Wednesday, October 24, 2018




தடம் மாறிச்செல்லும் தாற்பரியம்

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையை தொடர்ந்து நடத்துவதா இல்லையா என்ற பரிசீலனையை கல்வி அமைச்சு மீண்டும் மேற்கொண்டுள்ளமையை பலரும் வரவேற்றிருக்கின்றனர். வருடத்தின் இறுதிப் பகுதியில் க.பொ.த உயர்தரம் மற்றும் சாதாரண தர பரீட்சைகளுக்கு மத்தியில் புலமை பரிசில் பரீட்சையையும் நடத்த வேண்டுமா என்ற கேள்வி அரசாங்கத்துக்கு எழுந்துள்ளது.  ஆனால் அதை விட இப்போது தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக பெற்றோரும் பிள்ளைகளும் எந்தளவிற்கு தம்மை நெருக்கடிகளுக்கு உட்படுத்தி வருகின்றனர் என்ற கேள்வியே முக்கியமானது.
மேலும் தரம் ஐந்தில் கல்வி கற்கும் ஒரு மாணவனோ மாணவியோ அவ்வயதில் அனுபவிக்க வேண்டிய எத்தனையோ விடயங்களுக்கு தடை ஏற்படுத்தும் ஓர் அம்சமாகவே தற்போது இப்புலமைப் பரிசில் பரீட்சை மாறியுள்ளது. அது தொடர்பான ஓர் ஆய்வை மேற்கொள்ள தற்போது கல்வி அமைச்சால் குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை என்பது இலங்கை பாடசாலை கல்வியில் கடந்த 50 வருடங்களாக இருந்து வரும் ஒரு கல்வி முறையாகும். சிறு வயதில் கல்வி நடவடிக்கைகளில் ஆர்வம் கொண்டிருக்கும் மாணவர்களுக்கு  வறுமை ஒரு தடையாக இருந்தால் குறித்த புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைவதன் மூலம் அவர்களுக்கு உதவித்தொகை அல்லது சிறந்த பாடசாலைகளை பெற்றுக்கொடுக்கும் ஒரு வழிமுறையாகவே இப்புலமைப் பரிசில் பரீட்சை அறிமுகப்படுத்தப்பட்டது.
இரு தசாப்தங்களுக்கு முன்புவரை இப்பரீட்சையில் சித்தியடைந்த அல்லது சித்தியடையாத மாணவர்கள் எல்லோரும் ஒன்றாகவே நோக்கப்பட்டனர். அதாவது பெற்றோர்களும் பாடசாலை நிர்வாகங்களும் கூட இது பற்றி அலட்டிக்கொண்டதாகத் தெரியவில்லை. ஏனெனில் சித்தியடைந்த மாணவர்களில் ஒரு சிலரே வேறு பாடசாலைகளுக்குச் சென்றனர். ஏனையோர் தொடர்ந்தும் அதே பாடசாலைகளிலேயே கல்வியைத்தொடர்ந்தனர்.
ஆனால், இன்று நிலைமை மாறி விட்டது.தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை என்பது  தமது பிள்ளைகளின்  கல்வி நடவடிக்கையின் ஒரு பகுதி என்பதையும் தாண்டி பெற்றோரின்  கௌரவமாக மாறியுள்ளமையையும் அதற்காக பெற்றோர்கள் எந்த எல்லை வரையும் செல்வதற்கு தயாராக இருக்கும் அபாயத்தையும் கல்வி அமைச்சு உணராமலில்லை. மறுபக்கம் 10 வயதுடைய ஒரு பிள்ளையின் மனதில்  இந்தப் புலமை பரிசில் பரீட்சை தான் உலகம் என்ற எதிர்மறை எண்ணம் பெற்றோர்களினாலேயே விதைக்கப்படுவதானது மிகவும் ஆபத்தானது.
உயர்கல்வி நடவடிக்கைகளுக்காக தமது பிள்ளைகளை க.பொ.த. சாதாரணதரம் மற்றும் உயர்தர பரீட்சைகளுக்காக தயார்படுத்துவதை விட இக்காலத்தில் பெற்றோர்கள் தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைகளுக்காக தமது பிள்ளைகளை தயார்படுத்துகின்றனர். இவ்விவகாரத்தில் கூடுதலாக   மன உளைச்சலுக்குள்ளாவது குறித்த வெட்டுப்புள்ளிகளை தாண்டாத மாணவர்களும் அவர்களின் பெற்றோர்களுமாவர்.
 மேலும் வெட்டுப்புள்ளிகளை தாண்டாத மாணவர்களைத் தவிர்த்து அதற்கு மேல் புள்ளிகளைப்பெற்ற மாணவர்களுக்கு பெற்றோர்கள் மற்றும் பாடசாலை நிர்வாகம் ஆகியன மேற்கொள்ளும் பாராட்டுவிழாக்கள் ஏனைய மாணவர்களை மன உளைச்சலுக்குட்படுத்துகிறது என்பதை அறிந்தே கல்வி அமைச்சானது, 2015 ஆம் ஆண்டு இரு பாடங்களிலும் தலா 35 புள்ளிகளைப்பெற்று 70 புள்ளிகளுக்கு மேல் பெற்ற மாணவர்களை சித்தியடைந்தவர்கள் என குறிப்பிட்டு சான்றிதழும் வழங்கி வந்தது.எனினும் நல்லாட்சி அரசாங்கத்தில் அத்திட்டம் முன்னெடுக்கப்படவில்லை. இந்நிலையில், இப்பரீட்சையை நடத்துவது குறித்து கல்வி அமைச்சு அறிக்கையை எதிர்பார்த்துள்ளது. இப்பரீட்சை எதற்காக ஆரம்பிக்கப்பட்டதோ அதன் தாற்பரியம் தடம் மாறிப்போன நிலையில்   பெற்றோர் மற்றும் மாணவர்கள் இருசாராருக்கும் ஒரு தலையிடியாக இது மாறியுள்ளதை அவதானிக்கக்கூடியதாக உள்ளது. கால மாற்றத்திற்கேற்ப கல்வித்துறை மாற்றங்கள் மிகவும் அவசியமானதாகும். அதற்கேற்ப தற்போது தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை தொடர்பாக அரசாங்கத்துக்கு எழுந்துள்ள மன மாற்றமும் தேவையானதொன்றாகவே உள்ளது.



Saturday, September 15, 2018


மைதானத்திற்கு உள்ளேயும்
வெளியேயும் இம்ரான் கான்



1997 ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெற்ற பாகிஸ்தான் பொதுத்தேர்தலில் இம்ரான் கானின் பாகிஸ்தான் நீதிக்கான இயக்கம் ஒரு ஆசனத்தைக் கூட பெறவில்லை.1992 ஆம் ஆண்டு கிரிக்கெட் உலகக்கிண்ணத்தை நாட்டுக்கு பெற்றுக்கொடுத்து விட்டு  96 ஆம் ஆண்டு அரசியல் கட்சியை ஆரம்பித்து அடுத்த வருடமே தேர்தலில் களமிறங்கிய அவருக்குக்கிடைத்த பரிசு அது தான். அச்சந்தர்ப்பத்தில் வெளிநாட்டு ஊடகவியலாளர் ஒருவர் அவரிடம் ‘நீங்கள் ஒரு ஆசனத்தையும் பெறவில்லையே’  என்று கேள்வி எழுப்பினார். அதற்கு இம்ரான் அளித்த பதில் இப்படியாக இருந்தது.. ‘ எனது ஆதரவாளர்கள் வயதில் சிறியவர்கள்  அவர்கள் வளர்வதற்கு சற்று நேரம் கொடுங்கள்’ இப்படியாக இளவயதுடையோரை தன்னுடன் இணைத்து நாட்டின் எதிர்காலத்தைப்பற்றிய புதிய கனவுகளை அவர்கள் மனதில் விதைத்து 22 வருட போராட்டத்தின் பின்னர் இம்ரானுக்குக் கிடைத்த வெற்றியே பிரதமர் ஆசனமாகும். அரசியலில் மட்டுமல்ல தனது கிரிக்கெட் வாழ்க்கையிலும் கூட மைதானத்தில் போராட்டத்தையும் நாகரிகத்தையும் வெளிப்படுத்திய ஒரு பண்பாளராக இம்ரான் கான் விளங்குகிறார்.
ஏனெனில் 1987 ஆம் ஆண்டு உலகக்கிண்ண கிரிக்கெட் தொடர் முடிவுற்றவுடன் தனது ஓய்வை அவர் அறிவித்திருந்தார். நாடே கலங்கியது. அப்போது பாகிஸ்தானை வழிநடத்திய ஜெனரல் ஸியா உல் ஹக் இம்ரான்கானை அணிக்கு திரும்புமாறு வேண்டுகோள் விடுத்தார். அதை ஏற்று அணிக்கு திரும்பிய இம்ரான் அடுத்த உலகக்கிண்ணத்தை தனது நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து விட்டே ஓய்வை அறிவித்தார்.
இளையோரை இனங்காணுதல்
சரியான நேரத்தில் இளம் வீரர்களை அடயாளம் கண்டு அணிக்கு தேர்ந்தெடுத்ததில் இவருக்கு நிகர் இவரே என அவரை இன்று வரை புகழ்கின்றனர் வசீம் அக்ரம்,வக்கார் யூனுஸ்,ஜாவிட் மியாண்டாட் மற்றும் ரமிஸ் ராஜா ஆகியோர். கல்லூரிகளுக்கிடையிலான ஒரு போட்டியைக்காணச்சென்ற போது வசீமின் வேகப்பந்து வீச்சைக் கண்டு அவரை உடனடியாக தேசிய அணிக்குள் உள்வாங்கினார். மற்றுமொரு உள்ளூர் போட்டியில் மியாண்ட்டையே தடுமாறச்செய்ய பந்து வீச்சாளரை இனங்கண்டு அணிக்கு தெரிவு செய்தார்.அவர் தான் வக்கார் யூனுஸ். அதேவேளை, வக்கார் யூனுஸின் வேகப்பந்தை எந்தவித தடுமாற்றமும் இல்லாது தடுத்தாடிய ஒருவரை அணியின் முதல் வரிசை துடுப்பாட்ட வீரராக்கினார். அவர் தான் இன்ஸமாம் உல் ஹக். அவருடைய தெரிவுகள் எதுவுமே பொய்த்ததில்லை என்கின்றனர் சிரேஷ்ட வீரர்கள். தனக்கு 35 வயதாக இருக்கும் போது 20 வயது வசீம் அக்ரமிடம் தனது வேகம் எடுபடாது என துடுப்பாட்டத்தில் கவனம் செலுத்தியவர் இம்ரான். இப்படியாக வசீம், வக்கார், இன்ஸமாமை வளர்த்து விட்டவர் தான் இம்ரான். இவர்கள் மூவருமே பிற்காலத்தில் அணியின் தலைவர்களாக விளங்கி புகழ்பெற்றனர்.   92 ஆம் ஆண்டு உலகக்கிண்ணத்தை அணி கைப்பற்ற காரணமாக இருந்தவர்களில் வசீமும் இன்ஸமாம் உல் ஹக் முக்கியமானவர்கள்.
இறுதிப்போட்டி
1992 ஆம் ஆண்டு இறுதிப்போட்டியில் பாகிஸ்தான் அணியும் பலமிக்க இங்கிலாந்து அணியும் மோதின. முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 24 ஓட்டங்களில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாற களமிறங்கினார் இம்ரான். தலைவனுக்குரிய இன்னிங்ஸை விளையாடினார். அப்போட்டியில் நிதானமாக இவர் விளையாடி 72 ஓட்டங்களைப்பெற்றார்.மறுமுனையில் மியாண்டாட்டுடன் இணைந்து 129 ஓட்டங்களைப் பகிர்ந்தார். இவரது அறிமுகங்களான இன்ஸமாம் மற்றும் வசீம் ஆகியோர் இறுதி நேரத்தில் மொத்தமாக 75 ஓட்டங்களை அணிக்குப் பெற்றுக்கொடுக்க, பாகிஸ்தான் 249 ஓட்டங்களைப்பெற்றது. வலுவாக இருந்த இங்கிலாந்துக்கு இது சாதாரண ஓட்ட எண்ணிக்கை தான்.ஆனால், அசராமல் வசீம் மற்றும் முஸ்டாக்கை களமிறக்கி முக்கிய விக்கெட்டுகளை வீழச்செய்து 227 ஓட்டங்களில் இங்கிலாந்தை ஆட்டமிழக்கச்செய்தார். இப்போட்டித்தொடரின் ஆரம்பத்தில்  இம்ரானை ஏனைய அணிகள்  பொருட்படுத்தவில்லை. ஏனெனில், அப்போது அவருக்கு வயது 40. இந்த வயதில் இவர் என்ன செய்யப்போகிறார் என்று அலட்சியப்போக்கு இருந்தது என்னவோ உண்மை.எனினும் தனது அணியை இறுதிப்போட்டி வரை கொண்டு சென்று உலகக்கிண்ணத்தை வென்று கொடுத்து தான் ஒரு கிரிக்கெட் போராளி என்பதை நிரூபித்தார் இம்ரான். 19 வயதில் எந்த இங்கிலாந்து அணிக்கு  எதிராக தனது முதல் போட்டியை ஆரம்பித்தாரோ சரியாக 21 வருடங்களுக்குப்பிறகு அதே அணியை உலகக்கிண்ண இறுதிப்போட்டியில் வீழ்த்தி பாகிஸ்தான் கிரிக்கெட் வரலாற்றில் என்றும் பேசப்படும் ஒருவரானார்.
 அதே போன்று 1997 ஆம் ஆண்டு முதல் தேர்தலில் முகங்கொடுத்து ஒரு ஆசனத்தையும்பெறாத நிலையில் தோல்வியில் துவண்டு விடாது சரியாக காய்களை நகர்த்தி,  21 வருடங்கள் கழித்து நாட்டின் பிரதமர் ஆசனத்தைக் கைப்பற்றி தான் ஒரு அரசியல் போராளி என்பதையும் நிரூபித்துள்ளார்.
எளிமையை விரும்பும் இம்ரான்
மைதானத்திற்கு உள்ளே பல வீரர்களுக்கும் இரசிகர்களுக்கும் சிறந்த கிரிக்கெட் வீரராக இருந்த இம்ரான், அரசியல் பாதையில் உச்ச பதவியை அடைந்தும் எளிமையை வெளிப்படுத்தியுள்ளார். பிரதமர் வாசஸ்தலத்தில் குடியேற மாட்டேன் எனத்தெரிவித்துள்ள அவர், இஸ்லாமாபாத்தில் அமைச்சர்களின் குடியிருப்புகளில் ஒன்றில் வசிக்கப்போவதாக அறிவித்துள்ளார்.மேலும் தனது அமைச்சரவையில் அனுபவமும் அறிவும் கொண்ட இளம்   வயதுடையோரை தேர்ந்தெடுத்துள்ளார்.
போராட்டப்பாதை
பெரும்பான்மை இல்லாத காரணத்தால் எதிர்க்கட்சிகளின் நெருக்கடி இம்ரானுக்கு இருக்கும். அதே வேளை தலிபான்களுக்கு அடைக்கலம் கொடுத்து வருவதாக பாகிஸ்தான் மீது குற்றஞ்சாட்டியுள்ள அமெரிக்கா சில நிதி உதவிகளையும் இரத்துச் செய்துள்ளது. பரம வைரியான இந்தியாவையும் சமாளிக்க வேண்டிய தேவை இம்ரானுக்கு உள்ளது. ஏனெனில் மும்பை குண்டுத்தாக்குதலின் சூத்திரதாரியின் மரண தண்டனைப்பற்றி அப்போது அவர் விமர்சித்திருந்தார்.
எனினும் இம்ரானின் வெற்றிக்கு இந்தியப் பிரதமர் மோடி தொலைபேசியில் தொடர்பு கொண்டு வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார். கடந்த வாரம் தன்னை  சந்தித்த அமெரிக்க தூதுவரிடம்,  எங்களது அரசாங்கம்  அமெரிக்காவுடன் சமநிலையான, நம்பகத் தன்மையுடன் கூடிய உறவை வளர்ப்பதில் ஈடுபடும். அமெரிக்காவுடனான வர்த்தகம் மற்றும் பொருளாதார உறவுகளை நாங்கள் பெரிதும் மதிக்கிறோம்’ என்று தெரிவித்திருந்தார் இம்ரான். அதே நேரம் வெற்றி பெற்றவுடன் சீனாவைப் புகழ்ந்து தனது இராஜதந்திரத்தை வெளிப்படுத்தவும் அவர் தவறவில்லை. சீனாவை முன்மாதிரியாகக்கொண்டே புதிய பாகிஸ்தானை உருவாக்கப்போகின்றோம். ஏனெனில், சீனா  தனது திட்டங்களால் 70 கோடி  மக்களை வறுமையிலிருந்து மீட்டுள்ளது. இது எமக்குக்கிடைத்திருக்கும் சந்தர்ப்பம் என்று இம்ரான் கூறியிருந்தார். இந்தியாவும் அமெரிக்காவும் இல்லாவிட்டால் என்ன ஆசிய வல்லரசான சீனாவுடன் கைகோர்த்து பயணிக்கத்தயார் என்று மறைமுகமாகக்குறிப்பிட்டாரோ தெரியவில்லை. ஒரு முறை இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரும் பிரபல வீரருமான மன்சூர் அலிகான் பட்டோடி ஒரு தலைவர் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு ‘Either lead from front or push from back’ என்று குறிப்பிட்டிருந்தார். "முன்னோக்கிச்சென்று அனைவரையும் வழிநடத்த வேண்டும் அல்லது பின்னாலிருந்து ஊக்கப்படுத்த வேண்டும் இது தான் ஒரு தலைவனுக்கு அழகு" என்றார். கிரிக்கெட் வாழ்க்கையில் அனைவரையும் ஊக்கப்படுத்தி வளர்த்து விட்ட இம்ரான், இப்போது ஒரு அரசியல்வாதியாக முன்னாலிருந்து நாட்டை வளப்படுத்தப் போகிறார். பட்டோடியின் கூற்று நூற்றுக்கு நூறு வீதம் இம்ரான் கானுக்கே பொருந்துகிறது.









Monday, September 24, 2012

மலையகம்



 உலகெங்கும் பரவி வாழும் தமிழர்களை ஒன்றிணைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளோம்








உலக தமிழ் வழக்கறிஞர் பேரவையின் இணைப்பாளரும் சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞருமான  புனித தேவ குமாருடனான நேர்காணல்.

132 நாடுகளில் ஏறத்தாள 25 கோடி தமிழ்மக்கள் இன்று வாழ்ந்து வருகின்றனர். சோகமான விடயம் என்னவெனில் இவர்கள் அனைவரையும் ஒன்றிணைக்கும் எந்த ஒரு அமைப்பும் இது வரை உருவாகவில்லை. 


 தமிழகத்தில் கூட ஒரு சிலர் இந்திய வம்சாவளி மக்களைப்பற்றி கதைக்கும் போது பிழைக்கச்சென்றவர்களுக்கு உரிமைகள் எதற்ககு என காது பட பேசுகிறார்கள்

 26 இலட்சம் இந்திய வம்சாவளி மலையக மக்களை இணைக்கவும் அவர்களின் நலன்களை  பேணவும் அகில உலக இலங்கை மலையக தமிழர் நல இயக்கம் என்ற அமைப்பு விருது நகரில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.




இன்று தமிழர்கள் இல்லாத இடமில்லை ஆனால் தமிழர்களுக்கென்று ஒரு இடமில்லை என நாம் அடிக்கடி கூறக்கேட்போம் , தமிழர்களுக்கென்று ஒரு இடத்தை உருவாக்குவதை விட அவர்களை ஒன்றிணைப்பதே இப்போதைய தேவை அதன் ஆரம்பகட்ட முயற்சிகளில் நாம் இறங்கியுள்ளோம் என்கிறார் உலக தமிழ் வழக்கறிஞர் பேரவையின் இணைப்பாளரும் சென்னை உயர்நீதிமன்றத்தின்  சட்டத்தரணியுமான எம்.புனித தேவகுமார். இலங்கை வாழ் தமிழர்கள் பற்றிய தகவல்களை திரட்ட கடந்த வாரம் தமிழகத்திலிருந்து இங்கு வந்திருந்த அவருடனான நேர்காணலை தருகிறோம்.

கேள்வி: முதலில் உங்கள் அமைப்பு பற்றி சுருக்கமாக கூறுங்களேன்
பதில்: உலக தமிழர் வழக்கறிஞர் பேரவையின் நோக்கம் சுமார் 132 நாடுகளில் சிதறி வாழும் தமிழர்களை இனங்கண்டு அவர்கள் குறித்த நாட்டின் ஏனைய சமூகங்களுக்கு இணையாக வாழ்கின்றார்களா என்பதை ஆராய்வதோடு  ,அவர்கள் எதிர்நோக்கும் சகல பிரச்சினைகளுக்கும் சட்ட ரீதியான தீர்வை பெற்றுக்கொடுப்பதாகும். உலக அளவில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட தமிழ் வழக்கறிஞர்கள் உள்ளனர். எமது அமைப்பில் சுமார் 1800 பேர் இது வரை உறுப்பினராகியுள்ளனர். நாம் ஒவ்வொரு நாட்டிற்கும் சென்று அங்குள்ள தமிழர்கள் பற்றி தகவல்களை திரட்டுகிறோம்.

கேள்வி: இலங்கை விஜயத்தின் முக்கிய நோக்கம்?
பதில்:  உண்மையைக்கூறப்போனால் பெருமளவு தமிழர்கள் செறிந்து வாழும் நாடுகளில் இலங்கை முக்கிய இடத்தைப்பிடிக்கிறது. இங்கு வடக்கு கிழக்கு மற்றும் மத்திய பிரதேசங்களில் தமிழர்கள் வாழ்ந்து வருகின்றனர். முக்கியமாக தமிழகத்துடன் நேரடி தொடர்புகள் உள்ள இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய தகவல்களை திரட்டவே மலையகம் சார்ந்த பிரதேசங்களுக்கு செல்ல வேண்டி ஏற்பட்டது. எமது முயற்சிகளில் பிரதானமானது இந்தியாவிலிருந்து பல்வேறு சந்தர்ப்பங்களில்  பல காரணங்களுக்காக வெளிநாடுகளுக்கு இடம்பெயர்ந்து சென்ற இந்திய வம்சாவளி மக்கள் தொடர்பான தகவல்களை திரட்டுவதாகும். அதன்படி சுமார் 180 வருடங்களுக்கு முன்பதாக உழைக்கும் வர்க்கமாக இலங்கை வந்த இந்திய வம்சாவளி மக்கள் பற்றிய தகவல்களோடு இங்கிருந்து மீண்டும் தமிழகம் சென்று வாழ்ந்து வரும் மலையக மக்கள் அத்தோடு இலங்கையிலிருந்து சென்று அந்தமான் மற்றும் மொரிஷியஸ் தீவுகளில் வாழ்ந்து வரும் மக்கள் இதே காலகட்டத்தில் தென்னிந்தியாவிலிருந்து மேற்கிந்திய தீவுக்கூட்டங்களுக்கு சென்றவர்கள் மற்றும் மலேஷியா சென்றவர்கள் என அனைவர் குறித்தும் தகவல்களை திரட்டுகிறோம்.

கேள்வி: முதலில் இந்தியாவில் பல்வேறு பகுதிகளில் வாழ்ந்து வரும் தமிழர்கள் பற்றி தகவல்கள் திரட்டப்பட்டதா?

பதில்: இது ஒரு முக்கியமான கேள்வி தமிழர்கள் அனைவரையும் ஒரு அமைப்பின் கீழ் ஒன்று திரட்டும் முயற்சியில் எமது அயலில் உள்ளவர்களை பற்றிய தேடல் முக்கியமானது. எல்லா இடங்களிலும் தமிழர்கள் செறிந்து வாழ்கின்றார்கள் என்று பெருமைபட்டுக்கொள்ளலாமே ஒழிய அருகில் உள்ளவர்கள் பற்றிய அக்கறை அவர்களுக்கு இருக்கின்றதா என்பது தெரியவில்லை. தமிழகத்தில் கூட பல மாவட்டங்களில் வாழ்ந்து வரும் தமிழர்கள் பல்வேறு காரணங்களுக்காக பிரிந்திருக்கின்றனர், அல்லது பிரித்து வைக்கப்பட்டுள்ளனர் எனலாம். ஒரு பிரதேசத்தில் வாழும் தமிழர்களைப்பற்றி மற்றைய பிரதேச மக்களுக்கு தெரிவதில்லை தெரிந்து கொள்ள அக்கறை படுவதில்லை என்று தான் கூற வேண்டியுள்ளது. இங்கு முக்கியமான ஒரு விடயத்தை கூற வேண்டும் தமிழகத்தில் கூட ஒரு சிலர் இந்திய வம்சாவளி மக்களைப்பற்றி கதைக்கும் போது பிழைக்கச்சென்றவர்களுக்கு உரிமைகள் எதற்கு  என காது பட பேசுகிறார்கள் ,இவ்வாறான செயற்பாடுகள் மிகவும் வேதனையானவை, ஆகவே முதலில் தமிழர்கள் தமக்கிடையே புரிந்துணர்வை ஏற்படுத்த வேண்டும். ஆகவே இந்தியாவின் பல மாநிலங்களுக்குச்சென்று தமிழர்கள் என்றால் யார் அவர்களின் வரலாறு என்ன என்பது குறித்து மட்டுமல்லாது ஒன்று திரள வேண்டியதன் அவசியத்தையும் எடுத்து கூறி வருகின்றோம்.

கேள்வி: தமிழர்கள் என்றால் யார்? அவர்களின் வரலாறு என்ன?

பதில்: பல்வேறு சந்தர்ப்பங்களில் தமிழர்களை திராவிட பரம்பரையினர் என்றே வரலாற்றை திரிபு படுத்துபவர்கள் கூறி வந்துள்ளனர். இக்கூற்றை நாம் முற்றாக மறுக்கிறோம், எதிர்க்கிறோம், இது அப்பட்டமான ஒரு பொய். ஆரியர்கள், திராவிடர்கள் போன்று தமிழர்களும் ஒரு பிரிவினர்.எக்காலகட்டத்திலும் தமிழர்களை திராவிடர்கள் என்று கூற முடியாது தமிழ்மொழி  திராவிட மொழி அல்ல. சங்க காலம் தொடக்கம் இக்காலம் வரை தமிழுக்கும் தமிழர்களுக்கும் வரலாறு தனியே உண்டு. இடையில் வந்த அரசியல் கட்சி தலைவர்களும்  சரி ஏனையோரும் சரி தமிழை திராவிட குடும்பத்தில் சேர்த்து விட்டனர். இதை ஆதாரபூர்வமாக எவ்விடத்திலும் நிரூபிக்க தயார். எவரும் எம்மிடம் கேள்வி எழுப்பலாம்.

கேள்வி: இலங்கையில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் பற்றி?
பதில்: தென்னிந்தியாவிலிருந்து வருகை தந்த மக்கள் கூட்டத்தில் சுமார் 15 இலட்சம் மலையக மக்கள் இலங்கையில் வாழ்ந்து வருகின்றனர் என்பதை அறிந்துள்ளோம். இது தொடர்பாக தகவல்களை திரட்டுவதற்காக ஜ’ன் ,ஜுலை மாதங்களில் நாமக்கல் மற்றும் கொல்லிமலையில் இலங்கை வாழ் இந்திய வம்சாவளி மலையக மக்கள் தொடர்பான ஆய்வரங்கம் ஒன்றை நடத்தினோம். இதில் இலங்கையிலிருந்து பலர் கலந்து கொண்டனர் மேலும் சிறிமா சாஸ்த்ரி ஒப்பந்தத்தில் கீழ் அக்காலகட்டத்தில் இடம்பெயர்ந்து பல மலையக மக்கள் இப்பிரதேசத்தில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களில் முக்கியமான பலர் இந்த ஆய்வரங்கத்தில் கலந்து கொண்டு தமது மக்கள் பற்றிய பல உண்மை தகவல்களை தெரிவித்தனர். இது எமக்கு பல வழிகளிலும் பல விடயங்களை அறிந்து கொள்ளக்கூடியதாக இருந்தது. மேலும் அந்தமான் மொரிஷியஸ் போன்ற இடங்களில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வரும் மலையக மக்கள் பற்றிய ஆய்வை மேற்கொள்ள வழிவகுத்தது.


கேள்வி: இலங்கையிலிருந்து இடம்பெயர்ந்து சென்று இந்தியாவில் வாழ்ந்து வரும் மலையக மக்கள் பற்றி கூறுவீர்களா?
பதில்: இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் சுமார் 10 இலட்சம் மலையக மக்கள் வாழ்ந்து வருகின்றனர். தமிழகத்திற்கு வெளியே கேரளா ,ஒரிசா மற்றும் அந்தமான் தீவுகளை எடுத்துக்கொண்டால் ஒரு இலட்சம் பேர் இருக்கின்றனர். இலங்கையையும் சேர்த்துப்பார்த்தால் சுமார் 26 இலட்சத்திற்கும் மேற்பட்ட இந்திய வம்சாவளி மலையக மக்களை ஒன்றிணைக்க வேண்டிய கடப்பாட்டை நாம் கொண்டிருக்கிறோம். இவர்கள் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். உரிய அடிப்படை வசதிகள் இல்லை அரசாங்கமும் இவர்களை கண்டு கொள்வதில்லை , பாரபட்சம் காட்டப்படுகிறது. இதற்காகத்தான் விருத நகரை தளமாகக்கொண்டு இயங்கும்படியாக அகில உலக இலங்கை மலையக தமிழர் நல இயக்கம் என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இந்த அமைப்புக்கு தலைவராக மலையகத்திலிருந்து சென்று அங்கு வாழந்து வருபவரான   பெரியவர் அந்தோணி  விளங்குகிறார், நுவரெலியாவைச்சேர்ந்து பாலகிருஷ்ணன் செயலாளராகவும் சிவகுரு என்பவர் பொருளாளராகவும் இலங்கை கவிஞர் மல்லியப்பு சந்தி திலகர் ஆலோசகராகவும் கடமையாற்றுகின்றார்கள். இந்த அமைப்பின் பிரதான நோக்கம் 26இலட்சம் மலையகத்தமிழர்களை ஒருங்கிணைத்தல் , நலன்களை பாதுகாத்தல் மற்றும் ஏனைய விடயங்கள் பற்றி ஆராய்தல்.

கேள்வி: அந்தமான் தீவுக்கு செவ்றதாக குறிப்பிட்டீர்கள் அங்கு வாழ்ந்து வரும் மலையக மக்களை சந்தித்தீர்களா?
பதில்: ஆம் சந்தித்தோம் மனம் கலங்கினோம். அந்தமானில் கச்சால் தீவு எனும் இடத்தில் இறப்பர் தோட்டங்களில் பெருமளவு தமிழர்கள் இருக்கின்றார்கள் இவர்களில் 50 இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர். அட்டனைச்சேர்ந்த சுப்ரமணியம் தலவாக்கலையைச்சேர்ந்த பாலையா என்போரை நாம் சந்தித்தோம். 1964 ஆம் ஆண்டு கச்சால் தீவில் மலையக தமிழர்கள் குடியேறினர். இவர்களுக்கு அக்காலத்திலேயே ஒரு குடும்பத்திற்கு 5 ஏக்கர் காணி சொந்தமாக வழங்கப்பட்டது. ஆனால் கல்வி ,வேலை வாய்ப்பு ஆகிய விடயங்களில் பாரபட்சம் காட்டப்படுகிறது. ஆகவே இது தொடர்பில் பொது நல வழக்கொன்றை அங்கு தொடர்வதற்கு ஆலோசித்து வருகின்றோம்.

கேள்வி: அந்தமானை பற்றி கூறுகின்றீர்கள் தமிழகத்தில் மட்டும் மலையக தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டப்படவில்லையா?
பதில்: உங்கள் கோபம் எமக்கு புரிகிறது நான் இல்லை என்று கூறவில்லை. இன்னமும் கூட சிலோன்காரர்கள் என்ற நாமத்துடன் இந்த மக்கள் அழைக்கப்பட்டு வருகின்றனர். இவர்களின் முன்னோர்களின் பிறப்பிடம் தமிழகம் தான் என்பதை அங்குள்ளோர் ஏற்க மறுப்பது ஆச்சரியமளிக்கிறது. பொருளாதார ரீதியில் பின் தங்கியுள்ளது மட்டுமன்றி , பிறப்பு பதிவு ,சாதி, குடியுரிமை ஆகிய விடயங்களில் இவர்கள் மீது பாரபட்சம் காட்டப்படுகிறது. அரச அதிகாரிகள் கூட இவர்களை புறக்கணிப்பதாக எம்மிடம் வேதனையோடு கூறுகின்றனர். ஆகவே இவற்றை தீர்த்து வைக்கும் இமாலய பொறுப்பை நாம் ஆரம்பித்துள்ளோம். தகவல்களை திரட்டி வருகின்றோம் அவர்களும் ஏனைய இனத்தவர்களின் உரிமைகளை பெற்றுக்கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

கேள்வி: உலக வாழ் தமிழர்களுக்கு என்ன கூற விரும்புகிறீர்கள்?

பதில்: தமிழன் அயல் நாடுகளின் வசித்து வந்தாலும் தமிழனே ஆனால் அயலவன் தமிழர்கள் மத்தியில் வசித்து தமிழ் பேசினாலும் அயலவனே இந்த தத்துவார்த்த கருத்தை ஒவ்வொரு தமிழனும் புரிந்து கொள்ள வேண்டும். இன்று இந்தியாவிலிருந்து பல நாடுகளுக்கு குடிபெயர்ந்து தமிழனின் அடுத்தடுத்த தலைமுறையினர் தமிழை மறந்து விட்டனர், கலாசாரத்தை பின்பற்றுவதில்லை, எம்மை பொறுத்தவரை தேசியம் முக்கியமில்லை அது நாட்டுக்கு நாடு வேறுபடலாம் ஆனால் பிறப்பால் நாம் தமிழர்கள் என்ற விடயத்தை ஒவ்வொரு தமிழனும் உணர வேண்டும். தமிழர்களின் சக்தியை கடந்த கால வரலாற்றை அறியத்தலைப்பட வேண்டும் இதற்கு அனைவரும் ஒன்றிணைய வேண்டும் இது தான் எமது கோரிக்கை .

Saturday, July 14, 2012

ஒரு நல்லாசானின் மறைவு
அட்டன் புனித ஜோன்
 பொஸ்கோ கல்லூரியில் தமிழ் ஆசானாக கடமையாற்றிய திரு.செபஸ்டியன் அவர்கள் கடந்த வியாழக்கிழமை இரவு வவுனியாவில் காலமானார்.
1958 ஆம் ஆண்டு மன்னார் மாவட்டத்தின் நறுமலர்குளம் என்ற இடத்தில் பிறந்தார் திரு.செபஸ்டியன் அவர்கள்.  தனது ஆரம்ப கல்வியை மன்னார் றோமன் கத்தோலிக்க பாடசாலையில் பயின்ற இவர் உயர் கல்வியை மட்டகளப்பு புனித மிக்கேல் கல்லூரியில் கற்றார். 1989 ஆம் ஆண்டு  அட்டன் புனித ஜோன் பொஸ்கோ கல்லூரியில் மாணவர் விடுதி மற்றும் அருட்சகோதரர் இல்லத்திற்கு பொறுப்பாளராய் தனது கடமையை பொறுப்பேற்றுக்கொண்ட அவர் சிறந்த பேச்சாற்றலும் தமிழ் மொழியை குறிப்பாக சங்க இலக்கியங்களை எமக்கு  அருமையாய் போதிக்கும் நல்லாசானாய் திகழ்ந்தார்.  மிகவும் கண்டிப்பு குணம் மிக்க இவர் மாணவர்களுடன் பாசத்துடன் பழகும் சுபாவம் மிக்கவர். வாசிப்பை மிகவும் நேசிக்கும் ஒருவராக விளங்கிய திரு.செபஸ்டியன் அவர்கள்  பல அரிய புத்தகங்களை தன்னகத்தே கொண்டிருந்தார். இவர் படிப்பிக்கும் பாங்கு மிகவும் அலாதியானது. சங்க இலக்கியங்களில் வரும் பாத்திரங்களின் தனித்தன்மையை தனது பாணியில் அற்புதமாக விளக்குவார். அவரது காலகட்டத்தில் இடம்பெற்ற பாடசாலை இலக்கிய மன்ற கூட்டங்களில் இவரது பேச்சை கேட்க  மாணவர்கள் மிகவும் ஆவலாய் இருப்பர். பிறப்பால் கத்தோலிக்கராய் இருந்தாலும் இவர் மதங்களை கடந்த ஒரு நல்ல மனிதராக இருந்தார் என துணிந்து கூறலாம். காரணம் நவராத்ரி மற்றும் ஏனைய விசேட நிகழ்வுகளில்  இந்து மத தத்துவங்களை பாடசாலைகளிலும் ஆலயங்களிலும் அற்புதமாய் சொற்பொழிவாற்றும் வல்லமையைப்பெற்றிருந்தார். இஸ்லாம் மதம் மற்றும் இஸ்லாமிய இலக்கியங்கள் பற்றி ஆழ்ந்த புலமையைப்பெற்றிருந்தார். இலக்கிய வகுப்புகள் நடத்தும் போது எமது வகுப்பில் இருக்கும் இஸ்லாமிய மாணவர்களை எழுப்பி இஸ்லாம் மதம் தொடர்பில் பல விளக்கங்களை அவர்கள் ஆச்சரியப்படும் படி எடுத்துக்கூறுவார். ஏனைய மதங்கள் பற்றியும் அவற்றின் உட்பொருள் பற்றியும் இவர் மாணவர்கள் மத்தியில் போதிப்பதை கூட ஒரு சிலர் விரும்பியிருக்க வில்லை  எனலாம். எனினும் மாணவர் மத்தியில் மரியாதைக்குரிய ஆசானாய் ஏனைய மதங்களை மதிக்கும் போற்றும் அதன் அருமை பெருமைகளை விளக்கும் ஒரே மனிதராய் அக்காலகட்டத்தில் எமது கல்லூரியில் விளங்கினார்.  தான் பெற்ற பல்துறை அறிவுக்கு காரணம் வாசிப்பு ஒன்றே என பெருமையாகக்கூறுவார். இவரது மேடைப்பேச்சில் திருக்குறலும் அதன் விளக்கங்களும் இடம்பெறாமல் இருந்ததில்லை.1995 ஆம் ஆண்டு வரை எமது கல்லூரியில் கடமையாற்றினார்.  சுகயீனமுற்று இருந்த அவர் கடந்த 12 ஆம் திகதி காலமானார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய கல்லூரி  சமூகம்  மற்றும் பழைய மாணவர்கள் பிரார்த்திப்பதோடு அன்னாரின் குடும்பத்திற்கும் தமது அஞ்சலிகளை தெரிவித்துக்கொள்கிறது.

சிவலிங்கம் சிவகுமாரன்
பழைய மாணவர் ஒன்றியம்
புனித ஜோன் பொஸ்கோ கல்லூரி அட்டன்

Friday, February 10, 2012

லதா அக்கா....!



வீரகேசரி ஆசிரியப்பீடத்தில் மெட்ரோ நியூஸ் பத்திரிகைக்கு பொறுப்பாக இருந்த போது எங்கிருந்தோ வந்து எம்முடன் இணைந்து கொண்டவர் லதா அக்கா. மிகவும் கடும்போக்கான குணத்தையுடையவர் என்று ஆரம்பத்தில் நினைத்திருந்தாலும் நாட் செல்ல செல்ல எங்கள் வழிக்கு வந்து விட்டார். அவர் வளர்ந்த சூழநிலை அவரைச்சுற்றி ஒரு வேலியை போட வைத்திருக்கலாம். இசைக்கும் நகைச்சுவைக்கும் இவர் அடிமை ,அது தான் இவரது பலவீனமும் என்று கூட சொல்லலாம்,காரணம் அவர் மிகக்கோபமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் அவருக்கு பிடித்த பாடலை மெதுவாக இசைக்க விடுவேன் தூரத்திலிருந்து அவர் முகத்தை பார்ப்பேன் முகம் மலரத்தொடங்கும் கீச்சு குரலில் அந்த பாடலை வாய் முணுமுணுக்கும் பிறகு என்ன வழமையான லதா அக்கா தான். நகைச்சுவைக்கு வாய் விட்டு சிரிக்கும் அவர் சில நேரங்களில் கண்ணீர் வரும் அளவுக்குக்கூட ரசித்து சிரிப்பார். சர்ச்சைக்குரிய செய்திகள் வரும் போதும் அது விவாதத்திற்குட்படும் சந்தர்ப்பங்களிலும் அவர் தனது நிலையிலிருந்து பின் வாங்கமாட்டார். தீவிரமான பெண்ணியவாதியான இவர் ஒரு சில சந்தர்ப்பங்களில் நான் முன்னுதாரணம் காட்டும் சில விடயங்களை வேண்டா வெறுப்பாக ஏற்றுக்கொண்டு விடுவார். பின்பு என்ன அவரை வழிக்கு கொண்டு வரத்தான் இருக்கிறதே பாரதி கண்ணம்மா பாடல் ,எனக்குத்தெரிய அவர் மிகவும் இரசித்து கேட்கும் பாடல்கள் நிழல் நிஜமாகிறது படங்களில் வரும் அனைத்துப்பாடல்களும் , கம்பன் ஏமாந்தான் , பாரதி கண்ணம்மா, மற்றும் மூங்கிலிலே பாட்டிசைத்து ,என் இனிய பொன் நிலாவே , இப்படி பல ...! இப்போதும் கூட இந்த பாடல்களை எனது கணிணி வழியாக கேட்கும் போது உங்கள் ஞாபகங்கள் வந்து போகும் லதா அக்கா! போராட்டம் ஒன்று தான் வாழ்க்கை என்று அடிமை தளையை தூக்கியெறிந்து விட்டு எமது ஆசிரியப்பீடத்திலிருந்து வெளியேறி விட்டீர்கள் நீங்கள். உங்களது காலகட்டத்தில் பலரது மௌனங்களை மொழிபெயர்த்து மொழிபெயர்க்கப்பட்ட மௌனங்கள் என்ற நூலை வெளிக்கொணர்ந்த நீங்கள் இப்போது மௌனத்தையே கடைபிடிப்பது ஏன் என்று தெரியவில்லை நான் ரஜீவன் ,சார்ல்ஸ், ரவி அண்ணா, நிரஞ்சனி அவ்வப்போது உங்கள் பேப்பர் பந்தில் திடீர் அடி வாங்கும் எமது ஒப்பு நோக்காளர் பாலசிங்கம் என நல்ல ஒரு குழு இப்போது பிரிந்து எங்கெங்கோ இருக்கிறோம். எமது குழுவில் மூத்த சகோதரி என்ற வகையில் அவ்வப்போது பல நல்ல அறிவுரைகளை கூறியிருக்கிறீர்கள் எங்களை ஞாபகம் இருக்கிறதோ தெரியவில்லை ஆனால் நீங்கள் பாங்கொங் போய் வந்த நேரம் எனக்கு ஆசையாய் வாங்கி வந்த தாய்லாந்து என்ற பெயர் பொறித்த வெள்ளை டீ சேர்ட்டை நான் இன்னமும் பாதுகாத்து வருகிறேன் லதா அக்கா!

சர்வதேச தாய் மொழி தினம்


உயிர் நீத்த மாணவர்களுக்காக அமைக்கப்பட்ட நினைவு தூபி




சர்வதேச தாய் மொழி தினம் ((International Mother Language Day) இம்மாதம் 21 ஆம் திகதி அனுஷ்டிக்கப்படுகிறது. 2000ஆம் ஆண்டிலிருந்து சர்வதேச ரீதியாக இந்த தாய் மொழி தினம் அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.இலங்கையில் இந்த வருடத்திலிருந்து மும்மொழி அமுலாக்கம் தொடர்பில் பேசப்பட்டு வருகின்றன.இதை அமுல் படுத்தவும் அதில் உள்ள நன்மைகளை விளக்கவும் இந்திய குடியரசின் முன்னாள் ஜனாதிபதி டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் கூட அண்மையில் எமது நாட்டுக்கு விஜயம் செய்திருந்தார். ஆகவே இத்தினம் குறித்து நாம் பார்க்க வேண்டியுள்ளது. சர்வதேச ரீதியாக அனுஷ்டிக்கப்படும் தினங்களுக்கு பின்னால் ஏதோ ஒரு சம்பவம் இருக்கும் என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அந்த வகையில் இதற்கு பின்னணியிலும் ஒரு சம்பவம் உள்ளது. சரி வாசகர்களே 1948 ஆம் ஆண்டுக்கு செல்வோமா?
1948 ஆம் ஆண்டு பாகிஸ்தான் நாட்டின் கவர்னர் ஜெனரலாக இருந்தவர் மொகமட் அலி ஜின்னா. அச்சந்தர்ப்பத்தில் பாகிஸ்தான் இரண்டு பிரிவுகளாக இருந்தது. மேற்கு மற்றும் கிழக்கு பாகிஸ்தான் ஆகிய பிரிவுகளே அவை. இப்போது கிழக்கு பாகிஸ்தான் பங்களாதேஷ் என்ற சுதந்திர நாடாக உள்ளமை குறிப்பிடத்தக்கது. இக்காலகட்டத்தில் அலி ஜின்னா பாகிஸ்தான் நாட்டின் உத்தியோகபூர்வ மொழியாக உருதை பிரகடனம் செய்தார். இது கிழக்கு பாகிஸ்தான் மக்களுக்கு பிடிக்கவில்லை,காரணம் அங்கு வாழ்ந்து வந்தோர் தமது தாய் மொழியாக வங்காள மொழியை கொண்டிருந்தனர். வங்காள மொழியானது இந்திய ஆரிய மொழி குடும்பத்திலிருந்து தோன்றியதொன்றாகும். வங்காள மொழி பேசப்பட்டதால் தான் வங்காளதேசம் என இந்நாடு பின்னாளில் இந்தியாவின் உதவியுடன் சுதந்திர நாடாகியது. இந்த மொழியை உலகின் 232 மக்கள் பேசுகிறார்கள் என்பது கூடுதல் தகவல். சரி இனி விடயத்திற்கு வருவோம் அலி ஜின்னாவின் இந்த பிரகடனத்தால் கிழக்கு பாகிஸ்தானில் வங்காள மொழியை தாய்மொழியாக பிரகடனம் செய்ய வேண்டும் என்ற மக்கள் இயக்கம் தோற்றம் பெற்றது. சுமார் நான்கு வருடங்கள் இந்த இயக்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுத்துச்செல்லப்பட்டன. இதன் உச்சகட்டமாக 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 21 ஆம் திகதி டாக்கா பல்கலைகழக மாணவர்களால் மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தை பாகிஸ்தான் இராணுவமும் பொலிஸாரும் தமது இரும்பு கரங்களால் நசுக்கினர். இதன் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தின் போது நான்கு பல்கலைக்கழக மாணவர்கள் கொல்லப்பட்டனர். உலகில் தாய் மொழியை பாதுகாப்பதற்காக இடம்பெற்ற ஒரே போராட்டம் என்ற பெருமை இதற்கு உண்டு அதே வேளை தாய் மொழியை காப்பதற்காக உயிர்கள் காவு கொள்ளப்பட்ட ஒரே சந்தர்ப்பமாகவும் இது விளங்குகிறது. உயிர் நீத்த நான்கு மாணவர்களின் நினைவாக டாக்கா பல்கலைகழகத்தின் முன்றலில் நினைவு தூபி ஒன்று எழுப்பப்பட்டது. இந்த மொழி வேறுபாடு காரணமாகவே கிழக்கு பாகிஸ்தானில் தனி நாடு கோரிக்கை வலுப்பெற்றது என்பதும் இந்தியாவின் உதவியுடன் 1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் என்ற பெயருடன் இது தனி சுதந்திர நாடாகியது என்பது வரலாறு. இந்த சம்பவத்தை முன்வைத்தே ஐக்கிய நாடுகள் சபையின் கல்வி அறிவியல் பண்பாட்டு அமைப்பான யுனஸ்கோ, 1999 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி இடம்பெற்ற தனது 30 ஆவது அமர்வின் போது பெப்ரவரி 21 ஐ சர்வதேச தாய் மொழி தினமாக அனுஷ்டிக்க வேண்டும் என பிரகடனம் செய்தது.
தமிழ் மொழி
ஆதி கால மனிதனின் மொழியானது சைகைகளாலும் ஓசைகளை வெளிப்படுத்தியும் தோற்றம் பெற்றது ,இன்று கருத்துப்பரிமாற்றங்களுக்கு மட்டுமல்லாது வாழ்வியல் கூறுகளையும் பண்பாட்டு நிலைகளையும் வெளிப்படுத்தும் ஒரு சக்தி வாய்ந்த கருவியாக மொழி விளங்குகிறது. இன்றைக்கு உலகம் முழுவதிலும் 30006000 வரையான மொழிகள் பேசப்படுவதாக ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. மனிதனின் மொழியை இயற்கையின் மொழி என்று சிலாகிக்கின்றனர். பெரும்பாலான மொழிகள் ஏதோ ஒரு குடும்பத்தை சார்ந்தனவாகவே உள்ளன. ஒரு மொழிக்குடும்பத்தைச்சேர்ந்த மொழிகள் எல்லாம் இன்று வழக்கொழிந்து போய்விட்டன. அந்த வகையில் உலகின் புராதன மொழியாக விளங்கும் எமது தாய் மொழியான தமிழ் கூட இன்று அழிவுறும் நிலையில் உள்ளது என பல அறிஞர்கள் கூறி வருகின்றனர். சுமார் இரண்டாயிரம் வருடங்கள் பழமையான தமிழ் மொழி,திராவிட மொழி குடும்பத்தின் முதன்மையானதும் செம்மொழியாகவும் விளங்குகிறது. இந்தியா ,இலங்கை ,மலேசியா ,சிங்கபூர் ஆகிய நாடுகளில் பெரும்பான்மையாகவும் ஐக்கிய அரபு இராஜியம்,தென்னாபிரிக்கா,மொரீஷயஸ், பிஜி தீவுகள்,டிரினிடாட் ஆகிய நாடுகளில் சிறிய அளவிலும் பேசப்படுகிறது. உலகம் முழுவதிலும் கிட்டத்தட்ட பத்து கோடி மக்களால் தமிழ் மொழி பேசப்படுகிறது. உலகலவில் தாய் மொழியை பேசும் மக்களின் எண்ணிக்கையில் பார்த்தால் எமது தமிழ் மொழி 18 ஆவது இடத்தில் உள்ளது. இன்று புலம்பெயர்ந்து பல நாடுகளில் வாழும் தமிழர்கள் எமது மொழியைப்பேசியும் பரப்பியும் வருகின்றனர்,ஆனால் தமது பிள்ளைகளுக்கு ஏனோ அவர்கள் தமிழ் மொழி கல்வியை வழங்குவதில்லை என்பது கவலைக்குரியது.
வரலாற்றைப்பார்த்தால் எமது மொழி கி.மு.300 நூற்றாண்டைச்சேர்ந்த பிராமி எழுத்துக்களால் எழுதப்பட்டதாகும். வரலாற்று ரீதியாக எமது தமிழ் மொழி பல அந்தஸ்த்துகளைப்பெற்றுள்ளது. உதாரணத்திற்கு சிலவற்றைப்பார்ப்போம். இந்தியாவின் தமிழ் நாடு மாநிலத்தில் தமிழ் மொழியே ஆட்சி மொழியாகவுள்ளது. இந்திய அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் 22 மொழிகளில் தமிழும் ஒன்று.மேலும் எமது நாடான இலங்கையிலும் மூன்று ஆட்சி மொழிகளில் தமிழும் ஒன்று (அது முறையாக அமுல்படுத்தப்படுகிறதா என்பது வேறு விடயம்) சிங்கபூரில் நாடளாவிய அங்கீகாரம் தமிழுக்கு உண்டு.மேலும் தென்னாபிரிக்காவில் தமிழ் மொழிக்கு அரசியல் அமைப்பு அங்கீகாரமே உள்ளது. மலேசியாவின் முதல் நான்கு ஆட்சி மொழிகளில் தமிழும் அடக்கம்.
செம்மொழி அங்கீகாரம்
இந்தியாவிலும் மற்றும் உலகெங்கனும் உள்ள தமிழ் ஆர்வலர்கள் அறிஞர்களின் இடைவிடாத முயற்சியின் காரணமாக தமிழ் மொழிக்கு இந்திய அரசினால் செம்மொழி அங்கீகாரம் கிடைத்தது. இந்த செம்மொழி அந்தஸ்த்து பெற்ற முதலாவது இந்திய மொழியாக தமிழ் விளங்குகிறது. 2004 ஆம் ஆண்டு ஜுன் மாதம் இந்திய நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் கூட்டத்தொடரின் போது அப்போதைய குடியரசு தலைவரும் தமிழ் பற்றாளருமான டாக்டர் ஏ.பி.ஜே அப்துல் கலாம் அவர்களால் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. ( ஆனால் தமிழ் நாட்டில் இடம்பெற்ற செம்மொழி மாநாட்டில்,ஏற்பாட்டாளர்களால் இவருக்கு அழைப்பே விடுக்கப்படவில்லை என்பது ஒரு சோக வரலாறு)
இன்று தமிழ் மொழி தமிழ் நாட்டின் பல இடங்களில் பல வித்தியாசமான பேச்சு மொழியாக உள்ளது.இலங்கையிலும் கூட யாழ்ப்பாணம்,மட்டக்களப்பு மற்றும் மலையகப்பகுதிகளில் தமிழ் வித்தியாசமான பேச்சு வழக்காகவே உள்ளது. சில வட்டார வழக்குச்சொற்களின் சேர்க்கையும் இதற்குக்காரணம் எனினும் பேச்சுத்தமிழ் என்று பார்க்கும் போது மேடைகளில் செந்தமிழையே அனைவரும் வழக்காக கொண்டு வருகின்றனர். காலங்காலமாக எமது தமிழ் மொழியை அறிஞர்களும் ,கவிஞர்களும் எழுதியும், பாடியும்,பேசியும் வந்திருக்கின்றனர். ஆனாலும் அந்தஸ்த்து ,தொழில் வாய்ப்பு என்ற ரீதியில் இன்று தமிழ் மொழி கல்வி அழிந்து வருகின்றது. தமிழ் நாட்டில் இது மிக அதிகம். நான் தமிழில் பேசி விட்டேன் என அங்கு பெருமைப்பட்டு கொள்வது ஒரு கலாசாரமாகி விட்டது.ஒருவன் தனது தாய் மொழியில் பேசுகிறேன் என்று ஆச்சரியப்படுவது எவ்வளவு மோசமான கலாசாரம்? அந்த வகையில் இலங்கை மக்களாகிய நாம் எமது தாய்மொழியை போற்றியும் வளர்த்தும் வருகின்றோம் என்பதை உறுதியாக சொல்லலாம். டாக்கா பல்கலைகழக மாணவர்கள் போல தாய் மொழிக்காக போராட்டம் செய்து உயிர் விடத்தயாராகும் படி சொல்லவில்லை. வீட்டிலும்,வீதியிலும் ஏன் தமிழர்களைக்கண்டால் தமிழிலேயே பேசுவோமே ,கல்லூரிகளில் தமிழ் இலக்கிய விழாக்களை நடத்தி எமது மொழியின் செழுமையை வலிமையை உணரச்செய்வோமே இது வரை செய்யாவிட்டால் பரவாயில்லை இந்த வருட சர்வதேச தாய் மொழி தினத்திலிருந்து திடசங்கற்பம் பூணுவோம். ஏனெனில் தாய் வேறு தாய் மொழி வேறு அல்ல நண்பர்களே!

வகைகள்
தமிழ்
செந்தமிழ்
கொடுந்தமிழ்
முத்தமிழ்
தனித்தமிழ்
நற்றமிழ்

பிரிவுகள் வாரியாகத் தமிழ்
தமிழிசை
நாடகத் தமிழ்
இயற்றமிழ்/இயல்தமிழ்
ஆட்சித் தமிழ்
சட்டத் தமிழ்
அறிவியல் தமிழ்
மீனவர் தமிழ்
மருத்துவத் தமிழ்
செம்மொழித் தமிழ்

வட்டார வழக்கு தமிழ் பிரிவுகள்
அரிசனப் பேச்சுத் தமிழ்
கொங்குத் தமிழ்
யாழ்ப்பாணத்துப் பேச்சுத் தமிழ்
மட்டக்களப்பு பேச்சுத் தமிழ்
மலேசியத் தமிழ்
பிராமணத் தமிழ்
முஸ்லிம்கள் தமிழ்
திருநெல்வேலித் தமிழ்
தஞ்சாவூர்த் தமிழ்
மதுரைத் தமிழ்
நாஞ்சில் தமிழ்
செட்டிநாட்டுத் தமிழ்
குமரிமாவட்டத் தமிழ்
கரிசல் தமிழ்
சென்னைத் தமிழ்
மணிப்பிரவாளம்
தமிங்கிலம்
ஜுனூன் தமிழ் (இலக்கண விதிகளை மீறிய தமிழ்)


Monday, February 6, 2012

மரங்களை தறிப்பதற்கு அனுமதி வழங்கிய அரசாங்கம்தேயிலை மீள் நடுகை பற்றி வாய்திறப்பதேயில்லை





மலையக பெருந்தோட்டப்பகுதிகளை கம்பனிகள் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் மீள்நடுகை, தேயிலை மலைகளை பராமரித்தல் போன்றவற்றில் அதிக அக்கறை காட்டப்படுவதில்லை என்ற விமர்சனங்கள் ஆரம்பத்திலிருந்தே இருந்து வந்துள்ளன.முக்கியமாக தரிசு நிலங்களில் புதிய தேயிலை கன்றுகளை நடுவதில்லை என்றும் ஆரம்ப காலத்தில் பயிரிடப்பட்ட மிகவும் வயது கூடிய தேயிலைச்செடிகளை நீக்கி விட்டு அவ்விடத்தில் புதிய கன்றுகளை நடுவதில் எந்த தோட்ட நிர்வாகமும் அக்கறை காட்டவில்லை என்று பரவலாகவே கூறப்பட்டு வந்தது. இதற்காக அதிக பநணத்தை செலவளிப்பதை சில நிர்வாகங்கள் விரும்பவில்லை என்பதே உண்மை.அதற்கு மாற்றீடாக குறைந்த செலவில் அதிக இலாபத்தை தரும் வழிமுறைகளையே சில கம்பனிகள் கையாண்டன. இதில் முக்கியமான ஒருவிடயம் பெறுமதி வாய்ந்த மரங்களை தறித்து வெளியாருக்கு விற்பதாகும். பெருந்தோட்டப்பகுதிகளில் அதிகம் காணப்படும் கருப்பந்தேயிலை,சவுக்கு மற்றும் காட்டு வேப்பம் ஆகியவற்றிலிருந்து பெறப்படும் பலகைகள் அதிக விலைக்கு விற்கப்படுகின்றன. இதன் காரணமாக பல இலட்சக்கணக்கான மரங்கள் தறித்து விற்கப்பட்டன. ஒரு சில தோட்டப்பகுதிகளில் தரிசு நிலங்களாக இருந்த இடங்களில் தேயிலைக்குப்பதிலாக மரக்கன்றுகளே நடப்பட்டன. காரணம் தேயிலையைப் போல் இதற்கு பராமரிப்பு செலவு எதுவும் இல்லை என்ற காரணம் தான். இதற்கு தொழிலாளர்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது,எனினும் 22 கம்பனிகளுக்கு 56 வருடங்கள் என்ற அடிப்படையில் தோட்டப்பகுதிகள் கையளிக்கப்பட்டுள்ளதால் குறிப்பிட்ட காலப்பகுதி வரை சில விடயங்களுக்கும் விட்டு கொடுப்புகளுக்கும் அரசாங்கம் உட்பட வேண்டியதாயிற்று.இதன் காரணமாக தொழிலாளர்களின் குரல் வெளிவரவேயில்லை. பெருந்தோட்டப்பகுதிகளில் மரங்கள் தறிக்கப்பட்டு வெளியாருக்கு விற்படுதல் பற்றி எவருமே வாய் திறக்க வில்லை.இதை ஒரு வர்த்தக நோக்காக அன்றி சூழலியல் தாக்கம் என்ற வகையில் கூட இலங்கையில் உள்ள எந்த ஒரு நிறுவனமே அமைப்போ கருத்து கூற வில்லை. இச்சந்தர்ப்பத்தில் தான் கடந்த வருடத்தின் ஆரம்பத்தில் இவ்வாறு மரங்கதள தறிப்பதற்கான தடை உத்தரவை அரசாங்கம் கொண்டு வந்தது. இதற்கு பெருந்தோட்டப்பகுதி வாழ் தொழிலாளர் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் ஆகிய வற்றின் எதிர்ப்புக்குரல்கள் வழிசமைத்தன எனலாம். அதன் பிறகு மரங்ஙகள் தறிப்பது முடிவுக்கு வந்தது . இச்சந்தர்ப்பதில் பெருந்தோட்ட முகாமைத்துவ கம்பனிகளின் நிர்வாகங்களுக்கு உட்பட்ட பகுதிகளில் வளர்க்கப்படும் மரங்களை எரிபொருளுக்காக மட்டும் தறிப்பதற்கான அனுமதியை அரசாங்கத்திடம் கேட்டிருந்தது முதலாளிமார் சம்மேளம். இந்த அனுமதியை பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க ஊடாகவே மேற்படி சம்மேளனம் கேட்டிருந்தது. கடந்த ஒரு வருட காலமாக இது குறித்து பேசப்பட்டு வந்தது இதற்கான அனுமதியை அரசாங்கம் கடந்த வாரம் வழங்கியிருக்கிறது. இதை வரவேற்றுள்ள முதலாளிமார் சம்மேளனம் இந்த தடையுத்தரவு தளர்த்தப்பட்டுள்ளதன் காரணமாக பெருந்தோட்ட கம்பனிகள் தமது தொழிற்சாலைகளுக்கு தேவயான எரிபொருள் விறகுகளை இலகுவாக பெற்றுக் கொள்ளக்கூடியதாக இருப்பதுடன், இதற்காக இனிவரும் காலங்களில் பெருமளவு தொகையை செலவிட தேவையில்லை எனவும் அறிவித்துள்ளது. முக்கியமான விடயம் என்னவெனில் தறிக்கப்படும் மரங்கள் எரிபொருளுக்காக பயன்படுத்தப்படுகின்றனவா அல்லது விற்கப்படுகின்றனவா என்பது அவர்களுக்கே வெளிச்சம். மரங்களை தறிப்பதற்கான அனுமதி வழங்கப்பட்டவுடன் முதலாளிமார் சம்மேளனம் விடுத்துள்ள அறிக்கையின் சில வசனங்களை வாசித்துப்பாருங்கள்இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளதன் மூலமாக, அதிகளவு செலவீனங்களின் மூலம் பயன்படுத்தப்படும் எரிபொருள்களுக்கு பதிலாக மிகவும் இலகுவாக கிடைக்கக்கூடிய இந்த விறகுகளை பயன்படுத்திக் கொள்ள முடியும். எரிபொருள் விலைகள் அதிகரித்த வண்ணமுள்ளன. இந்நிலையில் பெருந்தோட்ட கம்பனிகளுக்கு மாற்றுவழிகளில் வருமானமீட்டக்கூடியதாகவும் இது அமையும். பெருமளவான பெருந்தோட்ட கம்பனிகள் நிதி நெருக்கடியை எதிர் கொண்டுள்ள நிலையில் இந்த தீர்மானம் முற்றிலும் வரவேற்கத்தக்கதாக அமைந்துள்ளது. இந்த மரங்கள் விசேடமாக எரிபொருள் தேவைக்காகவே வளர்க்கப்படுகின்றன. அதாவது இந்த மரங்கள் நடப்படும் பொழுதே தெரியும் என்றோ ஒரு நாள் தறிக்கப்படப்போகிறது என. இவற்றை தறிக்கும் பொழுது கூட முறையான விதிமுறைகள் கைக்கொள்ளப்படுகின்றன .
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மரங்கள் தறிக்கப்படும் போது முறையான விதிமுறைகள் கையாளப்படுகின்றன எனக்கூறும் முதலாளிமார் சம்மேளனம் தறிக்கப்பட்ட இடத்தில் உடனடியாக மற்றுமோர் மரக்கன்று நடப்படும் என்று தெரிவிக்கவில்லை. மலையகப் பெருந்தோட்டப்பகுதிகளைப்பொறுத்தவரை இயற்கை வளங்களுக்கு பஞ்சமில்லை. எனினும் தேயிலைச்செடிகளுக்கு பாதுகாப்பாக மட்டுமன்றி மலையகத்துக்கு அழகு சேர்க்கும் ஒரு அம்சமாகவும் மழை வீழ்ச்சிக்கு பெரும் பங்காற்றும் காரணியாகவும் உள்ள மரங்கள் தறிக்கப்படுவது பற்றி எவருமே அக்கறை கொள்ளாதிருப்பது மிகவும் வேதனைக்குரிய விடயமாகும். மேலும் பெருந்தோட்டப்பகுதிகளில் இன்று கைவிடப்பட்ட நிலையில் பல தேயிலைமலைகள் காடு மன்றி கிடக்கின்றன. இப்பகுதிகளில் மீள் நடுகை செலவை காரணங்காட்டி சில நிர்வாகங்களும் அக்கறையின்றி செயற்பட்டு வருகின்றன. இதன் காரணமாகவே இன்று தோட்டப்பகுதிகளில் அதிக வேலை நாள் இன்மை மற்றும் இன்னோரன்ன பிரச்சினைகள் தலைதூக்கியுள்ளன. பெருந்தோட்டப்பகுதிகளில் நிலவும் பிரச்சினைகள் பற்றி அரசாங்கம் எந்த வித அக்கறையுமின்றி செயற்படுவதற்குக் காரணம் இங்கு வாழ்வோர் சிறுபான்மையினத்தவர் என்பதினாலோ தெரியவில்லை. காரணம் இதற்கு நியமிக்கப்பட்டிருக்கும் அமைச்சர் மனித உரிமைகள் தொடர்பான ஜனாதிபதியின் விசேட தூதுவராக கடமையாற்றி வருகின்றார். தற்போது நாட்டில் தலைதூக்கியுள்ள தேசிய பிரச்சினைகள் தொடர்பில் சர்வதேசங்களுக்கு விளக்கும் பதிலளிக்கும் பெரும் நெருக்கடியான பணியையே இதற்கு பொறுப்பான அமைச்சர் மேற்கொண்டு வருகின்றார்.இச்சந்தர்ப்பத்தில் உள்ளூர் விவகாரங்கள் குறித்து அக்கறைப்பட அவருக்கு காலநேரம் இல்லை அதாவது பெருந்தோட்டத்துறை பற்றிய சிக்கல்களை தீர்ப்பதற்கும் இனங்காணுவதற்கும் இவருக்கு நேரமில்லை என்பதே யதார்த்தமாகும். மலையக மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்களின் அரசாங்கத்தின் பக்கம் இருக்கும் எவருக்காவது இந்த பொறுப்பை கொடுத்திருக்கலாம் என்றால் அதற்கு சாத்தியமே இல்லாத நிலையே உள்ளது. கடந்த வருடத்தில் பெருந்தோட்டத்துறை அமைச்சர் மகிந்த சமரசிங்க கம்பனிகள் வசம் உள்ள பெருந்தோட்டப்பகுதிகளில் தேயிலை மீள் நடுகை ஆரம்பிக்கப்படல் வேண்டும் என்றும் இல்லாவிடின் குறித்த பகுதிகள் மீண்டும் அரசாங்கத்தினால் பொறுப்பேற்கப்படும் என்றும் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.அத்தோடு சரி ஒன்றுமே நடக்கவில்லை. மறுபக்கமோ அரசாங்கத்தின் பொறுப்பில் உள்ள தேயிலை தோட்டங்கள் நஷ்டத்தில் படுபாதாளத்தை நோக்கி சென்றுக்கொண்டிருக்கின்றன. இந்த தகவலையும் அரசாங்கமே வெளியிட்டுள்ளது. தற்போது பெருந்தோட்டப்பகுதி தொழிற்றுறையானது மிகவும் அபாயகரமான ஒரு காலகட்டத்தை சந்தித்து வருகின்றது. தோட்ட நிர்வாகங்கள் தன்னிச்சையாக இயங்கி வருகின்றன.தொழிலாளர்களின் தொழில் உரிமைகள் மறுக்கப்பட்டு வருகின்றன.இருக்கும் வளங்களை விஸ்தரித்து மேற்படுத்தும் நடவடிக்கைகளுக்குப் பதிலாக வளங்களை அழிவுப்பாதைக்கு இட்டுச்செல்லும் செயற்பாடுகளே ஆங்காங்கு இடம்பெற்று வருகின்றன. சில வாரங்களுக்கு முன்பு இலங்கையில் வர்த்தக நோக்கிற்காக தேயிலை பயிரிடப்பட்டு 145 வருடங்களாகின்றன என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை வரைந்திருந்தேன். இதை வாசித்த ஒரு அன்பர் ஒரு காலத்தில் இலங்கையில் தேயிலை பயிரிடப்பட்டிருந்தது என்று எழுதும் காலகட்டம் விரைவில் வரும் என்று கவலையுடன் தெரிவித்தார். நாம் எங்கு சென்று கொண்டிருக்கிறோம் என்பது எமக்கே தெரியவில்லை. ஊடகங்கள் வாயிலாக நாம் எமது சமூகம் எதிர்நோக்கி வரும் ஆபத்துக்கள் பற்றி பல தடவைகள் சுட்டிக்காட்டினாலும் அக்கறை உள்ளவர்கள் இந்நிதலை குறித்து வாய் திறப்பார்களா?