகளுக்கு தேவயான எரிபொருள் விறகுகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், இதற்காக இனிவரும் காலங்களில் பெருமளவு தொகையை செலவிட தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது. முக்கியமான விடயம் என்னவெனில் தறிக்கப்படும் மரங்கள் எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா அல்லது விற்கப்படுகின்றனவா என்பது அவர்களுக்கே வெளிச்சம். மரங்களை தறிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டவுடன் முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையின் சில வசனங்களை வாசித்துப்பாருங்கள்இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலமாக, அதிகளவு செலவீனங்களின் மூலம் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுக்கு பதிலாக மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய இந்த விறகுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். எரிபொருள் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மாற்றுவழிகளில் வருமானமீட்டக்கூடியதாகவும் இது அமையும். பெருமளவான பெருந்தோட்ட கம்பனிகள் நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் முற்றிலும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. இந்த மரங்கள் விசேடமாக எரிபொருள் தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. அதாவது இந்த மரங்கள் நடப்படும் பொழுதே தெரியும் என்றோ ஒரு நாள் தறிக்கப்படப்போகிறது என. இவற்றை தறிக்கும் பொழுது கூட முறையான விதிமுறைகள் கைக்கொள்ளப்படுகின்றன .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் தறிக்கப்படும் போது முறையான விதிமுறைகள் கையாளப்படுகின்றன எனக்கூறும் முதலாளிமார் சம்மேளனம் தறிக்கப்பட்ட இடத்தில் உடனடியாக மற்றுமோர் மரக்கன்று நடப்படும் என்று தெரிவிக்கவில்லை. மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளைப்பொறுத்தவரை இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லை. எனினும் தேயிலைச்செடிகளுக்கு பாதுகாப்பாக மட்டுமன்றி மலையகத்துக்கு அழகு சேர்க்கும் ஒரு அம்சமாகவும் மழை வீழ்ச்சிக்கு பெரும் பங்காற்றும் காரணியாகவும் உள்ள மரங்கள் தறிக்கப்படுவது பற்றி எவருமே அக்கறை கொள்ளாதிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். மேலும் பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று கைவிடப்பட்ட நிலையில் பல தேயிலைமலைகள் காடு மன்றி கிடக்கின்றன. இப்பகுதிகளில் மீள் நடுகை செலவை காரணங்காட்டி சில நிர்வாகங்களும் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே இன்று தோட்டப்பகுதிகளில் அதிக வேலை நாள் இன்மை மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் எந்த வித அக்கறையுமின்றி செயற்படுவதற்குக் காரணம் இங்கு வாழ்வோர் சிறுபான்மையினத்தவர் என்பதினாலோ தெரியவில்லை. காரணம் இதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவராக கடமையாற்றி வருகின்றார். தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள தேசிய பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசங்களுக்கு விளக்கும் பதிலளிக்கும் பெரும் நெருக்கடியான பணியையே இதற்கு பொறுப்பான அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.இச்சந்தர்ப்பத்தில் உள்ளூர் விவகாரங்கள் குறித்து அக்கறைப்பட அவருக்கு காலநேரம் இல்லை அதாவது பெருந்தோட்டத்துறை பற்றிய சிக்கல்களை தீர்ப்பதற்கும் இனங்காணுவதற்கும் இவருக்கு நேரமில்லை என்பதே யதார்த்தமாகும். மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் எவருக்காவது இந்த பொறுப்பை கொடுத்திருக்கலாம் என்றால் அதற்கு சாத்தியமே இல்லாத நிலையே உள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க கம்பனிகள் வசம் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை மீள் நடுகை ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்றும் இல்லாவிடின் குறித்த பகுதிகள் மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அத்தோடு சரி ஒன்றுமே நடக்கவில்லை. மறுபக்கமோ அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள தேயிலை தோட்டங்கள் நஷ்டத்தில் படுபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. இந்த தகவலையும் அரசாங்கமே வெளியிட்டுள்ளது. தற்போது பெருந்தோட்டப்பகுதி தொழிற்றுறையானது மிகவும் அபாயகரமான ஒரு காலகட்டத்தை சந்தித்து வருகின்றது. தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக இயங்கி வருகின்றன.தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.இருக்கும் வளங்களை விஸ்தரித்து மேற்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக வளங்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் செயற்பாடுகளே ஆங்காங்கு இடம்பெற்று வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் வர்த்தக நோக்கிற்காக தேயிலை பயிரிடப்பட்டு 145 வருடங்களாகின்றன என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வரைந்திருந்தேன். இதை வாசித்த ஒரு அன்பர் ஒரு காலத்தில் இலங்கையில் தேயிலை பயிரிடப்பட்டிருந்தது என்று எழுதும் காலகட்டம் விரைவில் வரும் என்று கவலையுடன் தெரிவித்தார். நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது எமக்கே தெரியவில்லை. ஊடகங்கள் வாயிலாக நாம் எமது சமூகம் எதிர்நோக்கி வரும் ஆபத்துக்கள் பற்றி பல தடவைகள் சுட்டிக்காட்டினாலும் அக்கறை உள்ளவர்கள் இந்நிதலை குறித்து வாய் திறப்பார்களா?

Tuesday, January 31, 2012

சீனாவின் பட்டுப்பாதை (The Silk Road) ஆராய்ச்சியும் இலங்கையும்






உலகபொலிஸ்காரன் என அமெரிக்காவை கூறுகின்றனர்,ஆனால் ஆசிய பொலிஸ்காரனாகும் சகல தகுதிகளையும் இப்போது வளர்த்துக்கொண்டுள்ளது சீனா. பொருளாதாரம் ,அரசியல்,தொழில்நுட்பம் என சீனாவின் ஒவ்வொரு நகர்வுகளும் எதிர்கால திட்டமிடல்களும் அமெரிக்காவையே சிந்திக்க வைத்துள்ளது. அண்மைக்காலமாக சீனாவானது வரலாற்று ரீதியாக பல அம்சங்களை நோக்கிய தனது நகர்வை ஆரம்பித்துள்ளது. இதன் மூலம் தனது தரை மற்றும் கடல் எல்லைகளை அது மீள்பரிசீலனை செய்யப்போகின்றதோ தெரியவில்லை. எனினும் பண்டைய காலத்தில் வணிகத்தேவைகளுக்காக கடல் மற்றும் தரைப்போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்ட பட்டுப்பாதை தொடர்பில் முதன் முறையாக வாய் திறந்திருக்கிறது சீனா. இது தொடர்பான தனது ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் அனுமதியையும் அது கேட்டுள்ளது. அதாவது கடல் மார்க்கமாக அக்காலத்தில் வந்த கப்பல்கள் இலங்கையின் கரையோர பகுதிகளில் முழ்கியிருக்கலாம் என்ற தகவலை வெளியிட்டுள்ள சீன அது தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கை அரசாங்கத்தின் அனுமதியை கோரியுள்ளது. பட்டுப்பாதை என்பது பண்டைய காலத்தில் வண்டிகளும் கடற்கலங்களும் பயணம் செய்த பாதையாகும். ஆசியாவுக்கு கூடாக சென்று ஐரோப்பாவையும் ஆசியாவையும் இணைத்த பெருமையைப்பெறும் தரைவணிகப்பாதையாக விளங்கும் பட்டுப்பாதை சுமார் இரண்டாயிரம் வருட வரலாறு கொண்டது என்பத முக்கிய விடயம். ஐரோப்பாவிலிருந்து தரை மார்க்கமாக எகிப்து, அரேபியா ,பாரசீகம் (இன்றைய ஈரான்) இந்தியா , ஆகிய நாடுகளூடாக சீனானின் தென் பகுதி வரை இந்த பட்டுப்பாதை செல்கிறது.கடல் மார்க்கமாக பார்த்தால் மத்திய தரை கடலிலிருந்து ஆரம்பிக்கும் பாதை ஆபிரிக்காவிற்கு ஒரு பிரிவாகவும் அரேபியா,ஈரான் வழியாகவும் அங்கிருந்து இந்தியா மற்றும் இலங்கையை ஊடறுத்து சீனா மற்றும் தென்கிழக்காசியாவின் ஜாவா வரை செல்கிறது. உண்மையில் ஆசியா கண்டத்தின் தென்பகுதிகளையே கூடுதலாக இப்பாதை இணைக்கிறது. இதன் முக்கியத்துவம் உணரப்படுவதற்குக்காரணம் பண்டப்பரிமாற்றங்கள் கூடாக குறிப்பிட்ட நாடுகளிடையே வளர்ந்த நாகரிக வளர்ச்சிதான். அதாவது குறிப்பிட்ட மார்க்கமாக வணிகப்பரிமாற்றம் மட்டும் இடம்பெறவில்லை. இப்பாதை ஊடறுத்துச்செல்லும் வழியில் உள்ள நாடுகள்,நகரங்கள், அங்கு வாழும் மக்கள் பற்றியும் அவர்களின் நாகரிகங்கள் பற்றியும் பல தகவல்கள் பரப்பப்பட்ட அதே வேளை புதிய உலகொன்றை உருவாக்கும் வளர்ச்சிக்கும் இவை வித்திட்டன.மொழி மற்றும் பண்பாடு வளர்ச்சிக்கு இந்த பட்டுப்பாதை அளப்பரிய சேவையாற்றியதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். பண்டைய சீனா, எகிப்து , ரோம்,மெசபெத்தேமியா,பாரசீகம்,இந்தியா ஆகிய நாடுகளின் நாகரிக வளர்ச்சிக்கு இந்த பட்டுப்பாதை உறுதுணை புரிந்துள்ளது என்பது உண்மையே. பெயர் வரக்காரணம்சீனாவின் கிழக்கு மாநிலமான ஷெங்சியானின் (Zhang Qian) பழம்பெரும் நகரான சிஆனிலிருந்து மத்தியதரை கடல் வரை செல்லும் மார்க்கத்தில் சீனாவின் பிரபல பட்டுத்துணிகளை கொண்டு சேர்ப்பதே அக்காலத்தின் பிரதான வணிகமாக இருந்தது. அக்காலத்தில் சீனப்பட்டிற்கு உலகளவில் ஏற்பட்ட வரவேற்பே இதற்குக்காரணம்.ஆகையால் இம்மார்க்கமூடாக பட்டுத்துணிகளே ஆரம்பத்தில் கொண்டு செல்லப்பட்டன.இதன் காரணமாக இது பட்டுமார்க்கம் (the silk Route) அல்லது பட்டுப்பாதை என அழைக்கப்படலாயிற்று. பட்டுப்பாதையின் மொத்த நீளம் சுமார் 7ஆயிரம் கிலோ மீற்றர்களாகும் சீனாவிற்குள்ளேயே இது அரைவாசிப்பகுதியை கொண்டுள்ளது என்பது தான் விசேட அம்சம்.எனினும் காலப்போக்கில் ஏனைய விடயங்களையும் பரிமாறிக்கொள்ளும் அளவிற்கு இது விரிவடைந்தது.காலப்போக்கில் நாடுகளிடையேயான எல்லைகள் நிர்ணயம் செய்யப்பட்டவுடன் இந்த பட்டுப்பாதையும் கைவிடப்பட்டது. பட்டுப்பாதையின் மொத்த நீளம் சுமார் 7ஆயிரம் கிலோ மீற்றர்களாகும் சீனாவிற்குள்ளேயே இது அரைவாசிப்பகுதியை கொண்டுள்ளது என்பது தான் விசேட அம்சம். எனினும் சீனாவில் இன்றும் இந்த மார்க்கம் உல்லாசப்பயணிகளால் பெரிதும் கவரப்பட்டு வருகின்றது.
காலகட்டம்இந்த பட்டுப்பாதை ஆரம்பிக்கப்பட்ட காலகட்டம் கி.மு 202 ஆம் ஆண்டு ஆகும். இது ஹான் (The Han Dynasty) என்ற அரசமரபுக்குரிய காலகட்டம். இந்த பரம்பரையினர் கி.மு 202 இலிருந்து கி.பி 220 வரை 426 ஆண்டுகள் சீனாவை ஆண்டனர்.இந்த காலகட்டம் சீனாவின் பொற்காலம் என்று அழைக்கப்படுகின்றது. கைப்பணி ,வணிகம்,விவசாயம் என்று துறைகளில் சீனா முன்னேறியிருந்தது மட்டுமல்லாது இக்காலகட்டத்தில் சீனாவின் மக்கள் தொகை 5 கோடியையும் தாண்டியிருந்தது என குறிப்புகள் கூறுகின்றன. பட்டுப்பாதை வழியாக வணிகம் இடம்பெறும் போது எச்சந்தர்ப்பத்திலும் வணிகர்களுக்கு இன்னல்கள் வரக்கூடாது என்பதில் இவர்கள் அக்கறையாக இருந்தனர்.இதற்காக இவர்கள் பட்டுப்பாதை வழியெங்கும் காவற்கோபுரங்களை அமைத்திருந்தனர்.இன்றும் கூட அம்மார்க்கத்தில் சிதைந்த நிலையிலான காவற்கோபுரங்களை காணலாம்.
ஆய்வுக்கான காரணங்கள்சரி வாசகர்களே பட்டுப்பாதை பற்றிய வரலாற்றைப்பார்த்து விட்டோம்.இனி சீனா ஏன் இந்த இரண்டாயிரம் வருடம் பழமையான பாதை பற்றிய ஆய்வை ஏன் மேற்கொள்ளப்போகின்றது என்பதையும் பார்க்க வேண்டும். கடல் மார்க்கமாக சீனாவுக்கு வந்த சுமார் 75 கப்பல்களின் சிதைவுகள் காலி துறைமுகத்தை சூழவுள்ள பகுதிகளில் இருப்பதாக தெரிவித்துள்ள சீனா இதில் 25 கப்பல் சிதைவுகள் குறித்த ஆவணங்களும் உள்ளதாகத்தெரிவித்துள்ளது. மேற்படி கப்பல்களை ஆராய்வதற்கு நிபுணர்களை ஈடுபடுத்துவது குறித்தே அனுமதியை சீனா கேட்டுள்ளது. கடலுக்கடியில் இருக்கும் கப்பற் சிதைவுகளை ஆராயும் அளவிற்கு சீனாவின் தொழில்நுட்பம் வளர்ந்துள்ளதா என இந்தியாவும் அமெரிக்காவும் வாய் பிளக்கும் அதே நேரம் இந்தியாவுக்கு இதில் தர்மசங்கடமான நிலை ஏற்பட்டுள்ளதை மறுக்க முடியாது.ஏற்கனவே இலங்கையில் தனது தலையீட்டை பொருளாதார அபிவிருத்தி என்ற பெயரில் ஸ்திரப்படுத்தியிருக்கும் சீனா, கப்பல் ஆராய்ச்சி என்ற பெயரில் தனது பிராந்திய பாதுகாப்பு குறித்த ஆராய்ச்சிகளையும் மேற்கொண்டு அதற்கு தக்கபடி திட்டங்களை வகுக்கப்போகின்றதோ என்ற அச்சமும் இந்தியாவுக்கு தோன்றாமலில்லை. பிராந்திய வல்லாதிக்கம் என்ற விடயத்தில் இந்தியாவும் சீனாவும் தென்னாசியாவிலுள்ள பல சிறிய நாடுகளை அரசியல் மற்றும் பொருளாதார ரீதியாக தம்வசப்படுத்தி வருகின்றன. துறைமுக அபிவிருத்தி மற்றும் ஏனைய கட்டுமானத்திட்டங்களுக்கு இலங்கைக்கு சீனாவே பல வழிகளில் உதவி வருகின்றது. இச்சந்தர்ப்பத்தில் இவ்வாறான ஆய்வுகளை மேற்கொள்ள சீனா அனுமதி கேட்கும் போது இலங்கைக்கு மறுக்கத்தான் முடியுமா? இது தொடர்பாக பரிசீலனை இடம்பெற்று வருவதாக இலங்கை தொல்லியல் திணைக்களம் கருத்துத்தெரிவித்துள்ளது. இவ்விடயத்தில் நழுவல் போக்கை இலங்கை கடைபிடிக்க முடியாது. அதே நேரம் தனது பிராந்திய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வழிகளை சீனா மேற்கொண்டு வருகின்றது என இந்தியா பகிரங்கமாகவே கருத்துத் தெரிவித்து வருகின்றது. இன்னமும் சில நாட்களில் இராமயண காலத்து பாலம் குறித்த ஆராய இந்தியா இலங்கையிடம் அனுமதி கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது. இந்த இரண்டு நாடுகளிடம் அகப்பட்டுக்கொண்டு முழி பிதுங்கி நிற்கும் நிலை இலங்கைக்கு வரப்போகின்றது என்பதே உண்மை.

Wednesday, January 18, 2012

நடராஜா டீச்சர்....! சில நினைவுகள்




நமது வாழ்க்கையில் சிறு வயது ஞாபகங்கள் என்பதை பொறுத்த வரை நம்மோடு அதிகமாக அன்போடு பழகியவர்கள் அல்லது வழிநடத்தியவர்கள் ,இவர்களுக்கு அப்பாற்பட்டு எம்மோடு கடுமையாக நடந்து கொண்டவர்களையும் மறக்க முடியாது. எனினும் பாடசாலை வாழ்க்கையில் எமக்கு கல்வி போதித்தவர்களில் எக்காலமும் மறக்க முடியாத ஒரு சிலரே மனதை தொட்டு செல்கின்றனர்.எங்கு கண்டாலும் மனம் நெகிழ்ச்சியடையும் சந்தர்ப்பங்களை ஏற்படுத்துபவர்கள் ஒரு சிலரே அந்த வகையில் அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் எ னக்கு அரிவரி சொல்லிக்கொடுத்த ஆசிரிய அன்னை தான் நடராஜா டீச்சர் என்று நாங்கள் வாய் ஓயாமல் அழைக்கும் ராஜேஸ்வரி டீச்சர். எனக்கு மிக நன்றாக ஞாபகம் இருக்கிறது . தரம் 2 மற்றும்தரம் 3 களில் எமது வகுப்பாசிரியராக இருந்து எமக்கு அற்புதமான கல்வியைப் புகட்டியவர். இந்த சின்ன வகுப்பில் நடந்த சம்பவங்கள் எப்படி ஞாபகம் இருக்கும் என்று பலரும் நினைக்கக்கூடும் அதற்கு வழிசமைத்தது எங்கள் கல்லூரிதான். மிகச்சிறந்த ஒழுக்க பண்புகளை போதித்து ஆசிரியர்களை தெய்வமாக மதிக்கக் கற்று கொடுத்த அதே நேரம் எவருக்கும் கிடைக்காத அற்புதமான ஆசிரியர்களை பெற்று ஒரு பொற்காலத்தை உருவாக்கித்தந்தது எமது கல்லூரி. நடராஜா டீச்சர் ... ஒரு ஆசிரியையாக அல்லாது தனது பிள்ளைகளாக எம்மை வளர்த்த விதம் பசுமரத்தாணியாக பதிந்துள்ளது. எமக்கு சைவசமய பாடம் எடுக்கும் நேரம் தேவாரத்தை ஒரே மூச்சில் நான் கூறுவதை கேட்டு நல்ல பிள்ளை என்று கூறியதை எப்படி மறக்க முடியும் ? எவரிடமும் பேதம் காட்டாது அனைவரையும் ஒரே பிள்ளைகளாக கருதி பாடம் போதித்தார். தரம் 5 இற்குப்பிறகு நாம் ஆரம்பப்பிரிவு கட்டிடத்தை விட்டு பிரதான கல்லூரி மண்டபத்திற்கு செல்லும் போது கண்கலங்கி டீச்சர மறந்துடாதிங்கடா இங்க வந்து பார்க்கனும் சரியா என சொன்ன காட்சி மனதை விட்டு அகல மறுக்கிறது. உயர்கல்வி கற்று பாடசாலையை விட்டு பிரிந்து சென்று பிறகும் எங்கு கண்டாலும் அதே பாசப்பிணைப்போடு கதைக்கும் பாங்கு ஒரு சில ஆசிரியர்களுக்கு உரித்தானது . அதில் முதன்மையான இருவரில் ஒருவர் நடராஜ் டீச்சர் மற்றவர் மரியதாஸ் டீச்சர். நான் கடமையாற்றும் வீரகேசரி காரியாலத்திற்கு வருகை தந்து பெருமை பொங்க என் மாணவன் நீ ,உன்னுடைய ஆக்கங்கள் ஒன்றை கூட நான் வாசிக்காமல் இருந்ததில்லை என்று சொல்லிய அந்த நாளை எனக்கு மறக்க முடியாது டீச்சர். நீங்கள் மரித்தாலும் உங்கள் ஆசிர்வாதங்கள் எங்களை மென்மேலும் உயர்த்தும்.

அரிவரி சொல்லிக்கொடுத்தாய் அன்னையாய் விளங்கினாய்உன்னால்அறிவேற்றங்கொண்டோர் கண்டு உளம் மகிழ்ந்தாய்என் பிள்ளைகள் என்று சொல்லி மனம் பூரித்தாய்இன்று எம்மை விட்டு நிரந்தரமாய் பிரிந்து விட்டாய் உன்னால்ஏற்றம் கண்ட நாம் இப்போது கண்ணீர் துளிகளைகாணிக்கை மாலைகளாக தர வேண்டிய சூழல் !உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப்பிரார்த்திக்கின்றோம்துயரங்களுடன்,
அன்பு மாணவன்

Tuesday, January 17, 2012

இலங்கையில் தேயிலை பரியிடப்பட்டு 145 வருடங்கள்…!







இலங்கையில் வர்த்தக நோக்கத்திற்காக தேயிலை பயிரிடப்பட்டு 2012 ஆம் ஆண்டோடு 145 வருடங்களாகின்றன. முதன் முதலாக 1867 ஆம் ஆண்டு ஜேம்ஸ் டெய்லரால் கண்டி மாவட்டத்தின் லூல்கந்துர எனும் தோட்டத்தில் 19 ஏக்கர் விஸ்தீரணத்தில் தேயிலை வர்த்தக நோக்கத்திற்காக முதன் முதலில் பயிரிடப்பட்டது. ஆங்கிலேயர்களால் பயிரிடப்பட்டாலும் பராமரிப்பில் இத்தனை வருடங்கள் இத்தொழிலில் தம்மை அர்ப்பணித்த தொழிலாளர் வர்க்கத்தினர் பெருமிதத்தோடு பார்க்கப்பட வேண்டியவர்கள். இன்று நாட்டின் தேசிய உற்பத்தியிலும் கணிசமான பங்களிப்பை வழங்கிக்கொண்டிருக்கும் இந்த தேயிலை தொழிற்றுறை குறித்து அண்மைக்காலமாக வெளிவந்து கொண்டிருக்கும் செய்திகள் கவலை தருபவனவாக உள்ளன. பெருந்தோட்டங்கள் சிறு ஏக்கர்களாக பிரிக்கப்பட்டு சிறு தேயிலை தோட்டங்களாக மாறி வருகின்றமை, மற்றும் நிர்வாகங்களால் உரிய பராமரிப்பின்மை , இதன் காரணமாக தொழிலாளர்கள் வேறு தொழிலை நாடுதல் , நிர்வாக அழுத்தங்கள் என பல்வேறு வகையான சவால்களை இன்று இத்துறை எதிர்நோக்கியுள்ளது. எனினும் 145 வருடங்கள் என்று பார்க்கும் போது தேநீர் அருந்துதல் என்ற விடயம் எமது நாட்டை பொறுத்தவரை மரபு வழி அம்சமாகவே உள்ளதை அவதானிக்கலாம். தேயிலை பரியிடாத ஏனைய நாடுகள் தேநீரை இன்று பல்வேறு வகைகளில் ,வடிவங்களில் தயாரித்து நுகர்வோரை கவர்வதில் அக்கறை காட்டுகின்றன. நம் நாட்டை பொறுத்தவரை இது சாத்தியமான விடயமா என்பதை யோசிக்க வேண்டும். உதாரணமாக மேலை நாடுகளில் இன்று எனப்படும் சிறிய தேயிலை பக்கற்றுகளை பயன்படுத்துகின்றனர். அமெரிக்காவில் ice Tea எனப்படும் குளிர் தேநீர் பானம் பிரபலமானது. தற்போது அமெரிக்காவில் மென்பானங்களுக்கு ஈடாக இந்த குளிர் தேநீர் விற்பனையாகின்றமை குறிப்பிடத்தக்கது. இலங்கையிலும் இந்து முறைகள் அறிமுகப்படுத்தப்பட்டால் என்ன என்பது இத்துறையோடு தொடர்புடைய சந்தைப்படுத்தல் நிபுணர்களின் கேள்வியாகவுள்ளது.
RTD –Ready to Drink




நாடுகள் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதில் அதிக அக்கறை கொண்டியங்குகின்றன. அங்குள்ள தொழில்களும் அப்படியானவை. இதன் காரணமாகவே அங்குள்ள வாழ்வியல் கோலங்களை இயந்திரமயமான வாழ்க்கை என வர்ணிக்கின்றனர். இதன் காரணமாக சடுதியாக தமது காரியங்களை ஆற்றக்கூடிய நிலையில் அம்மக்கள் உள்ளனர். இதன் காரணமாக அருந்துவதற்கு தயாராக உள்ள பானங்களை ( ஆங்கிலத்தில் RTD –Ready to Drink ) இவர்கள் விரும்புகின்றனர். அந்த வகையில் அமெரிக்காவில் இவ்வகை தேநீர் பானங்கள் பிரபலம்.மக்கள் இதை விரும்பி வாங்கி பருகுகின்றனர். அமெரிக்காவில் மட்டுமன்று ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இன்று இந்த ரக தேநீர் பானங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. எனினும் போத்தல்களில் அடைக்கப்பட்ட தேநீரை விட அண்மைக்காலமாக ஐஸ் டீ எனப்படும் குளிர் தேநீர் பிரபலமாகி வருகின்றது. இதன் காரணமாக ஏனைய மென்பானங்களின் விற்பனையுடன் போட்டி போடும் நிலை ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரே உற்பத்தி பொருளை ஒரே வடிவத்தில் எத்தனை நாளுக்கு தான் மக்களுக்கு கொடுத்துக்கொண்டிருப்பது ? ஒரு மாற்றம் வேண்டாமா என்று தான் இந்த முயற்சி . சரி ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் தேநீர் இவ்வாறு மறு வடிவம் பெற்று அங்குள்ளோரை கவர்ந்துள்ளது. பிரதானமாக இந்த தேயிலையை உற்பத்தி செய்து உலகம் எங்கும் விநியோகிக்கும் இலங்கை,கென்யா,இந்தியா ,சீனா போன்ற நாடுகளில் ஏன் இந்த முறை பிரபலமாகவில்லை ?எல்லது ஏன் அறிமுகப்படுத்தப்படவில்லை? நான் ஆரம்பத்திலேயே குறிப்பிட்டது போல இந்நாட்டு மக்கள் பாரம்பரிய நெறிகளுக்கு பழக்கப்பட்டு விட்டனர். போத்தலில் இருக்கும் தேயிலை தூளை தேயிலை வடியில் இரண்டு கரண்டி போட்டு அதில் சுடு நீரை இட்டு பெறப்படும் சாயத்தண்ணியில் சீனி விட்டு பருகுவது இல்லாவிடின் அதில் பால் கலந்து பருகுவது என இவர்கள் வாழ்க்கை இப்படி போகிறது. சீனாவிலும் கூட மிகப்பிரபலமான கிரீன் டீ தகர டின்களில் அடைக்கப்பட்டே விற்பனை செய்யப்படுகிறது. சீன கிரீன் டீக்கு உலகம் முழுவதும் வரவேற்பிருப்பது நாம் அறிந்ததே. சரி இந்த நாடுகளில் ஐஸ் டீயை அறிமுகப்படுத்தினால் வரவேற்பு இருக்குமா?முதலில் சூடாக நாம் பருகும் தேநீருக்கும் குளிர்பானமாக பருகும் ஐஸ் டீக்கும் உள்ள வித்தியாசத்தை புரிந்து கொள்ளல் அவசியம். வழமையாக நாம் பருகும் தேநீரில் சீனியை த்தவிர வேறு எந்த இரசாயன கலவைகளோ செயற்கை தாது பொருட்களோ இல்லை என்பது நிச்சியம். ( தேநீரில் இயற்கையாக உள்ள அதே நேரம் அதிக பக்கவிளைவை ஏற்படுத்தாத ரனின் என்ற நச்சு பதார்த்தம் இதில் அடக்கம்) ஆனாலும் ஐஸ் டீ எனப்படும் போது வர்ணப்பொருட்கள் மற்றும் கார்பனேட் பொருட்கள் கலக்கப்படுவதை தவிர்க்க முடியாது. இயற்கையாக தேநீரில் உள்ள சுவையை கூட்ட அல்லது வித்தியாசப்படுத்த இவை சேர்க்கப்படுகின்றன. இதன் காரணமாக தேநீரானது அதன் இயற்கையான சுவையிலிருந்து விலகிச்செல்கின்றது என்பது கண்கூடு. உலகப்பிரச்சித்த பெற்ற சீனாவின் கிரீன் டீயானது வெறும் சுடு நீரில் வேக வைக்கப்பட்டு சீனியோ அல்லது வேறு எந்த சுவையூட்டியோ சேர்க்காமல் பருகப்படுவதற்கு காரணமே அதன் இயற்கையான சுவையை அனுபவிப்பதற்கு தான். இருப்பினும் மேற்குல நாட்டு மக்களின் உணவு முறை பழக்கவழக்கங்கள் வித்தியாசமானவை என்பது நாம் அறிந்ததே. அமெரிக்காவில் மட்டும் உடனடியாக அருந்துவதற்கு தயாராக இருக்கும் தேநீரின் 2009 ஆம் ஆண்டு சந்தைபுரழ்வு பெறுமதி 9 பில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது. இந்த வருடம் இது 11 பில்லியனை தொடும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. பாருங்கள் வாசகர்களே நமது தொழிலாளர்கள் வியர்வை சிந்தி கடினப்பட்டு 145 வருடங்கள் உழைத்தும் அவர்களுக்கு கிடைப்பதோ வெறும் டஸ்ட் தேயிலை தானே ; ஆனால் அவர்களால் உற்பத்தி செய்யப்படும் தேயிலை உயர் இரகமாக இன்று ஐரோப்பிய நாடுகளின் அரச குடும்பங்களும் ஏனைய உயர் அந்தஸ்த்து உள்ளவர்களும் பருகும் பானமாக விளங்குகிறது. அமெரிக்காவில் மாற்று வடிவம் பெற்று வரவேற்பை பெற்றிருக்கிறது. ஆக மாற்றம் ஒன்று தான் உலகில் மாற்ற முடியாது ஒன்று என்பதற்கு ஏற்ப எல்லாமே மாற்றங்களுக்குட்பட்டு வருகின்றன. எனினும் இலங்கையோ தேயிலை பயிரிடப்பட்டு 145 வருடங்களாகியும் அத்துறையின் பழைய பல்லவிகளையே பாடி வருகின்றது. கொழுந்து பறிப்பவர்களும் இன்று நூறு வருடங்களுக்கு முன்பு உள்ள அதே வடிவிலான ஆடைகளே அணிகின்றனர். நவீன காலத்திற்கு ஏற்ற மாற்றங்கள் இல்லை. ஏதோ இப்போது சிலர் செருப்புகள் அணிந்து செல்கின்றனர். எனினும் இலங்கையில் மிகப்பழைய இன்னமும் உயிர்ப்புடன் இருக்கின்ற பாரிய தொழிலாளர் விசையுடன் செயற்பட்டுக்கொண்டிருக்கின்ற தேயிலை தொழிற்றுறை மாற்றங்களுக்குட்பட வேண்டும் என்பதே பலரினதும் அவா. ஆனால் இதில் எந்த விதத்திலும் தொழிலாளர்களோ தேநீரின் பாரம்பரிய அம்சங்களோ மாறி விடக்கூடாது என்பது முக்கியமானது. ஆகவே புதிய,நவீன யுக்திகளை புகுத்தும் யோசனைகளே இப்போதைய தேவையே ஒழிய இந்த தொழிற்றுறையையும் அதனோடு தொடர்புடைய மக்களின் வாழ்வியல் விடயங்களையும் தொடர்ச்சியாக விமர்சித்து வருவதை உரியோர் நிறுத்திக்கொள்ளல் அவசியம்.
சிவலிங்கம் சிவகுமாரன்